அன்னமே 6

4.6
(9)

அன்னமே 6

அத்தியாயம் 6 

கதைய யாருமே படிக்கலை போலயே. விமர்சனம் ஏதும் வரலை. 

சைலன்ட் ரீடராவே இருக்காதீங்கப்பா🤗 விமர்சனம் நிறைய வந்தால் அத்தியாயங்களும் வந்துட்டே இருக்கும்🤗

மஞ்சள் வானில் கருமேகங்கள் சூழ, மழைக்காற்று கட்டுடலை வருடிச் செல்ல, அவன் இதயத்தில் அரும்பாய் முகிழ்த்த காதல் உணர்வுக்கு தூபம் போட்டது. செவ்வந்தியை பார்க்கும் பார்வையில் இப்போது உரிமை இருந்தது.

தன் முன் தாவணியில்லாமல் அங்கம் மறைக்க முயன்று தோற்று போனவளை பார்க்கவும் கிஞ்சித்தும் இரக்கம் வரவில்லை அவனுக்கு. கையில் இருக்கும் தூண்டின் மறுமுனையை கொலை வெறியோடு உற்று நோக்கினான். 

விளையாட்டாய் தொட்டது வினையானது.

செவ்வந்தியை குழந்தையில் இருந்து தெரியும் அவனுக்கு, அத்தை மக என்ற உரிமையும் கிடைக்க, அவளைப் பார்க்கும் நேரத்தில் எல்லாம் சீண்டி விளையாடுவான். பார்க்கும் பெண்களிடத்தெல்லாம் காமுறும் காமுகன் இல்லை.

கருப்புச்சாமி அப்பத்தாகிட்ட மட்டும்தான் தன் சுயம் விடுத்து யாவும் நீயே என இருந்திடுவான். அதிக நேரம் உட்கார்ந்து பேசிட விஷயம் கொட்டிக்கிடக்கும் அவரிடத்தில். சின்ன வயசு பருவத்தில் அவன் அர்த்தமற்ற சொற்களை அதி முக்கியமான விஷயம் போல கேட்பார். கதை சொல்ல சொல்ல அப்பத்தாவின் முகம் பார்க்க தன்னை பெரியாளாக உணர்ந்திடுவான்.

அன்னையின் அணைப்பில் அந்நியமாய் உணர்ந்தான். அவரிடம் இருந்து வரும் நறுமண திரவியங்களின் வாசனை குமட்டியது. ஒருத்தரம் அதிசயமாய் மகன் அருகில் வந்தால் எட்டி ஓடுவான்.

மத்தபடி பெற்றவர்கள் என்ற மரியாதையில் சுலோச்சனா தயாளனிடம் தள்ளி நின்றுவிடுவான். சொல்ல வந்ததை சொன்ன பிறகு அடுத்து சொல்ல வார்த்தைகள் அவனிடமும் இருக்காது. அவர்களுக்கும் தெரியாது. நின்று பேச தயாளனுக்கு நேரம் இல்லை சுலோச்சனாவுக்கு மனதில்லை.

அன்னலட்சுமி அவன் வீட்டு இளவரசி, எந்த விதிமுறையும் தங்கச்சிக்கு இல்லை, கணக்குகளும் இல்லை. அண்ணா என்றாலே உருகி விடுவான். 

அவன் குடும்பத்துக்கு அடுத்து செவ்வந்திதான் அவன் நின்று முகம் பார்த்து பேசும் ஆள்.

பேச்சுக்கு பேச்சு துடுக்காக பேசிடுவாள். அவன் பேச்சை அவள் ஒருத்தியே நின்று தாக்கு பிடிப்பாள். இதைச் சொன்னான் அதைச் சொன்னான் என்று அழுது வடியமாட்டாள்.

வந்து பாருய்யா சண்டைக்குன்னு வரிந்துகட்டி நிற்கும் தோரணையில் கருப்புச்சாமி மெச்சிடுவான்.

மீனுக்கான சண்டையில் எதார்த்தமாய் அவள் நெஞ்சம் மறைத்த துண்டை தன் கை கொண்டு இழுத்துவிட்டான். ஆனால் பதார்த்தமாய் பிறர் கண் படாது மறைத்த இரு நிலவுகள் அவன் கூர் விழிகளில் பட்டு சித்பிரம்மை பிடிக்க வைத்தது.

அசுர வேகத்தில் நெஞ்சு அடித்துக்கொள்ள. தொண்டைக்குள் மீன் முள் சிக்கிய உணர்வில் எச்சில் விழுங்கினான். 

முகம் தவிர்த்து பிற பாகங்களை மறந்தும் பார்க்க மாட்டான். ஒழுக்கசீலன். அழுத்தக்காரன். இப்போது செவ்வந்தியின் மீதிருந்து கண் அகற்ற முடியாமல் மூச்சு வாங்க நின்றான். 

பச்சை வண்ண ஜாக்கெட்டில் எடுப்பாய் கண்ணில் பட்ட பேரதிசயத்தை பார்த்து நின்றான். பார்க்காதே பார்க்காதே என கண்களை திருப்ப நினைத்தாலும் மறுத்து இப்படித்தானா என சோதித்தது கழுகு பார்வையால்.

பசும்பாலில் ரோஜாவையும் சத்தனத்தையும் ஒரு துளி சேர்த்தால் வரும் நிறம் அவளுக்கு. அப்பத்தா சொல்ல கேட்டிருக்கிறான். “செவ்வந்தி புள்ள அழகு நம்ம சொந்தத்தில் யாருக்குமே இல்ல அமுதா. ம்ம்ம்ன்னு சொல்லு எம் பேரனுக்கு கட்டி வைக்கறேன்” இப்படி அவர் சொல்லி உறுதி தர. 

வாயாடி இவகிட்ட சொல்ற மாதிரி  என்ன இருக்குன்னு  அப்பத்தா வாய் ஓயாம சொல்லுதுன்னு எண்ணுவான். 

ஒரு கையால் தன் நெஞ்சம் மறைத்து, மறுகையால் “மச்சான் விடு” அவன் கையில் இருந்த துண்டை இழுத்தாள்.

முட்ட தயாராக நிற்கும் ஜல்லிக்கட்டு காளை அவள் இழுப்புக்கு அசையவில்லை. முழு துண்டையும் பிடுங்கிவிடும் வேகம் அவன் கரத்தில் இருந்தது.

“யோவ்வ் மச்சான்! கிறுக்கு புடிச்சு போச்சாய்யா உனக்கு. உன்னை சாமி மாதிரி நம்பி வந்திருக்கன் தப்பு பண்ணிடாத” அவன் பொல்லாத பார்வையில் அஞ்சி நின்றாள், மூடிய கண்களுக்குள் மின்னல் இடி இரண்டும் பளிச் பளிச்சென மின்ன. இடி சத்தம் போல இதய துடிப்பு காதில் கேட்டது.

அவன் பார்வை ஈட்டியாய் தன் நெஞ்சை ஊடுருவி நிற்க, அடிவயிற்றில் சுருசுருவென அவஸ்தையாய் வலித்தது, அப்போதுதான் சமைந்தது போல அங்கமெல்லாம் என்னவோ பண்ணியது.   

பொழுது இறங்கும் நேரம், யாருமில்லா தனிமை, அவள் தைரியம் எல்லாம் அவன் பார்வையில் தவிடுபொடியானது. 

அவன் கூர் பார்வை நெஞ்சை அறுத்தது. அங்கம் வருடும் அவன் பார்வை வீச்சு அவளை தீயாய் எரித்தது. தன் அழகை மறைக்க ஒரு கரம் போதாது போக, துண்டை விட்டுவிட்டு இன்னொரு கரத்தையும் எடுத்து தன் மானத்தை மறைத்து குறுகி அமர்ந்தாள். தனக்குள் என்ன நடக்கிறது என்பதை உணராது பேதையாய் தவித்தாள்.

“மச்சான் அப்படி பாக்காதய்யா. அடி வயிறு வலிக்குற மாதிரி இருக்கு எனக்கு” அழுகையில் அதரங்கள் நடுங்கியது.  முத்து மணிகளாக கண்ணீர் துளிகள் கன்னத்தில் உருண்டு ஓடியது. 

அவள் அழுகுரல் செவியில் சுட, துண்டை அவள் மீது வீசியவன், “தாவணியை கட்டிட்டு வா. இனி இப்படி என்ற கண்ணு முன்னால நிக்காத புள்ள. ஆம்பளை மனசு எப்ப எப்படி போகும்னு தெரியாது” திரும்பி நின்றான். 

மடமடவென எழுந்து தாவணியை படல்ல இருந்து உருவிக் கட்டினாள்.

“நா ஊட்டுக்கு போற மச்சான். மிச்சம் வக்காம தின்னுட்டு நீயும் கிளம்பு” அவன் பக்கம் பார்க்காமல் சொல்லிவிட்டு நடந்தாள். 

“அப்படியே எல்லாத்தையும் எடுத்து நாய்க்கு போட்டுட்டு போ புள்ள” வலது கையை காற்றில் வீசி சொன்னான் ஆத்திரம் மிஞ்சிய குரலில். 

“மச்சான் அது… அது” பேச்சு வராமல் திக்கினாள்.

“அட எடுத்துட்டு போன்னு சொன்னேன் புள்ள. ஆசை ஆசையா பண்ணிக் கொடுத்த புள்ள. சங்கடமா கிளம்பிப் போற. விட்டுட்டு திங்க நா என்ன மிருகமா?”

“பரவால மச்சான். நீ அப்புறமா வச்சு தின்னு” சுரத்தில்லாம சொல்லிவிட்டு தன் வீட்டுக்கு நடையைக் கட்டினாள்.

“போறவ திரும்பி பாக்காம போய்க்கோ இனிமேல் மச்சான்னு கண்ணு முன்ன வந்து நிக்காத. ஒரு அரையில கன்னம் பழுத்துரும் ஜாக்கிரதை” எச்சரிப்பாய் சொல்லிவிட்டு அவளுக்கு முன் வரப்பில் இறங்கினான். 

‘பசியோட வந்த மச்சானை கிறுக்கச்சி மாதிரி துரத்தி விடறேன்’ நினைத்து பின் தலையில் கைவைத்து சோர்ந்து நின்றாள். 

“யோவ் விளையாடிட்டு இருக்கியா. மிளகா அரைச்சு கையெல்லாம் எரிது. மனசாட்சி இல்லாம நாய்க்கு போடச் சொல்லுற. ஆரு கொடுத்த தைரியம் இது” இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தவளை ஏறிட்டவன்.

“நீயும் உக்காந்து திங்கறேன்னு சொல்லு புள்ள நா வரேன். இல்ல போயிட்டே இருக்கேன்” அவன் செல்ல.

“சரி வாய்யா” அவனை அழைத்தாள்.

வந்து அமர்ந்தவனுக்கு வாழை இலையை ஒரு வட்டிலில் வைத்து அதன் மேல் வறுத்த மீன் துண்டங்களை போட்டு, தனியாக மிளகாய் சட்னி, அறிந்த எலுமிச்சம் பழ தூண்டுகளை வைத்து கையில் தந்தாள்.

வேறு ஒரு இலையில் தனக்கு எடுத்தவள், “மச்சான் வீட்டுக்கு எடுத்துட்டு போய் அங்க தின்னுக்கறேன். இருட்டிப் போச்சு. அம்மா தேடும்” அவன் ஆத்திரம் புரிஞ்சு போவ தயங்கி நின்றாள்.

“சரி கிளம்பு புள்ள” அவளை போகச் சொன்னவனுக்கும் அந்த சூழ்நிலையை சமாளிக்கும் நிதானம் இல்லை அப்போது.

அவளை அழு மூஞ்சியாக அனுப்ப மனதில்லாமல்தான் சாப்பிடு என்று சொன்னான். ஆனால் நடந்ததை அவதானிக்க தனிமை அவசியப்பட்டது அவனுக்கு.

“செவ்வந்தி பட்டன் பிஞ்சிருச்சுன்னா ஊக்கு குத்தாத. வேற பட்டன் கட்டு இல்ல புதுசு உடுத்திக்கோ” அவள் முகம் பாராது மண்ணை பார்த்து சொன்னவன் உடல் முறுக்கேறி திரண்ட தோள், புஜங்கள் உருண்டு திரண்டு நரம்புகள் புடைத்து நின்றது.

பொங்கி வரும் உணர்வுகளை அடக்கி அமர்ந்திருந்தான். அவள் இப்போது இங்கிருந்து போனால் போதும் அவனை பொருத்த வரையில்.

“ஊக்கு?” அப்பாவியாய் விழித்தவள். அவன் பார்வை மண் தரையில் இருந்து உயர்ந்து அனிச்சயாய் பதிந்த இடம் பார்த்து, காலையில் உடுத்தும் போது கொக்கி அந்து போக, வேறு எடுத்து உடுத்த சோம்பல் பட்டு ஊக்கு குத்தியது நியாபகம் வர.

“ஐய்யோ மச்சான்” செங்கொழுந்தாக சிவந்து போனவள் அங்கிருந்து ஓடினாள்.

“பாத்து போடி. வரப்புல விழுந்து கிடக்காத” அவன் குரல் அவளை வெட்கப்படச் செய்ய நிற்கவில்லை அங்கே.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!