குறிஞ்சி மலர்.. 59
பங்களாவின் பக்கத்தில் இருந்த விருந்தினர் இல்லத்தின், பின்புறத் தோட்டத்தில் நின்றிருந்த கறுத்தக் கொழும்பான் மாமரத்தில் சாய்ந்து அமர்ந்தபடி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கோதை.
தான் தன் கையை அறுத்துக் கொள்ளப் போன போது, தன் கணவனுக்கு வந்த கோபத்தை திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்தாள்.
அதே போல நேற்று இரவு கணவனுக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையும் மீட்டிப் பார்த்தாள்.
“என்னங்கோ..”
“ம்ம்..”
“அப்ப நீங்கள் உங்கடை போதை கடத்துற வேலையை விட மாட்டியள் அப்புடி தானே..”
“திரும்ப திரும்ப அதைப் பத்தி பேசாத நீ..”
“நான் பேசாமல் வேறை ஆருங்கோ பேசுறது..”
“அது உனக்கு வேண்டாத விசியம்..”
“அப்ப நீங்கள் என்ன செஞ்சாலும் நான் வாயைப் பொத்திக் கொண்டு வேடிக்கை பாத்துக் கொண்டு இருக்கோணுமோ..”
“இப்ப என்ன தான்டி பிரச்சினை உனக்கு..”
“போதை கடத்தி விக்கிற வேலையை விட முடியுமா முடியாதா..”
“முடியாதுடி..”
“அப்ப விட மாட்டீங்கள்..”
“அதை தானே திரும்பத் திரும்ப சொல்லுறன்..”
“அப்ப என்னைய விட்டிடுங்கோ..”
“புரியலை..”
“அந்த தொழிலை விட முடியாதவர்.. என்னைய விட்டிடுங்கோ..”
“இதைப் பாரு பேபி.. வேண்டாத விசயத்துல மூக்கை நுழைச்சு வீணா நம்ம நிம்மதியைக் கெடுத்துக் கொள்ளாதே..”
“நான் நிம்மதியாவே இல்லை எண்டுறன்.. பிறகு நிம்மதியைக் கெடுத்துக் கொள்ளாதே எண்டு சொல்லிக் கொண்டு நிக்கிறியள்.. இல்லாத நிம்மதியை நான் எப்புடிக் கெடுக்க..”
“ப்ச்.. இப்புடியே கதைச்சுக் கொண்டு நில்லு.. எனக்கு வெளி வேலை இருக்கு..”
என்று கொண்டு வெளியே செல்லத் திரும்பிய கணவனின் சட்டையைப் பிடித்து தன் பக்கமாக இழுத்தவள்
“எனக்கு முடிவா பதில் சொல்லீட்டு நீங்கள் எங்க வேணும் எண்டாலும் போங்கோ..”
எனக் கிட்டதட்ட கத்தினாள்.
தலையை அழுந்தக் கோதி தன்னை நிதானப் படுத்திக் கொண்டவன் அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான்.
“என்ன முடிவு தெரியோணும்..”
“ரெண்டத்தா ஒண்டுல எது வேணும் எண்டு இப்ப சொல்லுங்கோ எனக்கு.. நானோ இல்லாட்டிக்கு உங்கடை அந்தத் தொழிலோ..”
“யாருக்காகவும் எதுக்காகவும் நான் செய்யிற தொழிலை விட்டுக் குடுக்க ஏலாது..”
“ஓ.. அப்போ நான் உங்களுக்கு தேவையில்லை அப்புடி தானே..”
“அப்புடி நான் சொல்லவே இல்லையே..”
“நீங்கள் சொன்னதுக்கு அது மட்டும் தான் அர்த்தம்.. சரி நானும் முடிவா சொல்லுறன்.. இவ்வளவு மோசமான வேலை செய்றவரோட என்னாலையும் வாழ முடியாது..”
“சோ..”
“சோ.. நான் இனிமேல் உங்களோட இந்த வீட்டுல இருக்க மாட்டன்..”
என கோதை கோபத்தோடு சொல்ல, வியாகேசு அவளிடம் வேகமாக ஓடி வந்தார்.
“என்ன பிள்ளை நீ.. வீட்டை விட்டு போனால் எல்லாம் சரி ஆயிடுமோ..”
“அது எனக்கு தெரியாதுப்பா.. ஆனா நானும் எவ்வளவு தான் பொறுத்துப் போறது சொல்லுங்கோ.. இவர் இந்த தொழிலை விட மாட்டார் எண்டு ஒற்றைக் காலில நிக்கிறது உங்களுக்கு தப்பாத் தெரியேல்லையோ..”
“அது தப்பு தான் பிள்ளை.. ஆனா அதை அவன் ஏற்றுக் கொள்ள மாட்டன் எண்டுறானே..”
“இஞ்சை பாருங்கோப்பா.. இவர் உந்த வேலை செய்றதால தான்.. வீட்டுக்குள்ளயே அவரிந்தை அம்மாக்கும் அப்பாச்சிக்கும் அப்புடி ஒரு கொடுமை நடந்திருக்குது.. அது ஏன் அவருக்கு புரிய மாட்டன் எண்டுது.. இல்லை தெரியாமல் தான் கேக்கிறன் உவருக்கு என்ன குறை.. என்ன மண்ணாங்கட்டிக்கு உதுக்குள்ள போய் எல்லாரிந்தையும் நிம்மதியையும் கெடுப்பான் சொல்லுங்கோ..”
என ஆதங்கத்தோடு பேசிய கோதையை, வியாகேசு சமாதானப் படுத்த முயல அவரைத் தான் முறைத்தாள் கோதை.
அதே நேரத்தில் பக்கத்தில் கிடந்த பொருட்களை எல்லாம் வேகமாகத் தூக்கிப் போட்டு உடைத்த ஜேம்ஸ்
“நான் இப்புடித் தான்டி இருப்பன்.. என்னைய மாத்த நினைக்காத.. என் கூட இருந்து குடும்பம் நடத்திறதெண்டால் நடத்து.. இல்லையோ எங்கையாவது போய்த் தொலை.. உன்னைய யாரும் இங்கினை பிடிச்சு வைக்கேல்லை.. நீ இல்லாட்டிக்கு என்னால வாழ முடியாதுனு நினைச்சிட்டியோ.. நான் நல்லா நிம்மதியா வாழுவன் போடி..”
என்று ஆத்திரத்தோடு வார்த்தைகளைக் கடித்துத் துப்பி விட்டு உள்ளே போய் விட்டான்.
கணவன் போன திக்கையே விக்கித்துப் போய்ப் பார்த்தபடி நின்றிருந்தாள் கோதை.
அப்போது அவளின் தோளில் யாரோ கை வைக்கவும் மெல்லத் திரும்பிப் பார்த்தாள். எலிசபெத் தான் அவளைப் பாவமாகப் பார்த்தபடி நின்றிருந்தார்.
லேசாக கண்கள் கலங்கி நின்றவளின் தலையைக் கோதி விட்டார்.
“அவன் சொன்ன வார்த்தையளை எல்லாம் பெரிசா எடுத்துக் கொள்ளாதேம்மா.. அந்த வார்த்தையெல்லாம் அவனிந்தை மனசில இருந்து வரேல்லை தங்கம்..”
“அது எனக்கும் தெரியும் மாமி.. ஆனாலும் மனசு வலிக்குது.. அவரை எப்புடியாவது திருத்தோணும் அந்த வேலையை அவர் மனசால உணர்ந்து விடோணும் அது மட்டும் தான் எனக்கு முக்கியம்.. அதுக்கு தான் நான் பாடுபடுறன்”
“அப்போ கோபத்துல வீட்டை விட்டு போயிட மாட்டியே..”
“அவரை விட்டிட்டு நான் எங்க போவன் மாமி..”
“தங்கம் உன்னைப் போல மனசு ஆருக்கும் வராதுடி..”
“ஆனால் ஒண்டு மாமி.. பக்கத்துல இருந்தே நான் குடுக்கிற டாச்சரில அவராவே அந்த தொழிலை விடுறாரோ இல்லையோ பாருங்கோ..”
“என்னவோ செய்.. எங்கள் கூடவே இருந்து செய்..”
“இப்ப சொல்லீட்டு போன வார்த்தையளுக்கு விழுந்து கதற வைக்க விடேல்லை நான் உங்களுக்கு மருமகள் இல்லை மாமி..”
என்றவளின் முகத்தை பிடித்து அவளது நெற்றியில் முத்தம் வைத்தார் எலிசபெத்.
அதற்குப் பிறகு வேகமாக தங்கள் அறைக்குள் போனாள் கோதை. அங்கே அவளின் பிராணநாதன் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தான்.
அவனோடு எந்த பேச்சு வார்த்தைகளும் வைத்துக் கொள்ளாமல், அறையினுள் கிடந்த தன்னுடைய உடைகள் வேறு பொருட்கள் என அனைத்தையும் ஒரு பெட்டிக்குள் போட்டு அடைக்கத் தொடங்கினாள்.
நீல விழிகள் லேசான பழுப்பு நிறமாக அவள் செய்வதையே பார்த்துக் கொண்டு நின்றவனை, அவள் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.
தன் உடமைகளை மூட்டை கட்டிக் கொண்டவள், அவனைப் பாராமலேயே அறையை விட்டு விறுவிறென்று வெளியே வந்து விட்டாள்.
அவள் வெளியே வந்த அடுத்த நிமிடமே அறைக்குள் பொருட்கள் விழுந்து நொறுங்கும் சத்தம் அவளது காதைப் பிளந்தாலும் திரும்பிப் பார்க்காமல், வீட்டை விட்டு வெளியே வந்தவள் நேராகப் போய் விருந்தினர் இல்லத்தினுள் நுழைந்தாள்.
அங்கே அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்ந வியாகேசைப் பார்த்து முறைத்தவள் தன் பொருட்களை அங்கே வைத்தாள்.
“இனி நான் இங்க தான் இருப்பன்.. அந்த வீட்டுப் பக்கம் தலை வைச்சுக் கூடப் படுக்க மாட்டனப்பா.. நான் இல்லாமல் நிம்மதியா வாழுவன் எண்டவர் எல்லோ.. நல்லா வாழட்டுக்கும்.. அவர் அப்புடி சொன்ன அடுத்த நிமிஷமே இந்த மாவட்டத்தை விட்டே போயிருப்பன்.. என்ன செய்யிறது தாலி கட்டின புருஷனாச்சே அடிச்சாலும் பிடிச்சாலும் நான் தானே கூட இருந்து பாத்துக் கொள்ளோணும்.. அது தான் கோபமோ வெறுப்போ பக்கத்துல இருந்தே குடுக்கலாம் எண்டு முடிவு செஞ்சிட்டன்.. இனி அந்த வீட்டுக்கு நான் போகோணும் எண்டால் அவர் அந்த தொழிலை விட்டே ஆகோணும் அவ்வளவு தான்.. போய்ச் சொல்லுங்கோ நான் இங்க தான் இருக்கிறன் எண்டு.. ஆள் அறைக்குள்ள இருக்கிற பொருளை எல்லாம் தூக்கி அடிக்குது..”
என கோதை சொல்லி முடிக்கவும், வியாகேசு ஜேம்ஸிடம் ஓடினார்.
அங்கே அறையே அலங்கோலமாகக் கிடக்க, தன்னையே காயப் படுத்திக் கொண்டிருந்தான் ஜேம்ஸ்பீட்டர். அவனிடம் ஓடிச் சென்று அவனின் கையை இறுகப் பற்றி
“உன்ரை பொஞ்சாதி அங்க ஹெஸ்ட்கவுஸ்ல தான் இருக்கப் போறாளாம்.. வீட்டை விட்டு ஒரேயடியாப் போகேல்லையடா..”
என வியாகேசு சொன்ன பிறகு தான் அவன் ஓரளவு சமாதானம் ஆகினான்.
அதன் பிறகு கோதை விருந்தினர் வீட்டிலேயே இருந்து கொண்டாள். வீட்டை விட்டு அவள் வெளியே செல்லவே இல்லை. நீலரூபியும் அவளுடன் வந்து தங்கிக் கொண்டார். தாயிடமும் தான் உண்டாகி இருப்பதை மறைப்பது மட்டும் தான் அவளுக்கு கடினமாக இருந்தது.
வீட்டினுள்ளேயே இருக்க மூச்சு முட்டுவது போல இருக்க, விருந்தினர் வீட்டின் பின்புறம் இருந்த மரத்துக்கு கீழே வந்து அமர்ந்து கொண்டவள், இப்போது வரை அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் பற்றியே யோசனை செய்து கொண்டிருந்தாள்.
அந்த நேரத்தில் அவளைத் தேடிக் கொண்டு நீலரூபி வந்து சேர்ந்தார்.
“என்னடி பிள்ளை என்ன யோசிச்சு கொண்டு இருக்கிறாய்..”
“அம்மா..”
“ஓம் சொல்லு..”
“உங்களிட்டை ஒரு விசியம் சொல்லோணும்.. எப்பவோ சொல்லி இருக்க வேண்டியது.. நான் கட்டின மனுஷனை ஒரு நல்ல வழிக்கு கொண்டு வந்திட்டுச் சொல்லலாம் எண்டு இருந்தன்.. ஆனா இப்பவே உங்களிட்டை சொல்லோணும் எண்டு மனசு கிடந்து துடிக்குது..”
“என்னடி பிள்ளை என்ன விசியம்.. நீ போடுற பில்டப்பை பாத்தால் பெரிய விசியம் போலக் கிடக்கு..”
“ஓம் அம்மா.. ஆனா என் மேல சத்தியமா இது சம்மந்தமா நீ ஆரிட்டையும் மூச்சுக் கூட விடக் கூடாது..”
“ஆரிட்டையும் சொல்லாத எண்டால் சொல்லாமல் விடப் போறன்டி.. அதுக்கேன் உன்னில சத்தியம் எல்லாம் செஞ்சு கொண்டு..”
“நீ சொல்ல மாட்டே தான் இருந்தாலும்..”
என்றவள் தன் முன்னால் கதிரையில் இருந்த தாய்க்குப் பக்கத்தில் போய் அவரது மடியில் தலை வைத்துக் கொண்டாள்.
தன் மடியில் படுத்திருந்த மகளின் தலையைக் கோதி விட்ட நீலரூபி
“என்னடா என்ன விசியம்..”
எனக் கனிவாக் கேட்க, தன் தலை கோதிய தாயின் கரத்தை எடுத்து தன் வயிற்றில் வைத்து
“நீ அம்மம்மா ஆகப் போறாயம்மா..”
எனக் கண்கள் கலங்கச் சொன்னாள் கோதை.
கோதை சொன்ன செய்தியில் சந்தோஷம் தாங்க முடியாமல் திக்கு முக்காடிப் போன நீலரூபி, கோதையை இழுத்து அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார்.
“என்ரை செல்வம்.. உன்னைய இப்புடிப் பாக்கத் தான்டி தவமிருந்தன்.. அந்தக் கடவுள் கண் திறந்திட்டார்.. அது தான் மெலிஞ்சு போய் இருந்தனியே..”
“அம்மா.. இந்த விசியம் இன்னும் என்ரை வீட்டுக்காரருக்கு தெரியாதம்மா..”
“அச்சோ அவனிட்டை தானேடி முதல்ல சொல்ல வேணும்.. சரி சரி வா வா.. போய் சொல்லு..”
“அம்மா நான் சொன்ன விசியத்தை மறந்திட்டியளோ..”
“என்னடி..”
“நான் குழந்தை உண்டாகி இருக்கிற விசியம் உங்களைத் தவிர ஆருக்குமே தெரியக் கூடாது.. முக்கியமா என்ரை மனுஷனுக்கு தெரியக் கூடாது..”
“ஏன்டி பிள்ளை..”
“அம்மா.. அவர் நான் நினைக்கிற போல அந்தப் போதை கடத்திற வேலையை விட்டாப் பிறகு தான் குழந்தை விசியத்தைச் சொல்லுவன் எண்டு சத்தியம் செஞ்சிருக்கிறன்..”
“என்னடி பிள்ளை..”
“ஓமம்மா.. இதைப் பத்தி நீங்கள் புரிஞ்சு கொள்ளுவீங்கள் எண்டு நம்புறன்..”
எனச் சொன்ன கோதை, நீலரூபியிடம் ஜேம்ஸின் தொழில் பற்றியும் அவன் அதைச் சாதாரணமாக நினைத்துக் கொண்டு விட மறுக்கிறான் என்றும், அதை விட வைப்பதற்காக தான், தான் ஒதுங்கி இருக்கிறேன் என்பதையும் விளக்கமாகச் சொல்ல, மகள் சொன்னதை நீலரூபி ஏற்றுக் கொண்டார்.
அதன்படி மகள் உண்டாகி இருப்பதை இரகசியமாகவே வைத்துக் கொண்டு, அவளை நன்றாகவே கவனித்துக் கொண்டார்.