அன்னமே 26 27
“கனவு மாதிரி ஆச்சு புள்ள” வந்தவர்கள் போய்விட, சூராவளி காற்று சுழற்றி அடித்தது மாதிரி ஆனது அவர்களுக்கு.
“நா நெனச்சுக் கூடப் பாக்கலை நம்ம புள்ளைக்கு இம்புட்டு நல்ல இடம். அதைவிடு புள்ள இப்பேர்ப்பட்ட நல்ல மாப்பிளை கிடைப்பாருன்னு கனவா கண்டோம்” அவரு வியந்தார்.
“நமக்கு சரியா வருமாய்யா. அந்தம்மா குணம் கொரங்குன்னு ஊர் மூச்சுட பேச்சு இருக்கு. அதான் கேக்குறேன். நம்ம புள்ளைக்கும் வாயி அதிகம். ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆவிப்போச்சுன்னா என்ன பண்ணுறது?” அமுதாவுக்கு கவலை பிறந்தது.
“நானும் அதை யோசிச்சுத்தான் இம்புட்டு நாளா புள்ளைய வெளிய உடாம இருந்தேன் புள்ள. ஆனாக்கா விதி அப்படின்னா ஆரு என்ன பண்ண முடியும்” இத்தன நாளா மனதில் போட்டு புழுங்கி கொண்டிருந்ததை வெளியே கொட்டினார் கண்ணப்பன். எதையும் மறைக்காம அமுதாகிட்ட பேசிப் பழக்கம் அவருக்கு. அப்படிங்கும் போது பெரிய விஷயத்தை மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம ஜீரணிக்க முடியாம போனார்.
“அடி ஆத்தி என்னைய்யா சொல்லுற. அமுக்கன் மாதிரி எல்லாத்தையும் எங்கிட்ட மறைச்சிட்டியே” கட்டிலுக்கு கீழே கால் நீட்டி போட்டு அமர்ந்திருந்த அமுதா எழுந்து கண்ணப்பன் பக்கம் அமர்ந்தார். இளவரசனும் அவர் பக்கத்தில் வந்தான்.
“என்னப்பா சொல்லுற?” இளவரசன் கேட்டான்.
“ஆமாப்பா. செவ்வந்தி போக வர இருக்க. மாப்பிள்ளைக்கு புடிச்சுப் போச்சு போல. கருணாவுக்கு அரைகுறையா விஷயம் அகப்பட. எங்கிட்ட சொல்லிட்டான். சுதாரிச்சுக்கடா கண்ணப்பா. பெரிய இடம் வேற தப்பு தண்டா நடந்து நாமளா வழிய போனா மரியாதை இருக்காதுன்னு. நம்ம புள்ளையும் வெகுளி நல்லது கெட்டது தெரியாது அதுக்கு. அதான் முளையிலேயே கிள்ளிப்போட நெனைச்சேன்” அதுவரை மனசில் பூட்டி வச்சு புழுங்கியதை உடைத்துப் போட்டார் கண்ணப்பன்.
“மாப்பிள்ளைக்கு புடிச்சுப் போயித்தான் இந்தம்மாவும் அடங்கி பொண்ணு கேக்க வந்திருக்கா?. அதான பாத்தேன். இந்தம்மா மலை இறங்கி வாறது லேசு பட்ட காரியம் இல்லையே. அப்ப மாப்பிளை வெவரமான மனுஷந்தான்ய்யா. பாரேன் இந்தம்மா புத்தியை கண்டு அதும் போக்குல விட்டு பிடிச்சிட்டார்” அமுதா தாடையில் விரல் வைத்து அதிசயித்தாள்.
“நா கடைவீதியில இருந்தேன். தயாளன் போன் பண்ணி இப்படி குடும்பத்தோட பொண்ணு பாக்க வரோம்ப்பா. ஒரு மணி நேரத்துல வருவோமுன்னு சொல்ல. எனக்கு ஒண்ணுமே ஓடல புள்ள. கருணாவை கையோட கூட்டிட்டு வந்துட்டேன். எல்லாம் நல்லபடியா நடந்துடுச்சு. இனி கல்யாணம் செலவுன்னு இருக்கு புள்ள” கண்ணப்பன் கல்யாணச் செலவு பத்தி சிந்தனையில் ஆழ்ந்தார்.
சேமிப்பு அவங்ககிட்ட இருந்தாலும் உடனே கல்யாணம் எனும் போது திகைப்பாய் இருந்தது அவங்களுக்கும்.
“நீ செலவு கணக்கு எம்புட்டு ஆவுமுன்னு பாருப்பா. நானும் என்ற சேமிப்பை உடைக்கறேன். வெளியே கொஞ்சம் ஆனதை புரட்டி தரேன். அவளுக்கு பார்த்து பார்த்து பண்ணிடுங்க. குறை எதுவும் வைக்காம பாத்துக்குங்க போதும்” இளவரசன் சொல்லிவிட்டு கண்ணப்பனை பார்த்தான்.
“நீ ஊடு கட்ட வச்சுருந்தியே கண்ணு. எல்லாத்தையும் தந்துட்டா உனக்கென்ன பண்ணுவ?” அமுதா மகளுக்கு தேவைன்னாலும் மகனுக்காகவும் பார்த்தார்.
“செவ்வந்தியை தாட்டி உட்டுட்டா நோம்பி நொடின்னு போக அதுக்குப் பிறகு வர்ற பணமெல்லாம் நமக்கு சேமிப்புதானம்மா. வீடு கட்ட லோன் ஒண்ணு போடலாமான்னு பாக்குறேன்மா. என்ற இஷ்டத்துக்கு கட்டணும்னா பணம் கூடத்தான் வேணும்”
“கடன் வாங்கணுமாப்பா” கண்ணப்பன் கேட்டார்.
“லோன் வாங்குனா பாதுகாப்புப்பா. மாச மாசம் சம்பளத்துல எடுப்பான். அதுமில்லாம கொஞ்சம் பணம் சேர்ந்தாலும் அப்படியே கட்டி கடனை கழிக்கலாம். வெளியே வாங்குனா அவன் விருப்பத்துக்கு ஆடணும். நா பாத்துக்கறேன் பா. நீ செவ்வந்திக்கு என்ன வாங்கனுமுன்னு மட்டும் யோசி போதும்” இளவரசன் பெத்தவங்களை அடக்கிவிட்டான்.
“நானும் அம்மாவும் இருக்கோம்ப்பா. உனக்கு உதவியா இருக்கோம். ஊடு கட்ட கெழக்கால இருக்க நெலத்த வித்துப்புடலாம் கண்ணு” கண்ணப்பன்.
“அதெல்லாம் ஒண்ணுமே பண்ணாதப்பா. எதையும் விக்காம கட்டிக்கலாம். நீ நா சொன்னதை மட்டும் அப்பத்திக்கு செய் போதும்” சொல்லிவிட்டு படுத்துவிட்டான் இளவரசன்.
“அப்பா” என்றபடி செவ்வந்தியும் அங்கு வந்தாள்.
“வா புள்ள. எங்கண்ணு ராசியான புள்ள” மகளை கொஞ்சிவிட்டு “நா சொல்லல அமுதா. எம்புள்ளைய நா நீன்னு வரன் தேடி வருமுன்னுட்டு. அம்புட்டு அழகா இருக்க புள்ளய எவனுக்குத்தான் புடிக்காம போவும். எம்மவ போன எடத்துல சந்தோசமா இருப்பாடி” கண்ணப்பன் மீசையை நீவினார்.
“அங்கிட்டு மருமவளா போய் இங்க பேசற மாதிரியே பேசக்கூடாது கண்ணு. மட்டு மரியாதை கொடுத்து பழக்கோனும். மாமியா எச்சா பேசுனாலும் ஒதுங்கி வந்துடனும். உன்ற புருசனை நல்லா வச்சுக்க. அவன நல்லா பாத்துக்கிட்டாலே அவனும் உன்ன ஒரு துரும்பு கூட படாம பத்திரமா பாத்துக்குவான் புரியுதா கண்ணு” அமுதா மகள் கையைப் பிடித்து சொன்னார்.
அதில் ஆயிரம் அர்த்தம் உள்ளதை புரிந்த செவ்வந்தி, “சரிம்மா” வழக்கம் போல வாய் பேசாம சரின்னு சொன்னவளை கண்ட அமுதாவுக்கு வெசனம் வந்தது.
“ஆத்தா அப்பான்னு போற பக்கம் எங்களையே பெருமை பேசாத கண்ணு. உன்ற சொந்தத்தை தக்க வச்சுக்க அங்க இருக்கறத புரிஞ்சுக்க பாரு. சண்டை சச்சரவு இதுலதான் ஆரம்பிக்கும்” அமுதா எச்சரித்தார்.
“உன்ற புருஷன் அறிவாளி கண்ணு. நீ சொல்லித்தான் எதையும் தெரிய அவசியம் இல்ல அவனுக்கு. அப்பன் உதவியில்லாம வெள்ளாமை பண்ணுறவனுக்கு குடும்பத்தை தாட்ட தெரியாதா?” கண்ணப்பனும் அவர் பங்குக்கு சொல்ல.
செவ்வந்தி உம் கொட்ட பெத்தவங்க அறிவுரை சொல்லன்னு இருக்க, இளவரசன் கல்யாணச் செலவு பத்தி நண்பனின் தந்தையிடம் கலந்து பேசினான்.
மறுநாள்.
அன்னத்தை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார்கள் வந்துவிட்டார்கள்.
உண்மைக்கு மாப்பிள்ளை அம்புட்டு அழகு. என்ஜினியர் மாப்பிள்ளையை வீட்டினர் எல்லோருக்கும் மனதார பிடித்துப் போனது. சுலோச்சனாவுக்கும் சொந்தம். சுலோச்சனா பாத்த மாப்பிள்ளைக்கு பகட்டு இல்லாம போவுமா? பெரியவுங்க இருக்கவான்னு பாக்காம மட்டு மரியாதைன்னு இல்லாம கால் மேல காலு போட்டு உக்காந்துக்கறதுன்னு இருந்தான்.
மாப்பிள்ளையும் பெண்ணும் தனியே பேச அனுப்பி வைத்தார்கள்.
மனசில என்ன இருக்குன்னே தெரியாத குழப்பம் அன்னத்துக்கு. அவளுக்கு அதை யோசிக்க நேரம் தேவைப்பட்டது.
“கொஞ்சம் டைம் தாங்கம்மா. இப்பவே கல்யாணம் வேணுமா?” ன்னு அதை பத்திக் கேட்டால் சுலோச்சனா கண்டுக்கவே இல்லை.
மத்தவங்ககிட்டயோ கேட்காமல் விட்டுவிட்டாள். பெத்தவளே மதிக்கல மத்தவங்ககிட்ட மட்டும் வாழுதான்னு நொந்துட்டா.
அவள் அமர்ந்ததும் “நீங்களும் உட்காருங்க” அவனை உட்கார இருப்பிடத்தை நோக்கி கைநீட்டி காட்டி சொல்ல.
“கொஞ்சம் எழுந்திரு” அவன் நின்றுகொண்டே சொன்னான்.
ஒருமையில் கூப்பிட்டதும் அவ முகமே மாறிடுச்சு. உரிமையே வராம இப்படி வாபோன்னு கூப்பிடலாமான்னு சிந்திச்சவ எதுக்கென புரியாமல் எழுந்து நின்றாள்.
அதன் பின் அவன் அமர்ந்து அவள் அமர்ந்திருந்த நாற்காலியை அவள் பக்கம் காலால் எத்தி நகர்த்தினான்.
அவள் காலில் பட்டுவிடவும், “கால்ல பட்டுருச்சு. பாத்து நகர்த்தலாம்” எரிச்சலாக சொன்னாள்.
“சரியா போவும் விடு. உக்காரு” சொன்னவன் அவள் வேதனையை ஆணவமாய் பாத்துட்டு கவனிக்காமல் விட்டான்.
“எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல. வேண்டாமுன்னு சொல்லறீங்களா?” கேட்டாள்.
அவளுக்கு பதில் கொடுக்காமல் “என்னோட பேர் தூயவன். ஒரு தடவை உங்க காலேஜ் வந்திருக்கேன் நான்” அவன் சொன்னான்.
நாம பேசுனத கேட்டானா இல்லையா அவனை ஏறிட்டு பார்த்தாள்.
“அப்ப உன்னை பார்த்ததும் பிடிச்சுப் போச்சு. உன்னை தொடர்ந்து வந்தேன். நீ வேண்டாமுன்னு சொன்னாலும் கல்யாணம் நடக்கும்” அவன் அலட்சியமாய் எந்திரிச்சுப் போனான். அவ சம்மதத்தை கேட்கணுமுன்னு கூட நெனைக்கலை. தன்னை மட்டும் மதிக்கும் சுயநலப் பிறவியில் ஒருத்தன் இவன்.
தன் பேச்சை மதிக்காத அவன் திமிர், வலியை கண்டுகொள்ளாத ஆணவம். ஆனாதிக்கவாதி இவன் என்பது புரிந்தது. அதனால் சுலோச்சனாவிடம் பேச நினைத்தாள்.
“அம்மா இந்த கல்யாணம் வேண்டாம்மா. அவனை புடிக்கவே இல்ல” காரணம் சொன்னாள் எதற்கென.
“நா செத்துப் போவேன் அன்னம். அன்புதான் படிக்காதவள கட்டிக்கிறன்னு அடாவதி பண்ணுறான். நீயாச்சும் என் ஆசையை நிறைவேத்து” சுலோச்சனா சொல்லிவிட்டார்.
அவளுக்கு வழி இல்லாமல் போனது. ஆனால் கருப்புச்சாமியிடம் பேச நினைத்தாள். கண்டிப்பாக அண்ணன் சொல்வதை கேட்பான் என நம்பினாள்.
புது நம்பரில் இருந்து அழைப்பு வர ஏற்றவள் தூயவன் எனவும் கட் பண்ண நினைத்தாள்.
“கட் பண்ண நினைக்காத அன்னம். நா சொல்லப் போறத கேட்டுட்டு கட் பண்ணிக்க” என்றுவிட்டு அவன் சொன்னதை காதில் வாங்கியவளுக்கு கல்யாணத்தை நிறுத்தும் எண்ணம் சுத்தமாக காணாமல் போனது.
அத்தியாயம் 27
பொம்பளைதான ஒரே மிரட்டில் வாயை பொத்திடுவாள் என்ற மிதப்பில் அவன் உண்மையை விசத்தை கக்கிகிட்டே இருந்தான்.
நாய்க்கு பேரு முத்துமாலையாமா. இவனுக்கு போய் தூயவன்னு பேரு. ச்சைக் கெரகத்த. “அடப்பாவி” குமுறினாள்.
இன்னும் அவன் நினைத்தால் என்ன வேணும்னாலும் செய்வேன் என தன்னால் செய்ய முடிந்ததை எல்லாம் சொல்ல வாயடைத்துப் போனாள்.
“என்னம்மிணி அதிர்ச்சியா இருக்குதாக்கும்?” வேணும்னே அவங்க ஊரு பேச்சில் பேசினான்.
“எங்க ஊரு பேச்ச பேசாதடா. உனக்கு அதுக்கு தகுதி இல்ல” குமுறினாள்.
“தகுதி இருக்குங்க அம்மிணி வருங்கால புருஷன் உனக்கு. அதுக்குத்தான் அந்த காட்டுப்பைய கூட சுத்திக்கிட்டு இருந்த உன்ன அவன்கிட்ட இருந்து கழட்டி விட்டேன் பாத்துக்க”
“நா ஒண்ணும் அவன்கூட சுத்தல. கண்டதையும் உளறிட்டு இருக்காத” ன்னு அழுகையில் கேவியவளுக்கு சத்தியசீலன் கோவக்காரன் திமிரெடுத்தவன் ஒளிய விஷமில்லன்னு புரிய சுடு தண்ணியை ஊத்திய மாதிரி முகத்தில் அனல் காய்ச்சியது.
“அட ஆமாங்கன்னு. காட்டான் உம் பின்னாடி சுத்தக்கண்டு அவன் பின்னாடி நோட்டம் பாத்தேன். பகையாளியாமே அவன் உங்கண்ணனுக்கு. என்ன கருமத்துக்குன்னு தெரியல உங்கூட்ட பத்தி வேலைக்காரன்கிட்ட விசாரிச்சுப்புட்டான். சரி சம்பவம் பண்ணி அவனை நகட்டனுமுன்னு பாத்தேன் உங்கப்பனை கார்ல அடிச்சுப் போட்டேன் நான். வச்ச குறி தப்பாம அவம் மேல பலி விழுந்தது. உங்கண்ணன் அவனை தேடிப் போனான். அங்கதான் நா பயதேங்கன்னு” அவன் பயந்து நடுங்குவது மாதிரி குரலை நடுக்கி காட்டினான்.
கெட்டவன் நடிப்பை சகிக்க மாட்டாம முகத்தை திருப்பினாள் “அம்மா இவனை எப்படி நம்பிட்டு இருக்காங்க. படிச்சிருந்தா நல்லவனாவிடுவானா?” மடியில் இருந்த புத்தகத்தின் காகிதங்களை கசக்கி எறிந்தாள் ஒவ்வொன்றாக. ஒவ்வொரு கசங்கிய காகிதமும் அவள் உள்ளத்தின் ஆதங்கத்தை ஆத்திரத்தைக் கூறியது.
“என்னன்னு பாக்குறியா. நீ அவன அங்க கட்டிப்புடிச்சுட்டு நின்னதுதான். உங்கண்ணன் நல்லவன். அதனால உனக்கு பிடிச்சுப் போச்சுன்னு தெரிஞ்சா பகையை மறந்து உன்னை அவனுக்குத்தான் கட்டி வைப்பான். நாசமா போச்சுன்னு தலையில துண்டைப் போட்டுட்டு நின்னேன். அப்பத்தான் நீ டுவிஸ்டு வச்ச கண்ணு. அப்பவே உன்ன கட்டிபுடிச்சு உம்மா தர ஆசை. அப்படி வந்தா மொத்தமும் நாசமா போவுமே அடக்கிட்டு வேடிக்கை பாத்தேன்”
“அந்த நேரத்துல தோப்புக்குள்ள நீ இருந்தியா?” யாரும் வரமுடியாதுன்னு சொன்னானே அவன் என வயிற்றில் எரிச்சல் பரவியது. எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்.
“நீயும் அந்த காட்டானும் உலகத்தையே மறந்து இருந்தீங்களே கண்ணு. அப்பத்தான் உள்ள வந்து யாருக்கும் தெரியாம நின்னேன். அவன் கையை உடைக்கணும். தீ வச்சு பொசுக்கணும். ஆனா தொட்டுட்டு போறான் விடு அழகான பொண்ணுன்னா தொடாம இருப்பானா” விகாரமா பேசினான்.
“அந்த தோப்புக்குள்ள சுத்தியும் கம்பி வேலி இருக்கு. நீ எப்புடி வந்த?”
“அட என்ன கண்ணு நீ. எம்புட்டு பெரிய விஷயம் சொல்லிட்டு இருக்கேன். நீ உள்ள வந்தது எப்புடின்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க அதான் வேலிய திறந்து போட்டுட்டு போயிருந்தீங்களே ரெண்டு பேரும் ஜோடியா”
அதில் அவளுக்கு முகம் வேர்த்துப் போனது. என்னத்தை பார்த்து தொலைச்சான்? அவள் கை தானாக மாறாப்பை சரி பண்ணியது.
“எப்புடி கண்ணு? நா கொஞ்சம் கூட எதிர்பாக்கவே இல்ல போ. சாவ சாவ அவனை கேட்டுட்டே போ. ஜென்மத்துக்கும் உம் பக்கம் திரும்ப மாட்டான்” தூயவன் கொக்கரித்தான்.
“இப்பவே அண்ணன்கிட்ட சொல்லறேன். இந்த கல்யாணம் நடக்காது”
“உங்கப்பனை அடிச்சுப் போட்டு தடயம் இல்லாம ஆக்குன நானு இத யோசிக்க மாட்டேனா கண்ணு. அடுத்து உங்கண்ணனை அடிச்சுப் போடுவேன் அதுக்கும் அந்த காட்டாந்தான் காரணமுன்னு சொல்லுவேன். ஆதாரம் சாட்சிதான் கைவசமே இருக்குதே”
“நீயெல்லாம் நல்லாருக்கவே மாட்ட. புழு புடிச்சுத்தான் சாவ”
“சாபமெல்லாம் பலிச்சா இந்நேரம் எத்தனவாட்டி நா நாசமா போவணும். எத்தன பொண்ணை வேஸ்ட் பேப்பர் மாதிரி கசக்கி வீசிருக்கேன் தெரியுமா. அத்தனைக்கு ஏன் கஷ்டப்படணும். எவன் கண்டான் எனக்கு ஒரு வாரிசே இருந்தாலும் இருக்கும். உனக்கு குழந்தை பெத்துக்கற வேலையை கூட தரமாட்டேன் கவலை படாத” எக்களிப்போடு பேசிட்டே போனான்.
வாயடைத்து நின்ன அன்னம் மூச்சு விட கூட பயந்தாள்.
“இப்ப என்ன பண்ணுற. பேசாம கமுக்கமா இரு. நா ராஜகுமாரன் மாதிரி வந்துட்டு தூக்கிட்டு போயிக்கறேன்” சொல்லிவிட்டு எதிர்முனையை அமைதியாக்கினான்.
“அன்னம் வெளிய வா கண்ணு. மாப்பிளை ஊட்டுல இருந்து வந்திருக்காங்க” தயாளன் அவளை வெளியே இருந்து கூப்பிட்டார்.
கூப்பிட்டது அப்பா. இவர்கிட்ட சொன்னா கொஞ்சம் புரிஞ்சுக்க வாய்ப்பு இருக்கு. ஆனா அம்மாகிட்ட உளறி கொட்டுவாறே நினைப்பை அழித்தாள் அப்பவே.
வீட்டில இரண்டு கல்யாணம் என்பதால் எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள். எந்நேரமும் யாராவது ஒருத்தர் வேலை வேலைன்னுட்டு வெளியே அலைய இருந்தார்கள்.
அன்னமோ சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம குமுறி குமுறி அழுதாள். ஆணாதிக்கவாதி என அவனை அவள் மனம் வெறுத்தது. சத்தியசீலனையும் அந்த இடத்தில் வைத்திருப்பதால் அவனையும் வெறுத்தாள் ஆண்களே இப்படித்தானோ.
மாப்பிள்ளைன்ற பெயரில் நரியை வீட்டுக்குள் விட்டமே, தான் இழந்ததை நினைச்சு சோறு தண்ணி இறங்காமல் மெலிந்து போனாள். புதுப்பொண்ணுக்கு உண்டான லட்சணம் இல்லை அவகிட்ட.
சாவலாம் என நினைத்தாள். அப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டா தன்னை வளர்த்த பாவத்துக்கு வெளியே தலைகாட்ட முடியாம கூனி போவாங்களே.
நகையெடுக்க, பட்டெடுக்கன்னு ஒப்புக்கு கலந்துகொண்டாள். கல்யாண கலையே இல்லாம இருப்பவளை கருப்புச்சாமி வெசனமா பார்த்தான்.
“அன்னம் இவனை பிடிக்கலைன்னா சொல்லிரு. ஒரே வேலையா வெட்டி விட்டுடலாம். மனசுக்குள்ள போட்டு மறுகாத கண்ணு” கருப்புச்சாமி அவளிடம் உட்கார்ந்து பேசினான்.
“இல்லண்ணா சளி பிடிச்சுடுச்சு. அதான் என்னமோ மாதிரியிருக்கன். நீ போய் வேலைய பாரு” என்றுவிட்டாள்.
பத்திரிக்கையை மாமன் வீடுகளுக்கு வைக்கப் போனவர்களிடம், சத்தியசீலனையும் ஒரு பேச்சுக்கு கூப்பிடுங்கப்பா. அவனொரு திமிரெடுத்த பய. அவன்தான் ஒரு பக்கமா ஒதுங்கி போயிட்டான். நாமளும் அப்புடியே உட முடியாது பாரு. பத்திரிக்க வைங்க. அதுக்குப் பின்ன வந்தா என்ன வராம போனா. அவனை ஒரு வார்த்தை கூப்பிடலைன்னா நாங்க வரமுடியாதுப்பா. எங்கள குறை சொல்லிடக் கூடாது கடைசியில. பங்காளி உறவில்லாம ஒண்ணுமே பண்ண முடியாது. உனக்கு நாங்க சொல்லனுமா தயாளா?” போற பக்கமெல்லாம் இந்த பேச்சையே சொல்ல.
“என்னடா மவனே. எவனப் பாத்தாலும் இதையே சொல்லிட்டு இருக்கான்” தயாளன் கையில் இருந்த மஞ்சப்பையை தூக்கி போட்டார் காருக்குள்.
“அவுங்க சரியாத்தா சொல்றாங்கப்பா. மாமன் மச்சான்னு விட்டுக் கொடுக்காம சொல்றாங்க. அவங்க பங்காளிக்குள்ள ஒத்துமையா நல்லது கெட்டதுன்னு பாக்கறாங்க”
“ஒருகாலத்துல நாமளும் அப்படித்தான கண்ணு இருந்தோம். ஒண்ணுக்கிடக்க ஒண்ணு ஆவிப்போச்சு” தயாளன் வாயை வச்சுட்டு இருந்திருக்கலாம். பெரிய மனுசனா பேசலாமுன்னு கருப்புச்சாமி வாயில் விழுந்தார்.
அவனுக்கும் காரில சும்மா ரோட்டையே பாத்து காரை ஓட்டிட்டு போவ ஒரு மாதிரி இருக்க, தயாளனை வாய்க்குள் போட்டு வார்த்தையால் மெல்ல ஆரம்பித்தான்.
“யோவ் ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆவிப்போச்சுன்னு சொல்லிட்டு இருக்காத. உம் மாமனாருக்கு சேவல் கறி ஆக்கி போடோணும்ன்னு அக்கப்போற இழுத்துட்டுருக்கற. உன்னாலதான்ய்யா சண்டையே வந்துச்சு. இப்ப வந்து நல்லவனாட்டம் நாயம் பேசிட்டு இருக்கியா. மூடிட்டு ஓரமா உக்காரு. இல்ல கீழே தள்ளி உட்டுருவேன் பாத்துக்கோ”
“கண்ணு அப்படி மரியாத இல்லாத பேசாதப்பா. அப்பன் நா”
“வந்துட்டான் பேசறதுக்கு. ஏய்யா நீயெல்லாம் சோத்துக்கு உப்ப போட்டுத்தான திங்கற” தயாளன் காதில் பஞ்ச வச்சு மூடிக்கொண்டார்.
சரின்னு அவன் தோப்புக்குள்ளும் ஒரு எட்டு போனார்கள். தோப்புக்கு போகும் வழிய பெரிய வேலியை போட்டிருந்தான். அப்படியே வேலியை ஒட்டி பார்வையை ஒட்டினான் கருப்புச்சாமி.
“மாமன் மச்சான்னு எவனாவது உள்ள வந்தான்னா குறுக்குலயே எட்டி மிதிக்கணும்டா” சத்தியசீலன் வேட்டியை மடித்துக் கட்டி வேலி பக்கம் வந்தான்.
“கண்ணு வாடா திரும்பி பாக்காம போயிக்கலாம்” தயாளன் மகன் சட்டையை பிடித்து இழுத்தார்.
“யோவ் மூஞ்சியில காரித் துப்பிடுவேன். பொத்திட்டு நில்லுயா”
கருப்புச்சாமி “எப்பா கொஞ்சம் தெறந்து உடு. ஊருக்குள்ள பத்திரிக்க வைக்கணும். அதில ரெண்டு எச்சா கிடக்கு. வீணாவ கூடாதுன்னு உனக்கும் ஒண்ணு தரலாமுன்னு வந்தோம்”
“அப்பிடியே எட்டி குடுத்துட்டு போடா. உன்ன மாதிரி வெசக் கிருமி உள்ள வந்தா தென்னங்கன்னு நோவு கண்டுரும்” கருப்புச்சாமி கையில் இருந்த பத்திரிகைய வாங்கிட்டு அவர்களை கண்டுக்காம போய்விட்டான் சத்தியசீலன்.
“அனாதை பயலுக்கு எம்புட்டு திமிருன்னு பாத்தியா மவனே. அடேங்கப்பா” சொன்ன தகப்பனை காருக்கு இழுத்துப் போனான் கருப்புச்சாமி.
“உன்னை உசுரோட விட்டு வைக்கறது தப்பா போகுதாட்டம்னு நெனைக்க வைக்காதய்யா”
“சரிப்பா. வா பந்தலுக்கு சொல்லிட்டு போவலாம்” தயாளன் கருப்புச்சாமியை அழைத்துப் போனார்.