அன்னமே 5

4.8
(4)

அன்னமே 5

 

 

கொலுசு சலக் சலக்கென சப்திக்க உடுக்கை இடை அசைவுக்கு தக்க, இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப் பையில் தைத்திருந்த முத்து மணிகள் ஓசை எழுப்பியது.

 

இரண்டு கையிலும் நாலு நாலு கண்ணாடி வளையல் போட்டிருக்க, கலகலவென ஒலியோடு அவள் வாய் தானாக பாடியது.

 

அயித்தயும் மாமனும் சுகந்தானா…

ஆத்துல மீனும் சுகந்தானா…

 

அன்னமே உன்னையும் என்னையும்…

தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா…

 

கருத்த மச்சான் என்னை விட்டுப் போகாத…

 

பாட்டு பாடுகிறேன் என சுற்றுப்புறத்தில் பறவைகள், சில் வண்டுகள் சப்தங்களின் இசையைக் கெடுத்தபடி வரப்பில் ஒரே சீராக நடக்காம பத்து வயது பெண்ணின் புத்தியில் விளையாட்டுக் காட்டி நடந்தாள்.

 

நாம பாடினால் பறவைகள் மயங்கும், மழை வரும் என நம்பி சப்தமாக பாடினாள் செவ்வந்தி.

 

அவள் பாட்டிற்கு குயில் அடித்துப்பிடித்து தப்பி ஓடிப்போனது, காக்காய் கூட நம்ம பாட்டுக்கு எதிர்பாட்டு பாடுறாங்களே என அவளுக்கு போட்டியாக கா கான்னு கத்தியது.

 

நடக்கும் வழியில் உள்ள சிறு கல்லை தூக்கி வீசி விளையாடி செல்ல, பறவைகள் சிதறியது.

 

முத்திய சோளக் கதிர்கள் கண் முன் ஆடி அசைந்து கண்ணை பறிக்க, அவள் நாவில் எச்சில் ஊறியது. ‘மீனோடு இதையும் சுட்டுக்கலாம்” நாலு கதிர்களை உடைத்து எடுத்துச் சென்றாள்.

 

“திருடின்னு பேர் வைப்பாரே” ஏக்கம் இளையோட வெறித்தவள் நாக்கு அதை ருசித்தே தீர நம நமன்னு இருக்க.

 

“பாத்துக்கலாம். அந்தாளெல்லாம் ஒரு ஆளுன்னு பயந்துட்டு. செவ்வந்தி வாயை திறந்தா காக்கா குருவி கூட நடுங்கி ஓடும். கருவாயன் எம்மாத்திரம்” தைரியமாக எடுத்துப் போனாள் தண்ணித் தொட்டிக்கு.

 

மீனை சுத்தம் செய்து காக்கா தூக்கிட்டு போகாமல் பத்திரம் செய்தவன், பைப்பை திறந்துவிட்டு மீன் கழுவிய இடம் பூராவும் வாசம் போக கழுவிவிட்டான். வாய்க்கால் வழியாக சோளக் காட்டுக்குள் பாய்ந்தது மீன் கழுவிய கழிவு நீர்.

 

பறவைகள் காச் மூச்சுன்னு கிரீச்சிட்டு சிதறி ஓடுவது சோளக் காட்டின் பயிர்கள் மீது தெரிந்தது. அதோடு ஒரு பெண்ணின் பாடல் அழுகை சப்தமாய் அவன் செவிக்குள் விழுந்தது.

 

“கருவாச்சி வர்றா. எந்நேரமும் வாய் ஓயாது” அப்படியே தண்ணி தொட்டியில் ஒரு குளியலையும் போட்டான்.

 

“யோவ் மச்சான் மீனை சுத்தம் பண்ணி வச்சிட்டியா?” சட்டியை திறந்து எட்டி பார்த்தவளுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

 

“பொறுப்பான மனுஷன்தான். என்ன அப்போ அப்போ கிறுக்கு புடிச்சு ஆட்டுது. கோக்கு மாக்கா நடந்துக்கறான்” தாவணியை கழட்டி சாலையின் பந்தக்காலில் கட்டிவிட்டு, அங்கே காயப் போட்டிருந்த துண்டை எடுத்து மாறாப்பாக போட்டாள்.

 

அடுப்பில் விறகை எடுத்து வைத்து பத்த வைச்சு சட்டியை அடுப்பு மீது வைத்தாள் சூடேறட்டும் என.

 

காய்ஞ்ச மிளகா, இஞ்சி பூண்டு என வறுவல் சமாச்சாரங்களை அள்ளி அம்மியில் வச்சு அரைத்தெடுத்து மீனை அதில் கொட்டி பிரட்டி எடுத்தாள்.

 

“கருவாச்சி ஆச்சாடி?” கருப்புச்சாமி சோப்பு மணக்க அவள் பக்கத்தில் ஒரு கல்லை பிரட்டிப்போட்டு அதில் உட்கார்ந்தான்.

 

“யோவ் மச்சான் தள்ளி உக்காருய்யா. சட்டிக்குள்ள தலையை விட்டுக்கிட்டு இருக்க. அப்படியென்ன அவதி உனக்கு” மிளகாய் எரிச்சல் உள்ளங்கையை காந்தியது.

 

“கருவாச்சி மீனை திருப்பி போடுடி. தீய்க்காத” அவள் முதுகில் ஒரு அடியைப் போட்டவன் கரண்டியை வாங்கி திருப்பி திருப்பி போட்டான்.

 

“நெசமா சொல்லு மச்சான். நா கருப்பாவா இருக்கன். எப்ப பாத்தாலும் கருவாச்சின்னு கூப்பாடு போட்டுட்டு இருக்க” அம்புட்டு வெசனம் அவளுக்கு.

 

கேட்டவளை பாக்க படத்தில் வரும் நடிகை கணக்காக அம்புட்டு அழகாய் அவன் கண்களுக்குள் விழ, “அதை சொன்னா இண்ணும் ஓவரா ஆட்டம் போடுவா. சொல்லவே கூடாது” என தனக்குள் ஆலோசித்து,

 

“வெள்ள தக்காளி மாதிரி இருந்தாலும் என் கண்ணுக்கு கருவாச்சிதாண்டி. வேலையைப் பாருடி வாயாடி” சுடு கரண்டியை அவள் வாயில் வைக்கப் போனான்.

 

எட்டி நின்று தப்பித்தவள், “நன்றி கெட்ட மனுஷா உனக்கு ஆக்கிப் போட்டதுக்கு சூடு வாங்கணுமா” அவன் மீனை திருப்பி போட்டு சுட்டு எடுக்க.

 

சோளக் கதிரை தீயில் காட்டி சுட்டெடுத்தாள்.

 

“ஏண்டி கருவாச்சி ஒண்ணா தின்னுட்டே இருப்ப. இல்ல வாயில எதையாவது போட்டு அரைச்சுட்டே இருக்க. எப்பதான் பளிச்சுன்னு படம் காட்டுறத மூடுவ” கருப்புச்சாமி விசமமாய் சிரித்தான்.

 

ஒதுங்கி கிடந்த மாறாப்பை ஒழுங்காய் இழுத்து மூடியவள், “யோவ் மச்சான் ரெட்டை மீனிங் பேசுன வாயில கொள்ளிக்கட்டையை சொருகுவேன், பேச வாய் இருக்காது” நெருப்பு கனன்ற கொள்ளி விறகை எடுத்து அவன் கண் முன் அசைத்தாள்.

 

“கூறு கெட்ட கிறுக்கி வாயை மூடச் சொன்னேன்” தன் சீண்டலை புரிந்து கொள்ளவும் இன்னும் அவன் சிரிப்பு பொங்கியது அவனுக்கு.

 

“உடம்பு முழுக்க என்னோட உழைப்புதாண்டி கொழுப்பா தேங்கி இருக்குது. வரவும் போகவும் பெருச்சாளியாட்டம் கிழங்க திருடித் திங்கற மாதிரி தின்னுட்டே இருக்கறது. எதுக்கும் உங்கப்பன கதவ பெருசா வெக்க சொல்லுடி. குட்டியானையை புடிச்சு அதோட அளவெடுத்து அது போய் வர சவுரியமா செய்யச் சொல்லு அப்பத்தான் நீ உள்ள புகுந்து வெளிய வர முடியும்”

 

“மூடிட்டு எழுந்து போய்க்கோ மச்சான். உனக்கு மீனுமில்ல மண்ணுமில்ல. பாவம்னு வேலையை விட்டுட்டு வந்து வாய்க்கு வக்கணையா செஞ்சு தந்தா தின்னுட்டு வம்பா பேசுற” சட்டியில் கிடந்த மீனை எடுத்துட்டு போக சட்டியில் கையை வைத்தாள்.

 

“கைய வச்ச கொன்னுடுவேன். அதான் வேலை முடிஞ்சிடுச்சே. போய் மடையை திருப்பி விடுடி. வாங்கற பணத்துக்கு ஒழுங்கா வேலையை பாரு” அவளை எழுப்பிவிட்டான்.

 

“கருவாயா ஏமாத்திட்டு திங்க நினைக்காத சொல்லிட்டேன். இந்த நாள் திரும்பவும் வரும் அப்ப உன் வாலை ஒட்ட நறுக்குவேன் பாத்துக்க” கரண்டியை அவன் கண் முன் ஆட்டினாள்.

 

“அடியேய் உன்னை சும்மா விட்டாதான. முதல்ல துண்டை கொடுடி” அவள் மாறாப்பாக போட்டிருக்கும் துண்டை பிடுங்க முயற்சி செய்தான். அவன் கையோடு பாதி வந்துவிட, பார்த்த அழகில் விழிகள் சிவந்து நின்றான் கருப்புச்சாமி.

 

அவன் விரல் பட்ட இடம் மின்சாரம் பாய, “மச்சான்” கரண்டியை கீழே போட்டவள் துண்டை மார்போடு இழுத்து மூடினாள். வாயாடிக்கு பேச்சு மறந்து போக, அவனுடைன் ஆன தனிமை உறைக்க அச்சம் கொண்டாள்.

 

நல்லவன்தான் ஆனா இவளை பார்த்தால் மட்டும் அவன் கட்டான தேகம் விடைத்து நின்றது. மூளை யோசிக்க மறந்து கள்ளுண்டவன் நிலையில் அவளை மட்டுமே நினைக்கிறது. செவ்வந்தியும் அவன் மனசு அறியாம எதார்த்தமாய் மச்சான்தானே என நினைக்கிறாள்.

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!