அன்னமே 9, 10, 

4.8
(12)

அன்னமே 9, 10, 

பெரிய அத்தியாயமா தந்திருக்கேன் ஹனீஸ் 💕

அத்தியாயம் 9 

கல்லூரி செல்ல ஆயத்தமாகி வெளியே வந்த அன்னம் ராமாயி அமர்ந்திருந்த திண்ணையில் அமர்ந்தாள்.

“அப்பத்தா காஃபி தரீங்களா?” கேட்ட அன்னம் கல்லூரியில் தோழிகளிடம் ஆசிரியைகளிடம் என பேசப்பழக இருப்பதால் கிராமத்துப் பேச்சு வழக்கை பேசுவதில்லை. மற்றவர்கள் கேலி கிண்டலுக்குப் பயந்தே முடிந்த அளவு தன்னை மாற்றிக்கொண்டாள். அவள் ஓரளவு நாகரீகமாய் இருப்பதுக்கு சுலோச்சனாவும் முக்கியக் காரணமாக இருந்தார்.

“மொத மொதல்ல காலேஜ் போற கண்ணு. பொண்ணா லட்சணமா கல்லூரி சேர்ந்த தினம் பாவாடை தாவணியை உடுத்திகிட்டு போ. மங்களகரமா இருக்கும்” சுடிதாரை எடுத்து வைத்தவளை தடுத்து பாவாடை தாவணியை உடுத்த வைக்க, தலைகீழாக நின்று சாதித்தார் ராமாயி.

அன்று கல்லூரிக்கு போன அன்னம் திரும்ப வீடு வரும்போது கண்கள் சிவந்து முகம் வீங்கிப் போய் இருந்தாள்.

“என்னாச்சு கண்ணு. அழுத மூஞ்சியோட வந்துருக்க” பேத்தியிடம் பதறி,

“டேய் காரை எடுடா. பள்ளிக்கூடத்துக்கு போய் என்ன சேதின்னு கேட்டுப்புட்டு வாரேன். எம்பேத்தியை கண்ணு கலங்க வச்சவனை என்ன சேதின்னு கேக்கறேன் பாரு” வீராவேசமா கிளம்பியாச்சு அப்பத்தா.

“ஏம்மா தெய்வமே. கொஞ்சம் அடங்கி உக்காரு. நீ பண்ண வரைக்கும் போதும்” தரதரன்னு இழுத்துட்டுப் போய் வீட்டுக்குள் விட்டாள் அன்னம்.

அதிலிருந்து உடை நடை விசயத்தில் ராமாயி பேச்சை கேக்கறது இல்லை அவள். கேட்ட வரைக்கும் போதும் என அன்று பட்ட பாட்டில் பெரிய முடிவு எடுத்தாள். ஆனால் என்ன நாகரிகம் வளர்ந்தாலும் அவள் ராமாயி பேத்தி அதனால் ராமாயி பேச்சை முதன்மையாய் எடுத்து அதன்படி நடந்தாள். 

பக்கத்தில் உட்கார்ந்த பேத்தியின் லட்சுமிகரமான உருவத்தையே பரிவுடன் பார்த்தார் ராமாயி. நெற்றியில் திருநீறும் குங்குமமும் வைத்து தலையில் ராமாயி தொடுத்து வச்ச ஜாதிமல்லி சரத்தை தலையில் சூடி இருந்தாள்.

அழகில் குணத்தில் எம்பேத்தியை அடிச்சுக்க முடியாது எப்பவும் பெருமை அவருக்கு. 

“என்ன கண்ணு கையில வாட்சை காணோம்?” ராமாயி கையை பார்த்தார்.

“மறந்துட்டேன் அப்பத்தா. பேக்ல இருக்கு” பேக்கை திறந்து உள்ளே இருந்த கைக்கடிகாரத்தை எடுத்து அணிந்தாள்.

கரிய நிற வார் கொண்ட கடிகாரம், பார்த்த ராமாயிக்கு அல்டாப் ராணி மருமக இன்னும் இதை பார்க்காம விட்டுட்டாளா என சிரிப்பு வந்துவிட்டது. தெரிஞ்சா நிக்க வச்சு கேள்வி கேப்பாளே, நம்ம கவுரவம் என்ன அந்தஸ்து என்னன்னு.

வீட்டுக்குள் எட்டிப் பார்த்தவர், சுலோச்சனா தன் கையில் கண்ணாடியை வைத்து அதை சுத்தம் செய்ய, “நல்லவேள கண்ணு. உன்ற அம்மாக்காரி கண்ணாடி போடாம இருக்கா வசமா சிக்கிருப்ப அவகிட்ட” பேத்தியிடம் சொன்னார்.

“அது ஒரு லூசு அப்பத்தா. காலேஜ்க்கு நகை மாட்டிகிட்டு போகச் சொல்லிட்டு இருக்கு” அன்னம் பூவாய் சிரித்தாள்.

“அவ லூசுன்னு நமக்கு தெரிஞ்சு என்ன பிரயோசனம். உங்கப்பனுக்கு தெரியணுமே சாமி” ராமாயி பெருமூச்செரிந்து பேத்தி கேட்ட காபியை போடப் போனார். 

“எனக்கு லேட் ஆகுது அப்பத்தா. அப்பா எங்க” அன்னம் தேட.

“கண்ணு மஞ்சகாட்டுல அறுவடையிருக்குன்னு உங்கப்பனும் அண்ணனும் காலங் காத்தாலையே போயிட்டாங்க. 

இனிமேட்டு நேரங்காலமா போவனும். நீ எப்பவும் போல பஸ்சுலயே போயிக்க. நா வந்து பஸ் ஏத்திவிட்டுடு வாரேன்” ராமாயி அன்னத்தின் முன் சூடான காபியை வைத்தார்.

“என்ன அப்பத்தா நீ. தனியா போய்க்கோன்னு இப்ப வந்து சொல்லுற. முதல்லயே சொல்லியிருந்தா நான்பாட்டுக்கு கிளம்பி வந்திருப்பேன்” அப்பத்தாவிடம் சண்டைக்கு நின்றாள்.

“என்ன கண்ணு நீ, வயசுப்பொண்ணு நேரங்காலமா எந்திரிச்சி பழகுன்னு இதுக்குத்தான் சொல்றது. அம்புட்டு நேரமா தூங்குனா வீடு உருப்படுமா?” ராமாயி எட்டுக்கட்டையில் பேசலானார்.

“அய்யோ அப்பத்தா. இப்ப என்ன? நீ தப்பு பண்ணலை. நான்தான் லேட்டா எழுந்துட்டேன். அதான?” கிழவியின் நடிப்பை கண்டுகொண்ட அன்னத்திற்கு இப்போதைக்கு பேச்சு வார்த்தை நடத்த நேரமில்லை. அதனால் கிழவியிடம் சரணடைந்தாள். அப்பத்தாதான விட்டுக்கொடுத்து போகலாம் என வாக்குவாதத்தை கைவிட்டாள். 

“அப்பாடி தப்பிச்சிட்டேன்” ராமாயிக்கு வெற்றிச்சிரிப்பு முகத்தில் படர்ந்தது.

“உன்ன வந்து பேசிக்கறேன் நான்” எழுந்து பேக்கை தோளில் மாட்டினாள்.

“வா கண்ணு போவலாம்” ராமாயி உடன் கிளம்ப. 

“நீ வர வேண்டா அப்பத்தா. நானே போயிக்கறேன். தேவையில்லாம ஊர் வம்பை இழுத்து விடுவ நீ” அன்னம் காலி டம்ளரை எடுத்து ஓரமாய் வைத்துவிட்டு கிளம்பினாள்.

“பாத்து போயிட்டு வா கண்ணு” பேத்தியை அனுப்பிவிட்டு தானும் வயல் பக்கம் நடந்தார்.

வாட்சை பார்த்தவள், “நேரம் ஆகுதே. பஸ் போயிட்டா திரும்ப அரை மணிநேரம் கிட்ட ஆகிடும். குறுக்கு பாதையில் போகலாம்” பரபரப்பாய் எட்டிவைத்து நடந்தவள் தென்னந் தோப்புக்குள் புகுந்தாள்.

“பஸ் லேட்டா வரணுமே. அப்பா நேத்தே சொல்லியிருந்தா கொஞ்சம் நேரமா கிளம்பியிருப்பேன். அப்பத்தா கடைசி நேரத்துல சொல்லுது” நடையை வேகப்படுத்தினாள்.

“அன்னம்” மிருதுவான ஆணின் குரல் பின்னே கேட்க, சிலிர்த்துப் போய் நின்றுவிட்டாள்.

“அன்னம் இந்த வழியில எதுக்கு வந்தே?” முகத்தில் வியர்வை அரும்ப சுற்றுமுற்றும் பார்த்தான்.

“ஏன் என்னாச்சு?” அவனிடம் கேட்ட அன்னத்துக்கு அந்த தோப்பை அடையாளம் தெரியவில்லை.

“நேர் ரோட்டுல போயிருக்கலாம் நீ. இது யாரு தோப்புன்னு தெரியாம வந்து மாட்டிகிட்ட அன்னம் நீ”

“இளவரசன் யாரு தோப்பா இருந்தா என்ன? வந்தது வந்துட்டேன். எனக்கு டைம் ஆகுது நான் போறேன்” பேருந்து வந்துவிடும் என ஞாபகம் வர, அவனை விட்டு விலகி நடந்தாள்.

“அன்னம் சொன்னா கேளு. திரும்பி போகலாம். லேட் ஆனாலும் பரவாயில்ல” அன்னத்தின் கையை பிடித்து நிறுத்திவைத்தான்.

நெருப்பு பட்டது போல கையை வழுக்கட்டாயமாக உதறி விடுவித்தவள், அவனை ஆயாசமாய் நிமிர்ந்து பார்த்து, மணிக்கட்டை திருப்பி வாட்சில் டைம் பார்த்தாள். பஸ் இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடும். டைமுக்குள் பேருந்து நிலையம் போகவும் முடியாது. அதனால் அவன் சொல்ல வருவதை செவிமடுத்துக் கேட்க முனைந்தாள்.

“சரி சொல்லுங்க. அப்படி எந்த பூதம் அடைகாக்குது இங்க” இடுப்பில் இருக்கையையும் ஊன்றி நின்றவள் புருவங்களை உயர்த்தி அவனை நோக்கினாள்.

“அது அன்னம்” அவள் பக்கத்தில் வந்தான்.

“இது என்ன பழக்கம் இளவரசன்” கண்டித்துக் கேட்டவளுக்கு அவன் அருகாமை பிடித்து இருந்தாலும் இப்படி உரிமை எடுத்து இந்தப் பக்கம் எதற்காக வந்தே என்பதும். இப்படி பக்கத்தில் வந்து நிற்பது என அவளுக்கு பிடிக்கவில்லை.

தாங்கள் நிற்பது ஒரு தென்னந்தோப்பு. அப்பத்தா சொன்னது மனசில் இருந்தது.

“தோப்பு பக்கம் போகும் போது கவனமா இருக்கணும் கண்ணு. மரத்துல யாராவது இருந்தா கூட தெரியாது. பொம்பளைப் புள்ளைங்க நாமதான் பாதையில கவனமா இருக்கணும். நல்லவனா இருந்தா யாருன்னு குரல் தருவான். கெட்டவனா இருந்தா கமுக்கமா மரத்துமேல இருந்துப்பான்” போக வர அப்பத்தா எதையாவது பொழுது போவாம சொல்லிட்டுப் போனது அசிரீரியாக காதில் ஒலித்தது.

“அன்னம் கோபபடாத. நான் சொல்ல வந்தது முக்கியமான விஷயம்” அவளை அமைதிப்படுத்தினான்.

“அப்படியே நின்னு சொல்லு” தள்ளி நின்றவளை கவனிக்காமல்,

அந்தப் பெயரை சத்தம் போட்டு சொல்லப் பயந்தவன், அவள் அருகில் நின்று, “சத்தியசீலன்” மெதுவாய் சொன்னான்.

“என்னது?” அதிர்ச்சியில் விழிகள் விரிய நின்றுவிட்டாள். 

அத்தியாயம்10

இளவரசன் சொன்னது அவள் செவியில் நன்றாகவே கேட்டது. கேட்கும் திறனில் எந்தக் குறைபாடும் இல்லை. ஆனால் கேட்டதை உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் அவனிடம் கேட்டாள். ஒருவேளை வேறு பெயரை சொல்லி, தேவையில்லாமல் எதற்கு பயப்படவேண்டும். அதனால் திரும்பக் கேட்டாள். 

“தி திரும்திரும்பச் சொல்லு. யார் யாருன்னு” அவள் இதழ்கள் அந்தப் பெயரை செவியில் கேட்கவும் தந்தியடிக்க ஆரம்பித்தது. உடுத்தியிருக்கும் உடுப்பு பறந்து செல்லும் அளவு காற்று வீசினாலும் மூச்சடைக்கும் உணர்வில் தவித்து நின்றாள்.

கண்களை மூடியவளுக்கு அவள் தலையை நீரில் அமிழ்த்தி சித்ரவதை செய்தவன் மனக்கண்ணில் வர. திடுக்கிட்டு விழித்துப் பார்த்தாள். 

“சத்தியசீலன். அவர் பேரை சொன்னாவே வினை வந்து சேரும் அன்னம். மறுக்கா கேக்காத. வா போலாம்” இளவரசன் கால் தரையில் பாவாமல் அவளையும் காப்பாற்ற நினைத்து அழைத்தான்.

கால்கள் மரத்துப் போய் அசைய முடியாமல் நின்னவளை, நிலைமை புரியாம நிற்கிறாள் என கோபமுற்றான்.

பிரச்சனைகளில் சிக்க விரும்பாதவனுக்கு இது தேவையா என ஆனது. பேருந்து நிலையம் சென்றவன் கண்களில் அன்னம் இந்தப் பாதையில் செல்வது பட்டுவிட. ‘இங்க எதுக்கு போறா?’ தாமதிக்காமல் அவள் போன திசையில் நடந்தான். 

“அன்னம் நில்லு” சத்தம் போட்டு அழைத்தும் அவள் காதில் விழவில்லை.

இப்ப என்ன பண்றது இப்படியே விட்டுவிட்டு போக முடியாதே, தைரியத்தை வரவழைத்து அவள் பின்னே சென்றான். 

“கொடும்பாவி அவனா?” மீன் விழிகள் அச்சத்தில் அக்கம் பக்கம் சுழன்று சுற்றுப்புறத்தை ஆராய்ச்சி செய்தது.

ராட்சசன் இருப்பிடமா இது? கண்கள் இருட்ட மூச்சடைக்கும் உணர்வு வர, இங்க இருந்து போயாகனும் இப்பவே உடனே அங்கிருந்து ஓடிவிட கால்கள் துடித்தது. ஆனால் உறுப்புகள் செயல் இழந்த மாதிரி அசைய மறுத்தது இருந்த இடத்தில் இருந்து. 

“அன்னம் வா போகலாம்” இளவரசன் மீண்டும் அவள் கரம் பற்றினான்.

அவன் கரத்தை மரத்தில் இருந்து விழுந்த தேங்காய் பதம் பார்த்தது. 

தேங்காய் பட்டு ரெண்டாக உடைய முயன்று, இளவரசன் கை மிருதுவாய் இருந்ததால் எழும்பை மட்டும் சேதம் பண்ணியது. 

“ஹா” உயிர் நோக வலித்த கையை மறுகையால் பிடித்தான் இளவரசன். படித்தவன் என்பதால், தேங்காயானது மரத்தில் இருந்து ஏதேச்சையாக விழுந்தால் தலையில், தோள் மீதுதான் விழும். ஆனால் கைமீது எப்படி விழும் வலியிலும் யோசித்தது அவன் மூளை. 

இங்கே பக்கத்தில்தான் சத்தியசீலன் இருக்கிறான் என்பதை அவன் அறிவு சொல்ல. இங்கே இருக்கும் ஒரு ஒரு நிமிடமும் ஆபத்துதான். அன்னத்தை காப்பாற்றியே ஆகவேண்டும் என முனைப்பானான். 

“இளவரசன் என்ன ஆச்சு?” குனிந்து தரையில் கிடந்த தேங்காயை பார்த்த அன்னம் அவன் கரத்தை பார்வையிட்டாள்.

“இது அவர் வேலைதான் அன்னம் வா நிக்க வேண்டாம்” இளவரசனுக்கு அந்த கொடும்பாவியை அவன் இவன்னு சொல்ல பயம். அதனால் அவர் என்றே விளித்தான்.

“உன்னோட கை” அவன் கரத்தில் இருந்த உதிரத்தை துடைத்தாள். 

“அதை அப்புறம் பார்க்கலாம். முதல்ல கிளம்பு” அவளை கையோடு அழைத்துப் போக கை நீட்டியவன் கண்கள் கிழே கிடந்த தேங்காயை பயமாய் பார்த்து முயற்சியை கைவிட்டு கையை கீழே இறக்கியது.

தரையில் கிடந்த தென்ன மட்டைகள் உரச, தோப்பினுள் இருந்து வந்தான் அவன். ஆஜானுபாகுவாய் உருண்டு திரண்ட உடல்வாகு, புஜத்தில் கட்டியிருந்த கருப்பு கயிறு வலிமையை சொன்னது.

வாய்க்காலில் மடை மாற்றிக்கொண்டிருந்தான் என்பதால் சட்டையை அணியாமல் வெற்று மார்போடு நின்றிருந்தவனை பாராது விழிகளை தாழ்த்தினாள்.

கனல் விழிகள் நெருப்பை கக்கின ஜோடியாய் நின்றிருந்த இளவரசன் அன்னத்தின் மீது. அன்னத்தின் அருகில் நின்றிருந்த இளவரசனை பார்வையால் சுட்டெரித்து நெருங்கியவன் சப்பென அரைந்துவிட்டான் செவுளில்.

கன்னத்தில் கைவைத்து மயங்கி சரிந்தான் இளவரசன்.

“இளவரசன்” அவன் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவள் அவனை எழுப்பினாள்.

“என்ன லவ்வா?” மயங்கி கிடந்தவனை எட்டி உதைத்து ஓரமாய் தள்ளிவிட்டவன் உதடுகள் இளக்காரமாய் நகைத்தது.

அவன் செயலில் சுறு சுறுன்னு கோபம் பொத்துக்கிட்டு வர, “ஆமா உனக்கென்ன வந்துச்சு?” கொந்தளித்தாள்.

“அம்மணி வளர்ந்துடுச்சு. பயமில்லை?” அவள் அருகில் நெருங்கியவன் காலடி பட்டு சருகுகள் நசுங்கியது.

அதன் ஓசை காதில் நாராசமாய் எதிரொளித்தது.

“நா போறேன். பேசுனது தப்புதான் மன்னிச்சுக்கிடுங்க” பின் நகர்ந்தாள். 

“லட்சு என்கிட்டே மாட்டிகிட்டியா?” அவன் ராட்சச சிரிப்பில் தோப்பே சிலைவாங்கி நின்றது.

வீசும் காற்றும் நிற்க மரமும் அசையாது நிற்கிறது என அன்னம் அங்கே வந்தவனை வெறித்தாள்.

சத்தியசீலனுக்கும் அன்னத்தின் அண்ணன் கருப்புச்சாமிக்கும்  ஒண்ணுக்கொன்னு ஆகாது. அவன் வரும் பாதையில் இவன் போகமாட்டான். இவன் போகும் பாதையில் அவன் வர மாட்டான். அவர்கள் எச்சரிக்கையையும் மீறி இரண்டு ஆடுகளும் சந்தித்துக் கொண்டால் நாயடி பேயடி என்பதைவிட சாவடி அடிப்பார்கள் ஒருவருக்கொருவர். 

அவர்கள் அடித்துக் கொள்வதை வேடிக்கை பார்க்க ரசிகர் பட்டாளம் அங்கே திரண்டு நிற்பார்கள். மண்ணில் விழுந்தால் அவுட் என பெட் கட்டி விளையாட்டு நடக்கும்.

அவர்களாவே சண்டை போட்டு, இருவருமே தோற்காமல் 

உருண்டு திரண்ட உடலில் உதிரம் வழிவதை எகத்தாளமாய் பார்த்து,

“தூ கண்ணுல பட்டுடாத. கொன்னுபுடுவேன்டா” என எதிரெதிர் திசைகளில் பிரிவார்கள்.

கருப்புச்சாமி தங்கச்சி அப்படின்னு ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே அவளை வழி மறித்து மிரட்டல் விடுப்பான். குட்டிசாத்தான் பொம்மையை அவள் பேக்கில் போட்டு வைத்து பயத்தில் உறைய வைப்பது.

அவள் வரும் நேரம் நாய்களுக்கு இடையில் சண்டை மூட்டிவிட்டு ஒன்றுக்கொன்று குரைத்து சண்டையிட, அவளை அலறியடித்து திரும்ப வீட்டிற்கே ஓட வைப்பான். நீச்சல் தெரியாதவளை கிணத்தில் பிடித்து தள்ளி விடுவான். அவனிடம் இருந்து உயிர் தப்ப நீச்சலும் பழகி இருந்தாள். 

ஒரு தினம் அன்னம் அவன் கையில் சிக்கி குறை உயிரோடு வந்தது கண் முன் நிழல் படமாய் ஓட, கால்கள் ஓட தயார் நிலையில் நின்றது.

மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் நேரம் அது. இப்போ நின்றிருக்கும் இடமானது அது சமயம் வாழை தோப்பு இருந்தது. சத்தியசீலன் தோப்பு வழியாக வந்தால் விரைவாய் வீடு வந்துவிடலாம். 

“அன்னம் இந்த வழியா போவ வேண்டாம்டி. சத்யாண்ணா மண்டையில கொட்டி வைப்பாங்க” சினேகிதிகள் வர முடியாதென பாதையில் நின்றார்கள்.

“இந்த நேரத்துக்கு அவுங்க விளையாட போயிருப்பாங்க. நீங்க வாங்கடி ஓட்டமா ஓடிப்போகலாம்” அன்னம் பேக்கை தோளில் சுமக்காத பாட்டுக்கு தரையில் இறக்கி வைத்து அவர்களை பார்த்தாள்.

“ஏய் அவ சொல்றான்னு போனீங்க. வசமா மாட்டிக்குவோம். அந்த அண்ணா பத்தி தெரியும் நமக்கு. வா கண்டுக்காம போவோம்” அவர்கள் போய்விட.

“ஏய் போனா போங்கடி. எனக்கென்ன பயம் நான் இந்த பக்கம் போறேன்” அன்னம் பாதையில் எட்டுவைத்து நடந்தாள்.

விளையாடி முடித்து குளிக்க வந்தவன் அவளை பார்த்துவிட்டான்.

“அமுக்கினி எத்தனை அடிச்சாலும் பயப்பட மாட்டுறா. இன்னைக்கு பண்ணுற வேலையில் நம்ம கண்டாவே. ஏன் பேரைச் சொன்னாவே பயந்து அப்பவே சாவணும்” வன்ம சிரிப்புடன் தண்ணீர் தொட்டிக்குள் மூச்சை இழுத்துப் பிடித்து மூழ்கினான்.

நீண்ட தூரம் நடந்து வரும் களைப்பில் தண்ணீர் தொட்டியில் கால் நனைக்கவாவது இந்தப் பக்கம் வருவாள். உள்ள பிடிச்சு போட்டுடனும் நினைப்போடு உள்ளே மூழ்கினான்.

அன்னமும் அவன் நினைப்பிற்கு ஏற்ப சலசலத்து ஓடும் நீரை ஆசையாய் பார்த்தாள். தங்கள் தோப்பாக இருந்திருந்தால் குளிக்க தயாராகியிருப்பாள். ஆனால் அடுத்தவன் வீட்டு தோட்டம் கவனம் வைத்து, காலை மட்டும் நனைக்க நோக்கம் வந்து பேக்கை ஓரமாய் வைத்தாள்.

தொட்டியின் கரையில் உட்கார்ந்து தண்ணிக்குள் கால்களை தொங்கப்போட்டு அமர்ந்தாள். வெய்யில் சூடுக்கு குளிர்ச்சியாய் இருக்க, கலகலத்து சிரித்தவள் இருகால்களையும் தண்ணீரில் அடித்து விளையாடினாள்.

கைகளால் தண்ணீரை வாரி இறைத்து விளையாடிவள் முகம் தாமரைப் பூவாய் மலர்ந்து விரிந்திருந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

1 thought on “அன்னமே 9, 10, ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!