அன்னமே 32

4.5
(13)

அன்னமே 32

அத்தியாயம் 32

 

 

செவ்வந்தியையும் கருப்புச்சாமியையும் மறுவீடு அழைத்து திரும்ப அவர்கள் வீட்டில் விட்டார்கள் அமுதாவும் கண்ணப்பனும்.

 

செவ்வந்தியோட புகுந்த வீட்டை பாக்கையில வெசனமா போனது அவங்களுக்கு. புதுசா கல்யாணம் கட்டினதுக்குண்டான எந்த களையும் அவங்க மூஞ்சியில காணோம்.

 

எங்கே சந்தோசப்பட. ஒரே பந்தலுல ரெண்டு கல்யாணத்த வச்சாச்சு அதுவரைக்கும் சந்தோசந்தேன். அடுத்து தங்கச்சி கல்யாணத்த முடிக்கணுமேன்னு அந்த பரபரப்புல பொண்ணு பக்கத்துல உக்காந்துச்சா தாலியை கழுத்துல கட்டினமான்னு ஆச்சு அவனுக்கு.

 

தங்கச்சி கல்யாணத்த ஆற அமர பாக்கலாமுன்னு உக்காந்தா கெரகத்த அக்கப்போறா முடிஞ்சுது.

 

அவன்கிட்ட பொண்ணை கட்டிக்கச் சொல்லி கேட்டா, அவன் கொஞ்சம் கூட மதிப்பு மரியாதை இல்லாத காலை கண்ணுல காட்டி சாடை பண்ணிக்கிட்டு உக்காந்திருக்கான்.

 

என்னடா காலை காட்டுறான்னு யோசிச்சப்பதான், அன்னைக்கு அவனை அடிச்சப்ப “உங்கண்ணன் என்ற கால்ல உழுந்து கேட்டாத்தான் உன்னை கட்டிக் சம்மதிப்பேன்னு” தங்கச்சிகிட்ட வீரமா அவன் பேசித் தொலைச்சது கருப்பனுக்கு மனசுக்குள்ள பட்டுச்சு.

 

அடுத்து அவன் யோசிக்கவே இல்ல படக்குன்னு கால்ல உழுந்துட்டான். “அப்பா சாமி எந்தங்கிச்சிய கட்டிக்கடா புண்ணியமா போவும்னு”.

 

அட கட்டிக்கிட்டு போனவன் சந்தோசமா போயிருந்தா விசேஷ வீட்டுல சந்தோசம் நின்னுருக்கும். “ஒட்டு ஒறவே இருக்கப்படாது. எவனாச்சும் அண்ணன் தங்கச்சி பொண்ணு பேத்தின்னு ஊட்டுப்பக்கம் கால வச்சா ஒரே வெட்டா வெட்டி வீசிப்புடுவேன் பாத்துக்கோன்னு” பைக்குல ஏறி உக்காந்து ஊரு கேக்க கத்திட்டு போறான்.

 

வந்தவன் போனவன் எல்லாம் துக்கம் கேட்டு சொறிஞ்சு உட்டுட்டு போவ, “கிறுக்குப் பயலே மானத்த வாங்கிப்புட்டியேடா” என்று ஆனது கருப்பனுக்கு.

 

நிலைமைய புரிஞ்சுக்கிட்ட கண்ணப்பனும் அமுதாவும் எல்லாத்தையும் பாத்துக்கிட்டாங்க. அவங்களுக்கு பொண்ணு பத்திய கவலை இருக்கத்தான் செய்யும். ஆனாக்கா தான் பெத்த மவளை சும்மா அனுப்ப முடியாதே அவர்கள் கடமையை செய்தார்கள்.

 

அம்சாவும் கருணாவும் கூடமாட அவர்களுக்கு ஒத்தாசையா இருந்தார்கள்.

 

“அன்பு அந்த காட்டுப்பயலுக்கு ஒரு போன் பண்ணுப்பா. அன்னம் பத்தி தெரிஞ்சுக்கலாம்” சுலோச்சனாவுக்கு மனசே ஆறலை.

 

பெத்தவரு கைகாட்டுன பையன் நல்லவனாத்தான் இருப்பான். எப்படியும் அவனைப் பத்தி விசாரிச்சுத்தான இருப்பார். பேத்தி வாழ்க்கையில் அலட்சியமா இருக்கமாட்டார் என நம்பினார் சுலோச்சனா.

 

ஆனா இம்புட்டு பொறுக்கியா இருப்பான்னு அவர் நெனைக்கவே இல்லை. தப்புன்னா யாரையும் சும்மா விடமாட்டார். அப்படியிருக்க பெத்தவங்களை மட்டும் அப்படியே போவ விடுவாரா.

 

“பேத்திக்கு நல்ல வாழ்க்கையை அமைப்பீங்கன்னு நம்புனேன். இங்க பக்கம் யாரையும் அன்னம் விசயத்தில் தலையிட விடாம பண்ணினேன். குடியை கெடுக்க பாத்திருக்கீங்களே இது அடுக்குமா?” நிக்க வச்சு கேள்வி கேட்டார் பெத்தவங்களை.

 

விசாரித்த வரையில் நல்லவனாப் போக இப்படி ஒரு நச்சுப் பாம்பா இருப்பான்னு அவங்க கூட எதிர்பாக்கலை. அதனால் கேள்வி கேட்டவளுக்கு பதில் சொல்ல முடியாம நின்றனர்.

 

“கெளம்புங்கப்பா. இங்க இருந்தா நா எதாவது பேசி உங்களை நோகடிக்கப் போறேன்” சொல்லிவிட்டு ஒடிந்து போய் உக்கார.

 

கருப்பன் சத்யசீலனுக்கு போனை போட்டான்.

 

“டேய் இப்ப எதுக்குடா கூப்பிட்ட” எடுத்த விசையில் அவன் வள்னு விழுந்தான்.

 

“நீ கட்டிக்கிட்டு போனது எங்க பொண்ணு. கூப்பிடாம என்னடா பண்ண?” கறுப்பன் பதிலுக்கு ஏறினான்.

 

“ஹனிமூன் வந்திருக்கன். இனி கூப்பிடாத. புருஷன் பொண்டாட்டி தனியா இருக்கனுமுன்னு வந்த எடத்துல கூப்பிட்டு தொந்தரவு பண்ணாத. இனி போன் போட்டா எடுக்காதுடா” மொட்டையா சொன்ன சத்தியசீலன் போனை அனைத்து தூர போட்டான்.

 

அவன் பேசினது எல்லோருக்கும் கேட்க கருப்பன்கிட்ட எதுவும் கேட்டுக்கலை.

 

“பொண்ணு விதி சத்யனோட விதிங்கறப்ப அவங்க என்ன பண்ணுவாங்க. இதைப் பத்தியே பேசிட்டு இருக்காத சுலோ” தயாளன் சுலோச்சனாவை அறைக்கு கூட்டிட்டு போனார் தூங்கட்டும் என. தூக்கம் வருமா அவருக்கு.

 

பொண்ணு வாழ்க்கை கரணம் தப்பினால் மரணம்ங்கிறாப்புல “பொறுக்கிகிட்ட இருந்து தப்பிச்சு காட்டான்கிட்ட மாட்டிகிச்சே” ஒரு மாத்திரைய முழுங்கிட்டு படுத்தவருக்கு மனசு பதறியது.

 

சத்தியசீலன் குடும்பம் அளவுக்கு அதிகமா ஒட்டி உறவாட அது பிடிக்காமதான சுலோச்சனா கோழியை அறுக்கச் சொன்னது. இப்ப குடும்பம் ரெண்டாக்கிடக்க. தீரா பகையா போனது ரெண்டு குடும்பத்துக்கும்.

 

சத்தியசீலனை பெத்தவங்க இறந்து போவ, தனியா நின்னவனுக்கு இன்னும் வீரமும் திமிரும் தெனாவெட்டும் கூடித்தான் போனது.

 

அவனை பார்த்தாலே சுலோச்சனா கண்ணுக்கு பிடிக்காது. அவனும் இவரை பாத்தாலே முகத்தை எட்டு முழத்துக்கு சுளிப்பான். ஜாடை பேசி நோவடிப்பான் ஒவ்வொரு நேரம்.

 

பதிலுக்கு சுலோச்சனா பதிலடி கொடுக்க பயந்தார். திமிரு புடிச்சவன் மரியாத இல்லாம பேசிட்டா ஊரு முழுக்க பரவுமே. வாயை பொத்திக்கொள்வார். சனியனை எதுக்கு தூண்டி விட்டு மானம்கெட்டு போவனும் என்று.

 

கண்டதை நினைத்து குழப்பி மாத்திரை உபாயத்தால் தூங்கிப் போனார்.

 

சுலோச்சனாவ பெத்தவங்க மீசையில் மண் ஒட்டாத மாதிரி சமாளிச்சு நல்லபடியா விடைபெற்று மரியாதையை கேட்காம கேட்டு வாங்கிட்டே கிளம்பினார்கள்.

 

செவ்வந்தியை அம்சா தனியாக அழைத்துப் போனார் அவளை தயார் பண்ண. “அம்சா அவளுக்கு புத்தி சொல்லி அனுப்புடி” அமுதாவுக்கு வெசனமாக இருந்தது.

 

வாயாடி மவளை பெத்துட்டோம். நல்லபடியா பொழைக்கணுமே அப்படின்னு தெய்வத்தை வேண்டி காசு முடிஞ்சு வைச்சார்.

 

“அத்த அங்க ஏற்பாடு பண்ண சொல்லட்டா ராத்திரிக்கு” சுலோச்சனா வந்து நின்றார்.

 

“இல்லம்மா அப்பத்தா ஊட்டுலயே இருக்கறேன். அங்கயும் இங்கயும் இருந்தா தூக்கம் வராது எனக்கு. ரெண்டு வாரமா அலைஞ்சதுல சலுப்பா இருக்கு தூங்கணும் எனக்கும்” மறுத்துவிட்டான் கருப்பன்.

 

“கருப்பா அன்னத்தை பாத்துட்டு வரலாமாப்பா. எனக்கென்னமோ மனசு அடிச்சுக்குது. அடிவயித்துல பிசையுது” சுலோச்சனா தவிப்பாக திரும்பவும் சொன்னார்.

 

“அம்மா கெட்டது நடக்கும் போது ஒரு உணர்வும் வராது. இப்ப புள்ளைய நல்லவனுக்கு தந்திருக்கோம் தப்பா படுதா. போய் வேலையை பாரும்மா. இருக்கற கோபத்தை காமிச்சா நீயும் அப்பனும் தாங்க மாட்டீங்கன்னு ஒதுங்கி போறன்” கருப்பன் அவரை அலட்சியப்படுத்தினான்.

 

ஆனால் அப்பத்தாவுக்கும் அதே உணர்வு வந்து போக, மருமகளையும் பேரனையும் புரியாமல் பார்த்துப் போனார்.

 

“அம்சா கருப்பன் ரூமு உள்ளதான் இருக்குது. போய் ஆகவேண்டியத பாருங்க” தான் படுக்கும் அறைக்கு போய் கட்டிலில் படுத்தார்.

 

அவருக்கு முடியவில்லை. அவர் வயசில இது மாதிரி விஷயத்த கேள்விப்பட்டு இருக்கார். ஆனா தன் வீட்டுலயே நடக்கறதை பெரிய அடியா நெனைச்சார்.

 

புள்ள பொழப்பையே நாசமாக்கியிருப்பானே சண்டாள பாவி சாப்பிட கூட எழலை அப்படியே படுத்துவிட்டார்.

 

“அப்பத்தா கொஞ்சமாச்சும் சாப்புடு. அதான் அவன் ஹனிமூன் கூட்டிட்டு போறேன்னு சொன்னானே. கண்டதையும் யோசிச்சு உடம்ப கெடுத்துக்காத” கருப்பன் கவலையா சொன்னான்.

 

“எனக்கு தெரியுப்பா. எந்தங்கம் நல்லா இருப்பா என்னைக்கும்” அப்பத்தா எழுந்து உட்கார்ந்தார்.

 

“சரி எங்களை ஆசிர்வாதம் பண்ணுத்தா. நீதான் சாமி எனக்கு. அதுக்கு அப்புறம்தான் அப்பன் ஆத்தா எல்லாம்” செவ்வந்தியை கூட்டிகிட்டு அவர் காலில் விழுந்தான்.

 

“நல்லாருப்பா நல்லாரு” அவர்களை நெறைஞ்ச மனசுடன் ஆசிர்வாதம் பண்ணியவர்,

 

“கருப்பா எனக்கு தூக்கம் வருதுடா. அன்னத்தை பாத்துக்கப்பா. வெகுளிப்பொண்ணு அதை கைவிட்டுடாதப்பா. சத்தியசீலன் முரட்டு மனுஷந்தான் ஆனாக்கா நல்லவனப்பா. புள்ளைய கொடுத்த எடத்துல ரோசம் பாக்க கூடாதுப்பா. அவன் வேண்டாமுன்னு சொன்னாலும் ஒரு எட்டு போய் பாருப்பா” அவன் கையை பற்றிக்கொண்டு அரற்றினார்.

 

“நா பாத்துக்கறேன் அப்பத்தா நீ தூங்கு” அவரை தூங்க வைத்துவிட்டே போனான் அங்கிருந்து.

 

செவ்வந்தி தயங்கி நின்றாள் அங்கே. அவரை விட்டுப்போவ மனசே இல்ல அவளுக்கு.

 

“செவ்வந்தி இங்க வா கண்ணு” அம்சா அவளை அழைத்துப் போனார் தன்கூட.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!