அன்னம் மரத்தின் மீது கண்களை மூடி அப்படியே சாய்ந்து நின்றுவிட்டாள். அவள் மனதை அறிந்தது போல காற்றும் சுழன்று அடித்தது. முகத்தில் அரைந்து போகும் காற்று அவளை குளிர்விக்க முயன்று தோற்றுப் போனது. தேகத்தின் வெம்மையை இன்னுமே கூட்டத்தான் செய்தது.
துச்சாதனன் போல் தன் மேலாடையை அவன் உருவியது நினைக்க. அவள் கரம் தானாய் நெஞ்சம் மறைத்தது. அவன் முன் தான் நின்ற கோலம்?…
ஒருமுறை தன்னை குனிந்து பார்த்தவளுக்கு முன் அழகு எடுப்பாய் தெரிய, கூடவே யூ கட் முறையில் இறக்கி தைக்கப்பட்டிருந்த முன் கழுத்து வளைவில் அதன் விளிம்புக்களும் அவன் தேடும் பார்வைக்கு விருந்தளித்திருக்கும் எனப் புரிய, அசிங்கமாய் போனது. விழிநீர் நிற்காது கன்னங்களை நனைத்து மார்பில் தஞ்சம் அடைந்தது.
அங்கேதானே அவன் உதடுகள் மீசை அழுந்த பயணம் செய்தது மேனி சிலிர்க்க கரத்தால் அந்த இடத்தை தேய்த்து அவன் விட்டுச்சென்ற தடயத்தை அழிக்க முயன்றாள்.
சுலோச்சனா நாகரிகம் என்ற பெயரில் எடுத்து தரும் உடைகள் இவை. வீட்டுக்குப் போனதும் தீயிட்டு கொளுத்த எண்ணம் வந்தது அவளுக்கு.
அவளால் மீள முடியவில்லை தற்சமயம். சத்தியசீலனின் நெருக்கம் அவளை குழப்பத்திற்கு கொண்டு போனது.
சத்தியசீலனின் முரட்டுக் கரம் இன்னும் வெதுவெதுப்பாய் படர்வது போல, மீசை முடிகள் குத்தி வதைப்பது போல ஒரு பிரம்மையில் இருந்து விடுபட முடியாமல் நின்றாள் அன்னம். அவன் ஆணவமான அணைப்பில் மொட்டாய் இருந்த பெண்மை பூவாய் மலர ஆரம்பித்தது. அவன் நெருக்கத்தை அவனுக்கான வாசனையை மனதுக்குள் வேகவேகமாய் பதிய வைத்தது.
அண்ணன் மீது கொண்ட பகைக்காக தன்னை சாகும் நிலைக்கு கொண்டு சென்றவன்.
இப்பொழுது இவன் நடத்தையைக் கவனித்தால் மனதில் என்ன வச்சிருக்கான்னே தெரியலையே, மயக்கம் வருவது போல தள்ளாடியாது உடம்பும் மனசும். சத்தியசீலனின் பற்கள் பதம் பார்த்த உதடுகள் எரிச்சலாய் நமநமத்தது.
இனி இது தொடரக்கூடாதே பெண்ணின் எச்சரிக்கை குணம் தலைதூக்க, தன் மானம் காத்துக்கொள்ள நினைத்தாள்.
“அன்னம்” இளவரசனின் கூப்பாடு காதில் விழ, தன்னை காப்பாற்ற நினைக்காமல் ஒரு அடியில் மயங்கி விழுந்த அவன் நோஞ்சான் தனத்தில் சலிப்பு மிகுந்தது. போயும் போயும் இப்படி ஒரு தொடை நடுங்கி மீதா ஈர்ப்பு கொண்டோம் அஞ்சினாள் தன் மதிப்பீடு தவறாகி சரிந்து போனதை நினைத்து.
சத்தியசீலனை பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கான். அவன் ஒரு அரக்கன். பேரை சத்தம் போட்டு சொன்னால் கூட அடிக்க வருவான் என்பதும் கூட தெரிந்தும் தன்னை அவனிடம் தனியாக விட்டுவிட்டு மயக்கம் போட்டு விழுந்துவிட்டானே ஒரு அடிக்கே தாங்காதவன் மீதான ஈர்ப்பு மொட்டிலேயே கருகிப் போனது.
அவன் சமீபிப்பதை உணர்ந்தவள் சுடிதாரின் மீது மேலாடை இல்லாமல் இருப்பதை உணர்ந்து நெஞ்சின் மீது கைவைத்து மறைத்தபடி எங்கே என்று தேட அவள் காலடியில் கிடந்தது.
“அண்ணன்கிட்ட சொல்லி இவனை தட்டிவைக்கறேன். எம்மேல கைவைக்கற அளவுக்கு வந்திட்டான் இதை சும்மா விடக்கூடாது. அப்பவே காட்டி கொடுத்திருக்கணும் இவனை” குனிந்து எடுத்து சரியாக இருபுறமும் போட்டாள். தலையை சரிசெய்து மரத்தின் பின்புறமிருந்து வெளியே வந்தாள்.
தான் நிற்கும் மரத்தின் மேல் அமர்ந்து தன் தவிப்புகளையே உற்று நோக்குவதை அவள் அறியவில்லை.
“அன்னம் இங்க இருக்கியா? அந்த அண்ணா எங்க போனாங்க?” பேர் சொல்லவும் பயந்து அண்ணா என்றுவிட்டான் வாங்கிய ஒற்றை அரையில்.
“பயப்படாத இளவரசன். உன்னை ஒன்னும் பண்ண மாட்டாங்க” அவன் கன்னத்தில் அச்சாய் சிவப்பு நிற வரியில் தெரிந்த சத்தியசீலனின் விரல் பதிவை பார்த்து பயத்தில் மிடறு விழுங்கியவாறே பேருக்கு தைரியம் சொன்னவள் கரம் தன் கன்னத்தை தடவிப் பார்த்தது.
கொடும்பாவிகிட்டே அவள் வாங்காத அடியா? தேகம் நடுங்கியது.
“பயப்படாம என்ன பண்ணச் சொல்லுற அன்னம். வாங்கிய அடியில இன்னும் காதுக்குள்ள ரயில் ஓடுற சத்தம் கேக்குது. சரி வா போகலாம்” அவள் கையை பிடிக்க வந்தவன் சுற்றும் முற்றும் ஒருமுறை பயமாக பார்த்துவிட்டு முன்னால் நடந்தான்.
அவன் விலகலை விரக்தியுடன் பார்த்து அவன் பின்னே நடந்தாள், இப்படி பயந்து நடுங்கறானே தொடை நடுங்கி என்று.
“நீ போ இளவரசன். நா வீட்டுக்கே போறேன். இன்னைக்கு லீவ் போட்டுக்கறேன்” அவன் கூட செல்லாமல் நின்றுவிட்டாள்.
“என்னாச்சு அன்னம்?” தனக்கு நேரமாகிவிட்டதால் அவளை தனியே விட மனதில்லாமல் நின்றான்.
இளவரசன் பயந்தவன், தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவன். ஆனால் சுயநலவாதி இல்லை. கண்ணப்பன் அமுதாவின் வளர்ப்பு அவன். மாதமானால் வரும் சம்பளத்தை அப்படியே சேமிக்கிறான் தன் குடும்பத்திற்கு ஒரு நல்ல வீடு கட்டவேண்டும். தங்கச்சிக்கு கல்யாணம் செய்துவைக்க வேண்டும் என பொறுப்பை உணர்ந்தவன்.
அதனால் அன்னத்தை இப்படியே விட்டுவிட்டு போக மனதில்லாமல், “சரி வா உன்னை வீட்டுல விட்டுட்டு போறேன்” அவள் மறுபேச்சு பேசும் முன்னர் அவளுக்கு முன்பு நடந்தான்.
அன்னம் அமைதியாக அவன் கூட நடந்தாள் தலையெல்லாம் பாரமாய் கனத்தது. வரும் பொழுது இருந்த மனநிலை இப்பொழுது இல்லை.
செவ்வந்தி எந்த வேலையையும் செய்யாமல் ஓய்வு என்ற பெயரில் படுத்தே கிடந்தாள்.
“உன்ன ஆரு வேலை செய்ய சொன்னா. கத்தாம போமா அங்குட்டு”
“இந்தாளை கட்டிக்கிட்ட புதுசுல இப்படித்தான் சொகமில்லன்னு உக்காந்தேன். அதுக்கு உங்க அப்பத்தாகாரி முடிலன்னா உங்கப்பன் வீட்டுக்கு போய் சீராடிட்டு வா புள்ள. இங்குட்டு இருந்தா வேலை வெட்டின்னு செஞ்சுதான் ஆவணும்னு சொல்லிட்டா கிழவி” செவ்வந்தியை வசை பாடினாலும் அவள் குளிக்க வெந்நீர் விளாவி வைத்தவர் அவள் கட்டிக்கொள்ள மாத்து துணியையும் படல் மீது போட்டார்.
“அப்பா உம் பொண்டாட்டியை வாய மூடச் சொல்லுறியா இல்லையா” கண்ணப்பனிடம் முறையிட்டாள் செவ்வந்தி.
“வா வான்னா சட்டியில சோறு வந்துருமாடி. ஒழுங்கு மரியாதையா படுக்கையில் இருந்து எந்திருச்சு போய் குளிச்சுட்டு வந்து சாமியைக் கும்பிட்டுட்டு தொழுவத்த சுத்தம் பண்ணுடி”
“அதெல்லாம் ஓ வேலைம்மா. எனக்கு சாணியல்ல புடிக்காது. நீதான படிக்காம சும்மா கிடக்குற மாடு மேயின்னு வாங்கி தந்த. அப்ப நீயே பாத்துக்க”
“உன்னதாண்டி மேய்க்க சொன்னேன் குட்டி கழுதை. எப்புடி ஏமாத்துறா பாரு. வாங்குற காசுல பத்துப் பைசாவக் கூட கண்ணுல காட்ட மாட்டேங்குறா அம்புட்டு வெவரம்”
“வாயை மூடுறியா இல்லையாம்மா” செவ்வந்தி கட்டிலுக்கு கிழ கிடக்கும் வட்டிலை எடுத்து வீச.
ராமாயி காலடியில் போய் விழுந்தது அது.
“ஆத்தி பெரியம்மா உசுரை வாங்கியிருப்பாளே நா பெத்த சிறுக்கி” அமுதா மகளை முதுகில் ரெண்டு அடி வைத்தாள். அடியை வாங்கிய செவ்வந்தி முனகிகிட்டே குளிக்க போனாள்.
அதற்கு மேல் அங்கே நின்னா, “குளிக்காம கொள்ளாம பெரியவங்க பக்கத்துல உக்காராதடி. தீட்டு ஒத்துக்காம அவங்க உடம்புக்கு ஏதாவது வந்துடும்” என பச்சையாய் பேசுவார் அவங்க முன்ன வைத்தே.
“அட அவளை விடு புள்ள. எனக்கு ஒண்ணும் ஆகல. போ டீ வச்சு கொண்டா” ராமாயி திண்ணையில் உக்கார்ந்தார்.
கண்ணப்பனுக்கு முகம் மாறியது.
அத்தியாயம் 15
ராமாயி எதுக்கு வந்தார்ன்னு தெரிஞ்சுகிட்ட கண்ணப்பன் முகம் மாறிப் போனது. அங்கிருந்து செல்லத்தான் நினைத்தார் ஆனால் மரியாதையாக இருக்காதே என இருந்த இடத்தில் இருந்து அசையாமல் அமர்ந்துவிட்டார்.
யாரோ செஞ்ச தப்புக்கு இவரை எதுக்கு மனசு கஷ்டப்படுத்தனும். நல்ல மனுசிகிட்ட முகம் திருப்பி அந்தப் பாவத்துக்கு ஆளாவனுமா? என யோசித்தவர் அங்கேயே இருந்தார்.
“என்ன பெரியம்மா இம்புட்டு தூரம் வந்திருக்க. ஏதும் சோலியா” அமுதா ராமாயிக்கும் கண்ணப்பனுக்கும் குடிக்க தந்து விசாரித்தார்.
“மனசு சங்கடமா போச்சு புள்ள அதான் என்னனு எட்டிப் பார்த்துட்டு போலாமேன்னு வந்தன். செவ்வந்தியும் ஒருவாரமா அந்தப் பக்கம் வரல. அதான் ஒரு எட்டு வந்து பார்த்துட்டே போலாமுன்னு வந்துட்டேன்” ராமாயி மருமகனை சங்கடமாக பார்த்தார்.
“என்னாச்சு பெரியம்மா, மருமவ ஏதும் சொல்லிப்புட்டாளா?” அமுதா விசாரித்தார்.
“செவ்வந்தி குளிச்சுட்டு வந்துட்டா பாரு புள்ள. அவகூட நீயும் கோயிலுக்கு போயிட்டு வந்துடு” கண்ணப்பன் அமுதாவை அங்கிருந்து அனுப்ப நினைத்தார்.
“சொந்தத்துல வேண்டாமத்த. அசல்ல பாருங்க” என் மவ உன்ற வீட்டுக்கு வரமாட்டா என சொல்லாமல் சொல்லிவிட்டார் கண்ணப்பன்.
ராமாயி மனதில் பதக்கென அடித்துக்கொள்ள, விக்கித்து உட்கார்ந்துவிட்டார். பேரன் விருப்பம் செவ்வந்தி மேலதான் எனத் தெரிந்தவர் அவர். எப்படியோ பேசி கட்டி வைக்கலாமுன்னு நினைச்சா குடிய கெடுத்துட்டாளே பாதகத்தி. சுலோச்சனா மேல அம்புட்டு கோபம் வந்தது அவருக்கு.
மகன் கட்டிக்கிட்டு வந்தது மகராசியா இருக்குமுன்னு பாத்தா பேயா இருக்கே. வீட்டு வேலைக்குன்னு ஒருத்தி நிலைக்கறது இல்ல. ஏதோ ராமாயி தன்னுடைய பூர்வீக வீட்டுல தனியா சோறாக்கி திங்கறதால அருக்காணி தினமும் சுத்தம் பண்ண புடிக்கன்னு வந்துட்டு போறா.
இதை சுலோச்சனா சொல்லி காட்டிவிட்டார். “வரவங்களுக்கு உங்கம்மா சொல்லி கொடுத்துடுச்சுங்க. அதான் யாரும் நிலைக்கறது இல்ல. அவங்களுக்குன்னா நீ நான்னு வராங்க வேலைக்கு” அப்படின்னு.
“உங்கம்மா கூலியோட நிக்கறது இல்லங்க. சோறு குழம்புன்னு கொடுத்து விடுறாங்க. வயக்காட்டுல வேலை செய்யறவங்க முடியலன்னு வந்தா பணத்தை தூக்கி தராங்க. திருப்பி தராங்களானு பாக்கறதும் இல்ல”
“டேய் தயாளா. உன் வீட்டம்மா வாயை அடக்கி வையி சொல்லிட்டேன். பேசுற நாக்கை நறுக்கிப்புடுவேன். எம் மாமனார் மாமியார் முதற்கொண்டு புருஷன் வரைக்கும் சாம்பாரிச்சு கொட்டிட்டு போயிருக்காங்க. அதுல என்ன வேணா பண்ணுவன். கேக்க ஒரு நாய்க்கும் இங்க துப்பு இல்ல தெரிஞ்சுக்கோ” ராமாயிக்கு ரத்த அழுத்தம் ஏறியது.
“உழைச்சுத் திங்க துப்பில்லைன்னா பிச்சைதான் எடுக்கனும். இதுல என்ன அதிசயமா சொல்லிட்டா இவ. ஊருக்கே தெரிஞ்ச விஷயம்தானடா இது?” ராமாயி வாய்க்கு பதில் தர முடியலை சுலோச்சனாவுக்கு.
அதே நாளில் வக்கீலை கூப்பிட்டு பேசிய ராமாயி பூர்வீக சொத்து முழுசயும் கருப்புச்சாமி மீது எழுதி வச்சுட்டார். மாமியார் கொடுத்தது தன்னுடையது என நகை முழுவதும் பேத்திக்கு முக்கால்வீதம் பிரித்தவர் மீதத்தை கருப்புச்சாமி பொண்டாட்டிக்கு ஒதுக்கி வைத்தார்.
இதில் சுலோச்சனைவுக்கு மனவருத்தம் அதிகமானது.
அவர் யாரையும் நம்புவதே இல்லை. தயாளன் புதிதாய் வாங்கினா எல்லாத்தையும் தனக்கும் சேர்த்தே கூட்டு பட்டா போட வைத்தவர் அவர். அப்படியிருக்க இப்படி எல்லாத்தையும் பொசுக்குன்னு மகன் பேருல எழுதிட்டா அவன் எப்படி தன்னை மதிப்பான்.
சாவுற காலத்துக்கு உயிலை எழுதிவச்சுட்டா, சொத்துக்காகவாச்சும் தனக்கு கட்டுப்பட்டு இருப்பான். இப்படி எல்லாத்தையும் அள்ளிக் கொடுத்துட்டா அவன் வழிய பாத்துட்டு போயிருவானே பதைத்தார்.
ராமாயியை தான் ஒதுக்கின மாதிரி கருப்புச்சாமி பொண்டாட்டி தன்னை ஒதுக்கிட்டா என்ன பண்ணுறது பயம் வந்தது அவருக்கு.
ராமாயிக்கிட்டே இதை கேட்டு பேயாட்டம் போட்டார் சுலோச்சனா. பஞ்சாயத்துக்கு சுலோச்சனா வீடும் வந்தது.
“கருப்புச்சாமி என்ற குலசாமி. அவனுக்கு சேர வேண்டியதை தந்துட்டேன். தாத்தா சொத்து பேரனுக்கு போவணும் முறையா. இன்னொன்னு நானு உசுரோட இருக்கறதால என்னோட விருப்பம்தான் எல்லாமே யாருக்கு தரணும்னு முடிவெடுக்கற உரிமை எனக்கும் இருக்குது” ஒரே அடக்கில் அடக்கி வந்த கூட்டத்தை ஓட ஓட விரட்டினார்.
“மருமவனுக்கு நா வந்தது பிடிக்கலையாட்டம் இருக்கே” கண்ணப்பனை பேச்சுக்கு இழுத்தார் ராமாயி.
“அதெல்லாம் ஒண்ணுமில்லத்த. உங்களைச் சொல்லி என்னவாப் போகுது. இல்லாதப்பட்டவங்க ஒதுங்கிப் போவறதுதான மொற. எம் மவளுக்கு நல்ல புத்தியத்தான் ஊட்டி வளத்துருக்கேன் நானு” கண்ணப்பனுக்கு இன்னும் மனசு ஆறலை.
செவ்வந்தி வீட்டுக்கு தூரம் ஆகிவிட்டதால் வெளியே போகவில்லை.
அதனால் கண்ணப்பன்தான் பாலை கடைகளுக்கு ஊற்றி வருகிறார். அப்படித்தான் ராமாயி வீட்டுக்கும் சுலோச்சனா வீட்டுக்கும் பாலை ஊற்றப் போனார்.
அருக்காணி வந்து இரண்டு வீட்டுக்கும் பாலை வாங்கிக்கொள்ள. கிளம்பப் போனவரை சுலோச்சனா நிறுத்தினாள்.
“என்ன கண்ணப்பா உன் மவ வரலையா?” ஏளனமாய் மரியாதை இல்லாது அவர் கேட்டார்.
தலையில் தட்டியது போல இருந்தாலும் சுலோச்சனா குணம் தெரிந்ததால், “இல்ல அம்மிணி அவளுக்கு மேலுக்கு சொகமில்ல” பதில் கொடுத்தார்.
உரிமைக்கு கண்ணப்பன் சுலோச்சனாவுக்கு மாமா முறையாகணும். ஆனால் அந்த உரிமையை அவர் தராது போக கண்ணப்பனும் உறவு சொல்லி அழைக்கவில்லை.
“எதுவும் நோயா கண்ணப்பன். நா வேணா பணம் தரேன் தனியார்ல போய் செக்கப் பண்ணிட்டு வாங்க” தன் மகளா இருந்தா இப்படி பேசிடுவோமா என்ற அறிவு கிஞ்சித்தும் இல்லாம சுலோச்சனா வெடுக் வெடுக்கெனக் கேட்டார்.
கண்ணப்பனுக்கு அவர் கேட்டவிதத்தில் தலையில் கல் விழுந்தது போல ஆனது. “ஐயோ சாமி என்ற புள்ளைக்கு அப்படியெல்லாம் இல்ல அம்மிணி. இது பொம்பளைங்க விஷயம்” னு சொல்லிட்டாரு.