மலர்விழி மகளைப் பிரிய முடியாது அழுது அழுது களைத்துப் போனார். ஆர்த்திக்கும் சைத்ராவுக்கும் அதே கதைதான்.
“நானும்தான்ப்பா தேடுவேன். அவங்களை மட்டும் பக்கத்துலயே கட்டிக் குடுத்துட்டிங்க. என்னை மட்டும் இவ்வளவு தூரம் தள்ளி கட்டி வச்சிருக்கீங்க. உங்களைப் பார்க்கணும்னு நினைக்கும் போது அப்பவே பார்க்க முடியாது. ஆனா அக்கா ஆர்த்தி மட்டும் நினைச்சப்ப எல்லாம் வருவாங்க” தந்தையைக் கட்டிக்கொண்டு அழுதவளைப் பார்த்த அனைவருக்குமே கண்ணீர் வந்தது.
“நளிரா பொண்ணுதான் அறிவுள்ள பொண்ணுன்னு நினைச்சேன். இதென்ன இப்படி அழுதுட்டு இருக்கா?” அவளைத் தொட்டு கர்ப்பவதியாய் இருக்கும் பெண்களும் அழுதுட்டு இருக்க, வாணிதான் தன் முகத்தைத் துடைச்சுக்கிட்டு அவளை சமாதானப்படுத்த முன்வந்தார்.
“மாசமா இருக்க பொண்ணுங்களை அழ வைக்கப்படாது தங்கம். எத்தனை நாள் இருந்தாலும் இருக்கட்டுமேன்னுதான் தோணும்டி. ஆனாக்கா அவங்கவங்க இடத்துக்கு அவங்க போனாத்தானே பொழைப்பை ஓட்ட முடியும்? இன்னும் ரெண்டு மாசத்துல அவங்களுக்கு வளைகாப்பு வரும்டி. அதுக்கு வந்து சேர்ந்தாப்புல தங்கிட்டு போயேன் யாரு வேண்டாம்னா உன்னைய” வாணி அவளுக்கு புரியும்படி எடுத்துச் சொல்ல.
சரியாக சாப்பிடவும் இல்லாமல், ஏனோதானோவென அவனுக்கு பதில் தருவதும், ஏதோ அவன்தான் அவர்களைப் போகுமாறு விரட்டிவிட்டது போலவே முறைத்தவண்ணம் இருந்தாள்.
மிராவும் ஆரியனும் அவளுக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்க, மீராவுக்கு கண்கள் கலங்கிப் போயிருந்தது.
தன் முந்தானையைப் பற்றிக்கொண்டு குழந்தையாய் அழும் மருமகள் மீது அத்தனை பிரியம் வந்தது அவளுக்கு.
தங்களுக்கு குழந்தை செல்வம் இல்லையெனினும் பால் மனம் மாறாத பிள்ளைகளை வளர்த்தும் பாக்கியத்தை கடவுள் அவர்களுக்குத் தந்திருந்தார். அவ்வப்போது இருவரில் ஒருவர் பெண் குழந்தையாய் இருந்திருக்கலாமே என்று மிரா ஏங்குவது உண்டு.
வந்ததில் இருந்தே நளிரா அவருடன் பெற்ற மக்கள் போலவே ஒட்டிக்கொள்ள, அவருக்கு அத்தனை சந்தோஷம். அத்தோடு துருவ் கண்விழித்து அவனும் ஒரு பெண்ணைக் கட்டிக்கிட்டால் திருப்தியாகிவிடும் இவருக்கு.
துருவ் நினைவில் மிரா கண் கலங்க, அங்கே வந்த சிபின் இவள் சோகப்பாட்டு பாடுறதும் இல்லாம அம்மா அப்பாவையும் சேர்த்து சோகமாக்கிட்டு இருக்காளே என்று சினம் துளிர்த்தது அவனுக்கு.
அவள் அருகே சென்றவன் “எதுக்குடி முகத்தை இப்படி வச்சுக்கிட்டு இருக்க? இருக்கறவங்க நிம்மதியையும் கெடுக்கலாம்னு பாக்குறியா? இங்க இருந்து எங்க நிம்மதியையும் கெடுத்து தொலைக்காம போக வேண்டியதுதானே அவங்ககூடவே” அப்பா அம்மா இருக்கிறார்கள் என்று கூடப் பாராது சத்தம் போட்டான்.
அவன் மிரட்டவும் அரண்டு போனவளாய் மிராவின் அருகில் நெருங்கி அமர்ந்தாள் நளிரா. எல்லோர் முன்பும் பேசவும் அவளுக்கு அவமானமாகிப் போனது.
“இதோ பார். பொண்ணா லட்சணமா சிரிச்ச முகத்தோட இருக்கணும் புரியுதா. அத விட்டுட்டு கியா முயான்னுட்டு இருந்தன்னு வை. அடி பிச்சுருவேன்” என்றவன் அவள் முன் விரலை நீட்டி மிரட்டிட.
தன் முன் விரலை உயர்த்தி மிரட்டுப்பவனை பூச்சாண்டியைப் பார்ப்பது போலப் பார்த்தவள் “அவங்க போயிட்டாங்கன்னு இவருக்கு சந்தோசம் அத்தை. உங்களுக்கு கூட அவங்க போயிட்டாங்கன்னு கண்ணீர் வருது. இவருன்னா எப்பப் பாரு என்னைய மிரட்டிட்டு இருக்காரு” மிராவின் தோளில் முகம் புதைத்துக் கண்ணீர் விட.
“அதுக்கு எங்க முன்னயே அவகிட்ட சத்தம் போட்டுப் பேசுவியா சிபின். இதென்ன பழக்கம் பொண்ணுங்களை மிரட்டி வைக்கறது?” மிரா நளிராவுக்கு ஆதரவாக கொந்தளிக்க.
“சாரி மாம்” கோபம் வடிந்து பணிவாக நின்றான் சிபின்.
எப்பப் பாரு தன்னை பூச்சாண்டி காட்டி மிரட்டும் அரக்கன் பணிவாக அடங்கி நிற்கவும் நளிராவுக்கு இன்னும் மாமியாரைப் பிடித்துப் போக, “நீங்க லவ்லி அத்தை” என்று மிராவின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
அதில் சிபினின் பொறாமை உச்சத்துக்கு ஏற, அங்கிருந்து விலகி தன் அறைக்குச் சென்றான்.
மகனைத் தேடி அவன் அறைக்குச் சென்ற மிரா, “சிபின் பெத்தவங்களை விட்டுட்டு இங்க தனியா இருக்காடா. அவளைப் போய்” மிரா பேசி முடிப்பதற்குள் தடுத்த சிபின்,
“அவளுக்குத்தான் நாம இருக்கமில்லம்மா?” என்று கூறினான் சிபின்.
“என்னதான் நாம இருந்தாலும், இத்தனை நாள் அவங்க கைக்குள்ளயே வளர்ந்த பொண்ணுடா அவ. நம்ம கூட ஒட்டிப் பழக இன்னும் நாள் எடுக்கும்டா. அதும் நீ அவகிட்ட நடந்துக்கற லட்சணத்துக்கு மாசமே ஆகும் டா” மிரா மனதுக்குள் மகன் மீதான கடுப்பை மறைத்துச் சொன்னாள்.
“ப்ச் மாம். நான் என்னதான் பண்ணட்டும். துருவ் இப்படி இருக்கறதுக்கு காரணமே இவதான்னு நினைக்கறப்ப எல்லாம் பத்திக்கிட்டு வருது. கோபப்பட்டு எதையாச்சும் பேசிடறேன். இவளும் அதுக்கு தக்க பண்ணுறா” சொன்னவனுக்கு மதியம் அவள் காலில் விழுந்து கதறியதை மறக்கவே முடியவில்லை. தவித்துப் போனான். தன்னிடம் கெஞ்சிக் கூத்தாடி கண்ணீர் விட்டவளின் கலங்கிய முகம் அவனை ஒரு நிலையில் இருக்கவே விடவில்லை.
“அண்ணனும் தம்பியும் ஒரே பொண்ணை லவ் பண்ணியிருக்கீங்க. அந்தப் பொண்ணு என்ன கடவுளா யார் யார் தன்னை லவ் பண்ணிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க” ஒரு முடிவுக்கு வந்தேவிட்டார் மிரா.
இன்னைக்கு இவனுக்கு வேப்பிலை அடிச்சே ஆகணும்னு முடிவு பண்ணியவர், கதவை சாத்திவிட்டு வந்தார். நளிரா அவள் குடும்பத்தோடு போனில் நலம் விசாரிக்க ஆரம்பிக்கவும்தான் மகனைத் தேடி வந்தார்.
“மாம் அப்படிப் பேசாதிங்க. ஐ டோன்ட் லைக் தட்” தன்னுடையவளை பெயருக்காகக் கூட வேறொருவர் கூட வச்சுப் பேசுவதை அவன் விரும்பவே இல்லை. நளிராவை அவன் காயப்படுத்துவதற்குக் காரணம் இதுவுமாகும்.
இவளாலதானே தன் தம்பிக்கு இப்படி ஒரு நிலை?
தான் விரும்பும் பெண். தனக்கு மட்டுமே உரிமையான பெண்ணை இன்னொருவன் விரும்பிவிட்டானே என்ற உணர்வும் சேர்ந்துகொள்ள, கிட்டதட்ட மிருகம் போல ஆகிவிட்டான்.
“உன் தம்பி ஒரே ஒரு நாள்தான் இவளைப் பார்த்திருக்கான். உடனே காதல் கத்திரிக்காய்ன்னு அதுக்கு ஒரு பேர் வச்சுக்கிட்டு ஐயா ஊரை சுத்தி வரேன்னு கிளம்பிட்டார். நீ என்னடான்னா அவளை மிரட்டி வைக்கறேன்னு சொல்லிட்டுக் கிளம்பினவன் அந்தப் புள்ளையை படாதபாடு படுத்தியிருக்க. லவ் பண்ணச் சொல்லி போர்ஸ் பண்ணியிருக்க” தாய் உண்மையைப் புட்டுப்புட்டு வைக்கவும், சிபினுக்கு அதைக் கேட்கவே சங்கடமாக இருந்தது.
ஒரு குறையும் காண முடியாத அளவுக்கு சிபினின் நடவடிக்கைகள் இருக்கும். அப்படியிருக்கையில் காதல் என்ற ஒரே விஷயத்தில் குடும்பமே தன்னை அரக்கன் போலப் பார்ப்பதை அவனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
“அந்தப் பொண்ணு பாவம்டா. பயந்து பயந்து முழிக்கறா. எந்தப் பாவமும் செய்யாத பிள்ளையை கட்டிக்கிட்டு வந்து சந்தோஷமா வச்சுக்குவோமினு இல்லாம எரிஞ்சு விழற நீ. உன் நிழலைப் பாத்தாவே ஓடி ஒளிஞ்சுக்கறாடா. புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரியா இருக்கா. கண்ணெல்லாம் கலங்கி, ரெண்டே நாள்ல மெலிஞ்சு போயிட்டா. அந்த அளவுக்கு கொடுமைக்காரனா என மகன்?” மிரா போட்ட போட்டில் வாய் மீது கைவைத்து நின்றுவிட்டான் சிபின்.