அரிமா – 5

4.6
(8)

மதுமதியின் நடுங்கும் கரத்தை தன் திடமான கரத்தால் பற்றிக்கொண்டு, நாகாவின் முறைப்பையும் வாங்கிக்கொண்டு அவளுடன் காரின் பின் சீட்டில் அமர்ந்தான் ஆதித்யா.

அப்பொழுது தன் கரத்திற்குள் இருந்த மதுவின் கரம் நடுங்குவதை உணர்ந்த ஆதி நிமிர்ந்து அவள் முகம் பார்க்க, அவளுக்கோ பயத்தில் அழுகையே வந்து விட, கீழ் உதட்டை கடித்தபடி உடல் நடுங்க அமர்ந்திருந்தாள்.

அவளை அப்படி பார்க்கவே ஆதித்யாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிடவும், சட்டென்று அவளது கண்ணீரை துடைப்பதற்காக தன் கரத்தை அவளது வதனம் நோக்கி கொண்டு சென்றவன், பின்பு என்ன நினைத்தானோ, உயர்த்திய தன் கரத்தை அப்படியே கீழே இறக்கிவிட்டு, அமைதியாக அவளது அசைவுகளை கவனித்தபடி அமர்ந்திருந்தான்.

அப்பொழுது சிறிது நிமிடங்கள் கடந்திருக்க எதையோ யோசித்தவள் போல கண்ணீரைத் துடைத்தபடி  நிமிர்ந்து அவனை பார்த்தவள்,

 ” என்னை இறக்கி விடுங்க நான் போகணும் ” – என்றாள்  .

” என்னாச்சு நானே உங்களை டிராப் பண்றேன் ” என்றான் ஆதித்யா.

” ப்ளீஸ் என் ஸ்டுடென்ட்ஸும் என் ஃப்ரண்டும் எனக்காக காத்துகிட்டு இருப்பாங்க நான் போகணும் ” – சிறுபிள்ளையாக அடம் பிடித்தாள்.

 நாகா கண்ணாடி வழியாக ஆதித்யாவை முறைத்தான். இந்த முறை மதியின் பிடிவாதம் ஆதித்யாவையும் கோபம் கொள்ள செய்தது, இருந்தும் வெளிகாட்டிக்காதவன்,

” சரி எங்க போகணும்ன்னு சொல்லு நானே ட்ராப் பண்றேன் ” அடக்கப்பட்ட கோபத்துடன் கூறினான் .

” H….M மெ….ட்….ரிக் ஸ்….கூல் ” திக்கி திணறி உளறினாள் .

” பாதி தூரம் வந்ததுக்கு அப்புறம் சொல்றீங்க. ” நாகா சிடு சிடுக்க, தன் பார்வையாலே நாகாவை அமைதி படுத்திய ஆதித்யா ,

” போ நாகா ” என்றான் .

தோழியின் வருகைக்காக வெகு நேரமாக குழந்தைங்களுடன் காத்திருந்த சந்தியா. மதுவின் நலனை குறித்த கவலையுடன் தன் மணிக்கட்டை பார்த்தபடி நிற்க , அங்கே பதற்றம் சிறிதும் தெளியா முகத்துடன் ஆதித்யாவின் காரில் இருந்து இறங்கினாள் மதுமதி.

மதுவை கண்டதும் குழந்தைகள் அனைவரும் ஓடி சென்று கட்டி அணைத்துக்கொள்ள, அவ்வளவு நேரம் இறுக்கமாக இருந்த மது குழந்தைங்களை கண்டதும் அனைத்தும் மறந்தவளாய் அவர்களுடன் ஐக்கியமானதை கண்ட ஆதித்யாவுக்கு மதுவை பார்ப்பதற்கு இன்னுமே சுவாரசியமாக இருந்தது.

” என்னாச்சு  மது??? ஏன் லேட்டா வந்த??. அவங்க யாரு.??” என்று ஆதித்யாவை பார்த்தபடி சந்தியா கேட்கவும், மது வேறு வழியில்லாது நடந்த அனைத்தையும் கூறினாள்.

” ஒருவேளை அந்த கொலைகாரன் தான் காரை உன் மேல ஏத்தி கொலை செய்ய ட்ரை பண்ணி இருப்பானோ  ” பீதியுடன் வினவினாள் சந்தியா .

” தெரியல ஆனா அந்த கார் என்னை நோக்கி வந்த வேகம் அப்படி தான் நினைக்க சொல்லுது. அதை நினைச்ச இப்போ கூட கை நடுங்குது. ” பூத்த வியர்வை துளிகளை துடைத்தபடி கூறிய மது. குழந்தைகளை பார்த்து,

” சரி டைம் ஆச்சு சந்தியா அப்புறம் இதை பத்தி பேசுவோம். சரி  இன்னும் ஏன் இங்கையே இருக்கீங்க உள்ள போகலையா ” என்றாள் .

” மச்சி லேட் ஆகிடுச்சின்னு உள்ள விட மாட்டிக்கிறாங்க அதான் என்ன பண்ணறதுன்னு தெரியல ” என்றாள் சந்தியா.

” சரி நான் போய் பேசுறேன் ” என்ற மதுமதி வாயில் காவலர்களிடம் சென்று தங்களின் குழந்தைகளை உள்ள அனுமதிக்குமாறு கூறினாள்.

 அப்பொழுது அங்கிருந்த காவலாளிகளில் ஒருவர் மதுவோடு வந்திருந்த சிறுவர் சிறுமியரின் தோற்றத்தையும் ஆடம்பரமில்லா ஆடையையும் பார்த்து ,

” இந்த புள்ளைங்களை பார்த்தா படிக்கிற குழந்தைங்க மாதிரி தெரியலையே ” என்று இழுத்தார்.

” ஹலோ வேற எப்படி தெரியுது. நாங்க ஒன்னும் சும்மா வரல ரெண்டாயிரம் ரூபா பணம் கெட்டி ரிஜிஸ்டர் பண்ணிருக்கோம். நீங்க உள்ள விட்டு தான் ஆகணும் ” கோபமாக கூறினாள் மது.

” இது பணக்கார புள்ளைங்க படிக்கிற ஸ்கூல் மா, அப்படியெல்லாம் உள்ள விட முடியாது “

” அதுக்கு என்ன இப்போ. என் புள்ளைங்களை இப்போ என்ன சொல்ல வரீங்க. நம்பிக்கை இல்லைன்னா என்கிட்ட பணம் கட்டுனதுக்கான ரசீது இருக்கு ” என ரசீதை எடுத்து காட்டினாள். அதை வாங்கி பார்த்தவன் ,

” வெயிட் பண்ணுங்க மா நான் உள்ள போய் பெரிய  மேடம கூட்டிட்டு வரேன் ” என்று அவர் உள்ளே செல்ல, சந்தியா மதுவை தனியாக அழைத்து ,

” என்னடி மாட்டிக்குவோம்ன்னு நினைக்கிறேன் பேசாம போய்டலாம். ” என்று படபடத்தாள்.

” கொஞ்சம் சும்மா இருக்கியா ” மது சந்தியாவை லேசாக முறைத்தாள் .

” மது இல்லாத ஒரு ஸ்கூல் இருக்கிற மாதிரி சொல்லி ரெஜிஸ்டர் பண்ணிருக்கோம் தெரிஞ்சிது அவ்வளோ தான், அசிங்கமா போய்டும் அவங்க போக சொல்றதுக்கு முன்னாடி நாம போய்டலாம். “

” காம்பெட்டிஷன்க்காக எவ்வளவு கஷ்டப்பட்டு புள்ளைங்க ரெடி ஆகிருக்காங்க, இப்போ வேண்டாம்ன்னா அவங்க மனசு கஷ்டப்படாது வெயிட் பண்ணு பார்த்துக்கலாம். நீ முதல்ல புள்ளைங்க கிட்ட போ அவங்களுக்கு தைரியம் சொல்லு. இவங்க கிட்ட நான் பேசிக்கிறேன் ” என்ற மதுமதி வாசலில் தன் கைகளை பிசைந்தபடி நின்றாள். அவளுக்குமே சற்று பயமாக தான் இருந்தது.

அப்பொழுது சந்தியா,

 “பாரு மது திரும்பவும் சொல்றேன் அவனுங்க வேற நம்மளையே குறு குறுன்னு பாக்குறானுங்க, அவனுங்க முன்னாடி அசிங்கப்பட வேண்டாம் சீப்பா நினைப்பாங்க. அட்லீஸ்ட் அவனுங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லி அனுப்பிட்டாவது வா ” ஆதித்யாவையும் நாகாவையும் சுட்டிக்காட்டியபடி கூறினாள்.

” அதுவும் சரி தான் ” என்றவள் ஆதித்யாவிடம் செல்ல முனைந்த நேரம், அங்கு வந்த பெண்மணி,

” நாங்க தான் க்ளீயரா மென்ஷன் பண்ணிருக்கோமே. டைம்க்கு வரணும்ன்னு. அப்புறம் ஏன் நீங்க ரொம்ப லேட்டா வந்துட்டு பிரச்சனை பண்றீங்க. ” மேல்தட்டு மிடுக்குடன் பேசியவளிடம் ஆங்கிலம், நுனி நாக்கில் விளையாடியது .

” சாரி மேம் வர்ற வழில ஒரு சின்ன பிரச்சனை ப்ளீஸ் அலோ பண்ணுங்க நாங்க எண்ட்ரன்ஸ் பீஸ் கூட கட்டிட்டோம் ” தன்மையாக கேட்டாள் மது.

” சரி நான் செக் பண்றேன் ” என்றவர் தன் கையில் இருந்த ஆப்பிள் நோட்படில். சாயம் பூசிய தன் நீண்ட விரல்களால் மெதுவாக தட்டி,

 ” நீங்க எந்த ஸ்கூல் ??” என்னும் கேள்வியை இடியை போல மதுவின் தலையில் இறக்கினார்.

” ஹான் அது டேக்கான் மெட்ரிக் ஸ்கூல் ” என மது அசால்ட்டாக ஒரு பொய்யை அவிழ்த்து விட.

” சாரி மேம் அந்த மாதிரி எந்த ஸ்கூலும் இருக்கிற மாதிரி எங்க அப்ல ( app ) காட்டலையே. நீங்க எங்க இருந்து வரீங்க. உங்க ஐடி எங்க ?? ” கேள்விகளை அடுக்கினாள் அந்த பெண்மணி.

 மதுவிடம் இருந்து பதில் வராததும் புரிந்து கொண்ட பெண்மணி ,

” ஒரு பொய்யான ஐடென்ட்டிட்டில பார்ட்டிசிபேட் பண்ண வந்திருக்கீங்க. முதல்ல எல்லாரும் வெளிய போங்க இல்லைனா. ஐ வில் கால் தீ போலீஸ் “

” மேம் ப்ளீஸ் லெட் மீ எக்ஸ்ப்ளெய்ன் ” என்று மது கெஞ்ச. அதை கவனித்த ஆதித்யா , நாகா மற்றும் சந்தியா மூவருமே அங்கே வந்தனர்.

” என்னாச்சு மதி என்ன ப்ராப்லம் ” என ஆதித்யாவின் ஆளுமையான குரல் மதுவின் செவியை தொட்டது.

திரும்பி அவன் முகத்தை பார்த்தவள் ‘ ச்ச இவன் ஏன் வந்தான். அசிங்க பட போறோம் ‘ என மனதிற்குள் எண்ணியவள் சந்தியாவை பார்க்க,

” உங்கள தான் கேட்குறேன் என்னாச்சு ” மீண்டும் வினவினான் சற்று அழுத்தமாக.

” ———————- ” – அமைதியாக இருந்தாள்.

கோர்ட் சூட்டுடன் இருந்த ஆதித்யாவின் ஆளுமையான தோற்றத்தை கண்ட அந்த பெண்மணி,

 ” சார் டெக்கான் மெட்ரிக் ஸ்கூல்ன்னு ஒரு ஸ்கூலே இல்லை. பொய் சொல்லி ரெஜிஸ்டர் பண்ணிருக்காங்க. வெளிய போக சொன்னா போக மாட்டிக்கிறாங்க ” என கோபத்துடன் கூற, ஆதித்யாவின் பார்வை மதியின் கலங்கி சிவந்திருந்த முகத்தை தழுவியது.

” மேம் சாரி, நான் பண்ணினது தப்பு தான். ஆனா பசங்க பாவம் பெரிய ஸ்கூல்ல கலந்துக்க போறோம்ன்னு நல்லா ப்ராக்ட்டிஸ் பண்ணி ஆசையோட வந்திருக்காங்க. ப்ரைஸ் வேண்டாம் அட்லீஸ்ட் கலந்துக்கவாவது விடுங்க ” மது கெஞ்சினாள் .

” அதெல்லாம் முடியாது ” என திடமாக அந்த பெண்மணி மறுக்க,

” மதி விடுங்க ” என அடுத்து பேச வந்த மதுவை தடுத்த ஆதி, நாகாவின் காதில் ஏதோ கூற, தன் அலைபேசியை எடுத்து நாகா யாருக்கோ அழைப்பு விடுத்தான்.

பிறகு சில நிமிடங்களில் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் தலைமை செயலாளர்கள் என்று முக்கிய நபர்கள் அனைவரும் வாசலுக்கே வந்து அவர்களை மிகுந்த மரியாதையுடன் உள்ளே அழைத்து செல்ல, மது குழப்பத்துடன் ஆதித்யாவை பார்த்தாள்.

அவனது அடர்ந்த மீசைக்குள் இருந்து சிறு புன்னகை ஒன்று மதுவை எட்டிப்பார்த்து , அவள் காணும் முன்பு சட்டென்று  மறைந்தது.

உள்ளே சென்ற நொடி துவங்கி, போட்டி முடியும் வரை பள்ளி நிருவாகத்தினர் கொடுத்த உபசரிப்பில் மதுமதியும் சந்தியாவும் திக்குமுக்காடி போனார்கள்.

அப்பொழுது மதுமதி சந்தியாவிடம் ,

” எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதுல ரொம்ப சந்தோசம். எல்லாம் அவனால தான் அவன் மட்டும் இல்லைன்னா ரொம்ப கஷ்டமா ஆகியிருக்கும் ” என்று தன் அலைபேசியில் யாரிடமோ கோபமாக பேசிக்கொண்டிருந்த ஆதித்யாவை பார்த்தபடி கூறினாள் .

” யாரு டி அவன் சூப்பர் ஹீரோ மாதிரி பெரிய பெரிய வித்தையெல்லாம் காட்றான், ஒரு ஃபோன்ல எல்லாத்தையும் தலை கீழா மாத்திட்டான் ” வியப்புடன் கூறினாள் சந்தியா.

” ஆமா சந்தியா நாம சந்தேகப்பட்ட மாதிரி இவன் கெட்டவன் இல்ல, நமக்காக எவ்வளவு பெரிய உதவி பண்ணிருக்கான். பிள்ளைங்க ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. என்ன சிரிக்க தான் மாட்டிக்கிறான். மத்தபடி ரொம்ப நல்லவனா தான் இருக்கான் ” என்றாள் மது.

” இப்போ ரொம்ப முக்கியம் பாரு. அது எப்படி உனக்கு பிரச்சனை வரும் பொழுதெல்லாம் சொல்லிவச்ச மாதிரி கூடவே வாரான். அவன் கிட்ட ஏதோ சரியில்லை ” அவன் செய்கையை கவனித்தபடி சந்தியா கூறினாள் .

” உனக்கு வேற வேலையே இல்லை எல்லாத்துக்கும் சந்தேகப்பட்டுட்டு “

” மது நீ சொல்ற விஷயங்கள் எல்லாம் கேட்கவே பயமா இருக்கு. நீ வெள்ளந்தியா எல்லாரையும் நம்பிருவ. மனுஷங்க நீ நினைக்கிற மாதிரி கிடையாது ஸோ எல்லாரையும் சந்தேகப்பட கத்துக்கோ. அவன் சரியில்ல என் மனுசுக்கு தோணுது “

” நாம நல்லது நினைச்சா நல்லதே நடக்கும். நல்லவங்க கெட்டவங்க தீர்மானிக்க நாம யாரு. ?? எல்லார்க்குள்ளையும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். ” என்ற மது, ஆதித்யாவை பார்க்க அவனோ இப்பொழுது குழந்தைகளிடம் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை வியப்புடன் பார்த்தபடி அவர்களின் அருகே வந்தாள்.

அப்பொழுது சிறுவர்கள் ஆதித்யாவுக்கு நன்றி கூறவும் ,

” நல்லா நிறைய தேங்க பண்ணுங்க குட்டிஸ். இந்த அங்கிள் இல்லன்னா  இன்னைக்கு நம்மளால  பெர்ஃபாம் பண்ணியிருக்க முடியாது.  ஆனா பேரு மட்டும் கேட்டுறாதீங்க அதெல்லாம் சொல்ல மாட்டாரு ” என்றாள் மது கேலிக்குரலில் .

அதை கேட்டு” ———- ” மௌனமாய்   நின்ற ஆதித்யா, மதுவின் உரிமையான கேலியில், தன் இதழோரம் முளைத்த புன்னகையை மறைப்பதற்காக தன் கீழ் அதரத்தை கடித்துக் கொள்ள, ஆனால் இம்முறை அவனது முயற்சியும் மீறி அவனின் புன்னகை வெளிப்பட்டுவிட,

‘ ஓ என்கிட்ட சிரிப்பு கூட வருமா. நல்லா தான் இருக்கு ‘ என தன் மனதிற்குள் எண்ணியவள் அவனிடம்,

” எனக்காக எவ்வளவு பண்ணிருக்கீங்க. பேர் சொல்றதுக்கு என்ன ?? சரி விடுங்க உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும் வெறும் வார்த்தையால சொல்ல தோணல. என் வீட்டுக்கு வாங்க வீட்ல எல்லாரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தணும்ன்னு நினைக்கிறேன் ” என்றாள் ஆர்வமாக .

” மதி நீங்க என்னை பத்தி தெரிஞ்சிக்கிட்டாலும் சரி, நான் உங்களை பத்தி தெரிஞ்சிக்கிட்டாலும் சரி ஆபத்து உங்களுக்கு தான். என்னை விட்டு தள்ளியே இருங்க ” எச்சரித்தான் .

” ரெண்டு முறை ஆபத்துல இருந்து காப்பாத்திருக்கீங்க. உங்களால எனக்கு என்ன ஆபத்து வர போகுது. ஐ ட்ரஸ்ட் யு. யார் சொன்னாலும் உங்களை என்னால சந்தேகப்பட முடியாது ” என்றாள் மது.

 இப்பொழுது இருவரின் விழிகளும்  பின்னி கொள்ள, ஒரு மெல்லிய உணர்வு இருவருக்குள்ளும் அவர்கள் அறியாவண்ணம் அவர்களுள் ஊடுருவி மௌனமாய் உரையாடியது.ஆனால் எல்லாம் சில நொடிகள் மட்டுமே, உடனே இருவரும் சுயம்பெற,

“எனிவே தேங்க்ஸ் மிஸ்டர் அயர்ன் மேன் ” என்றாள் மது.

அவனோ அவளது விழிப்பில் புரியாமல் பார்க்க, உடனே மது,

” பேர் சொல்லாட்டா இப்படி தான் நான் ஏதாவது பேர் வைப்பேன் ” அழகாய் தன் தெத்து பல் தெரிய சிரித்தாள்.

 அவளது சிரிப்பில் தொலைந்து கொண்டிருந்த தன்னை, மிகச் சிரமப்பட்டு மீட்டெடுத்தவன், மீண்டும் தன் கீழ் அதரத்தை கடித்து கடினப்பட்டு தன் புன்னகையை அடக்கிக் கொண்டு, உணர்வுகள் அற்ற ஜடம் போல் இருக்க பெரும்பாடு பட்டுப்போனான்.

தேவதையின் சிரிப்பு மனிதனின் மனதை மயக்கும், ஆனால் இவன் தான் அரக்கன் ஆயிற்றே  மயங்க இருந்த மனதை, எளிதில் மீண்டும் கடினமாக்கிக் கொண்டான்.

” தேங்க்ஸ் மதி “

” ஆங் ஏன் ?? நீங்க எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க ” புரியாமல் கேட்டாள்.

” எல்லாத்துக்கும். “

” ஆங்” மீண்டும் பெண்ணவளுக்கு புரியவில்லை.

” சிரிக்கவும் வரும் அதுவும் உங்ககிட்ட” இப்பொழுது கண்ணுக்குத் தெரியாத  சின்ன புன்னகையுடன் புரியவைத்தான்.

அப்பொழுது தான் மதுவிற்கு தான் மனதிற்குள் பேசுகிறோம் என்று எண்ணி மறந்து, ‘ஓ என்கிட்ட சிரிப்பு கூட வருமா. நல்லா தான் இருக்கு’ என்று அப்பொழுது வாய்விட்டே கூறியிருந்திருக்கிறோம் என்பது புரிந்தது.

” ச்ச ” என தன் முட்டாள் தனத்தை எண்ணி மது சட்டென்று நாக்கை கடிக்க, அவளது செய்கையில் தன் கட்டுப்பாட்டையும் மீறி எகிறி குதித்த தன் இதயத்தை, வேகமாக தன் கரம் கொண்டு அழுத்தி பிடித்து   கொண்டவன், அந்த நொடி தனக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பிரளயத்தில் இருந்து தன்னை காக்கும் பொருட்டு,

 ” சரி உங்க பிளான் என்ன? உங்களுக்கு ஓகேன்னா நானே உங்களை டிராப் பண்ணிர்றேன் ” எதிலிருந்தோ தப்பிப்பதற்காக இவ்வாறு கேட்டுவிட்டு, பதிலை எதிர்பார்த்து அவள் முகம் பார்த்த நொடி, அர்ஜுனின் கரங்கள் மதுமதியை அணைத்திருந்தன.

இதை சற்றும் எதிர்பார்க்காத மது அதிர்ச்சியில் நிற்க, ஆதித்யாவின் முகத்தில் யாரும் கணிக்க முடியாத உணர்வு ஒன்று கணப்பொழுதில்  தோன்றி மறைந்தது.

” மது நீ ஓகே தான, சந்தியா சொல்லும் பொழுது என் உயிர் என் கைலையே இல்லை. ரொம்ப பயந்துட்டேன் ” – அவளது முகத்தை தன் கைகளில் ஏங்கியபடி அர்ஜுன் உருகினான் .

” ஷீ இஸ் ஓகே. ” என்ற ஆதித்யாவின் குரலில். மதுவை விடுத்து ஆதித்யாவை பார்த்த அர்ஜுனின் விழிகளில் இப்பொழுது கோபத்தில் தனலாய் தகித்தது.

” ஹாய் அர்ஜுன் ” ஆதித்யாவின் குரலிலும் பார்வையிலும் எள்ளல் அப்பட்டமாய் தெரிந்தது. மது ஆச்ச்சர்யத்துடன் ஆதித்யாவை பார்த்தாள்.

” நீ இங்க என்ன பண்ற? ” சீற்றத்துடன் வினவினான் அர்ஜுன் .

” அர்ஜுன் சார் தான் எனக்கு…”என்று மது முடிப்பதற்குள் அவளை இடைவெட்டிய அர்ஜுன்,

” காருக்கு போ ” என்று அவளிடம் கட்டளையிட்டான் .

” அர்ஜுன் நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன சொல்ற “

” காருக்கு போன்னு சொன்னா போ. ஒருதடவை சொன்னா புரியாது ” ஆதித்யா மீது உள்ள கோபத்தில் மதுவிடம் அர்ஜுன் சீற, அர்ஜுனின் திடீர் கோபத்தில் அவளது கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

” அர்ஜுன் ஏன் இப்படி கத்துற ப்ளீஸ் “- தழைத்தது மதுவின் குரல்.

” மது…………. போ ” – ஓங்கி அடங்கியது அர்ஜுனின் குரல்.

அர்ஜுனின் இந்த திடீர் கோபத்துக்கான காரணம் புரியாமல் தவித்த மது, கண்ணீருடன் ஆதித்யாவை பார்த்துவிட்டு சந்தியா மற்றும் குழந்தைகளுடன் அங்கிருந்து செல்ல, மது நிறைந்த விழிகளுடன் தன்னிடம் மன்னிப்பை யாசித்தபடி பார்த்த பார்வை ஆதித்யாவிற்குள் ஏதோ செய்தது.

அவனால் அவளது கண்ணீரை பார்க்கவே முடியவில்லை, அனைத்திற்கும் மேல் அர்ஜுன் அவளிடம் நடந்து கொண்ட விதம் அதுவும் பொதுவெளியில் ம்ஹூம் ஆதித்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் மீதுள்ள கோபத்தை அவளிடம் காட்டி அவளை அழ வைத்து விட்டான் என்ற கோபதில் அர்ஜுனை தீயாய் முறைத்த ஆதியின் முகம் இரும்பு குண்டலம் போல் மாற, நரம்புகள் புடைக்க நின்றிருந்தான் அவன்.

” மது கூட உனக்கு என்னடா வேலை. ?? உன்னை அரெஸ்ட் பண்ணி உள்ள தூக்கி வச்ச கடுப்புல. என்னை பழிவாங்குறதுக்காக மதுவை யூஸ் பண்ண பாக்குறியா ?? ஸ்டே அவே ஃப்ரம் ஹெர்” அடி குரலில் சீறினான் அர்ஜுன்.

” ஆஹாங் நீ என்னை அர்ரெஸ்ட் பண்ணுனியா ?? ” மிக மிக நிதானமாக கேட்டுவிட்டு கண்களில் கபடத்துடன் சிரித்தான் ஆதித்யா. கபடம் புரியாமல் முறைத்தான் அர்ஜுன்.

” அர்ஜுன் ஏதோ சொன்னியே உள்ள வச்சேன்னு. எவ்வளவு நேரம் உள்ள வச்ச ?? ஒரு மணிநேரம் ரெண்டு மணி நேரம், முழுசா பத்து நிமிஷத்துக்கு மேல உன்னால என்னை உள்ள வைக்க முடிஞ்சிதா டா, பதில் சொல்லு ” என ஆதித்யா புருவத்தை உயர்த்தினான் .

” பதில் தானே சீக்கிரம் சொல்றேன்.உனக்கு எதிரா ஆதாரம் எதுவும் இல்லைன்னு தானே நீ ஆடுற. கிடைக்கும் டா அப்போ இருக்கு டா உனக்கு. உன் கையில விலங்கு மாட்டி உன் வாழ்க்கை முழுசும் நீ ஜெயில்ல இருக்குற மாதிரி பண்ணுவேன் டா… இது அர்ஜுனோட சத்தியம் “

” ரியலி ?” – என்று ஆச்சரியப்பட்ட ஆதித்யா பிறகு “ஹா. ஹா “என்று வாய்விட்டு சிரித்தான் .

” சத்தியமா செய்வேன் டா ” அர்ஜுன் கோபத்துடன் கூறினான் .

” ஆஹாங் வாட் யு திங்க் அபவுட் யுவர் செல்ஃப்?? ஹாங்??” ‘ உன்னை பத்தி என்னை நினைக்கிற? ‘ என புருவம் உயர்த்திய ஆதித்யாவின் விழிகளில் இருந்தது மொத்தமும் இகழ்ச்சியோ இகழ்ச்சி ! – அர்ஜுனின் பார்வை கத்தியாய் ஆதியை துளைத்தது.

” பெரிய போலீஸ் ??சூப்பர் ஹீரோ ?? பயங்கரமான ரவ்டி ?? ” – இப்பொழுது வெளிப்படையாகவே தெரிந்தது ஆதித்யாவின் எள்ளல்.

” ஆதித்யா “

” சின்ன பையன் நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது. “

” மறந்துடாத  ஆதித்யா இதே சின்ன பையன் தான் உன்னை அரெஸ்ட் பண்ணினான் “

” நீ மறுபடியும் மறுபடியும் என்னை அரெஸ்ட் பண்ணினேன்னு  சொல்லிட்டே இருக்கறதுனால ரெண்டு கேள்வி கேட்குறேன்.முதல் கேள்வி நீயா என்னை தேடி வந்து அரெஸ்ட் பண்ணுனியா ?? இல்லை நானா உன்னை தேடி வந்தேனா ?? பதில் உன்கிட்ட நீயே கேளு ” என்று கூறி ஆதித்யா அலட்சியமாக சிரித்தான்.

 சிறிது வினாடிகள் யோசித்த  அர்ஜுன் ஆதித்யா கூறியதன் அர்த்தம் புரிந்து, தன் நாசி விடைக்க, தாடைகள் இறுக ரௌத்திரத்துடன் நின்றிருந்தான் .

‘ அப்போ அதெல்லாம் இவனுடைய திட்டமா ?? போலீஸ திசை திருப்ப இவனாவே. ச்ச ‘ மனதில் எண்ணிய அர்ஜுன்  ஆதித்யாவின் முன்பு தன்னை ஒரு முட்டாளாக உணர்ந்தவன், அவமான உணர்வில் முகம் கறுக்க  நிற்க, இகழ்ச்சியுடன் அர்ஜுனை பார்த்து சிரித்தபடி அங்கிருந்து சென்றான் அந்த கபட நாயகன் ஆதித்யா .

 குழந்தைகள் அனைவரையும் அவர்களுக்கு உரிய இடத்தில் இறக்கிவிட்டு அர்ஜுனின் கைகளில் கார் கொஞ்சம் வேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது, ” நீ ஆதித்யாகிட்ட அப்படி ருடா நடந்துக்கிட்டது எனக்கு புடிக்கலை அர்ஜுன் ” என மது கூறவும். காரின் வேகத்தை அதிகரித்தான் அர்ஜுன், பயந்தாள் மது .

” அர்ஜுன் ஸ்லோ வா போ. உன்கிட்ட தானே சொல்றேன் மெதுவா போ. எனக்கு பயமா இருக்கு ” என மது பலமுறை கத்திய பிறகும் நிறுத்தாமல் செல்ல,

“அர்ஜுன் ப்ளீஸ் கொஞ்சம் மெதுவா போங்க ” இந்த முறை பின்சீட்டில் இருந்து சந்தியா கூறவும் வேறு வழியில்லாமல் காரை நிறுத்திய அர்ஜுன். எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

 அப்பொழுது ,

” அர்ஜுன் எதுக்கு நீ இவ்வளவு ரியாக்ட் பண்ற. இது ஒரு சாதாரண ஆக்சிடென்ட் தான் “

” ஓ அப்படியா, சரி அப்புறம் மேல சொல்லு, நான் கேட்குறேன் இன்னும் எவ்வளவு எல்லாம் பொய் சொல்ல போறன்னு நானும் பார்க்க ஆசைப்படுறேன் ” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் சொன்னான் அர்ஜுன்.

” நான் என்ன பொய் சொன்னேன் ” தடுமாற்றத்துடன் வினவினாள் மது.

” மது நடிக்காத நீ என்கிட்ட எவ்வளவு பெரிய உண்மைய மறச்சிருக்க தெரியுமா. அதனுடைய சீரியஸ்னஸ் உனக்கு கொஞ்சமாவது இருக்கா ” கண்கள் கோபத்தில் தீயாக எரிந்தது.

” அர்ஜுன் நீ சொல்றது புரியல ” மது தடுமாறினாள்.

” மது நடிக்காத சந்தியா எல்லாத்தையும் சொல்லிட்டா ” என்றான் அர்ஜுன்.

இந்த முறை மதுவின் பார்வை சந்தியாவை ஏறிட்டது ,

” சாரி டி, இது மறைக்க கூடிய விஷயம் இல்லை அதான் சொல்லிட்டேன் உனக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு தான் சொல்லிட்டேன் ” சந்தியா தன் தரப்பு நியாயத்தை கூறினாள்.

மதுவோ இப்பொழுது எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க ,

” பேசு என்ன அமைதியாகிட்ட. ஒரு கொலைய பார்த்திருக்க மது நீ, கொலை செஞ்சவங்க உன்னை பார்த்திருக்காங்க விட்டு வைப்பாங்கன்னு நினைக்கிறியா.? பாரு இன்னைக்கு உன்னை அட்டாக் பண்ண ட்ரை பண்ணிருக்காங்க. நீ இதை என்கிட்ட முன்னாடியே சொல்லிருந்தா இன்னைக்கு இந்த ஆக்சிடென்டே நடந்திருக்காது. இனிமே நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் தான் நீ கேட்கணும். இனிமே கொஞ்ச நாளைக்கு நான் இல்லாம வெளிய போகவே கூடாது. அப்புறம் அவன் கிட்ட இனிமே நீ பேசவே கூடாது”

” ஏன் இதுல அவன் மேல என்ன தப்பு இருக்கு “

“எனக்கு புடிக்கலை “

” உனக்கு என்னாச்சு. அவன் தான் ரெண்டு முறை என் உயிரை காப்பாத்திருக்கான். “

” அவன் ட்ரிக் பண்ணிட்டு இருக்கான். ஹீ இஸ் அப்டூ சம்திங். அவன் நல்லவன் கிடையாது, இல் லீகல் பிஸ்னஸ் பண்ணிட்டு இருக்கான். அவன் பசுந்தோல் போர்த்துன ஒரு புலி. அவன் ரொம்ப தப்பானவன் “

” அப்புறம் சொல்லு, வேற என்ன எல்லாம் சொல்ல போற, என்ன சொல்லணுமோ சொல்லு. ” குரலை உயர்த்தினாள் மது.

“மது அவன் கெட்டவன் “

” உனக்கு உன்னை தவிர மீதி எல்லாரும் இந்த உலகத்துல கெட்டவங்க அப்படி தானே. “

” மது என் முன்னாடி அவனுக்கு சப்போர்ட் பண்ணாத ” பற்களை கடித்தபடி தன் கோபத்தை அடக்கினான் அர்ஜுன்.

“அவன் என் உயிரை காப்பாத்திருக்கான் அர்ஜுன். அவன் இல்லைன்னா நான் இல்லை. அதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லாம அவனை குறை சொல்லிட்டு இருக்க. உனக்கு நீ மட்டும் சரி, மீதி எல்லாரும் தப்பு அப்படி தானே ” என்று மது கூறி முடிக்கவும். அர்ஜுனின் ஐவிரல்களும் மதுவின் கன்னத்தில் ஆழமாய் பதிந்தது .

” சொல்லிட்டே இருக்கேன் திரும்ப திரும்ப அவனுக்கு சப்போர்ட் பண்ற. ‘அவன் இல்லைன்னா நீ இல்லையா அப்போ அவன் கிட்டையே போ ‘ ” அவன் மட்டும் அன்று இல்லை என்றால் தான் உயிர் பிழைத்திருக்கவே மாட்டேன் என மது சொல்ல வந்த அர்த்தத்தை தவறாய் புரிந்து கொண்ட அர்ஜுன், மேலும் தன் வார்த்தையால் அவளை காயப்படுத்தினான் .

” என்னை பார்த்து இப்படி சொல்லிட்டல” – வார்த்தைகள் தடுமாற ஏங்கி ஏங்கி அழுது கரைந்துக்கொண்டிருந்தாள் மது.

” இங்க இருந்து போ, திரும்ப என் மூஞ்சிலையே முழிக்காத ” ஆதித்யா மீதுள்ள கோபம் அர்ஜுனை அவ்வாறு மதுவுடன் பேச வைத்தது.

சிவந்த கன்னத்தை தன் கையில் ஏந்தியவள். கண்களில் கண்ணீருடன் அர்ஜுனை நிமிர்ந்து பார்த்தாள். அவனுக்குள் சுளீரென்று வலித்தது.

 மதுவை சமாதானம் செய்ய அவன் மனம் கெஞ்சியது.ஆனாலும் ஆதித்யா மீது அர்ஜுன் கொண்ட கோபம் அவனை தடுக்க. அவனை பார்த்தபடியே அழுதுகொண்டே அவள் காரை விட்டு இறங்கியும் எதுவும் பேசாமல் அர்ஜுன் இறுக்கமாகவே இருக்க,

 ” ஏன் அர்ஜுன் கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாமே” என்ற சந்தியாவும் மது பின்னாலே சென்றாள்.

##########

தனது ஆஃபிசில் நாற்காலியில் தன் தலையை பின்னோக்கி சாய்த்தபடி கண்களை மூடி அமர்ந்திருந்த அர்ஜுனின் நினைவுகள் அவனை கடந்த காலத்திற்கு அழைத்து சென்றது.

செக்போஸ்டில் நின்றிருந்த ஆதித்யாவின் வண்டியை பரிசோதனை செய்ய உத்தரவிட்டிருந்த அர்ஜுனிடம், பரிசோதனையை முடித்துவிட்டு அர்ஜுன் அருகே வந்த காவலாளி அவனிடம் ஏதோ கூறவும்,  ஆதித்யாவின் கார் அருகே வந்த அர்ஜுன்,

” ஹலோ மிஸ்டர் ஆதித்யா வெளிய வாங்க ” என்றான் தோரணையாக

” ஏன் என்னாச்சு? “

” உங்க காரை செக் பண்ணினதுல  ட்ரக்ஸ் கிடைச்சிருக்கு. உங்களை விசாரிக்கணும். ஸ்டேஷனுக்கு வாங்க” என்றான்.

” ஹலோ என்ன பேசிட்டு இருக்கீங்க நான் யாரு தெரியுமா “

” யாரு மேன் நீ, ஹான் மினிஸ்டர் ??? ப்ரைம் மினிஸ்டர் ??? ஆர் ட்ரக் டீலர் ?” நக்கலாக அர்ஜுன் சிரித்தான்.

“இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு என்னால ப்ரூவ் பண்ண முடியும் ” என்றான் ஆதித்யா கோபமாக.

” அதை நான் சொல்றேன் இப்போ வா ” ஆதித்யாவின் தனலை கக்கும் விழிகளை இகழ்ச்சியுடன் பார்த்தப்படி அர்ஜுன் அவனது கைகளுக்கு விலங்கை மாட்டினான் .

அர்ஜுன் ஆதித்யாவை லாக்கப்பில் வைத்து நிமிடங்கள் கடப்பதற்குள் ஆங்காங்கே ரீங்காரமிட்டபடி வந்த அலைபேசியில். கோபமுற்றவன் ஆதித்யாவிடம் ,

” யாருடா நீ உன்னை விட சொல்லி மினிஸ்டர்ஸ் லெவல்ல ரெக்கமெண்டேஷன் வருது. ஆனா நல்லா கேட்டுக்கோ யாரு சொன்னாலும் சரி விசாரணை முடியாம உன்னை நான் இங்க இருந்து அனுப்ப முடியாது ” என அர்ஜுன் உறுதியாக கூறினான்.

 அப்பொழுது அர்ஜுன் அவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அவ்விடம் வந்த அவனது மேல் அதிகாரி டிஜிபி கோகுல்நாத், அர்ஜுனின் கண்கள் முன்பே லாக்கப்பை திறந்து ஆதித்யாவை ராஜ உபச்சாரத்துடன் வெளியே அழைத்து வந்தார்.

” சாரி மிஸ்டர் ஆதித்யா விசாரிச்சதுல உங்க மேல எந்த தப்பும் இல்லைன்னு தெளிவா தெரிஞ்சிருச்சு. யாரோ உங்களுக்கு வேண்டாதவங்க இப்படி பண்ணி இருக்காங்க. வீ ஆர் எக்ஸ்ட்ரீம்லி சாரி ” என்றவர் அர்ஜுனை பார்த்து கண்ணசைக்க , வேறு வழியில்லாமல் அர்ஜுன் வேண்டா வெறுப்பாக  ஆதித்யாவிடம் மன்னிப்பு வேண்டினான்.

 தன் முன்னே மன்னிப்பை வேண்டி நின்ற அர்ஜுனை பார்த்து கேலியாக இதழ் வளைத்த ஆதித்யா, இன்று  போல  அன்றும் அர்ஜுனை அலட்சியமாக பார்த்தபடி  சென்றான்.

” சார் என்ன பண்றீங்க அவன் கார்ல இருந்து ட்ரக்ஸ் நானே என் கையால எடுத்தேன். விசாரணை கூட பண்ணமா எப்படி சார் ” ஆதங்கத்துடன் தன் உயர் அதிகாரியிடம் வினவினான் அர்ஜுன் .

” அர்ஜுன் உன் நிலைமை புரியுது. மேல் இடத்துல இருந்து பிரஷர். எனக்கு மட்டும் என்ன விருப்பமா. அவனுக்கு எதிரா வலுவான ஆதாரம் மட்டும் கிடைக்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு. அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு ” என்றார்.

 அன்று துவங்கி இதோ இப்பொழுது வரை ஆதித்யாவுக்கு எதிராக ஒரு ஆதாரம் கூட திரட்டப்பட

 முடியாமல் இருப்பதை எண்ணி எரிச்சலடைந்த அர்ஜுன் பணத்துக்கு விலைபோகும் அதிகார வர்க்கங்களை எண்ணி பார்த்து வேதனை அடைந்தான்.

“அப்படி என்ன யோசனை” அர்ஜுனின் சிந்தனையை சிதறடித்தபடி அவன் எதிரே வந்து அமர்ந்தான் அவனது நண்பன் மற்றும் அவனுடன் பணி புரியும் மதன்.

” ப்ச் அதை விடு, நான் சொன்ன ஏரியாவுக்கு போனியா என்னாச்சு அதை சொல்லு ” என்றான் அர்ஜுன்.

” பெருசா நமக்கு எந்த க்ளுவும் இல்லை. ஆனா ரத்த கரையோட ஒரு புல்லட் மட்டும் கிடைச்சிருக்கு. லேப்க்கு கொடுத்திருக்கேன். ரிசல்ட் வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் “

” அவ்வளவுதான் கிடைச்சுதா இத மட்டும் வச்சு நாம எந்த முடிவுக்கும் வர முடியாது மதன் “

” ஒரு இடம் விடாம சர்ச் பண்ணியாச்சு, நீ சொன்ன மாதிரி சம்பவம் நடந்ததுக்கான எந்த க்ளுவும் இல்ல”

” சரி டா ரிசல்ட் வரட்டும்  அதுக்கிடையில நம்ம இன்வெஸ்ட்டிகேஷனை அன்அபிசியலா ஸ்டார்ட் பண்ணலாம். இப்போதைக்கு வெளில தெரிய வேண்டாம். “

” ஓகே “

” நான் இதை பத்தி ஆதித்யா கிட்ட விசாரிக்கலாம்ன்னு இருக்கேன். சந்தியா சொன்ன படி பார்த்தா ஆதித்யாவுக்கு இதுல எதுவும் தெரிய வாய்ப்பு இருக்கு”

” சரி தான் ஆனா அவன் நம்ம விசாரணைக்கு ஒத்து வருவானா? “

” கண்டிப்பா வருவான் வரலைன்னாலும் வர வச்சிடலாம் ” என்ற அர்ஜுன் அப்படியே தன் தலையை பின்னோக்கி சரித்து தனது கண்களை மூடி கொள்ள,

” என்ன இருந்தாலும் மதுவை நீ அடிச்சிருக்க கூடாது டா,  ஏன் உனக்கு இவ்வளவு கோபம் மது பாவம் டா “

” வேணும்ன்னு பண்ணல மதன், ஆதித்யா மேல உள்ள கோபம்,   அவ ஆதித்யாக்கு சப்போர்ட் பண்ணினதும் அவ பக்கம் திரும்பிடுச்சு “

” ஆதித்யா அவளை காப்பாத்திருக்கான். அதனால அவ அவனுக்கு சப்போர்ட் பண்ண தானே செய்வா, இது இயற்கை டா. அவனுக்கும் உனக்கும் உள்ள பிரச்சனை அவளுக்கு தெரியாதுல”

” நீ சொல்றதும் சரிதான், நான்தான் நிதானமா இருந்து இருக்கணும் “

” சரி பேசி அவகிட்ட பேசி மன்னிப்பு கேளு.”

” எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு டா. அம்மாக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க. மதுவை பார்க்க சங்கடமா இருக்கு “

” மது தானே நீ பேசினா புரிஞ்சிக்குவா. ஆதித்யாவை உங்களுக்கு இடையில கொண்டு வராத, அவகிட்ட தன்மையா பேசு சரியாயிடும்  ” அர்ஜுனின் தோளில் கை போட்டபடி கூறினான் மதன்.

#####

தன்னுடைய படுக்கை அறையுடன் கூடிய அட்டாச்ட் டெரஸில் இருந்த கோச்சில் கால்களை நீட்டி வசதியாக சாய்ந்து அமர்ந்திருந்த ஆதித்யாவின் மடியில் மடிக்கணினி இருந்தது.

 விழிகள் கணினியின் திரையில் நிலைத்திருந்தது. கைகள் பொத்தானை தட்டி கொண்டிருக்க ஆனால் அவன் எண்ணம் மட்டும் எங்கோ பின்னோக்கி சென்றிருந்தது.

” ஆதித்யா சரக்க சிட்டி குள்ள கொண்டு வர்றது ரொம்ப கஷ்டம் சான்ஸே இல்லை. போலீஸ் பயங்கரமா செர்ச் பண்ணிட்டு இருக்காங்க. ” நாகா பதற்றத்துடன் கூறினான் .

” ஆஹான், ம்ம்ம் ராஜாவுக்கு செக் ” சதுரங்க பலகையில் தன் கருப்பு நிற காயை நகட்டியபடி கூறியவன், நாகாவை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்துவிட்டு, மிக சொற்பமான நேரத்தில் திட்டத்தை வகுத்து விட்டு  தானே காரியத்தில் இறங்கினான்.

 தான் வகுத்த திட்டத்தின்படி தனது காரில், ஆட்கள்  மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட போதைப் பொருட்களை  தானே  வைத்துவிட்டு அர்ஜுன் நிற்கும் செக் போஸ்டுக்கு சென்று தன் திட்டப்படி மாட்டிக்கொண்டான்.

அது தெரியாமல் அர்ஜுன் அவனை அரெஸ்ட் செய்து. சரக்கையும் கொண்டு வந்த ஆளையும் பிடித்துவிட்டதாக கூறி எல்லை பாதுகாப்பை தளர்த்தி விட, ஆக ஆதித்யாவின் திட்டப்படி உள்ளே வரவேண்டிய சரக்கு உள்ளே வர, அடுத்த நொடி ஆதித்யா லாக்கப்புக்கு வெளியே இருந்தான். அப்பொழுது கோபத்தில் உக்கிரமாக சிவந்திருந்த அர்ஜுனின் முகத்தை பார்த்து இகழ்ச்சியுடன் சிரித்தான் ஆதித்யா .

” ஐ திங்க் தே லவ் ஈச் அதற்” அவங்க ஒருத்தருக்கொருத்தர் காதலிக்கிறாங்கன்னு நினைக்கிறேன் ” என்று சொன்னபடி ஆதித்யாவின் கடந்த கால சிந்தனைகளில் இருந்து அவனை மீட்டெடுத்து அவன் கைகளில் காஃபி கப்பை கொடுத்தபடி அவன் அருகில் வந்து அமர்ந்தான் நாகா .

” ரியலி ஐ டோன்ட் திங்க் சோ ” காஃபியை சுவைத்தபடி கூறினான் ஆதித்யா .

” கல்யாணம் வேற ஆகப்போகுது லவ் இல்லாம எப்படி?  கண்டிப்பா லவ் இருக்கு, என்னால அதை உறுதியாக சொல்ல முடியும். அர்ஜுன் அவ மேல பைத்தியமா இருக்கான்.  அவன் கண்ணுல காதல் தெரியுது ” ஆதித்யாவின் முகத்தை கூர்மையாக ஆராய்ந்தபடி நாகா கூறினான்.

” ஒன் சைட் லவ்க்கு பெரிய வேல்யுவ் கிடையாது நாகா ” ஆதித்யாவின் இதழில் எள்ளல் தவழ்ந்தது.

” ஆதித்யா ” அதிர்ச்சியுடன் அழைத்தான் நாகா.

” சும்மா சொன்னேன் ரிலாக்ஸ் சில் மேன். அந்த பொண்ணு மேல எனக்கு எந்த விருப்பமும் இல்லை ” மிக மிக நிதானமாக கூறினான் ஆதித்யா.

” ஆஹான் ” கேலி புன்னகையுடன் கேட்டான் நாகா.

” நாகா. ” சற்று அழுத்தமாக ஒலித்தது ஆதித்யாவின் குரல்.

” ஓகே ஆதி, சிவ குரு ஆளுங்க நம்மளை நேத்து நைட் பின்தொடர்ந்து வந்து, உன்னையும் மதுவை சேர்த்து பார்த்து, மதுவை அவன் உன் ஆளுன்னு தப்பா நினைச்சு, அவளை அவன் கொலை பண்ண பிளான் பண்ணி, நீ அவளை காப்பாத்துனது வரை ஓகே என்னால புரிஞ்சிக்க முடியுது.

ஆனா அதுக்கப்புறம் ஸ்கூல்ல ட்ராப் பண்ணி, மீட்டிங் எல்லாம் கேன்செல் பண்ணி அந்த ஃபங்க்ஷ்ன் முடியிற வரைக்கும் கூடவே இருந்ததை தான் என்னால புரிஞ்சிக்க முடியல ” மீண்டும் நாகா ஆதித்யாவை ஏறிட்டான் .

” அந்த பொண்ணு ரொம்ப பயந்து போய் இருந்தா. பார்க்க பாவமா இருந்துச்சு. என்னால அவ உயிர் ஆபத்துல இருக்கு, அதான் உதவி பண்ணினேன் அவ்வளவு தான்.”

” ஆதி அவ விஷயத்துல நீ கொஞ்சம் தள்ளியே இரு, அவளால நமக்கு பிரச்சனை தான் வரும், அவளுக்கு உதவப்போய் நாம ரிஸ்குல விழுந்திட கூடாது “

” எனக்கு தெரியும் நாகா, என் கடமையிலிருந்து என்னைக்கும் நான் விலக மாட்டேன் ” என்ற ஆதித்யா மேலும் தொடர்ந்து,

“இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரணும்ன்னா. வேற வழியில்லை சிவ குரு கூட மீட்டிங் அரேஞ் பண்ணு. மறுபடியும் அவன் அவளை ஏதாவது பண்றதுக்குள்ள இந்த பிரச்சனைக்கு நான் ஒரு முடிவு கட்டுறேன் ” என்றான்.

” ஆர் யு சீரியஸ், அது ரிஸ்க், பாய்க்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை வரும். ஏற்கனவே மதுக்காக நீ உன் உயிரை ரிஸ்க்ல வச்சதுல பாய் செம கோபத்துல இருக்காரு. உன்னை சீக்கிரமா வந்து பார்க்க சொல்லிருக்காரு. “

” வேற வழியில்லை நாகா. நான் நேர்ல போனா மட்டும் தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வரும். இப்போதைக்கு இது யாருக்கும் தெரிய வேண்டாம் ” என்றான் ஆதித்யா.

அரிமா வருவான்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!