‘இந்தம்மா வாயில விழுந்தா விளங்குன மாதிரிதான். சீமையில இருந்து வந்தேன்னு சிங்காரிச்சுகிட்டு சுத்துறது. இதுக்கு மட்டும் எப்படித்தான் எந்நேரமும் அலங்கார பொம்மை மாதிரியே இருக்க முடியுதோ. ஒரு முடி கலையறது இல்ல, உதட்டுல சாயம் அப்பியிருக்கோ?’ சந்தேகம் வர, கண்களை சுருக்கி சுலோச்சகனா உதட்டில் பார்வையை ஊன்றினாள்.
அவள் மனதில் தோன்றும் தன்னைப் பற்றிய சந்தேகம் புரியாத சுலோச்சனா தன்னைப் பார்த்ததும் பயந்து வாயை மூடி அமைதியானாள் என்ற மிதப்பில் கண்ணில் உள்ள பவர் கிளாசை மூக்கின் மீது சரியாய் ஏற்றிவிட்டார்.
‘அடேயம்மா, இதுக்கு இருக்க திமிரை பாரு’ வியப்பின் உச்சியில் புருவம் நெற்றிக்கே ஏறி இறங்கியது செவ்வந்திக்கு.
“என்னடி வேணும்?” மகன் அருகே நிற்கும் செவ்வந்தியை வேண்டாத பார்வை பார்த்தார்.
பேச்சுவாக்கில் முந்தானையை சுருட்டி இடுப்பில் முடிந்த செவ்வந்தியின் இடுப்பு, வயிறு வெட்ட வெளிச்சமாய் தெரிய, சுலோச்சனா அவளை எரிச்சலாகப் பார்த்தார். திருமணம் முடிந்து இங்கே வந்த தினத்தில் இருந்தே இந்த கிராமத்துப் பெண்களிடம் இந்த பழக்கம் அவருக்கு பிடிப்பதே இல்லை.
பாவாடை ஜாக்கெட் என உடுத்திக்கறது அதுக்கு மேலே கடனே என ரெண்டாய் கிளிச்ச தூண்டுசீலையை கட்டிக்கறது. கொஞ்சம் கிழடு கட்டையா இருந்தா முழுக்கை சட்டையை பொம்மை மாதிரி போட்டுக்கறது.
இள வயசு பொண்ணுங்க பேருக்கு தாவணி கட்டிக்கறது ஒன்னையும் மறைக்கறது கிடையாது மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டார். தயாளனை பிடிக்கும் ஆனா அவர் ஊர் பழக்கம் பிடிக்காது போனது அந்த ஊர் மருமகளுக்கு.
காட்டு வேலை தோட்ட வேலை நூறு நாள் வேலைக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அந்த ஊரில் அதிகம். வீட்டில பொழுது போகலை இப்படியாவது வேலைக்கு போனா, வெளி ஆளுங்க முகம் பார்த்து பேசலாம் கையோட கூலியும் வாங்கிக்கலாம் என கையில் உள்ள பையில் மதிய சாப்பாடு குடிநீர் ஒரு சுருக்குப் பையில் வெத்தளை பாக்கு என எடுத்துச் செல்வர்.
அப்படி மழை வெய்யில் பார்க்காமல் உழைக்கும் கிராமத்து பெண்கள் உடைகளில் கவனத்தை வைக்க மாட்டார்கள். நோம்பி நொடின்னா மட்டும் நகை பட்டுன்னு கிளம்பி வீட்டை விட்டு வெளியே வருவார்கள்.
“என்னத்தை பேச்சை காணோம். நாக்கு சுளுக்கிச்சா. பேச்சு புட்டுக்கிச்சா” செவ்வந்தி சுலோச்சனா உதட்டையே இன்னும் சந்தேகப் பார்வை பார்த்து கேட்டாள்.
அன்னம் வாய் பொத்தி சிரித்து விட்டாள். குட்டி இளவரசி முகத்தில் புன்னகை நெளிய அதை பூரிப்போடு பார்த்த கருப்புச்சாமிக்கு, “ஓயாம பேசறா வாயாடி” சொன்னவன் இடை நெளிய அவள் நின்ற தோரணையில் அங்கே பார்த்தவன் நெஞ்சுக்குள் திக் திக்குன்னு இதயம் வேகமாய் துடிச்சது,
“ம்க்குக்கும்” என சுலோச்சனா தொண்டையை செரும. சங்கடமாய் புருவத்தை தேய்த்தவன் தங்கையின் பக்கம் திருப்பினான் பார்வையை.
“அத்த சொல்லாதடி” முகத்தை திருப்பினார்.
“ஐய மாமன் பொண்டாட்டியை அத்தைன்னுதான சொல்லோணும், ஏனுங்க மச்சான் அத்தைக்கு எடுத்துச் சொல்லுறது” பக்கத்தில் கரிய வைரத் தூண் மாதிரி நிற்கும் கருப்புச்சாமியின் தோள் மீது தன் தோளை இடித்துக் கேட்டாள்.
“ஏய் இந்தப் பக்கம் வாடி” சுலோச்சனா நழுவும் கண்ணாடியை நிமிர்த்திவிட்டு அவளை முறைத்தார்.
“அடேயப்பா ஊரு உலகத்துல இல்லாத மகனை பெத்துட்டீங்க. நான் கிட்டப்போனா முட்டிக்கும்னு சொல்ல” அவன் பக்கத்தில் நின்று சுலோச்சனா பொறாமையை நல்லா தூண்டிவிட்டு குளிர்காய்ந்தாள்.
“ஏய் சொன்னா கேளு” செவ்வந்தி பண்ணுற ஒண்ணு ஒண்ணும் அவருக்கு கோவத்தை தந்துச்சு.
“ஏனத்தை மச்சானை தொட்டா ஒட்டிக்குமா கருப்பு மையி” அவன் தோளை விரலால் சுரண்டினாள்.
“அது சரி உங்க மகனை மயக்கி இடுப்புல முடிஞ்சுக்கணும்னு நானொன்னும் ஏங்கிப் போயி கிடக்கலை. அந்த அளவுக்கு இந்த கருப்புச்சாமி மன்மதனும் இல்லத்த” வெடுக்கென அவரை முறைத்த செவ்வந்தி,
“நீ பணத்தை கைல வை அன்னம். எனக்கு வரப்ப கொத்தர வேலை இருக்கு” தன் முகத்தையே ஆவென பார்த்த அன்னத்திடம் இருந்து பணத்தை பறித்த செவ்வந்தி,
“கஷ்டப்பட்டு உழைச்ச காசு அத்த. உங்களுக்கு அது அருமையெல்லாம் எங்க தெரிய போகுது. முகத்துல அப்புற ரோஸ் பவுடருக்கே மாமன் சம்பாதிக்கறது முச்சூடும் போயிருமாட்டிருக்கு” அந்த இடத்தில இருந்து வெளியேறியவள்,
“இருட்டுல நின்னா எருமைக்கும் இந்தாளுக்கும் வித்தியாசம் தெரியாது இவரை மயக்க நான் கிடந்து தவிக்கிற மாதிரியில்ல இந்த அத்த பேசுது. டவுனுல இருந்து பொண்ணு கட்டிட்டு வந்தா இப்படித்தான் முறைச்சுக்கிட்டு திரியும்” சந்தமாய் பேசியபடி வந்த செவ்வந்தியை அழைத்தார் ராமாயி.
“நானாடி புடிச்சேன். உன் மாமன் அரிசி மில்லுக்கு நெல்லு குடுக்கப் போனவன் அங்கிட்டே இந்த சிந்தாமணியப் பாத்து பிடிச்சுப் போச்சுன்னு வந்து நிக்கறான். மறுத்துப் பேசி ஊர் சிரிக்க கூடாதில்ல. காதும் காதும் வச்ச மாதிரி முடிச்சுட்டேன் கல்யாணத்த” மகன் விசயத்தில் மூக்குடைபட்ட கதையை ராமாயி சொன்னார்.
“அது சரி அந்தக் காலத்துலயே பாதிக்கு பாதி சொத்தை பொண்ணுக்கும் எழுதிக் கொடுன்னு மருமக பங்க எழுதிட்டு வாங்கின ஆளுதான நீ. என்னவோ சும்மா கட்டிக்கிட்டு வந்த மாதிரியில்ல பீத்திக்கிட்டு இருக்க” கிழவியின் கொட்டலாவில் இருந்த இடிப்பட்ட வெத்தலையை வழித்து தன் வாயில் போட்டாள்.
“கல்யாணமாகாத வயசுப் பிள்ள இதெல்லாம் திங்க கூடாதுடி” திரும்ப எடுக்க வந்த கையை தட்டிவிட்ட ராமாயி,
“அதெல்லாம் கம்மிடி. எம் பேரனுக்கு ஊரையே எழுதி வாங்கப் போறேன் பாரு”
இன்னும் இடிப்பட்ட வெத்தலை கிடைக்குமான்னு பாத்த செவ்வந்திய ஓரக்கண்ணால பாத்த கிழவி, இடிச்ச வெத்தலையை செவ்வந்தி திரும்ப எடுக்கும் முன் தான் அள்ளி வாயில் போட.
ஏமாந்து முகத்தை சுருக்கிட்டவ “நல்லா பகல் கனவு கண்டுக்கிட்டே இரு கிழவி. ஒரு நாளைக்கு காக்கா கொத்தற மாதிரி நான் கொத்திட்டு போயிக்கறேன் கருத்த மச்சானை ” செவ்வந்தி பணத்தை பத்திரப்படுத்திவிட்டு கிளம்பினாள்.
“ஏய் வாயாடி. ஒரு மணிக்கு தண்ணி தொட்டிக்கு வந்துடு. மீனு பிடிச்சுட்டு வரேன். காரமா வறுத்து தா” கருப்புச்சாமி வேட்டியை மடித்துக் கட்டி அவள் பின்னே வந்தான்.
“போ மச்சான் உங்க அம்மாகிட்ட ஒரு வார்த்தை ஏன்னு கேக்க வக்கில்லை. இப்ப மட்டும் நண்டு வறுத்து தா. கோழி பொரிச்சுத் தான்னு வக்கணையா கேக்குற” முகத்தை திருப்பினாள்.
“வான்னா வாடி. பதில் பேசிட்டு இருக்கவ” தோளில் இருக்கும் துண்டால் அவள் பின்புறம் அடித்து அழைத்தான்.
“நீ என்னை என்னன்னு நினைக்கறடி?” அவள் பேச்சுக்கு பதில் தந்தவன், “அதைவிடு இப்ப வர்றியா இல்லையா? இன்னைக்கு வறுத்த மீனு தின்னே ஆகணும் எனக்கு. வாடி தண்ணி தொட்டிக்கு” முரண்டு பிடித்தான்.
“நீ மலைக்குரங்கு மாதிரி இருக்க எனக்கு. நாக்கை நறுக்கிப்புடுவேன் பாத்துக்க. பொண்டாட்டிய கூப்பிடுற மாதிரி வாடின்னு சொல்லிக்கிட்டு இருக்க. மரியாதை இருக்காது பாத்துக்க” சொன்னவள் அவன் முகம் பார்த்து அப்படியே போக முடியாமல்
“சரி வரேன் சுத்தம் பண்ணி வை. எனக்கும் பங்கு வேணும் மச்சான். எல்லாத்தையும் நீயே வாயில போட்டுக்க பாக்காதே சொல்லிட்டேன்” சொல்லிவிட்டு கடைகளுக்கு போக நடையைக் கட்டினாள்.
அமுதா கருப்பண்ணனுக்கு இளவரசன் தலைமகனாக பிறந்தான் அவனுக்குப் பிறகு காலதாமதமாக செவ்வந்தி பிறந்தாள்.
செவ்வந்தி பேசும் பேச்சில் தலை சுற்றி போன சுலோச்சனாவுக்கு புயலும் இடியும் பலத்த காற்றுடன் வந்து ஓய்ந்த மாதிரி ஆனது, “மண்ணு வாயா இருந்தா இந்நேரம் உடைஞ்சு போயிருக்கும்டி. வாயா அது எந்நேரமும் லொடலொடன்னு பேசிட்டே இருக்கா” தலையை உலுக்கினா.
செவ்வந்தியை சுத்தமாக பிடிக்காது சுலோச்சனாவுக்கு. அதனால் அவளை அடக்கி வைக்க நினைப்பாள். அப்படியே மாமியார் ராமாயி கிழவியையும் ஜாடையும் பேசிடுவாள்.
சுலோச்சனாதான் இப்படி என்றால் அமுதாவும் செவ்வந்தி விசயத்தில் இப்படித்தான்.
“பொம்பளைன்னா மூச்சு விடற சத்தம் கூடக் கேக்கக் கூடாதுடி. வாயை எட்டு ஊருக்கு இழுக்குதுங்க இந்த வீட்டுல” என ஆரம்பிப்பாள்.
இளவரசன் நன்றாக படித்ததில் அவனுக்கு பக்கத்து ஊரில் பேங்க் வேலை கிடைத்துவிட்டது. இங்கிருந்தே பஸ்ஸில் போகும் தொலைவுதான். எதுக்கும் இருக்கட்டுமேன்னு கண்ணபன் வீடு கட்ட தோதாக ஒரு காலி மனையை வாங்கிப் போட்டிருக்கிறார் அந்த ஊருக்குள்.
இளவரசனுக்கும் அங்கே வீடு கட்டும் யோசனை இருக்கவேதான் லோனுக்கு ஏற்பாடு பண்ணிகிட்டிருக்கான்.
கண்ணப்பனும் தன்னால் ஆனதை செய்கிறேன் என்று சொல்லவும், ஆர்வமாய் இருக்கிறான். இப்பொழுது இவர்கள் இருக்கும் வீடு ஒரு குடும்பம் தங்கும் அளவுக்கு சிறிய வீடுதான்.
அதுக்குள்ளேயேதான் அமுதாவும் செவ்வந்தியும் படுப்பார்கள். இளவரசன் கண்ணப்பன் வாசலில் படுத்துக்கொள்ள, மழை நாளில் அவர்களும் உள்ளேதான் படுப்பார்கள். இப்போதைக்கு இந்த வீடு நாலு பேருக்கு ஏதோ இருக்கலாம் பரவாயில்லை என்ற அளவுக்குத்தான் இருந்தது. எதிர்காலத்தில் கல்யாணம் காட்சின்னு வந்தால் இடம் காணாது அங்கே.