டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த ராம்குமார், மாடிப்படியில் இருந்து வேகமாக இறங்கி வரும் தன் மகன் அர்ஜுனிடம்,
” லீவ் எடுத்திருந்தியே என்ன ஆச்சு? ஆபீஸ்க்கு கிளம்பி இருக்க” என்று கேட்டார்.
அதற்கு தந்தையை ஒரு கணம் பார்த்த அர்ஜுன், ” கேன்சல் பண்ணிட்டேன்” என்று சொன்னபடியே வேகமாக நடந்து செல்ல, அடுத்த வார்த்தை பேச வந்த ராம்குமாருக்கு மகனின் செய்கை கோபத்தை கொடுக்க, பரிதாபமாக நின்றிருந்த தன் மனைவியை பார்த்தவர்,
” என்ன பிரீத்தா இது, அவன் கிட்ட கொஞ்சம் பேசு, அக்கா ரொம்ப கவலைப்படுறா, நான் பேசினா சண்டை தான் வரும் நீயே பேசு ” என்க, ஆமோதிப்பதாக தலையசைத்தவர் அர்ஜுனை தேடி சென்றார்.
அலைபேசியில் யாரிடமோ தீவிரமாக பேசியபடி தனது ஜீபில் ஏற இருந்த அர்ஜுன், “அத்தான்” என்ற தொடர் அழைப்பில் கண்களை மூடி திறந்தவன், நீண்ட பெரு மூச்சை வெளியிட்டபடி திரும்பி குரல் வந்த திசையை பார்த்தான்.
அர்ஜுனுக்கு மிகவும் பிடித்த பிங்க் நிற புடவையில், தோளில் மல்லிகைச் சரம் புரள, அவனை அழைத்தபடி அவனை நோக்கி ஓடி வந்தாள் அவனது மனைவி ஜுவாலா.
யாரையும் திரும்பி பார்க்க வைக்கும் அழகி. ஆனால் பார்த்து ரசிக்க வேண்டியவனோ, கோபத்துடன் அவளை பார்க்க, அவனது கண்களில் தெரிந்த கோபம், பயத்தை கொடுத்தாலும், நேற்று இரவு ப்ரீத்தா கொடுத்த அறிவுரையில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள்,
” என்ன ஆச்சு மத்த நாள விட சீக்கிரமா கிளம்பிட்டீங்க ” அவளாக வினவினாள்.
” வேலை இருக்கு ” என்றவன் கிளம்ப தயாராக, “ஓ சரி சாப்பாடு எடுத்து வைக்கிறேன் சாப்டுட்டு போயிடுங்க” புன்னகை முகம் மாறாமல் கூறினாள்.
“வேண்டாம்” என்றவனின் கரத்தைப் பிடித்துக் கொண்டவள்,
“ப்ளீஸ் அத்தான் இன்னைக்கு உங்களுக்கு புடிச்சது தான் பண்ணியிருக்கோம் சாப்பிடுங்க, பட்டினியா போகாதீங்க” என்று கண்களை சுருக்கி கெஞ்ச, அவளை ஒரு கணம் அழுத்தமாக பார்த்துவிட்டு அவளது பிடியில் இருந்த தன் கரத்தை உருவி கொண்ட அர்ஜுன்,
“என்ன உன் அம்மா சொன்னாங்களா? போ சும்மா என் பின்னாலயே அழையாம வேற வேலை இருந்தா போய் பாரு. என்ன சாப்பிடனும் எப்ப சாப்பிடனும்னு எனக்கு தெரியும். எல்லாரையும் போல நீயும் என் உயிரை வாங்காதே. ஒரு தடவை தான் சொல்லுவேன், திரும்பத் திரும்ப சொல்ல வைக்காத ” என்று எரிச்சலுடன் கூறிய அர்ஜுன் தனது ஜீப்பை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றுவிட, ஜவாலாவின் முகம் விழுந்து விட்டது.
இந்தக் காட்சியை சற்று தொலைவில் இருந்தே பார்த்த ப்ரீத்தா, நிறைந்த விழிகளுடன் நின்றிருந்த ஜூவாலாவின் அருகே வந்தவர்,
“ப்ச் அழக்கூடாது மா, ஏதாவது வேலை டென்ஷனா இருக்கும், நான் அவன்கிட்ட பேசுறேன்” என்று கூறி அவளது கண்ணீரைத் துடைத்து விட்டவர், அவளை சமாதானப்படுத்தி வீட்டிற்குள் அழைத்து சென்றார்.
@@@@@@@
மருந்தின் வீரியத்தில் நன்கு உறங்கிய மதுமதி, இப்பொழுது நேரம் கடந்தும் கண்விழிக்க மனமில்லாமல் வெல்வெட் படுக்கை விரிப்பு கொடுத்த கதகதப்பை அனுபவித்தபடி போர்வைக்குள் மேலும் புதைந்து கொண்டாள்.
அப்பொழுது அறையில் கேட்ட அரவத்தில் மெல்ல மெல்ல உறக்கம் கலைந்து தன் கைகளை மேல் தூக்கி சோம்பல் முறித்தபடி, தூங்கி விழுந்த குறை கண்ணோடு எழுந்து அமர்ந்த மதி. சத்தம் கேட்ட திசையின் பக்கம் தன் பார்வையை பதித்தாள்.
சட்டென்று பாதி உறக்கத்தில் இருந்த அவளது ஐம்புலன்களும் புத்துணர்ச்சியுடன் விழித்துக்கொள்ள, சோர்வும் உறக்கமும் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிட, பெண்ணவளோ தன் முட்டை விழிககளை தாமரை இதழ் போல அகல விரித்தாள் .
அவள் எதிரே இடுப்பில் சுற்றிய வெள்ளை துண்டை தவிர மேலாடை ஏதும் இன்றி வெற்றுடம்புடன். மதிக்கு முதுகு காட்டியபடி , யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டு கண்ணாடியின் முன்பு நின்றிருந்தான் ஆதித்யா .
” இப்போ எதுக்கு இப்படி மாடல் மாதிரி போஸ் குடுத்துட்டு நிக்கிறான். மது பாக்காத.. பாக்காத. ” என்று சொல்லிக்கொண்டே அவனை முதல் முறையாக மெய்மறந்து ரசித்தாள் .
ஆறடிக்கும் மேல் உயரம் , ஒடுங்கிய இடைக்கு மேலே பறந்து விரிந்த தோள்கள் .
முதுகில் அது என்ன ராஜாளியின் ரெக்கை போல ? என்று அறிந்துகொள்ளும் ஆவலை தூண்டிய கருமை நிற டாட்டூ, அவன் கைகளை விரிக்கும் பொழுது ராஜாளி தன் றெக்கையை விரித்து பிறப்பது போல இருந்தது.
கழுத்தில் நெருப்பு பற்றி எறிவது போல ஒரு டாட்டூ. கலைத்துவிட்டு விளையாடி பார்க்கும் ஆசையை ஏற்படுத்திய அலைஅலையான கருமை நிற கேசம். ‘ம்ம்ம் டாட்டூஸ்ன்னா ரொம்ப புடிக்கும் போல’ என்று தன் மனதிற்குள் எண்ணிக் கொண்ட மதி, ஆதித்யா மேல் இருந்த தன் பார்வையை அகற்றாது அவனையே பார்த்துக்கொண்டிருக்க,
அலைபேசியை அணைத்துவிட்டு சட்டென்று மதுமதியின் பக்கம் திரும்பிய ஆதித்யா ,
” முழிச்சிட்டியா ?? ” என்று கேட்டான் .
” ஐயோ பாத்திருப்பானோ? ” மாட்டிக்கொண்டோமோ என்கின்ற பயத்தில் திருதிருவென முழித்தாள்.
” என்னாச்சு ?? உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் ” அவள் அருகில் வந்து சொடக்கிட்டு அவள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தான் ஆதித்யா .
” ஹான்.. என்ன ??” தடுமாறினாள்.
” உடம்புக்கு ஏதும் சரியில்லையா?? ” என்று அவள் அருகில் நெருங்கி வந்து அவளது நெற்றியில் கைவைத்து பார்த்தான்,
“நல்ல வேளை காய்ச்சல் இல்ல” என்று ஆதித்யா தனக்கு தானே இயல்பாய் சொல்லி கொள்ள. அவள் தான் அவன் கை பட்டதும் சங்கடத்தில் நெளிந்தாள்.
” என்னாச்சு ?” மீண்டும் கேட்டான் .
” அது வந்து ” என்று அவள் ஆரம்பிக்கும் பொழுது பார்த்து அவனது அலைபேசி சினுங்க,
” ஒரு நிமிஷம் ” என்றவன், அலைபேசியில் பேசியபடியே சென்று காஃபி மேக்கரில் இருந்து ஒரு கப் காஃபியை எடுத்து வந்து மதியிடம் நீட்டினான் .
ஆனால் மதுவோ அதை வாங்காது அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க , தன் கண்களாலே ஆதித்யா வாங்கும் படி சைகை செய்யவும் , சுதாரித்துக் கொண்டு உடனே வாங்கியவள் காஃபியை பருகாமல் , குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி அலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த ஆதித்யாவையே தன் விழிகள் அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் .
அவன் அழகு!கட்டளையிடும் அவன் கண்கள் அழகு!அடர்ந்த மீசைக்குள் இருக்கும் அவனது கருப்பட்டி உதடுகள் அழகு! அவனின் வேக நடை அழகு! கோபத்தில் முடி கோதும் விதம் அழகு! ‘விரலும் தான்’ என்றது அவளது மனம்,
‘ ஆமா ஆமா ‘ மென்னகையுடன் ஆமோதித்தாள் .
‘அடுத்து என்ன சொல்லு’ ஆர்வத்துடன் கேட்டது அவள் மனம் .
‘ கட்டிப்போடும் ஆளுமையான குரல் அழகு! பயத்தை கொடுக்கும் கோபம் அழகு!துரோகியை வீழ்த்தும் வீரம் அழகு! பகைவனை வெல்லும் விவேகம் அழகு! எல்லாமே அழகு!’ என்று அவள் தன் மனதிற்குள் சொன்ன மறுகணம்
‘ஹம் அழகன் தான், ஆனால் முரடன் ‘ என்றது அவளது மனம் .
இவ்வாறு மதி கள்ளத்தனமாக ஆதித்யாவை ரசித்து கொண்டிருக்க, அலைபேசியை அணைத்துவிட்டு அவளிடம் வந்த ஆதித்யா ,
” என்ன காஃபி குடிக்கலையா ?? ” என்று இயல்பாக தான் கேட்டான் .
” ஹான் ” மீண்டும் மாட்டிக்கொள்ள பார்த்தோமே என்கின்ற பயத்தில் காஃபியை வேகமாக பருகியவள், தவறுதலாய் சூடான காஃபியை தன் மேலே சரித்து கொண்டாள்.
” ஏய் பார்த்து ” என்று பதறியவன் அவளை, நெருங்கி வர பட்டென்று விலகிய மது,
“ஒன்னும் இல்லை நான் நல்லா இருக்கேன். ” என்றவள் விட்டால் போதுமென்று குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள் .
அவளது விசித்திரமான நடவடிக்கையை ரசனையுடன் பார்த்தவன் தன் தோள்களை குலுக்கிவிட்டு தான் விட்ட பணியை தொடர்ந்தான்.
குளியல் அறைக்குள் நுழைந்து தாளிட்ட மதி, ‘ ஊஃப் ‘ என்று அடக்கி வைத்த மூச்சை வேகமாக வெளியிட்டவள்,
” ச்ச என்னாச்சு மது உனக்கு, அவன் நம்மளை ஏமாத்திருக்கான். சந்தியாவை கொலை பண்ணிருவேன்னு மிரட்டிருக்கான். அங்க ஹாஸ்ப்பிட்டல்ல சந்தியாவுக்கு என்னாச்சுன்னு தெரியல. வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்கன்னு தெரியல. இது எல்லாத்துக்கும் காரணமான இவனை போய் ரசிச்சிட்டு இருக்க. உனக்கே அசிங்கமா இல்லை. நல்ல வேலை அவன் கவனிக்கலை. கவனிச்சிருந்தான்னா எவ்வளவு கேவலமா நினைச்சிருப்பான் ” என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவளுக்கு, அவனை பற்றிய உண்மை அறிந்தும் அவன் பால் ஈர்க்கப்படும் தன் மீதே ஆத்திரமாக வந்தது.
அதுவும் நேற்று நடந்த சம்பவம் அனைத்தையும் நினைத்து பார்த்தவளின் மென்கரம் தானாக தனது இதழை வருட, அவளை எண்ணி அவளுக்கே அவமானமாக இருந்தது.
” அவன் முத்தம் கொடுத்தா உனக்கு எங்க போச்சு புத்தி, உன்னை எவ்வளவு கேவலமா நினைச்சிருப்பான் ச்ச ” என்று இயலாமையுடன் தன் நெற்றியில் கை வைத்தவளுக்கு, கண்ணீர் வேறு வர, நடந்து முடிந்த அனைத்தையும் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்து, தன் கண்களில் நீர்வற்ற அழுது தீர்த்தாள் மது மதி.
பின்பு ஒருவழியாக குளித்து முடித்து வெளியே வந்தவள் ஜன்னலின் பக்கமாக நின்று தூரத்தில் தெரிந்த மலையையே வெறித்து பார்த்து கொண்டிருக்க, அறையின் கதவை திறந்துகொண்டு உள்ள வந்த தாரா ,
” ஏய் இங்க வா உனக்கு ட்ரெஸிங் பண்ணனும் ” என்று சொடக்கிட்டு மதியை அழைத்தாள் .
அப்பொழுது தாராவின் நெற்றியில் இருக்கும் கட்டை கவனித்த மதிக்கு, அதற்கான காரணம் புரிந்து விட, ஒருவித குற்ற உணர்ச்சியில் அவளை நெருங்கிய மதி,
” ஐயம் சாரி.. நான் எதையும் வேணும்ன்னு பண்ணல. நேத்து எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை. என்னை மன்னிச்சிடுங்க ” தாராவின் கரம் பிடித்து கொண்டு கெஞ்சினாள்.
” ப்ச். கைய விடு ” என்று மதியின் கரங்களை உதறிய தாரா. மதி பேசும் எதையும் தன் காதில் வாங்காது, அவள் காயத்திற்கு மருந்திடுவதிலே குறியாக இருக்க, தாராவின் உதாசினம் மதிக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.
” ஸ்ஸ். வலிக்குதுங்க கொஞ்சம் மெதுவா ” என்று மதி கூறவும் ,
” ஹலோ நீ என்ன மஹாராணியா இதுக்கு போய் ஓவரா ரியாக்ட் பண்ற. அடிபட்டா வலிக்க தான் செய்யும் ” என்றவள் இன்னும் வேகமாக மதிக்கு வலிக்கும்படி மருந்திட்டு கட்டுப்போட்டாள் .
மதிக்கு கண்ணீரே வந்துவிட்டது. இந்த அரக்கர் கூட்டத்தில் இருக்கும் பெண் கூட நமக்கு ஆறுதலாக இல்லையே என்று மிகவும் வருந்தினாள்,
” ஏய் என் கூட வா ” தாராவின் கணீர் குரல் மதியின் சிந்தனையை குறுக்கிட்டது .
” எங்க ??”
” ம்ம்ம் உன் ரூம்க்கு.. எப்படி ஆதித்யா ரூமலையே செட்டில் ஆகலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா? கெட் அப் சும்மா அழுது அழுது நடிக்காத வா என் கூட ” தாரா அதட்டினாள்.
தாராவின் வெறுப்பு மதிக்கு சங்கடத்தை கொடுத்தாலும், தான் இன்று முதல் வேறு அறையில் தங்க போகிறோம், இனி நாம் ஆதித்யாவை சந்திக்க தேவை இல்லை, அவனும் தன்னிடம் அத்துமீற மாட்டான் என்று மனத்திற்குள் மகிழ்ந்த மதி சந்தோஷத்துடன் தாரா பின்னால் சென்றாள் .
ஆனால் அந்த சந்தோஷம் எல்லாம் கொஞ்ச வினாடிக்கு தான், ஆதித்யாவின் அறைக்கு நேர் எதிரே இருக்கும் அறையை காட்டிய தாரா ,
” போ இது தான் உன் ரூம்.. இனிமே நீ இங்க தான் தங்கணும் ” என்று கூற, மதியின் மகிழ் முகம் சட்டென்று விழுந்து விட்டது .
” இங்கையா ! எனக்கு வேற ரூம் குடுங்களேன். கிட்சன்ல வேணும்னாலும் தங்கிக்கிறேன் ” ஆதித்யாவை பார்க்கவே கூடாது என்று எண்ணிய மதுவுக்கு அவன் அறைக்கு எதிர் அறையில் தங்குவது கூட வெறுப்பாக தான் இருந்தது .
” ஆதித்யா சொன்னதை நான் செஞ்சிட்டேன்.. இனி என்ன கேட்கணுமோ அவர்கிட்டையே கேட்டுக்கோ ” கடுப்படித்தாள் தாரா.
” அக்கா ப்ளீஸ் நீங்க கொஞ்சம் அவர் கிட்ட பேசுங்களேன் “
” ஏய் முதல்ல தொட்டு பேசுறதை நிப்பாட்டு ” என்ற தாரா,
வெடுக்கென்று தன் மீது இருந்த மதியின் கரங்களை உதற, தாரா தள்ளிய வேகத்தில் நிலை தடுமாறி கீழே விழ போன மதுவை இரு வலிய கரங்கள் தாங்கி பிடித்தது .
கீழே விழுந்துவிடுவோமோ என்கின்ற பயத்தில் விழிகளை மூடியபடி இருந்த மதி,
” ஆர் யு ஓகே ” என்னும் குரலில் தன் விழி திறந்து வீராவின் முகத்தை பார்த்ததும் , உடனே அவனிடம் இருந்து விலகினாள்.
” ஆர் யு ஓகே ?” மீண்டும் வினவினான் வீரா .
” ம்ம்ம் ” தலை கவிழ்ந்தபடி ம்ம்ம் கொட்டினாள் .
” என்னாச்சு தாரா?? என்ன பிரச்சனை ?? “
” பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லை” இடைபுகுந்து பதில் கூறினாள் மதி .
” ஏய் ஏன் பொய் சொல்ற ? வீரா அவளுக்கு இந்த ரூம் வேண்டாமாம். கிட்சன்ல கூட தங்குவாளாம் இங்க தங்க மாட்டாளாம் ” என்ற தாரா கபட புன்னகையுடன் கூறியது.
வீராவின் பார்வையை சந்தித்த மதியின் தலை தானாக நிலம் நோக்க, சில நொடிகள் மதியையே வெறித்து பார்த்த வீரா தாராவிடம் ,
” சாவியை கொடுத்துட்டு நீ போ நான் பேசிக்கிறேன் ” என்றான் .
தாராவும் வீராவிடம் சாவியை கொடுத்துவிட்டு கீழே செல்ல,
இப்பொழுது வீராவும் மதியும் மட்டும் அங்கே தனியாக இருந்தனர்.
அப்பொழுது இருவருக்கும் இடையே நிலவிய மௌனத்தை முதலில் உடைத்தது வீரா தான்.
” மேடம்க்கு ஏன் இந்த ரூம் புடிக்கலைன்னு தெரிஞ்சிக்கலாமா? ” அவளது கவிழ்ந்திருந்த தலையை பார்த்தபடி கேட்டான்
” அதெல்லாம் எதுவும் இல்லை. எனக்கு ஓகே தான் ” வேகமாக மறுத்தாள் .
” மது நீ எங்க எல்லாரையும் பார்த்து ரொம்ப பயந்து போய் இருக்கன்னு எனக்கு நல்லாவே புரியுது. ஆனா இனிமே நீ பயப்பட வேண்டாம்.உனக்கு எதுவும் ஆகாது. நாங்க யாரும் உன்னை ஹர்ட் பண்ண மாட்டோம். ஆதித்யா அவன் ரூம்க்கு எதிர் ரூம்ல உன்னை தங்க வைக்கிறான்னா? அவன் உன்னை பாதுகாக்குறான்னு அர்த்தம். உனக்கு எதுவும் ஆகிட கூடாது என்கிறத்துக்காக மட்டும் தான் அவன் இங்க உன்னை தங்க வைக்கிறான். சோ, நீ பயப்படாத ! ” கனிவுடன் கூறினான் .
” எனக்கு இங்க இருந்து போகணும் “
” ஆனா வெளியில உனக்கு ஆபத்து இருக்கே “
” அதை நான் பார்த்துகிறேன் “
” மதி நீ இங்க இருக்கனும் என்பது ஆதியோட முடிவு இதுல துரியனே ரொம்ப தலையிட மாட்டார், நான் கேட்க கூட மாட்டேன். ஆனா ஒன்னு சொல்றேன்.ஆதி ரொம்ப நல்லவன் ! உனக்கு எதுவும் ஆக விட மாட்டான். அவன் எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும். நீ பயப்படாம இரு “
“ஒரு பொண்ணை அவ விருப்பம் இல்லாம தங்க வைக்கிறது சரியான விஷயமா ?? ஒரு நல்லவன் இப்படி தான் பண்ணுவானா ??” ஆத்திரத்தில் பேசியவளுக்கு இயலாமையில் கண்ணீர் வந்தது .
” மதி நீ வேணும்ன்னா ஆதிகிட்ட இதை பத்தி பேசி பாரு. “
” நான் சொன்னா கேட்கவா போறாரு ” விரக்தியுடன் கேட்டாள்.
“மதி உன்னை இங்க இருந்து வெளிய அனுப்ப எனக்கு உரிமை கிடையாது.. ஆனா நீ இங்க பத்திரமா இருக்கலாம் உனக்கு எதுவும் ஆகாம நான் பார்த்துகிறேன் ” என்ற வீராவின் அன்பான பேச்சு மதியின் மனதை தொட்டது .
” தேங்க்ஸ் ” மெல்ல முணுமுணுத்தாள் .
” எப்போ என்ன வேணும்னாலும் என்னை கூப்பிடு ” புன்னகையுடன் கூறினான் .
” ம்ம்ம் ஐயம் சாரி நேத்து நான் வேணும்னே அப்படி பண்ணல” என்ற மதியின் விழிகள் வீராவின் மணிக்கட்டை தழுவி மீள,
” இட்ஸ் ஓகே “
“அன்னைக்குமே வேணும்ன்னு உங்களை அடிக்கல. சந்தியாவை அப்படி பார்த்ததும். ஆதங்கத்துல அடிச்சிட்டேன் சாரி ” வருத்தத்துடன் கூறினாள் .
” ஹே டோன்ட் வோர்ரி. என்னால புரிஞ்சிக்க முடியுது “
“தேங்க்ஸ் வீரா. என்னை புரிஞ்சிக்கிட்டதுக்கு ” என்றவள் ஒருவித தயக்கத்துடன் அவனை பார்த்தாள்.
அவளது பார்வையை வைத்தே அவள் எதையோ தம்மிடம் கேட்க தயங்குகிறாள் என்பதை கண்டறிந்தவன் ,
” மதி என்கிட்ட எதுவும் கேட்கணுமா. எதுனாலும் தயங்காம கேளு ” என்றான்.
” அது வந்து வீரா சந்தியா எனக்கு ரொம்ப பெஸ்ட் ஃப்ரண்ட். அவளை அந்த மாதிரி பார்த்ததுல இருந்து எனக்கு பயமாவே இருக்கு. சந்தியா எப்படி இருக்கா. ?? “தயக்கத்துடன் கேட்ட மதியின் கண்களில் சட்டென்று நீர் கோர்த்து விடவும்,
” ப்ச் மது அழாதீங்க ” என வீரா மதியை சமாதானம் செய்து கொண்டிருக்க,
அப்பொழுது,
” இந்த நிமிஷம் வர நல்லா தான் இருக்கா. ” என்று ஆதிக்கம் நிறைந்த ஆதித்யாவின் குரலை கேட்ட மது , திகைப்புடன் அவனை பார்க்க, மதிக்கும் வீராவுக்கும் இடையே மிகுந்த குறைந்தளவு மட்டுமே இருக்கும் இடைவெளியை தன் பார்வையாலே அளந்தபடி அவர்களின் அருகே வந்த ஆதித்யா மதியின் விழிகளை பார்த்து ,
” எப்பவுமே சந்தியா நல்லா இருக்கணும்ன்னா அது உன் கையில தான் இருக்கு. ” – என்க ஆதியின் குரலில் இருந்த மென்மை அவனது வார்த்தையில் இல்லை.
அவன் வார்த்தையில் தெரிந்த மிரட்டலில் திடுக்கிட்டவள்,
‘ எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பேசுவான். வந்துட்டான் நம்ம நிம்மதிய கெடுக்குறதுக்குன்னே ‘ என்று மனதிற்குள் திட்டியபடி நிமிர்ந்தவளின் விரிந்த விழிகள் அவனை தீ பார்வை பார்த்தன.
மதி தன்னை பார்ப்பது தெரிந்தும் அவளை பார்க்காமல்.தன் பார்வையை வீரா பக்கம் திருப்பினான் ஆதித்யா.
” ஹே குட் மார்னிங் ஆதி ” என புன்னகையுடன் வீரா கூறினான் .
” மார்னிங் வீரா. கை எப்படி இருக்கு ” அக்கறையுடன் நண்பனை விசாரித்தான் ஆதி .
” ஃபைன் ஆதி. சின்ன காயம் தான் “
” உன்னை பார்க்க உன் ரூம்க்கு போயிருந்தேன். நீ மதி கூட இருக்கிறதா தாரா சொன்னா அதான் இங்க வந்தேன். ” ஆத்திரத்தில் தன் பற்களை கடித்தபடி நின்றிருந்த மதியை ஓரக்கண்ணால் பார்த்தபடி ஆதித்யா கூறினான் .
நீட்டாக டக்கின் செய்யப்பட்ட வெள்ளை சட்டை, அதற்கு மேல் அவனது உடல்வாக்கிற்கு ஏற்ப கச்சிதமாக பொருந்திய வெஸ்ட் கோர்ட், காற்றில் அலைபாயும் கேசம். நன்கு பாலிஷ் செய்யப்பட்ட லெதர் ஷூ மற்றும் வலது கரத்தில் மிடுக்காக வீற்றியிருந்த கருப்பு நிற கை கடிகாரத்தில் மிஸ்டர் அழகனாக ! அவள் முன்பு காட்சியளித்தான் ஆதித்யா. சில நொடிகள் ஆராய்ச்சி தான் ! ஆனாலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுத்து ‘ மிஸ்டர் அழகன் ‘ என்னும் பட்டத்தையும் கொடுத்துவிட்ட தன் மானம் கெட்ட மனதை திட்டியவள் .
‘ பண்றது ரௌடி தொழில். இதுக்கு இந்த மேக்அப் ரொம்ப அவசியம் தான். கொலை பண்றதுக்கு ஏண்டா கோட் சூட்டு. ஆஸ்கர் அவார்ட் வாங்க போற மாதிரி வந்து நிக்கிறான் பாரு ‘ – என்று முணுமுணுத்தவள் அதற்கு மேல் அங்கு நிற்க மனம் இல்லாமல்,
” நான் என் ரூம்க்கு போறேன் வீரா. அப்புறமா பார்க்கலாம் ‘ என்று வீராவை மட்டும் பார்த்து புன்னகைத்துவிட்டு, ஆதித்யாவை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்தாள் மதுமதி .
தன்னை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு செல்லும் பெண்ணவளை,
தன் தாடையை தடவியபடி வெறித்து பார்த்த ஆதித்யா சக்ரவர்த்தியின் உதடுகள் இப்பொழுது புன்னகையில் வளைந்தன .