மன்னிச்சிடுங்க தங்கங்களே. அப்டேட் கொடுக்க மறந்தே போயிட்டேன் 🙈. நீங்களாவது கேட்டிருக்கலாம்ல🤗
கண்ணப்பனுக்கும் அமுதாவுக்கும் எந்த சிரமத்தையும் கொடுக்கலை இளவரசன். செவ்வந்தியும் சேமிப்பை எடுத்துக் கொடுக்க. இருக்கறத போட்டு ஆகவேண்டிய செலவை பண்ணினான் இளவரசன். செவ்வந்திக்கு புகுந்த வீட்டுக்கு போகையில தந்துவிட வேண்டிய எல்லாத்தையும் அமுதாவையும் அம்சாவையும் கூட்டிட்டு போய் வாங்கிட்டு வந்துட்டான். கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னவே பத்திரிகை வேலையையும் முடிச்சிட்டார்கள் இவர்களும்.
அந்த கல்யாண மண்டபத்தில் இரண்டு ரூம்தான் இருந்தது. மாப்பிள்ளைகள் இருவரும் ஒரே ரூமில் இருந்துகொள்ள. மணமகள் இருவரும் ஒரு ரூமில் தங்கிக்கொண்டனர்.
“அன்னம் அண்ணன் பொண்டாட்டிக்கு நீதான் கண்ணு மூணு முடிச்சு போடோனும். அதனால அண்ணன் எடுத்து தந்த பட்டு சேலையை இப்பத்திக்கு கட்டிக்க. அதுக்கு அப்புறம்தான் நேரமிருக்கே திரும்ப கூரைப்புடவையை கட்டிக்க. என்ன நா சொன்னது மண்டையில ஏறுச்சா?” ராமாயி கேட்டார்.
அன்னம் உலகத்துலயே இல்லை. எதையோ கட்டிவிடுங்க என நின்றாள்.
கருப்புச்சாமியையும் செவ்வந்தியையும் மணமேடையில் உட்கார வைக்க, அவர்கள் கல்யாணம் செவ்வனே நடந்து முடிந்தது.
எல்லோரும் வாழ்த்த, பக்கத்தில் நின்ன பெரியவர் “என்னதான் இருந்தாலும் சத்தியசீலன் நம்ம பயப்பா. பாத்தியா நாம சொன்ன சொல்லுக்காக பகையாளி ஊடுன்னு பாக்காம கல்யாணத்துக்கு வந்து நிக்கறான்” பங்காளிக்காக வக்காளத்து வாங்கினார்.
“என்னடா இது அவன் ரோசத்துக்கு வந்த சோதன” எட்டி பார்த்த கருப்புச்சாமி முன் வரிசையிலேயே உகார்ந்திருந்த சத்தியசீலனை பார்த்து பெரிய கும்பிடாக போட்டு வைத்தான்.
அதற்குப் பிறகு எதையும் நினைக்க நேரமில்லாம போவ. அடுத்த கல்யாணத்தை நடத்த ஏற்பாடு செய்தனர்.
செவ்வந்தியை மணப்பெண் அறைக்கே அனுப்பினார்கள் அன்னத்துக்கு துணைக்கு இருக்கட்டும்னு. அன்னத்தை பார்த்த செவ்வந்திக்கு என்னமோ சரியில்லை எனவே இருந்தது. புதுப்பொண்ணுக்கு இருக்க சந்தோசம் முகத்துல கொஞ்சம் கூட இல்லையே இதைப் பத்தி அமுதாகிட்ட கூட சொல்லிவிட்டாள்.
கருப்புச்சாமியையே எடை போட்டு பாக்காத குறையா அலசி ஆராஞ்சு பொண்ணுக்கு மாப்பிள்ளையா தேர்வு பண்ணினார்.
“ஆனா இவன் கண்ணும் சரியில்ல போக்கும் சரியில்ல. இவனை நம்பி செவ்வந்திய அந்த ஊட்டுக்கு எப்படி அமுதா அனுப்புறது. வெசனமா இருக்குது எனக்கு” கண்ணப்பன் யோசித்தார்.
“என்னப்பா கிடக்கறது கிடக்கட்டுமுன்னு ரெண்டு பேரும் உக்காந்தாச்சு” அப்பத்தா அவர்களிடம் வர.
“சரி நா போய் வேலையை பாக்கறேன். நீங்க பாருங்க” கண்ணப்பன் சலிப்போடு நகர்ந்தார்.
“மாப்பிளைக்கு குடிக்க ஏதாவது தா கண்ணு. பராக்கு பாத்துப்புட்டு நிக்காத சொல்லிட்டேன்” அருக்காணியிடம் பாத்துக்க ஜாடை காட்டி கருப்பன் பின்னே போனார்.
செவ்வந்தி அறைக்குள் கோபமாய் நுழைந்த கருப்பன் அவள் முழு அலங்காரத்தில் இருக்க, குழப்பமாய் நின்றான்.
அத்தியாயம் 29
அன்னைக்குன்னு ஏகப்பட்ட முகூர்த்தம் இருந்தது. உள்ளூருக்குள் பத்து வீட்டுல கல்யாணம், கிரகப்பிரவேசம், இப்படி விசேஷம் இருந்தது. அது போவ சொந்தபந்தத்தோட அழைப்புகள் வேறு இருந்தது.
கருப்பன் வீட்டுல ரெண்டு கல்யாணம் இருந்ததால் எல்லோருமே கொத்தோட இங்க மாட்டிக்கிட்டாங்க.
கருப்பனும் தயாளனும் நல்ல காரியங்கள் நிறைய பண்ணியிருக்காங்க. அவங்க தயவு எல்லோருக்குமே தேவைதான். வியாபாரம் வர்த்தகம் கொள்முதல் வரைக்கும் அவங்க தொடர்பில் இருக்காங்க. சொந்தப்பந்தம்னு அனுசரிச்சுப் போவாங்க கருப்பன் குடும்பத்தவங்க. ஆத்திர அவசரம்னா ஓடி வருவாங்க கைகொடுக்க. அதனால கருப்பன் செவ்வந்தி கல்யாணம் முடிஞ்சு பந்தியில் சாப்பிட்டு வந்தவர்கள் அன்னம் கல்யாணத்தை பார்க்க தயாரானார்கள்.
ஆனால் வம்பு பிடிச்சவன் பேசப்போனா கொறைச்சு வைப்பான் என தள்ளியே நின்றார்கள்.
செவ்வந்தி பொண்ணழைச்சு வருவாள் என்று எதிர்பார்த்த சுலோச்சனா மணப்பெண் வரும் பக்கமே பார்த்தார்.
பொண்ணு வருவாள் கல்யாணத்த முடிச்சுட்டு அடுத்த கல்யாணத்த பார்க்க போகணும் என வேலையை முடிக்க நினைத்து பொறுத்துப் பார்த்த ஐயர் பொண்ணை அழைச்சுட்டு வாங்கோன்னு தொண்டை வரளக் கத்தியும் பொண்ணு வராம போவவும்.
“இங்க எவளுக்கும் அக்கறை இல்ல. அவனும் புது பொண்டாட்டி பின்ன ஓடிட்டான்” என தானே இரண்டு பெண்களை கையோடு அழைத்துப் போய் மணப்பெண் அறைக்குள் பார்த்தவர் குழம்பினார்.
அன்னம் மட்டும் ஜன்னல் வழியாக எதையோ வெறித்து பார்த்து நின்றருந்தாள்.
“அன்னம் எங்க செவ்வந்தி. உன்கூடத்தான் இருக்கணும் முறைக்கு” இதுக்குத்தான் அவளை வேண்டாமுன்னு சொன்னேன். தானா காட்டுக்குள்ள சுத்திட்டு இருக்கவளுக்கு குடும்பம் பத்தி என்ன தெரியும். இப்ப இவங்க வெளிய போயி சுலோச்சனா மருமகள் இப்படியாமாடி அப்படின்னு பரப்புவாங்களே. நெற்றியில் வழியும் வியர்வையோடு பக்கத்தில் பார்த்தார்.
சுலோச்சனா எதாவது சொல்லுவா அதை மெல்லலாம் என வெறிக்க பாத்து நின்றனர் அவர்கள்.
“இங்கதான் போயிருப்பாங்க. நாம கூட்டிட்டு போலாம் வாங்க” அழைத்து வந்தார்கள்.
அன்னம் குனிந்த தலையோடு வந்தாள். அன்னத்தோட உயிரிப்பில்லாத முகம் யாரு கண்ணுக்கும் தெரியலை. அவள் பூசியிருந்த அரிதாரம் எல்லாத்தையும் மறைச்சிருந்தது.
தூயவன் பக்கத்தில் அன்னம் உட்கார,
முகூர்த்த நேரமும் வந்துவிட்டது. ஐயர் சொன்னதும் மாப்பிள்ளை தாலியை பாய்ந்து கையில் எடுத்தான்.
கருப்புச்சாமியும் செவ்வந்தியும் அங்கே இல்லை அமுதா கண்ணப்பன் ராமாயி ஏன் இளவரசன் கூட அங்கே இல்லை. தயாளன் அங்கே தேடிவிட்டு ஒரு ஆளை அனுப்பினார் தேட.
“டேய் ஆரயும் காணல. போய் ஒரு எட்டு தேடிப் பாருடா. கெழவி ஊரையே விலைக்கு வாங்குற கணக்கா பேசிட்டு கெடக்கும். அடுத்து என்ன விசேஷமுன்னு பாக்குற அறிவு வேண்டாமா?” தயாளன் கீழே இறங்கி மாப்பிள்ளை வீட்டுக்கு கேக்காம சத்தம் போட்டார்.
“அப்ப வரச் சொல்லுங்க. தாலி கட்டும் நேரம் அப்படி என்ன அவசர வேலை” தூயவன் எரிச்சலாக சொன்னான்.
அங்கே பாத்திரங்களை போட்டு வைக்கும் அறையில் பொங்கிய கோபத்தை பாத்திரத்தின் மீது காட்டினான் கருப்பன். உருளி குண்டா மீது ஓங்கி குத்த வெயிட்டா இருக்கதால தப்பிச்சுது.
பக்கத்துல கைக்குழந்தையோடு கண்ணீரும் கம்பளையுமா அந்தப் பொண்ணும் நின்னுச்சு.
“மச்சான் கோவப்படாத. அடுத்து செய்ய வேண்டியத பாக்கலாம்” கருப்புச்சாமி கையை பிடித்து அமைதியாக்க முயன்றாள்.
அமைதியாக்க கூடிய கோபமா இருந்தா ஆதரவா ஒத்த வார்த்த சொன்னாக்கா உடனே மாயமா போவுமே.
முழுக்க நல்லவனாட்டம் நடிச்சு குடும்பத்தையே ஏமாத்திட்டானே களவானிப்பய. நல்லவேள அமுதாவுக்கு தெரிஞ்சு நமக்கென்னனு ஒதுங்கிப் போவாம தான் பெத்த புள்ள வேறா மத்த புள்ளைங்க வேறன்னு நெனைக்காம ஓடியாந்து காதில போட்டதால தங்கச்சி வாழ்க்கையை காப்பாத்த இன்னும் நேரமிருக்குது.
ஒருவேள அமுதாவுக்கும் இது தெரியாம போனா. அவமேல இருக்க நம்பிக்கைய வச்சு கல்யாணத்த முடிச்சுப்புட்டா புள்ள நெலம என்னாவறது.
“அத்த சாகறதுக்கும் வரைக்கும் உங்ககிட்ட நன்றி கடன் பட்டுட்டோம் அத்த” காலில் விழுந்தே விட்டான் கருப்பன்.
அங்கு வந்த கருப்பன் மாப்பிள்ளை அருகே வந்து நின்றான். அவன் கண்கள் அலசி ஆராய தெய்வமாக சத்தியசீலன் அதே முன் வரிசையில் அன்னத்தையே முறைத்து அமர்ந்திருந்தான்.
தூயவனை அடிக்காம துரத்தனும் என பொறுத்து பொறுத்து பார்த்த கருப்பன் அன்னம் பக்கத்தில் நெருங்கி தோளால் இடித்து சீண்டிய தூயவன் முதுகிலேயே எட்டி உதைத்தான்.
அவனை மட்டுமில்ல அவன் பெத்தவங்களையும் கருணாவும் கண்ணப்பனும் கையும் களவுமாக பிடித்து ஒரு அறைக்குள் போட்டு பூட்டினார்கள். தூயவனையும் பேச்சே இல்லாம தூக்கிட்டு போய் ஒரு அறைக்குள் பூட்ட.
முன் இருக்கையில் எதையும் கண்டுக்காமல் அமர்ந்திருந்த சத்தியசீலன் பக்கம் போன கருப்பன் அவன் காலில் விழுந்துவிட்டான்.
அதற்கும் அசைவில்லாமல் அவன் அமர்ந்திருந்தான்.
அவன் தூக்கியே விடாம இருக்க, தானே எழுந்த கருப்பன், “எந்தங்கச்சிக்கு உன்னைய விட நல்ல மாப்பிள்ள கிடைக்காதுப்பா. உன் கால்ல விழுந்து கேக்குறேன் சரின்னு சொல்லு சாமி” கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினான் தங்கைக்காக.
“டேய் அவன் கால்ல எதுக்குடா விழுற. ஊர்ல வேற மாப்பிலையே இல்லையா” சுலோச்சனா ஆவேசித்தார் மகன் அவன் காலில் விழுவதை காண சகியாது.
“நீ சொல்லுப்பா” சத்தியசீலன் முன் பணிந்து நின்றான்.
“என்ன சொல்லணும்” எழுந்து நின்றவனுக்கு கருப்புச்சாமி இப்படி கூனி குறுகி நிற்பதை காண சகிக்காமல் போனது.
நேருக்கு நேர் ரத்தம் வர அடிச்சுக்கிட்டு சாவற நிலைக்கு போவாங்க. சண்டைக்கு வாடா என சரிக்கு சரி நிப்பார்கள். ஆனா இப்படி ஒரு நிலையில கருப்பன் தனக்கு முன்ன நிக்கணுமுன்னு சத்தியசீலன் நெனச்சதே இல்ல.
“இத்தன நாழு கெட்டவனாத்தான் இருந்தேன் உங்கண்ணுக்கு. இப்ப மட்டும் என்ன வாழுது. வேற பசங்க இருப்பானுங்க தேடு” அவன் முறுக்கிக்கொள்ள.
“நீ கோவக்காரன்னு தெரியும். இப்பவும் நீ பகையாளிதாண்டா. ஆனாக்கா நீ உத்தமண்டா. அன்னைக்கு எந்தங்கச்சி ஒரு வார்த்த உன்ன புடிச்சுப் போச்சுன்னு சொல்லியிருந்தா மொதல்ல நாந்தேன் சந்தோஷப்படுவேண்டா. அத்தனைக்கு நல்லவன் நீ. எந்தங்கச்சிக்கு வாழ்க்கை கொடுடா” கருப்புச்சாமியின் கண்ணில் கண்ணீர் கசிய.
“அதுசரி உந்தங்கச்சிக்கு படிச்சவன். நாகரிகம் தெரிஞ்சவன்தான வேணுமாட்டம் இருக்கு. இரு அவளை கேட்டுப்புட்டு வாரேன்” சொன்னவன் அன்னம் பக்கத்தில் போனான்.
அன்னமோ எதுக்கும் நான் சம்பந்தம் இல்லைங்கறாப்புல கண்கள் சொருக மனமேடையில் அசையாம அமர்ந்தவாக்கில் இருந்தாள்.
அப்போதான் அவளை பார்த்தவங்களுக்கு இந்தப் பொண்ணுக்கு என்னாச்சு. இத்தனைக்கும் அசையாம இருக்காளே என்று இருந்தது.