அன்னம் 25
அத்தியாயம் 25
“ஆயாளும் மவளும் எப்பதாண்டி திருந்த போறீங்க?” அம்சா அமுதாவை உள்ளே பிடித்துக்கொண்டார்.
“பேசுனதெல்லாம் கேட்டுப்புட்டிங்களா புள்ள?” அமுதாவுக்கு வெசனமாக இருந்தது.
நாம வாய்க்கு வந்ததை பேச. என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்குன்னு மவன் வீரம் வந்து தாய்க்கு ஆதரவா பேச அதுவும் எக்குத்தப்பால்ல பேசி வச்சிருக்கான். அவங்க வந்த தோரணையே அவருக்கு இதான் விஷயம் என உணர்த்த. மவன் வேற மாமியார் மண்டைய உடைப்பேன்னு பேசிட்டானே அதிலேயே நின்றார்.
“கேக்காம இருக்க அவங்க காது செவுடா புள்ள எல்லாம் கேட்டுச்சு” அம்சா வெளியே எட்டிப் பார்த்து சிரித்தார்.
“இப்ப என்ன புள்ள பண்ண” கைகளை பிசைந்தார் அமுதா. சங்கடமான சங்கடம் அவருக்கு.
‘நல்ல நாளும் அதுவுமா இப்படியொரு காரியத்தை பண்ணிப்புட்டோமே. இனி இந்தாளு இதை சும்மா விடுவானா எப்ப போவாங்க. நாம எப்ப திருவாய தொறந்து அமுதா பரம்பரை மூச்சூடும் இழுத்து சந்திக்கு இழுக்கலாமுன்னு பாப்பானே’ அதுவே அவரை யோசிக்க விடாம பண்ணியது.
அதை கண்டுகொண்ட அம்சா “உன்னையும் உன் மவளயும் பத்தி ஊருக்கே தெரியுமே. நாயும் பேயுமா கத்திக்கிவீங்கன்னு. அதனால அவங்களும் பெருசா எடுக்கல”
“அது சும்மா பேசிக்குவோம் புள்ள” அசடு வழிந்தார் அமுதா.
“அதுகிடக்கு அதத்தான் பாத்தனே. இனிமேட்டுதான் உனக்கு காரியம் பண்ணப் போறாரு புள்ள அண்ணன். தெருவுக்குள்ள காரு வரலைன்னு முக்குலயே நிறுத்திட்டாங்க அவங்க. நானும் என்ற ஊட்டுக்காரரும் உன்ற புருசனை கூட்டிட்டு குறுக்கு வழியில வேகமா வந்து சேர்ந்தோம். வந்து பாத்தா, காட்டு கத்தலை கேட்டு காதே அவிஞ்சு போச்சுடி” அம்சா அமுதாவை பயமுறுத்திகிட்டே இருந்தார்.
“அமைதியா இருக்க அண்ணனுக்கு போயி இப்படி ஒரு வாயாடி பொண்ணா பொறந்துட்டாளேன்னு நா ஆச்சரியப்படுவேன். இப்பல்ல தெரியுது நீ செல்லாயி கெழவிய விட வாயாடி. அதான் உம் மவ இப்பிடி இருக்கா” அமுதா பேசிக்கொண்டே செவ்வந்தியை தயார் பண்ணினார்.
“அக்கா பயமாருக்குதுக்கா. இங்க என்ன நடக்குன்னு சொல்லு” அம்சாவிடம் கேட்டாள் செவ்வந்தி.
“உன்னை பொண்ணு பாக்க வந்திருக்காங்கடி” அவகிட்ட சொன்னவர்,
“நானும் உன்ற அண்ணனும் கடையில இருந்தோம் புள்ள. இருந்திருந்தாப்ல உன்ற புருஷன் அதான் என்ற அண்ணன் கடைக்கு துண்டை காணோம் துணியக் காணோமுன்னு ஓடி வந்தாரு. சுடு தண்ணியை காலுல ஊத்துன கணக்கா அரைகுறையா விஷயத்த சொல்லி எங்களை கூட்டிட்டு வந்துட்டாரு. கடையை அவசர அவசரமா சாத்திட்டு போட்டது போட்டபடிக்கு வந்தாச்சு” பெருமுச்சு விட்டாள் அம்சா.
“அதென்ன இன்னிக்கே பாக்கணுமுன்னு இருக்கு” அமுதா மெதுவாகத்தான் கேட்டாள்.
“இன்னிக்கு நாளு கிழமை நல்லாருக்கு கண்ணப்பா அதான் சொல்லாம கொள்ளாம வந்துட்டோம். பொண்ணு பாக்குற சோலிய இப்புடி தடுக்குன்னு யாருமில்லாம முடிஞ்சாலும் கல்யாணம் ஆற அமரத்தான் அடுத்த மாசம் பண்ணுவோம். நீ ஒண்ணுமே பதட்டப்படாத” தயாளன் கண்ணப்பனிடம் எதையாவது பேச வேண்டுமே என பேச்சு கொடுத்தார்.
கருப்புச்சாமி அவரை மதிப்பாய் ஒரு பார்வை பார்த்தான்.
‘மவன் பாசமா பாக்கறான். அப்ப நல்லா பேசிட்டேனாட்டம் இருக்கு’ தயாளன் கால்மேல் கால் போட்டு உக்கார பார்க்க.
“யோவ்” கருப்புச்சாமி முறைத்த முறைப்பில் ஒழுங்காக உட்கார்ந்தார்.
“அம்சா பொண்ணை கூட்டிட்டு வாம்மா. நேரம் வந்துடுச்சு பாரு” கருணா வீட்டுக்கு உள்ளே பார்த்து சொன்னார்.
“செவ்வந்தி இந்தா இதைக் கொண்டு போயி எல்லோருக்கும் கொடு புள்ள” அமுதா அவள் கையில் தட்டை கொடுக்க.
“நா போ மாட்டன் மா. எனக்கு பயமா இருக்கு” செவ்வந்தி ஓரமா நின்னுகிட்டு வெளியே போக மறுத்தாள்.
“கழுத உங்கப்பன் வந்தான்னா கொமட்டுலயே குத்துவான். ஏற்கனவே நாம பேசி வச்சதுக்கு எப்ப பாயுவான்னு பயந்துகிட்டு கிடக்கேன். மூடிட்டு எடுத்துட்டு போடி” அமுதா அவள் காதை பிடித்து திருகி கதவு வரை இழுத்துப் போனார்.
“அம்மா அம்மா பயமா இருக்கு. நீ போய் தா” தட்டை அமுதா கையில் திணித்தாள்.
“அது சரிதாண்டி. உங்கப்பனை கட்டிக்கிட்டதுக்கே இன்னும் விடை தெரியல. இதுல இன்னொன்னுக்கு வழி தேட வைக்கறா பாரு அம்சா. ஆட்ட முழு ஆட்ட திம்பாளாமா. வெள்ளாட்ட கண்டா வெடுக்குன்னு பயப்படுவாளாமா” அமுதா மறந்து சத்தமா பேச.
உள்ளே கேட்ட பேச்சு சத்தத்தில் மற்றவர்கள் முகத்தில் சங்கடம் போய் மலர்ச்சி மலர. கண்ணப்பனுக்கு ஏற்கனவே இவங்க பேச்சு நெளிய வைக்க இப்ப இன்னும் முகத்தை சிவக்க வைத்தது.
“அமுதா!” கண்ணப்பன் குரல் ஆசீரிரியாக உள்ளே பாய்ந்து வந்தது.
“ஏய் நா பெத்த சீதேவி. போய்த்தான் தொலயே. அந்தாளு கோவமா இருக்கான்” செவ்வந்தியை தரதரவென வெளியே இழுத்தே போனார்.
“அமுதா அவ கையை விடு. கீழ கொட்டிட போவுது” கருணா குரல் கேட்டு மகள் கையை விட்டவர்,
“அது பிள்ள பயப்படுதுங்க. அம்மா கம்பீரம் அப்புடி. பெரிய படிப்பு படிச்சவங்க அதான் செவ்வந்திக்கு அவங்க முன்ன நிக்க பயமா இருக்குதுன்னு சொல்லுறா” அமுதா அவருக்கு தெரியாமையே கருப்பனுக்கு அதாவது வருங்காலத்தில் கருப்பனின் தில்லுமுல்லு வேலைகளுக்கு கைக்கொடுக்க ஆரம்பித்தார்.
“டேய் உனக்கு எல்லா இடத்திலும் பச்சை கொடியா பறக்குது” தயாளன் மகனிடம் கேட்டார்.
“அது அப்புடித்தான். நீ மூடு வாய. காட்டிக் கொடுத்து தொலைக்காத உம் பொண்டாட்டிகிட்ட” சிரித்து சமாளித்தான் தயாளனை. அவருக்கோ மகனின் அவதாரங்கள் அதிசயமா இருந்தது.
செவ்வந்தியை பார்த்தவன் விழிகளுக்குள் மின்னல் ஓடியது. எம்புட்டு நாளாச்சு இவளை கண்டு. அதுவும் சேலையில் அள்ளி அள்ளிப் பருகினான் அவளை.
அம்சாவை சுலோச்சனா ஊருக்கு பக்கத்து ஊரில் இருந்து கட்டிக்கிட்டு வந்ததால் உடுத்துவதில் பேசுவதில் கொஞ்சம் பட்டணத்து வாசனை இருக்கும் அவளிடம்.
அதனால் செவ்வந்திக்கு சேலையை பாந்தமாக, முந்தானையை ஆறு மடிப்பெடுத்து கட்டிவிட்டிருந்தாள்.
செவ்வந்தியை பார்த்த சுலோச்சனாவுக்கு அந்த வரையில் திருப்தி வந்தது. படிக்கத்தான் இல்ல தோற்றத்திலாவது பரவாயில்ல எனும் அளவுக்கு ஆனார்.
தன்னை மதிச்சு காலில் வேறு விழுந்துட்டான் இதுக்கு மேல மாட்டேன்னு சொன்னா தன் மதிப்பு கெடும் என புரிந்து கொண்டவர் சம்மதித்துவிட்டார் மகன் விருப்பத்துக்கு. செவ்வந்தியை பார்த்த அளவில் இதுவே பெருசு என மனசை ஆற்றினார்.
“டேய் வாய்க்குள்ள ஈ போவுதுடா. கொஞ்சம் மூடு” தயாளன் மகன் வாயை மூடிவிட்டார்.
“வயசான வயசிலும் ராத்திரி ஒம்போது மணிக்கு கதவ சாத்திக்கறயே. நா எதுவுஞ் சொன்னனா? ஓரமா தள்ளிப் போய்யா மறைச்சு நிக்காத” தயாளனை தள்ளி உக்கார வைத்தான்.
“அப்ப சரிடா. பெத்தவன்னு மரியாதையே இல்ல இங்க” தயாளன் அடங்கிப் போனார்.
“என்ன தம்பி. பொண்ணை புடிச்சிருக்கா. நாளைக்கு கட்டிக்கிட்டு கண்ணு சரியில்ல காது சரியில்லன்னு சொல்லப்புடாது பாத்துக்க” அம்சா கருப்பனிடம் குசும்புடன் கேட்டார்.
“பொண்ண எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சுங்க. அப்புடியே பொண்ணுக்கும் விருப்பம் என்னன்னு கேட்டு சொல்லிட்டீங்கன்னா சந்தோஷமுங்க. மாப்பிள்ளையை நல்லா பாத்து சொல்லச் சொல்லுங்க. வந்ததில் இருந்தே குனிஞ்ச தலையோடவே இருக்கா” கருப்பன் செவ்வந்தியை முழுங்கி விட துடித்தான்.
கருப்பன் குரல் கேட்டதும் செவ்வந்திக்கு வெட்கத்தில் முகம் சிவந்து போக, அவன் ஆசை புரிந்தும், அவனுக்கு மட்டும் புரியும்படி தலையசைத்து அவனை பார்ப்பதை மறுத்தாள்.
“நீ உள்ள போ கண்ணு” செவ்வந்தியை உள்ளே அனுப்பிய கருணா,
“அம்சா நீ போய் அவளுக்கு விருப்பமான்னு ஒரு வார்த்த கேட்டுட்டு வந்துரு” அனுப்பி வைத்தார் மனைவியை.
செவ்வந்தி முகத்தை பார்த்தே அவள் விருப்பத்தை புரிந்த அம்சா அவள் வாயாலும் பிடிச்சிருக்குன்னு சொல்லக் கேட்டே வெளியே வந்தார்.
“அவளுக்கும் சம்மதந்தான். நீங்க ஆகவேண்டிய வேலையை பாருங்க” சொல்லிவிட்டு பெண்களோடு உட்கார்ந்தாள்.
பேச்சு வார்த்தை செல்ல, சுலோச்சனா கண்கள் அங்கே இருப்பதை ஆராய கண்ட ராமாயி, “அப்ப நானும் சுலோச்சனாவும் கெளம்பறோம்ப்பா. நீங்க மேற்கொண்டு பேச வேண்டியதை பேசிட்டு வாங்க” எழுந்தவர், பேரனுக்கு கண்ணை காட்டினார்.
“எந்திரி சுலோச்சனா நாம போவோம்” என கிளப்பிவிட்டார்.
“எங்கம்மாவுக்கு வெய்யில் சேராது. அதான் அவங்க போவட்டும்” கருப்புச்சாமியும் அப்பத்தா சொன்னதை புரிந்து எடுத்துக் கொடுத்தான்.
தனக்காக பேசும் மகனை பாசமாக பார்த்த சுலோச்சனா கிளம்பினார் அனைவரிடமும் விடைபெற்று.
தயாளன் கருணா கண்ணப்பன் அவர்களுக்குள் எதையோ பேச, அதை காது கொடுத்து கேட்டப்படி அமர்ந்திருந்தார்கள் அம்சாவும் அமுதாவும்.
கருப்பன் அதுக்கு மேல் தாங்காது வீட்டுக்குள் போய்விட்டான்.
செவ்வந்தியும் ஜன்னல் ஓரம் நின்று அவர்கள் பேசுவதை கவனித்தவள் பின்னே பூனை மாதிரி கருப்பன் வரதை கவனிக்கலை.
ஜன்னல் கம்பியில் முகத்தை பதிச்சு வெளியே எட்டிப்பார்த்த செவ்வந்தியை பின்னிருந்து அனைக்காமல் அப்படியே ஜன்னல் கம்பியை அவள் கைகளோடு சேர்த்து பிடித்தான் கருப்புச்சாமி.
திக்கென விதிர்த்து அவன் புறம் திரும்பியவளின் கைகளை விடுவிக்கவில்லை அவன். தன் விரல்களோடு கோர்த்து நெருக்கி பிடித்தான்.
“மச்சான் நீயா?” அவன் சட்டை கலரை மட்டுமே பார்க்க முடிந்தது அவளுக்கு. விழிகளை நிமிர்த்தவே சக்தியில்லாதது மாதிரி கால்கள் துவண்டது நிக்க முடியாமல்.
“மச்சான்னு சொல்லக் கேக்க இம்புட்டு நாளாச்சுடி. ஏங்க வைக்கற நீ” சிவந்த முகத்தில் அவன் மூச்சுக்காற்று உரசிப்போக கூச்சத்தில் அவள் கன்னத்தில் பூனை முடிகள் சிலிர்த்து நின்றதை தன் கன்னத்தில் உணர்ந்தான்.
“கருவாச்சி உன்கிட்ட இப்புடி மயங்கிப் போவேன்னு நெனச்சுக் கூட பாக்கலைடி. கண்டதையும் காட்டி எம்மனச கரைச்சுப்புட்டா”
பேசியே அவள் உயிர் வரை துடிக்கச் செய்தான்.
தொடாமலேயே கூர் விழிகளால் அவள் அங்கம் வருடி தொந்தரவு செய்ய, அவன் பார்வை வீச்சிலேயே அவிழ்ந்து விடுமோ என மிரண்டு கொசுவத்தை பற்றிக்கொண்டாள் சரியாமல்.
“இந்த மாப்பிள்ளையை உனக்கு புடிச்சிருக்கா புள்ள?” குரல் உருகியது அவளிடம்.
“மச்சானை பிடிச்சிருக்கு” அவன் பார்வையில் வெட்கம் கொள்ள கண்களை மூடியவள் உதடு கடித்தாள்.
அவனுக்கு அது இம்சையை தர “செவ்வந்தி” தள்ளியிருக்க முடியாமல் அவள் கிட்டே நெருங்கினான்.
“தம்பி உங்கள அப்பா கூப்பிட்டு விட்டாங்க” அம்சா உள்ளே வந்து சொன்னார்.
விலகியவன், வெட்கசிரிப்புடன் வெளியே வந்து தயாளன் பக்கத்தில் உட்கார்ந்தான்.
“என்னதான் நீங்க பொண்ணை மட்டும் கொடுங்க போதும்னு பெருந்தன்மையா சொல்லிட்டாலும். எங்க முறைக்கு நாங்க பண்ணித்தான் ஆவோம். கல்யாணத்துக்கு நாள நீங்களே குறிச்சுக்கிடுங்க. நாங்க அதுக்கு சம்மதிக்கறோம்” தயாளனிடம் சொன்ன கண்ணப்பன்,
“என்ன புள்ள உனக்கு சரிதான?” அமுதாவிடம் கேக்க மறக்கவில்லை அவர்.
நெகிழ்ந்து போன அமுதா, “நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். அப்புடியே பண்ணிடுங்க” சம்மதித்தார்.
செவ்வந்திக்கும் கருப்புச்சாமிக்கும் கல்யாணம் உறுதியானது.