அரிமா – 4

4.6
(8)

 ஆதித்யாவின் செய்கை குழப்பமாக இருந்தாலும், நடந்த கோர சம்பவத்தில்  பிரச்சனையின்றி தப்பித்ததை எண்ணி நிம்மதி அடைந்த மதுமதி, ஆதித்யாவை பற்றிய சிந்தனையை தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு, தன் உயரத்திற்கு சற்றே குறைவாக இருந்த அந்த கதவை மெதுவாக தள்ள அது, ‘கிரீச் ‘ என்னும் சத்தத்துடன் திறந்து கொண்டு அவளுக்கு வழிவிட்டது.

நேராக உள்ளே சென்றவள் காலிங் பெல்லை அழுத்தியபடி வாசலில் காத்திருந்தாள். வீட்டின் கதவுக்கு மேல் சிறிய விளக்கு நொடிக்கு நொடி கண்ணடித்துக்கொண்டிருக்க,

மெனிக்யூர் செய்யப்பட்டு அழகாய் செதுக்கப்பட்ட, சற்றுமுன் கடித்த நகத்தையே மீண்டும் மீண்டும் மிச்சம் இல்லாமல் கடித்துத் துப்பியபடி பதற்றத்தில் மீண்டும் ஒருமுறை காலிங் பெல்லை அழுத்தி யாரையோ  எதிர்பார்த்திருந்தாள் மது.

ஆனால் உள்ளே இருந்து யாரும் வராமல் போகவே  தன் அலைபேசியை எடுத்து, காதை மறைத்து காற்றில் அலைபாய்ந்த தன் கூந்தலுக்குள்ளே நுழைக்க, இறுதி ரிங்கில் தூக்க கலக்கத்தில் அட்டென்ட் செய்த எதிர்முனை நபர்,

” சொல்லு டி என்ன இந்த நேரத்துல ” – அரை தூக்கத்தில் மதுவிடம் வினவினாள் ஒரு பெண்.

” சந்தியா சீக்கிரமா வா, வந்து கதவை திற. நான் வெளியில தான் இருக்கேன் எவ்வளவு நேரம் கால்லிங் பெல் அடிக்கிறது சீக்கிரம் வா ” மதுமதி படப்படத்தாள் .

” என்ன வெளியில இருக்கிறியா? என்னாச்சு? “

” சந்தியா முதல்ல வந்து கதவை திற  அப்புறம் சொல்றேன் “

“சரி டென்ஷனாகாத இதோ வர்றேன் ” என்று சந்தியா சொன்ன பொழுதும்  மது டென்ஷனானாள்.

மதுவோ குளிர்ந்த தென்றலையும் தாண்டி தன்  உதடு, மூக்கின் நுனி, மற்றும் நாடி பகுதியில் துளிர்த்த வியர்வையை தன் துப்பட்டாவால் துடைத்துக்கொண்டிருக்க, அப்பொழுது சில நொடிகள் கழித்து அவள் வயதில் சற்று அவளை விட உயரத்தில் அழகான பெண் ஒருவள் இரவு உடையில் கதவை திறந்துகொண்டு வந்தாள் .

” என்னடி மது ஏன் ஒரு மாதிரியா இருக்க ” என சந்தியா மதுவின் கலைந்த கேசம் மற்றும் பதற்றம் தெரிந்த முகத்தை பார்த்து அதிர்ச்சியுடன் வினவினாள் .

 ஆனால் மதுவோ,

” உள்ள வா சொல்றேன் ” என்றபடி  உள்ளே நுழைந்தாள் .

” அங்கிள் ஆன்ட்டி இன்னும் ஊர்ல இருந்து வரலையா? “

” இல்லை டி நாளைக்கு நைட் தான் கிளம்புறாங்க. நீ இரு நான் குடிக்கிறதுக்கு தண்ணி கொண்டு வரேன்” என சந்தியா கூறினாள் .

” அதுக்கு முதல்ல நான் கொஞ்சம் பிரெஷ் ஆகுறேன் சந்தியா ”  என்றாள் மது சோர்வாக,

” சரி டி, டவல் பாத்ரூம்ல தான் இருக்கு நீ போ ” என்ற சந்தியா மதுவிற்காக காத்திருக்க. சில நிமிடங்கள் கழித்து தன் கேசத்தை சரி செய்துவிட்டு முகத்தில் இருந்த நீரை வெள்ளை நிற டவலால் ஒற்றியெடுத்தபடி அங்கே வந்த மது, சந்தியா கொடுத்த தண்ணீரை  பருகி விட்டு, இன்று தான் கண்டது மற்றும் தனக்கு நடந்ததை பற்றி அனைத்தையும் கூறி முடித்தாள் .

மது கூறியதை கேட்ட சந்தியாவோ பன்னிரண்டு மணிக்கு திரில்லர் படம் பார்த்தது போல தன் கண்கள் விரிய அமர்ந்திருந்தாள் .

” என்னடி அமைதியா இருக்க ” என மது சிலையென அமர்ந்திருந்த சந்தியாவை பிடித்து உலுக்கினாள் .

” ஹான் ” என பயத்துடன் மதுவை நோக்கிய சந்தியா சட்டென்று மதுவின் கையில் இருந்த கிளாஸை வாங்கி மிச்சமிருந்த தண்ணீரை வேகமாக தன் தொண்டையில் சரித்து விட்டு, சிறு செருமலுடன் மதுவை ஏறிட்டாள் .

 அப்பொழுது தன்னைப் பார்த்த சந்தியாவிடம், ” என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல சந்தியா, இப்ப கூட மனசு எல்லாம் ஒரு மாதிரி படபடப்பா இருக்கு, கொலைய வேற பார்த்து இருக்கேன் என்னை விட்டு வைப்பாங்களா என்ன ” என்று பயத்துடன் கூறிய  தன் தோழியின் கரத்தை பற்றி கொண்ட சந்தியா,

” நீ சொல்றதெல்லாம் கேட்கும்போது பயமா தான் இருக்கு, ஆனா உன்னை கொலை பண்ணனும் நினைச்சிருந்தா, அவன் ஏன்  உன்னை ஷூட் பண்ண வந்தவங்கள  ஷூட்  பண்ணி காப்பாத்த போறான். எல்லாத்துக்கும்  மேல அவன் உன்னை அந்த ஸ்பாட்லயே கொன்னு  இருப்பான். சோ அவனால உனக்கு எந்த பிரச்சனையும் வராதுன்னு தான் எனக்கு தோணுது “

” ம்ம் இதேதான்  என்னை காப்பாத்தி கார்ல கூட்டிட்டு வந்தானே அவனும் சொன்னான்”  என்ற மது, சந்தியா பேசிய பிறகு கொஞ்சம் பயத்தை விடுத்து நிதானமடைந்திருக்க, ஆனால் சந்தியா மட்டும் யோசனையிலே அமர்ந்திருந்தாள்.

 அப்பொழுது, ” என்னாச்சு சந்தியா யோசிச்சுட்டே இருக்க” என்று கேட்டாள் மது.

” அது உன்னை காப்பாத்தினான்ல அவன் உன்னை எங்க பார்த்தானாம்? அந்த பில்டிங்ல தான் அவனும் இருந்தானா? உன்னை எப்படி காப்பாத்தினான்? இப்படி இதை பத்தி ஏதாவது உன்கிட்ட சொன்னானா? “

” இல்ல சந்தியா அவன் எதுவுமே சொல்லல, நானும் டென்ஷன்ல இதை பத்தி எதுவும் கேட்கல”

” என்ன ஆச்சு மறுபடியும் யோசிக்கிற இதனால எனக்கு எதுவும் ப்ராப்ளம் வரும்ன்னு தோணுதா” தோழியின் தீவிர சிந்தனை மதுவுக்கு கலக்கத்தை கொடுக்கவும் இவ்வாறு வினவினாள்.

” ஏய் எனக்கு அப்படியெல்லாம் எதுவும் தோணல, ஆனா உன்னை காப்பாத்தினான்ல அவன் உனக்கு ஹெல்ப் பண்ணிட்டு பேர கூட சொல்லாம போயிட்டான், எல்லாத்துக்கும் மேல மயக்கமா இருந்த உன்னை எங்க பார்த்தான்? எப்படி தூக்கிட்டு வந்தான்? இப்படி எத பத்தியும் உன்கிட்ட ஷேர் பண்ணல இது எல்லாத்தையும் யோசிக்கும் போது மட்டும் கொஞ்சம் யோசனையா இருக்கு மத்தபடி வேற எதுவும் இல்ல நீ எதுக்கும் பயப்படாத. எது எப்படியோ நீ சேஃபா வீட்டுக்கு வந்துட்ட அதுவே போதும்”

” எனக்கும் அவனோட செய்க குழப்பமா தான் இருக்கு. அதுவும் நீ பேசினதுக்கு அப்புறம் இன்னுமே எனக்கு குழப்பமாவும் இருக்கு பயமாவும் இருக்கு”

” நம்ம இஷ்டத்துக்கு யோசிச்சு  தேவையில்லாம பயப்பட வேண்டாம்.  உடனே இன்னைக்கு நடந்த எல்லாத்தையும் அர்ஜுன் கிட்ட சொல்லு அவர் பார்த்துக்குவாரு ” என்றாள் சந்தியா.

” நோ வே நான் சொல்ல மாட்டேன். அவன்கிட்ட சொல்லணும்ன்னா நான் ஏன் உன் வீட்டுக்கு வரேன். எனக்கு ஹெல்ப் பண்ணினானே அவனை என் வீட்லயே டிராப் பண்ண சொல்லிருக்க மாட்டேன்.

அப்படியே போனா சந்தேகப்படுவாங்கன்னு தான். நான் உன் வீட்டுக்கு வந்து ஃப்ரெஷ் அப் ஆகிருக்கேன் “

” இது ரொம்ப பெரிய விஷயம் டி அர்ஜுன் கிட்ட மறைக்காத “

“அவனுக்கு நான் அந்த ஸ்கூலுக்கு போறதே புடிக்கல. ப்ரீத்தா அத்தை சப்போர்ட்ல தான் நான் போய்ட்டு வரேன். இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சிது அவ்வளோ தான் அர்ஜுன் என்னை அனுப்பவே மாட்டாரு, எனக்கு இருக்கிற ஒரே மன ஆறுதலே அந்த ஸ்கூலும் குழந்தைகளும் தான் ப்ளீஸ் சந்தியா” என்று மது கெஞ்சவும், அவளை முறைத்து பார்த்த சந்தியா,

” சரி இந்த ஒரு தடவை தான், தனியா போகும்போது ரொம்ப கவனமா இரு. சின்ன ப்ரச்சனைனாலும் ரிஸ்க் எடுக்காத, உடனே வீட்ல சொல்லிடு சரியா, நாளைக்கு நீ தனியா ஸ்கூல் போக வேண்டாம் நானும் உன் கூட வரேன்” என்ற தோழியை அணைத்து விடுவித்த மது,

“சரி நான் அர்ஜூன்க்கு  கால் பண்றேன்.” என்றவள், தன் அலைபேசியை எடுத்து அர்ஜுனுக்கு அழைப்பு கொடுத்து தான் சந்தியா வீட்டில் இருப்பதாக தகவல் சொன்னாள்.

பின்பு தோழிகள் இருவரும் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க, அப்பொழுது அர்ஜுனிடம் இருந்து மதுவுக்கு அழைப்பு வர அழைப்பை ஏற்றவள்,

” வந்துட்டீங்களா?  காலிங் பெல் ஒர்க் அகல,  இதோ நான் வரேன்” என்றவள் அழைப்பை கத்தரித்து விட்டு. சந்தியாவிடம் ,

 ” ஏய் அர்ஜுன் வாசல்ல தான் நிக்கிறான் நான் கிளம்புறேன். நாளைக்கு ஸ்கூல்ல பார்க்கலாம் ” என்றவள். தன் பையை தோளில் மாட்டிக்கொண்டு அங்கிருந்து அர்ஜூனுடன் கிளம்பினாள் .

காரில் செல்லும் வழியெல்லாம் அர்ஜுன் அமைதியாகவே இருக்க இருவருக்கும் இடையே நிகழ்ந்த அமைதியை முதலில் உடைத்தது மதுமதி தான் ,

” ஹ்ம்ம்கும் ” சிறு செருமலுடன் ஆரம்பித்தாள், ” என்ன அர்ஜுன் எதுவும் பேசாமலே வர. கோபமா இருக்கியா ??”

” ரொம்பவே கோபமா இருக்கேன் “

” சாரி பா. “

” என்ன சாரி? மணி என்ன தெரியுமா ?? அம்மா ரொம்பவே பயந்துட்டாங்க. நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா. ??? இதுல உன் போன் வேற நாட் ரீச்சபிளா இருந்துச்சு.  கால் பண்ணினேன் நீ அட்டென்ட்டும் பண்ணல”

” கொஞ்சம் ஒர்க் இருந்துச்சு அதான் வர லேட் ஆகிடுச்சு.நல்லா மழை வேற தொப்பலா நனைஞ்சிட்டேன் அதான் சந்தியா வீட்டுக்கு போய்ட்டேன் ”  என்ற மது அடுத்த வார்த்தை பேச வரவும், தன் கரம் உயர்த்தி அவளை தடுத்தவன்,

” மது எனக்கு புடிக்கல ” என்றான் கோபமாக.

” நானா ” கேலியாக கேட்டாள்.

“———————–” பதில் சொல்லாது அவன் முறைத்தான்.

” சரி சரி முறைக்காத. சொல்லு என்ன இப்போஉனக்கு புடிக்கல “

” ஏற்கனவே நாம பேசினது தான். நீ பாக்குற வேலை, நீ பழகுற மனுஷங்க எதுவுமே புடிக்கலை. அவங்க நல்லவங்க கிடையாது. நீ நல்லது சொன்னவுடனே கேட்டு அவங்க திருந்த போறதும் இல்லை. நீ என்னதான் நாய குளிப்பாட்டி நடுவீட்ல வச்சாலும் அது கடிக்க தான் செய்யும். பாம்புக்கு பால் ஊத்துனாலும் அது கொத்த தான் செய்யும் “

” அர்ஜுன் ப்ளீஸ் “

” மது நீ பாடம் சொல்லி குடுக்குற எல்லாரும் லோக்கல் க்ரிமினல்ஸ் அப்புறம் விபச்சாரம் செய்றவங்களோட குழந்தைங்க. என்ன தான் அவங்களுக்கு நீ நல்லத சொல்லிக்குடுத்தாலும் வளர்ந்ததும் அவங்க அப்பா அம்மா செய்றத தான் செய்ய போறாங்க. தே ஆர் வெறி டேஞ்சரஸ். அவங்களால உனக்கு கண்டிப்பா ஆபத்து வர வாய்ப்பு இருக்கு.

இது எல்லாத்துக்கும் மேலே நமக்குன்னு சமுதாயத்துல ஒரு அந்தஸ்து இருக்கு. நீ அந்த மாதிரி லோக்கல் ஆளுங்க கூட நட்பா பழகுறது நம்ம ஸ்டேட்டஸ்க்கு நல்லா இல்ல.

உனக்கு வேலைக்கு போகணும்ன்னா நம்ம கம்பெனிக்கு போ இல்லையா நானே நல்லா அந்தஸ்தான வேலைய உனக்கு ஏற்பாடு பண்ணி தரேன், இது வேண்டாம். என் நண்பர்கள் கிட்ட நீ பண்ற வேலைய பத்தி சொல்ல முடியல”

” உன் வேலை எனக்கு பெருமையா இருக்கும் பொழுது என்  வேலை மட்டும் உனக்கு அவமானமா இருக்குல ” என வேதனையுடன் கேட்டாள் மது.

” நீ நம்ம ரெண்டு பேருடைய வேலையையும் சேர்த்து வச்சு பேசிட்டு இருக்க ” உயர்ந்த குரலில் வினவினான் அர்ஜுன்.

” அதுல என்ன இருக்கு “

” என்ன இருக்கா. மது நான் ஒரு அசிஸ்டன்ட் கமிஷனர் எந்த கிரிமினல்ஸ்க்கு நான்  தண்டனை குடுக்குறேனோ, அவங்களோட இடத்துக்கே போய் அவங்க குழந்தைங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்துட்டு வர. இப்போ சொல்லு நீ பாக்குற வேலையும் நான் பாக்குற வேலையும் ஒண்ணா  “

” ஆமா நீ சரியா தான் சொல்ற. நீ பண்றதும் நான் பண்றதும் ஒன்னு இல்லை தான். ஏன்னா நீ தப்பு பண்றவங்களுக்கு தண்டனை குடுக்குறதை பத்தி யோசிக்கிற. நான் இன்னொரு கிரிமினல் வர கூடாதுன்னு யோசிக்கிறேன். ரெண்டு பேர் பாக்குற வேலையும் வேறு வேறா இருந்தாலும், ரெண்டு பேருமே ஒரு நல்ல விஷயத்துக்காக வேலை பண்றோம். சோ நீ யோசிக்கிறது சரின்னா நான் யோசிக்கிறதும் சரி தான் “

“மது இதெல்லாம் வாக்குவாதம் பண்றதுக்கு வேணும்ன்னா நல்லா இருக்கும். ஆனா வாழ்க்கைக்கு நல்லா இருக்காது. நான் ஒரு போலீஸ் எனக்கு நிறையா எதிரிங்க இருப்பாங்க அவங்க என்னை பழிவாங்குறதுக்காக உன்னை ஏதும் பண்ணிட கூடாது “

” கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா இப்படி பண்ணிட்டு இருக்கேன். இதுவரை நடக்காததா இனிமே நடந்திட போகுது. நீ ரொம்ப யோசிக்கிற அர்ஜுன். நீ இப்போ எல்லாம் என்னை ரொம்ப கண்ட்ரோல் பண்ண நினைக்கிற. என் விருப்பத்துக்கும் கொஞ்சம் முக்கியம் குடு.”

” என்ன மது இப்படியெல்லாம் பேசுற நான் ஏன் உன்னை கண்ட்ரோல் பண்ண நினைக்கணும். உன் மேல உள்ள அக்கறையில தான் சொல்றேன் உனக்கு அது புரியவே மாட்டிக்குது. நான் பாக்குற வேலை அப்படி எல்லாரையும் சந்தேகப்பட்டே  பழக்கம் போயிடுச்சு, நான் இப்படித்தான்.

உனக்கு இப்போ சமூக சேவை தான் பண்ணணும்ன்னா அதுக்கு எத்தனையோ டீசெண்டான வழிமுறை இருக்கு.

மாசம் மாசம் வேணும்ன்னா ஏதாவது ஒரு ஹோம்க்கு பணம் குடுக்கலாம்.இல்லைன்னா நம்ம வீட்டு பக்கத்துல இருக்கிற ஹோம்ல உள்ள சிஸ்டர் கிட்ட பேசுறேன். நீ வேணும்ன்னா அங்க போய் பாடம் சொல்லி குடு. ஆனா இந்த இடத்துக்கு வேண்டாம், இந்த இடம் இங்க உள்ளவங்க அவங்க பேசுறது. அதுவும் ஊருக்கு ஒதுக்கமா வேற இருக்கு சுத்தமா பாதுகாப்பு இல்லை. பாரு ஏழு வயசு பையனும் தம் அடிக்கிறான், தண்ணி அடிக்கிறான் திருடுறான்.” சொல்லும் பொழுதே அர்ஜுன் முகத்தை சுளித்தான்.

” அர்ஜுன் நீ சொல்ற ஹாம்க்கு நான் வரணும்ன்னு தேவையே இல்லை. அங்க பாடம் சொல்லி குடுக்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா இவங்களுக்கு யாரும் இல்லை. படிப்பறிவு இல்லாதனாலதான் இவங்க  தப்பான பழக்கத்துக்கு அடிமை ஆகுறாங்க.

 நாம மட்டும் இவங்களுக்கு சரியா வழிகாட்டுனா இவங்களுக்கு வாழ்க்கையில நல்ல நிலைமைக்கு  வருவாங்க. அந்தப் பிள்ளைங்க எல்லாம் எவ்வளவு அன்பான பிள்ளைங்க தெரியுமா.”

” ————————- ” அர்ஜுன் எதுவும் சொல்லாது அமைதியாக இருக்க,

” அர்ஜுன் நம்மகிட்ட இருக்கிறத இல்லாதவங்களுக்கு குடுக்கணுமா

 இல்லை இருக்கிறவங்களுக்கு கொடுக்கணுமா. “

 மதுவை ஒரு கணம் பார்த்தவன்,

” இல்லாதவங்களுக்கு தான் ” என வேண்டா வெறுப்பாக கூறினான்.

” ம்ம்ம் அதே தான் என்கிட்ட இருக்கிற படிப்பை இல்லாவங்களுக்கு என்னால முடிஞ்சவரை குடுக்க நினைக்கிறேன். இது என் மனசுக்கு புடிச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் ப்ளீஸ் தடுக்காத ” அர்ஜுனின் கரத்தை பிடித்து கொண்டு அவன் கண்களை பார்த்து கூறினாள்.

மீண்டும் அவளது விழிகளை சில நொடிகள் பார்த்தவன்,

 ” சரி ஆனா ஒரு கண்டிஷன் இதனால உனக்கு எதாவது பிரச்சனை வந்துச்சின்னா, ஐயம் சாரி நான் உன்னை அலோ பண்ண மாட்டேன். அப்போ என்கிட்ட நீ முரண்டு புடிக்க கூடாது ” என தன் முஇடிவை கூறினான் .

” அர்ஜூன்னா அர்ஜுன் தான் தேங்க் யு சோ மச் ” என்ற மது புத்துணர்ச்சியோடு புன்னகைக்க,

” அதெல்லாம் இருக்கட்டும், அதென்ன எப்போ பாரு அர்ஜுன் அர்ஜுன்னு பேர் மட்டுமே சொல்லி கூப்பிடுற.  அர்ஜுன்னு கூப்பிடும்போது அத்தான் மாமான்னு எதையாவது சேர்த்துகிட்டா நல்லா இருக்கும்ல”

” எனக்கு அப்படி கூப்பிட வரவே மாட்டேங்குது  நான் என்ன பண்றது? சின்ன வயசுல இருந்தே பெயர் சொல்லி கூப்பிட்டே பழகிடுச்சு” என்று அவள் பாவமாக கேட்கவும்,

 ” சரி சரி அதெல்லாம் அப்புறமா கூப்பிடு அட்லீஸ்ட் ஒரு குட் நைட் கிஸ்ஸாவது இப்போ  கொடு” என்ற அர்ஜுன் மதுவை நெருங்கியபடி அவளது இதழை நோக்கி குனிந்த கணம், அவளது உணர்வுகளை அறிந்து கொள்வதற்காக நிமிர்ந்து அவளது முகம் பார்த்தவன், பெண்ணவளின் முகத்தில் தெரிந்த அசௌகரியம் கலந்த பதற்றத்தை கண்டு அவளை விட்டு விலகி அமர, இப்பொழுது மதுவுக்கு அவன் முகத்தை பார்க்கவே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

 என்னதான் அர்ஜுனை தன் அத்தை மகனாக பிடிக்கும் என்றாலும் அந்தப் பிடித்தம் என்பதை தாண்டி அவனுடன் நெருங்க மதுவுக்கு ஒரு தடை இருந்து கொண்டே தான் இருக்கிறது.

” ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல”

” யார் சொன்னா அப்படி எல்லாம் எதுவும் இல்லை” என்றான் அர்ஜுன்.

” இப்பவும் டைம் இருக்கு கல்யாணத்த வேணும்ன்னா ஸ்டாப் பண்ணிடலாம்.” என்று மது சொன்ன மறுகணம், அவளை இறுக்கமாக முறைத்தவன்,

” என்ன பேசிட்டு இருக்க இப்படியெல்லாம்  பேசி என்னை கஷ்டப்படுத்தாதே. நீ தான் எனக்குன்னு நான் எப்பவோ ஃபிக்ஸ் பண்ணிட்டேன். இனிமே இப்படி பேசாத. இப்போ என்ன உனக்கு இப்போதைக்கு என் மேல லவ் இல்ல அவ்ளோதான, அதெல்லாம் கல்யாணம் ஆனா உரிமையும் காதலும் தானா வரும், ஊர் உலகத்துல அரேஞ்ச் மேரேஜ் தான்  நடக்கிறது இல்லையா? இல்லை அவங்க தான் ஹப்பியா  வாழ்றது இல்லையா, கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகும் மது. வேணும்ன்னா பாரு கல்யாணத்துக்கு அப்புறம்  நீதான் என்ன ரொம்ப லவ் பண்ண போற ”  என கூறி அர்ஜுன்  தன் விழிகளை சிமிட்ட, பதிலுக்கு மகிழ்ச்சியாக புன்னகைத்த மது,

‘ நீங்க ரொம்ப நல்லவரு அர்ஜுன்,  எப்பவும் நீங்க சந்தோஷமா இருக்கணும். சின்ன வயசுல இருந்து நீங்களும் அத்தையும் என் மேல காட்டுற அன்புக்கு என்னைக்கும் நான் கடமைப்பட்டிருக்கேன். கடவுள் எப்போதும் உங்களுக்கு சந்தோஷத்தை மட்டுமே கொடுப்பார்  ‘ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.

 அப்பொழுது பார்த்து அர்ஜுனின் கார் உள்ளே நுழையும் சத்தம் கேட்டு வெளியே வந்த ஜுவாலா, புன்னகை முகமாக நின்றிருந்த

 இருவரையும் சேர்த்து பார்த்துவிட, அவளது விழிகள் இப்பொழுது தானாக கலங்கியது.

———————————

” வாய மூடு அருந்ததீ. என் பையன் வருவான், ஆதி வருவான். என் வீட்ல இந்த அழுகை சத்தமெல்லாம் கேட்க கூடாது எல்லாரையும் வெளிய அனுப்பு” என்று பாதுகாவலர்களிடம்  கடுமையாக ஆணையிட்டுவிட்டு தன் அறைக்குள் சென்றதுடன்  சரி, இதுவரை அறையை விட்டு வெளியே வரவும் இல்லை  யாரிடமும் பேசவும் இல்லை. மருந்து சாப்பிட வேண்டி அருந்ததீ அழைத்தும் மறுத்தவர். ஆதித்யா வரும் வரை பச்சை தண்ணீர் கூட அருந்தமாட்டேன் என்று பிடிவாதமாய் தன் அறைக்குள் அமர்ந்து கொண்டு ஆதி கடவுளான சிவ பெருமாளை வேண்டிக்கொண்டிருந்தார்.

நா வறண்டிருந்தும் அவர் உதடுகள் மட்டும் ‘ ஓம் நாம சிவாய ‘ என்னும் நாமத்தை ஜெபிப்பதை விடவில்லை.

” என் ஆதிய திருப்பி குடுத்திருங்க, என் பையன திருப்பி கொடுத்திருங்க, இன்னும் எவ்ளோ நான் இழக்கனும்” என  ராதா ஓய்ந்து சிலையின் வடிவில் மௌனமாய் தவமிருந்த ஈஸ்வரனின் காலடியில் வீழ்ந்து கண்ணீர் வடித்தார் .

 ராதா அழுது அழுது அதே நிலையில் தரையில் கண்களை மூடி அமர்ந்திருக்க,

” அம்மா அண்ணன் வந்துட்டாரு, ராதா மா ” என்று மிக நெருக்கமாக கேட்ட பல கலவையான குரலில் கண்விழித்தவர், அம்மா என்றழைத்தபடி தன் அருகில் நின்றிருந்த தன் மகன் ஆதித்யாவை அணைத்து கண்ணீர் விட்டவர், “என்னை தனியா விடமாட்டன்னு தெரியும் ஆதி ” என்ற ராதா தன் பாரம் தீர அழுதார்.

” அம்மா ப்ளீஸ் அழாதீங்க. நான் தான் வந்துட்டேன்ல ” என தன் தாயை தேற்றி முடிக்கவும், அழுகையில் கரைந்து கொண்டிருந்த தன் சகோதரியையும்  தேற்றினான் ஆதித்யா.

 இதை அனைத்தையும் வாசலிலே  நின்று கொண்டு சிறு புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்த நாகா ,” உங்க குடும்ப ட்ராமா எல்லாம் முடிஞ்சிருச்சுன்னா கொஞ்சம் சாப்பிடலாமா ” என புன்னகைத்தபடி உள்ளே வர.

” வாங்க வாங்க உங்கள தான் சார்  தேடிட்டு இருந்தேன். ஏன் இப்படி பொய் சொன்னீங்க நாங்க எல்லாரும் எவ்வளவு பயந்துட்டோம்ன்னு தெரியுமா ” என தன்னிடம் சண்டை போட்ட தன் மனைவியின் தோள் மீது கை போட்ட நாகா,

” என்னை எதுவும் கேட்காத அவன் என்ன சொன்னானோ அதைத்தான் நான் செஞ்சேன். எதுனாலும் உன் அண்ணனை கேளு” என்று சொல்லவும் இப்போது அருந்ததீ ஆதியை முறைத்தாள்.

“அது சும்மா தான், நான் செத்துட்டா  உங்க ரீயாக்ஷ்ன் எல்லாம் எப்படி இருக்கும்ன்னு பார்க்கலாம் தான்.” என்று கேலியாக சொன்ன  ஆதித்யாவிடம்,

“இது என்ன பேச்சு ஆதி, எல்லாரும் ரொம்பவே பயந்துட்டோம் பா” என்று கோபமாக ஆரம்பித்து வருத்தத்துடன் கூறினார் ராதா.

 ராதாவை தொடர்ந்து அருந்ததீயும், “ஆமா அண்ணா எல்லாருமே பயந்துட்டோம் அம்மா மட்டும் தான் நீ வருவன்னு உறுதியா நம்புனாங்க ” என்க தன் தங்கையையும் தாயையும் அணைத்துக் கொண்ட ஆதித்யா,

“என் சிட்டுவேஷன் அப்படி மா அதனால தான் அந்த மாதிரி பொய் சொல்ல வேண்டியதா போயிடுச்சு.

 நான் சாகணும்ன்னு எவ்வளவு பெரிய சாகச வேலையெல்லாம் பண்ணிருக்காங்க. அவங்களுக்கு கொஞ்சம் நேரமாவது சந்தோஷத்தை குடுக்கலாம்ன்னு தான் மா. இந்த டிராமா எல்லாம்.” என்றான்,அதற்கு அருந்ததியோ, “இனிமே இப்படி பண்ணாத அண்ணா” என்று அருந்ததி அவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக செல்ல, நாகாவும் தன் மனைவியுடன் அங்கிருந்து கிளம்பினான்.

 அருந்ததியும் நாகாவும் அங்கிருந்து சென்றதும் ஆதியின் பக்கம் திரும்பிய ராதா, ” இதெல்லாம் கண்டிப்பா செய்யணுமா ஆதி, எல்லாத்தையும் விட்டுட்டு வந்துரு ஆதி நாம எங்கேயாவது போயிடலாம் ” என்று கவலையுடன் கூறினார்.

தன் அன்னையின் கரத்தை இறுக்கமாக பற்றி கொண்ட ஆதித்யா,  “பல வருஷமா நான் நடத்திக்கிட்டு இருக்கிற யுத்தம்  இது  எப்படிமா அப்படியே விட்டுட்டு வர முடியும்”

” ஆனா பயமா இருக்கு ஆதி.

உன்னை நெனச்சி எனக்கு கவலையா இருக்குப்பா. நிம்மதியா வாழ வேண்டிய வயசுல இன்னும் நீ ஓடிட்டே இருக்க”

” எல்லாம் கொஞ்ச நாள் தான் மா சரியாகிடும் என்னை நம்புங்க”

” நம்புறேன் ஆதி ஆனா கவனமா இரு, எனக்கு எல்லாத்தையும் விட என் பிள்ளைங்க நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும் அதுதான் முக்கியம்”

“நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க நாங்க நல்லா இருப்போம், கண்டிப்பா இனிமே கவனமா இருக்கேன்” என்று ஆதித்யா ராதாவுக்கு என்ன தான் ஆறுதல் கூறினாலும் ராதாவின் மனமோ ஆதித்யாவை எண்ணி கவலைகொள்ள ஆரம்பித்தது.

தாயின் கவலையை அவள் சொல்லாமலே புரிந்து கொண்ட ஆதி,

” இப்போ நான் உங்களுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவேன் நீங்க சமத்தா சாப்பிடுங்க.நேத்துல இருந்து நீங்க எதுவுமே சாப்பிடல வாங்க நான் உங்களுக்கு ஊட்டிவிடுறேன் ” என்றதும் வாஞ்சையுடன் தன் மகனின் தோளில் சாய்ந்து கொண்டார் ராதா.

—–*——–

அர்ஜுனின் இல்லத்தில் அவனது தந்தை உணவு மேஜையை சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலியில் நடுநயமாக அமர்ந்திருந்தார். அவருக்கு நேர் எதிரே மிருதுளா அமர்ந்திருக்க , ராம்குமாரின் வலப்புறம் அவரது மனைவி ப்ரீத்தாவும் மகன் அர்ஜுனும் அருள்நிதியின் மகன் இளமாறனும் அமர்ந்திருந்தார்கள். மிருதுளாவின் இடதுபுறம் அவளது கணவன் அருள் நிதியும் அவளது இளைய மகள் ஜுவாலா மற்றும் அருள் நிதியின் அண்ணன் மகள்  மதுமதியும் அமர்ந்திருந்தார்கள்.

இளையவர்களில் இளமாறன் அர்ஜுனுடனும். ஜுவாலா மதுமதியுடனும் என்று  நால்வரும் பரிமாறப்பட்ட உணவை சுவைத்தபடி தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டிருக்க. பெரியவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர் அப்பொழுது,

” சரி நான் கிளம்புறேன் ஜூவாலா ” என்ற  மதுமதி அனைவரிடமும் புன்னகையுடன் விடைபெற்றபடி மேஜையில் இருந்து எழுந்துகொள்ள,

” ஏய் என்ன அதுக்குள்ள கிளம்பிட்ட ” என்றான் அர்ஜுன்.

” சொன்னேன்ல இன்னைக்கு காம்பெட்டிஷனுக்கு வேற ஸ்கூல் போறோம்ன்னு பாய் அர்ஜுன்  ” என அங்கிருந்து செல்ல இருந்தவளை தடுத்த அர்ஜுன் ,

” நில்லு நானே உன்னை டிராப் பண்றேன் ” என்றான்.

” ஆனா நீங்க இன்னும் சாப்பிடலையே ” என்ற ஜுவாலாவிடம்,

” நீ இரெண்டு சப்பாத்தியை பேக் பண்ணி மதுகிட்ட குடு அவ போற வழில ஊட்டிவிடுவா ” என அர்ஜுன் கூறவும் வருத்தப்பட்டவள், தன் சோகத்தை மறைத்துக் கொண்டு அவன் சொன்னதை செய்தாள். இதை கவனித்த மிருதுளாவின்    விழிகள் அர்ஜுனை எரித்தன,

” டேய் போலீஸ் நடத்து மச்சான் நீ நடத்து ” என இளமாறன் நிலைமை அறியாமல் அர்ஜுனை  வம்பிழுக்க அவனோ புன்னகைத்தபடி, தன் கோப்பை எடுத்துவிட்டு வருவதாக கூறி மாடிப்படிக்கு விரைந்தவன்,  சென்ற வேகத்திலே திரும்பி வந்து மதுவின் கைகளை பற்றிக்கொண்டு பொதுவாக அனைவருக்கும் பாய் என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல,

 ” மது கொஞ்சம் நில்லு ” என்று உரக்க அழைத்தார் மிருதுளா. உடனே அனைவரும் மிருதுளாவை பார்க்க, அருள்நிதிக்கு மனைவி எதுவும் மதுவின் மனம் நோகும்படி பேசி விடுவாளோ என்று பயம் ஏறப்பட  தன் கண்களால் வேண்டாம் என்பது போல செய்கை செய்ய அதை  கண்டுகொள்ளாத மிருதுளா ,

” கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி சேர்ந்து சுத்துறது சரியில்லை ” மதுவை பார்த்தபடி கூறினார் .

” இதுல என்ன இருக்கு அத்தை. நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு தானே ட்ராப் பண்றது தப்பா? எல்லாத்துக்கும் மேல இந்த கல்யாண பேச்சு வர்றதுக்கு முன்னாடி கூட நான் மதுவை டிராப் பண்ணி இருக்கேன் தானே, நிச்சயமான பொண்ண ட்ராப் பண்றது அவ்வளவு பெரிய தப்பா? ” கோபத்தை மறைத்தபடி கூறினான் அர்ஜூன்.

“எல்லாம்  சரிதான் ஆனா இன்னும் கல்யாணம் ஆகளையே. அதுவரை கொஞ்சம் அடக்கி வாசிக்கிறதுல எந்த தப்பும் இல்லையே ” என்றார் மிருதுளா அழுத்தமாக.

” ஓகே உங்களுக்கு நான் மதுவை ட்ராப் பண்றது அவ்வளவு கஷ்டமா இருந்துச்சுன்னா,தென் அப்போ சீக்கிரமா எங்களுக்கு கல்யாணம் பண்ணிவைங்க. நாங்களும் சந்தோஷமா இருப்போம் நீங்களும் எங்களை பத்தி கவலைப்படாம நிம்மதியா இருப்பீங்க ” என பட்டென்று கூறினான் அர்ஜுன்.

” சபாஷ் டா அர்ஜுன். பார்த்தியா ஜுவாலா போலீஸ்காரன் கலக்குறான்  பாரு. சரியா சொன்ன டா. ராம் மாமா இதுக்கு மேலே ஒருத்தன் வெளிப்படையா பேச மாட்டான். சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைங்க பையன் ரொம்பவே ஏங்கிட்டான். அர்ஜுன் மது மேட்டர் முடிஞ்சதும் ஜுவாலாவுக்கும் பண்ணி வச்சிருங்க அப்போ தான் என் ரூட் க்ளியர் ஆகும் ” என கண்சிமிட்ட. அவனை இறுக்கமாய் முறைத்த மிருதுளா,

” ஷட் அப் மாறா. அதென்ன பெரியவங்க பேசும் பொழுது குறுக்க பேசிட்டு இருக்க “சிடுசிடுத்தார் .

” நான் குறுக்க பேசல அர்ஜுனுக்கு சப்போர்ட் பண்ணினேன். சரி சொல்லுங்க எப்போ கல்யாணம் ” அர்ஜுன் மீது கைபோட்டபடி கேட்டான் மாறன்.

” அதெல்லாம் நாள் பார்த்து தான் பண்ண முடியும், கேட்டதும் பண்ண முடியாது  எல்லாரும் இப்போ கிளம்புங்க பெரியவங்க எல்லாரும் கலந்து பேசிட்டு சொல்றோம் ” என்ற மிருதுளா மதுவை பார்த்து முறைக்க.

 புரிந்து கொண்ட மது அர்ஜுனின் கரத்திற்குள் இருந்த தன் கரத்தை விடுவித்துவிட்டு அங்கிருந்து சென்றாள். அர்ஜுனும் அவள் பின்னாலே செல்ல, இளமாறனும் அவனுடன் இணைந்துகொண்டான். ஜுவாலா எதுவும் பேசாமல் அங்கிருந்து எழுந்து தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

” மது எங்க போற வா நான் தான் டிராப் பண்றேன்னு சொன்னேன்ல “

” அர்ஜுன் ப்ளீஸ் மிருதுளா சித்தி சொன்னதை கேட்டிங்கள்ல நான் தனியாவே போறேன் ப்ளீஸ் ” என்றவள் அவன் மறுவார்த்தை கூறுவதற்குள் அங்கிருந்து சென்றாள்.

இதை தள்ளி நின்று கவனித்துக்கொண்டிருந்த இளமாறன், மது சென்றதும் அர்ஜுனின் அருகே வந்து,

” என்னடா வரமாட்டேன்னு சொல்லிட்டாளா? ” என்று வினவினான்.

” ம்ம்ம் “

” என்கேஜ்மென்ட் ஆகிருக்குன்னு தான் பேரு. பாரு ஒண்ணா கார்ல கூட போக முடியல “

” அம்மா சொன்னாங்கள்ல அதான் பயப்படுறா “

” நோ அத்தைய விடு முதல்ல அவளும் விரும்பணும்ல “

” உன்னை புடிக்காமலா என்கேஜ்மென்ட் பண்ணிருக்கா. உன்னை புடிக்கும் டா அவளுக்கு “

” புடிக்கிறதுக்கும் லவ்வுக்கும் வித்தியாசம் இருக்குடா “

” அதுக்கு நீ காத்து தான் இருக்கணும்.

 அவதான் இப்போதைக்கு எதுவும் வேண்டாம்ன்னு முன்னாடியே சொன்னாளே. நீதான் பிடிவாதமா மது தான் வேணும்ன்னு நின்ன, உனக்காகவும் அத்தைக்காகவும் தான் அவ ஒத்துக்கவே செஞ்சா. அவளுக்கும் கொஞ்சம் டைம் கொடுடா, எல்லாம் சரியாகும் பார்த்துக்கலாம்” என்ற மாறன் தனது அலைபேசியில் வந்த செய்தியை வாசித்தவன் அர்ஜுனிடம்,

” அர்ஜுன் இந்த ஆதித்யாவுக்கு ஆயுசு கெட்டி தான்டா, இவ்வளவு பெரிய ஆக்சிடென்ட்க்கு அப்புறமும் உயிர் பொழச்சு, மாசா நின்னு பேட்டி கொடுத்திருக்கான் பாறேன் ” என்க,

” அவன் எல்லாம் ஒன்னும் மாஸ் கிடையாது. இதுல தப்பிச்சிட்டான் என்கிட்ட கண்டிப்பா மாட்டுவான். அப்போ இருக்கு அவனுக்கு,  இன்னைக்கும் மீடியா அவனை பத்தி தான் பேச போறாங்க. இது நார்மல் ஆக்சிடெண்ட்டா இல்லை மர்டர் அட்டாக்கான்னு தெரிஞ்சிக்கணும், சமுதாயத்துல பெரிய புள்ளி என்கிற பேர்ல உக்காந்துட்டு இவனுங்க பண்ற அலப்பறை இருக்கே, இதுக்கு இந்த மீடியாவும் சப்போர்ட். சரி டா நான் ஆபிஸ்க்கு கிளம்புறேன் ” என்ற அர்ஜுன் மாறனிடம் விடைபெற்றுவிட்டு தனது  ஜிப்பில் காவல் நிலையம் நோக்கி சென்றான்.

—————-

” டைனிங் டேபில்ல வச்சு மதுகிட்ட அப்படி பேசின” அதீத கோபத்தில் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்த மிருதுளா, தன் கணவன் இவ்வாறு சொல்லவும் சட்டென்று நிமிர்ந்து கணவனை முறைத்தாள் .

” தப்பா ஒன்னும் சொல்லிடலையே”

” நீ ஏன் அப்படி நடந்துக்கிட்டனு எனக்கு நல்லாவே தெரியும், ஜூவாலா சின்ன பொண்ணு நாமதான் அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கணும்”

” அவ்வளவு தானே சொல்லி புரிய வச்சிடுறேன் போதுமா, போறீங்களா  ” என கணவனை முறைத்தபடி வெளியேறியவர் அர்ஜுனிடம் இருந்து மதுவை எப்படி பிரிக்கலாம் என்கின்ற திட்டத்தை வகுக்க தொடங்கினார்.

*********************

அகன்று விரிந்திருந்த அந்த சாலையில் மழை நீர் ஆங்காங்கே தேங்கிருக்க பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் மக்கள் அனைவரும் சாலையை மிகச்சிரமப்பட்டு கடந்தனர் .

அப்பொழுது அங்கே தங்களின் கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் காரில் இருந்த ஆதித்யாவும் நாகாவும் மக்கள் சாலையை கடக்கும் வரை காத்துக்கொண்டிருக்க,

” ரொம்ப நெரிசலா இருக்கு லேட் ஆகும் ஆதி , வேணும்ன்னா வேற ரூட் எடுப்போமா “

” இருக்கட்டும் பரவாயில்லை அதான் இன்னும் டைம் இருக்குல்ல வெயிட் பண்ணுவோம் ” என்றவனின் பார்வை சாலையிலே நிலைத்திருந்தது.

அப்பொழுது வெகுநேரமாய் தங்களை ஒரு கார் பின் தொடர்வதை கவனித்திருந்த ஆதிக்கு இப்பொழுது அந்த கார் தங்களின் பக்கத்தில வந்து நிறுக்கவும் அவனுக்கு சந்தேகம் வலுக்க, புருவ மத்தியில் முடிச்சிட உள்ளே இருப்பவர்களின்  செயல்களை தீவிரமாய் கண்காணித்த ஆதித்யா,

” நாகா உனக்கு பக்ககத்துல உள்ளவங்கள பாரு சரியா இல்லை. நம்மளை ரொம்ப நேரமா பின் தொடர்ந்து வாராங்க ” என்றான்.

 ” ஆமா ஆதி நானும் நோட் பண்ணிட்டு தான் இருக்கேன்  ” என்றான் நாகா.

” சரி நீ அவங்களை வாட்ச் பண்ணிட்டே இரு ” என்ற ஆதி சிறிதும் பதற்றமடையாமல்  அவர்களின் செய்கையை தானும்  கவனித்தான்.

 இவர்களை நோட்டமிடுவதும் யாரிடமோ அலைபேசியில் பேசுவதுமாய்  இருந்தார்கள் அவர்கள்.

” தப்பா இருக்கு நாகா , ஏதோ சரியில்லை… ” அந்த காரை நோட்டமிட்டபடி ஆதித்யா கூறினான்.

“நம்ம செக்யுரிட்டிக்கிட்ட சொல்லி செக் பண்ண சொல்லட்டுமா ” என்று நாகா கேட்கவும், மறுத்தவன் நாகா தடுக்க தடுக்க காரில் இருந்து இறங்கி  நேராகா தங்களை பின்தொடர்ந்து வந்த காரின் அருகே சென்றான்.

ஆதித்யா வருவதை கண்டவர்கள் அலைபேசியில் ஏதோ கூற அங்கே வந்த ஆதி  அவர்களிடம்,

“என்ன டா ஸ்கெட்ச்சா ம்ம்ம் என்ன என்னை தூக்க போறீங்களா? எத்தனை பேர் இருக்கீங்க? நான் ஒரு ஆளா வரட்டுமா? இது என்னனு தெரியுதா? ” என்று  தன் இடுப்பில் இருந்த ஹெக்லர் அண்ட் கோச் விபி 9 பிஸ்டலை எடுத்து அவர்கள் முன்பு காட்டியவன்,

 ” போட்டேன்னு வை தலை தெரிச்சிரும் வாரீங்களாடா ” சீற்றத்துடன் வினவினான்.

” இல்லை சார் ” பிஸ்டலை கண்டதும் வியர்த்து கொட்ட ஆதித்யாவின் அதிரடியை கண்டு அஞ்சினர் அவர்கள்.

” யாருகிட்ட டா பேசிட்டு இருந்தீங்க “

” யாரும் இல்லை சார் ” என்று சொல்லும் பொழுதே அந்த கூட்டத்தில் இருந்த ஒருவனின் அலைபேசி அலற. ஆதித்யா அவர்களை கண்களாலே எடுக்குமாறு கட்டளையிட, அட்டென்ட் செய்தவன் அலைபேசியை ஆதித்யாவிடம் நீட்டி,

 ” உங்ககிட்ட பேசணும்ன்னு சொல்றாங்க ” என்றான். அவர்கள் மீதிருந்த தன் பார்வையை அகற்றாது அலைபேசியை வாங்கிய ஆதித்யா  ,

” யாருடா நீ ” என சீறினான்.

 அப்பொழுது சட்டென்று காரை ஸ்டார்ட் செய்து ஆதித்யா தடுப்பதற்குள்  அங்கிருந்து அவர்கள் சென்றனர் .

” என்ன ஆதி என்னை தெரியலையா நான் தான் உன் எமன் “

” நீ எமனாவே இருந்துக்கோ ஆனா உன் அப்பனை தூக்குனது நான் தான். அதனால உன்னை தூக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது சிவ குரு “

” ஆமா என் அப்பாவை தூக்குனது நீ தான் ஒத்துக்குறேன். ஆனா உன்னை போட போறது நான் தான் அதை மறந்துடாத ” அழுத்தமாய் கூறினான் சிவ குரு.

” நீயா? எனக்கு பயந்துட்டு நேர்ல வராம சின்ன பசங்கள அனுப்பி வச்சி இருக்க. என்னை கொலை பண்ண அனுப்புன உன் ஆளுங்க இப்போ தலை தெறிக்க கார்ல ஓடிட்டாங்க ” ஏளனமாய் சிரித்தான்.

” உன்னை  போடுறதெல்லாம் எனக்கு ஒரு விஷயம் கிடையாது. ஆனா அதுக்கு முன்னாடி உன்னை ஒண்ணுமில்லாம ஆக்கணும். உன் கண்ணுல நான் பயத்தை பார்க்கணும். நீ பயப்படணும் ஆதி. அதான் என் மைண்ட மாத்திக்கிட்டேன் முதல்ல உனக்கு வேண்டப்பட்டவங்கள ஒவ்வொருத்தரா காலி பண்ணிட்டு. அப்புறம் உன்னை ஆசை தீர செய்யலாம்ன்னு இருக்கேன் நீ என்ன நினைக்கிற ” தன் எதிரே இருக்கும் ஆதியின் குடும்பத்தாரின் புகைப்படங்களை பார்த்தபடி குரூரமாய் சிரித்தான் சிவ குரு.

” குரு என்னைக்கும்  அப்படி யோசிக்காத. அப்போ என் அடி ரொம்ப கொடூரமா இருக்கும் ” அடங்கி ஒலித்தது ஆதியின் குரல்.

” ஆஹான் அதையும் பார்ப்போம். அப்புறம் ஆதி பெரியவங்க ஒன்னு சொல்லுவாங்க ஒன்றே செய் அதை இன்றே செய்ன்னு. அதான் இன்னைக்கு இப்பவே உனக்கு ஒரு சாம்பிள் காட்டலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன். அஞ்சி நிமிஷம் டைம் தரேன் முடிஞ்சா உனக்கு வேண்டியவங்களை காப்பாத்திக்கோ ” என்று கூற, லேசாக பதறிய அதி நாகாவை அழைத்து ,

” வீட்ல செக்யூரிட்டி கார்ட்ஸ்கிட்ட பேசு. எல்லாரும் வீட்ல இருக்காங்களான்னு பார்க்க சொல்லு. சந்தேகப்படுற மாதிரி ஏதும் இருக்கான்னு செக் பண்ண சொல்லு ” என்றான்.

சில நிமிடங்கள் கடந்திருக்க,

 ” ஆதி எல்லாம் ஓகே சந்தேகப்படுற மாதிரி எதுவும் இல்லை, அவன் உன்னை டென்ஷன் ஆக்கணும்ன்னு வேணும்ன்னே பண்ணிட்டு இருக்கான். எல்லாரும் வீட்ல தான் இருக்காங்க. நான் செக்யுரிட்டியை டைய்ட் பண்ண சொல்லிட்டேன் ” என்று நாகா சொன்ன பிறகே நிம்மதி அடைந்த ஆதி அலைபேசியில் சிவ குருவிடம்,

 ” என்ன விளையாடிட்டு இருக்க. இப்படியெல்லாம் சொன்னா நாங்க பயந்திருவோமா. உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ ” என்றான் .

” என்னால என்ன முடியும்ன்னு இப்பவே காட்றேன் ஆதி. நீ பயப்படணும் உன் பயம் எனக்கு வேணும். ” என்றவன் கைவசம் தன்னிடம் இருந்த வேறொரு அலைபேசியில்,

” அடிச்சி தூக்குடா அவளை ” என்று யாருக்கோ கட்டளையிட்டவன். ஆதித்யாவிடம்,

 ” உன் கண்ணுமுன்னாடி உன் ஆள தூக்குறேன் டா. அவ உடம்பை அள்ளிட்டு  போ, உன் ஆட்டம் முடிய போகுது ஆதி ” என்றவன் ஆதித்யா பேசும் முன்பே அழைப்பை துண்டித்தான்.

‘ உன் கண்ணுமுன்னாடி உன் ஆள தூக்குறேன் டா ‘ என சிவ குரு கூறியதை எண்ணி ஆதி மற்றும் நாகா குழப்பமாய் இருக்க, சந்தியாவிடம் இருந்து அழைப்பு வரவும் அதை ஏற்ற மது  ,

” ஏய் சந்தியா இதோ வந்துட்டே இருக்கேன் சீக்கிரமா வந்திர்றேன் “என  அலைபேசியில் பேசியபடி சாலையை கடக்க முன்னேறினாள்.

அப்பொழுது மோதி தூக்கி எறியப்பட்டால் எலும்பு கூட மிஞ்சாது என்கின்ற அளவு  வேகத்தில், முதலில் ஆதித்யாவை நோட்டமிட்டு கொண்டிருந்த அந்த சிவப்பு நிற கார்  இப்பொழுது மதுவை நோக்கி வந்து கொண்டிருந்தது.

உள்ளுணர்வு ஊந்த அசுர வேகத்தில் தன்னை நோக்கி கார் ஒன்று வரும் திசையை நோக்கி பார்த்ததும்.  அச்சத்தில் மூளை செயல் பட மறுக்க, மேலும் முன்னேறியும் செல்ல முடியாமல். காதுக்கும் தன் கரத்திற்கும் இடையே இருந்த அலைபேசி கீழே விழுந்து நொறுங்க , செய்வதறியாது ஸ்தம்பித்து நின்றாள் மதுமதி.

தனக்கு கொஞ்ச தொலைவில் மதி, அவளை நோக்கி சீறி பாய்ந்து வரும் கார், இவற்றை கண்டதும் ஆணவனின் மனம் அவனை எச்சரிக்க,  இமைக்கும் நொடியில் வேகமாக மதியை நெருங்கி அவளை திடமாக பிடித்து தன் பக்கம் இழுத்தபடி சாலையின் மறுபக்கம் அவளை தன் நெஞ்சோடு அணைத்தபடி விழுந்திருந்தான் ஆதித்யா.

அந்த காரோ தன் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி அங்கிருந்து நிற்காமல் சென்றுவிட, சாலையில் சலசலப்பு ஏற்பட்டது மக்கள் கூட்டமெல்லாம் அங்கே சூழ்ந்து கொள்ள, நாகா பதற்றத்துடன் அவர்களின் அருகே வந்தான் .

” யு ஆர் ஓகே. நீ நல்லா இருக்க ” அவளது இதயத்துடிப்பின் வேகத்தில் அவள் கொண்ட அச்சத்தை உணர்ந்த ஆதி மதியின் தலையை மெதுவாய் தடவிக்கொடுதுக்கொண்டே ஆறுதல் படுத்தினான். நிஜமாகவே பயந்திருந்தான் ஆதித்யா. மது தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு,பயத்தில் அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டு வெடவெடத்த புறாக்குஞ்சாய் அவன் மார்பில் சரணடைந்திருந்தாள்.

ஆதித்யாவின் கண்ணசைப்பில் நாகா சூழ்ந்திருந்த  மக்கள் கூட்டத்தினரை  விலக்கியிருக்க. சில நொடிகள் கழித்து தன் விழி திறந்த மது, ஆதித்யாவிடம் இருந்து விலகி அமர,

” ஆர் யு ஓகே ??? ” என அக்கறையுடன் ஆதித்யா வினவினான் .

பேசா மடந்தையாய் அதிர்ச்சி குறையாமல்  சிலையென  அமர்ந்திருந்தவளின் தேகம் இன்னும் நடுங்கிக் கொண்டே இருக்க,

இதயம் விடாமல் வேகமாய் ஓட,

 மூச்சுவிடவே சிரமப்பட்டாள்.

நூலிழையில் தன் நண்பன் உயிர் தப்பியதை எண்ணி மகிழ்ந்த நாகா அவனுக்கு அடி ஏதும் பட்டுள்ளதா என  ஆதித்யாவை பார்வையிட்டான். கைகளிலும் கால்களிலும் ஆங்காங்கே இரத்தம் வழிந்தது.

” டேய்  வா உனக்கு ப்ளீட் ஆகுது மருந்து போடணும் ” என நாகா அழைத்தான்.

அவனிடம் வந்த ஆதித்யா நாகாவிடம்,

 ” அந்த பொண்ணு ” என்றான்.

” என்ன அவளையும் கூட்டிட்டு சுத்த சொல்றியா. உயிரையே காப்பாத்தியாச்சு வேற என்ன பண்ணனும். நீ இப்போ பண்ணின காரியத்துக்கு உன் மேல செம கோபத்துல இருக்கேன் வா. அவ போய்க்குவா ” என்றான் .

” லுக் அட் ஹெர் அவ இன்னும் அதிர்ச்சியில தான் இருக்கா எப்படி விட்டு வர முடியும் ” என்ற ஆதி மதியின் அருகே சென்று அவளை அழைக்க நிமிர்ந்தவள், அதிர்ச்சியுடன் அவனை பார்க்க. தன் கரம் நீட்டி அவள் எழுவதற்கு உதவினான் ஆதித்யா.

ஆனால் அவன் கரத்தை பிடிக்க கூட முடியாதளவிற்கு  அவள் கரம் நடுங்கியது. மதியின் நிலையை உணர்ந்தவன் தானே அவளது தோள்களை பற்றி எழுப்பிவிட்டு,

” லைட்டா அங்க அங்க காயம் இருக்கு, வாங்க மதி ஹாஸ்ப்பிட்டல் போகலாம் ” என்றவன், ஒருவித தயக்கத்துடன் அவளது நடுங்கும் கரத்தை தன் திடமான கரத்தால் உறுதியாக பற்றிக்கொண்டு நாகாவின் முறைப்பையும்  வாங்கிக்கொண்டு அவளை காரில் ஏற்றினான்.

அரிமா வருவான்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “அரிமா – 4”

    1. Avatar photo

      எல்லா கல்யாணமும் லவ் ல ஸ்டார்ட் ஆகுறதில்லையே. எல்லாத்தும் மேல மதுக்கு வேற யார் மேலையும் லவ் கிடையாது. அர்ஜுனை பிடிக்கும், ப்ரீத்தாவை ரொம்பவே பிடிக்கும், அதானால ஒத்துக்கிட்டா. ப்ரீத்தாக்கும் அம்மா இல்லாத பொண்ணை வெளில கல்யாணம் பண்ணி கொடுக்க விருப்பம் இல்லை அதானால ஒத்துக்க வச்சிருக்காங்க. டியர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!