தலையில் இருந்த புல்லுக்கட்டை கீழே போட்டவள், மாட்டை கொட்டகையில் கட்டிவிட்டு வீட்டிற்குள் வந்தாள்.
வாசலில் அமர்ந்திருந்த செம்பாவின் அன்னை அரிசியில் கல் எடுத்து கொண்டிருந்தார். மகளின் உடை நனைந்து இருப்பதைப் பார்த்த அவர்,
“என்னடி இவ்வளவு நேரம்? மழைக்கு முன்னாடி வந்திருக்கலாமே!”
“கிளம்பும் நேரத்திலேயே மழை வந்துடுச்சி அம்மா…”
“சரி, போய் துணியை மாத்திக்கோ.”
அவள் உள்ளே சென்றதை உறுதி செய்தவர் கோகியிடம்,
“என்ன கோகி, உன் தோஸ்து கோபமா போற மாதிரி இருக்கு?”
“இது புயலுக்கு முன்னாடி அமைதி அத்தை…”
“என்னடி சொல்ற?”
“அந்த மருது இருக்கானே, தோட்டத்துல வந்து செம்பாகிட்ட வம்பு இழுத்தான்.”
“அவன் தோட்டத்துக்கு ஏன்டி நீங்க போனீங்க?”
“அங்கேதான் புல்லு அதிகமா இருக்குன்னு பக்கத்து வீட்டு செல்லம்மா அக்கா சொன்னாங்க. அதான் மாட்டை ஓட்டிட்டு அங்கே போனோம்.”
“நல்லா போனீங்க. கொஞ்சமாவது அறிவு இருக்கா… அவனே எங்கே எந்த பொம்பள நிக்குறான்னு கண்ணுல விளக்கெண்ணெய் விட்டு தேடிட்டு இருப்பான். அவன் தோட்டத்துக்கே போனால் விடுவானா…?”
“அது சரி, என் மாமா எங்கே?” அத்தை
“அந்த மனுஷன் காலையிலே வீட்டை விட்டு போனார்… இன்னும் மதியம் சாப்பாட்டுக்கு கூட வரல.”
அதே நேரம், வீட்டுக்கு வெளியே இருந்து பாடும் குரல் கேட்குகிறது:
“பாட்டு பாடவா, பார்த்து பேசவா, பாடம் சொல்லவா, பறந்து செல்லவா…”
“அத்தை! இது உங்க ஆளோட குரல் தானே?”
“ஆமா. இது அவர் குரல்தான்!”
“இருங்க, நான் பாக்குறேன்…” என கோகி வெளியே எட்டிப் பார்த்தாள்.
பக்கத்து வீட்டு பாட்டியின் கையை பிடித்தபடி பாட்டுப்பாடி ஆட கத்துகொடுத்து கொண்டிருந்தார் நல்லசிவம்.
“என்ன கிழவி ஒழுங்கா ஆடு! நீ கையை பிடிச்சு ரோட்ரோலர் மாதிரி ஒரு சுத்து சுத்து… அதுதான் டான்ஸ்? கையை ஒழுங்கா நீட்டு… கொஞ்சம் பின்னாடி போ, இப்போ முன்னாடி வா ஆஹ் அப்படிதான்!”
“டேய்..! எடுபட்ட பயலே, என் கையை விடுடா முறிச்சிடாதே” என பாட்டி கதறிகொண்டிருந்தார்.
அதை பார்த்த சிரித்தபடியே கோகி “மாமோய்…” என அழைக்க…
“அட யாரு! என் மருமகளா… இதோ வர்றேன்…” என பாட்டியை விட்டுவிட்டு கோகியிடம் வந்தார்.
பாட்டியோ தப்பித்தோம் பிழைத்தோம் என வீட்டிற்குள் ஓடிவிட்டார்.
“கோகி தங்கம், என் ஆத்தா வீட்டுக்கு வந்துட்டாளா…?”
“வா மாமோய், உன் ஆத்தா உனக்குத்தான் வெயிட்டிங்.”
இருவரும் வீட்டிற்குள் வந்தனர். நல்லசிவம், திண்ணையில் அமர்ந்து, “ஆத்தா… ஆத்தா! என்னை பெத்தவளே” என சத்தம் போட்டார்.
“இரு மாமா, உன் ஆத்தா உனக்கு ஆசி வழங்க வருவாள்.” என்றால் கோகி நக்கலாக…
செம்பா வீட்டிலிருந்து கையில் சாப்பாட்டுத் தட்டுடன் வந்தாள். தந்தையின் பக்கத்தில் அமர்ந்தவள், சத்தமில்லாமல் ஒவ்வொரு வாயாக ஊட்டத் தொடங்கினாள். அவரும் அமைதியாக சாப்பிட்டார்.
கோகி அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். மருதுவின் செய்கையால் செம்பா கோபமுடன் இருக்க வேண்டும் என எண்ணியிருந்தாள், ஆனால் இங்கே நடப்பது வேறு.
அதே நேரம், கோகியின் அன்னை ராசாத்தியும் நடப்பதை பார்த்தபடியே சந்திராவின் அருகில் வந்து அமர்ந்தார்.
ராசாத்தி, நல்லசிவத்தின் உடன்பிறந்த தங்கை.
“அப்பா…”
“சொல்லு ஆத்தா.”
“நேற்று மருதுகூட வெளியே போனீங்களா…?”
“ஆமா ஆத்தா, போனேன். ஆனா நான் வரலன்னு தான் சொன்னேன். மார்க்கெட்டுக்கு போறேன், துணைக்கு வா போதும்னு சொன்னான்.” அப்புறம் சரக்கு வாங்கி கொடுத்தான்.
“நீ துணைக்குதான் போன மாமா. ஆனால், அவன் இன்னைக்கு செம்பாவிடம் தவறா நடந்துக்க பார்த்தான்.”
“என்ன சொல்ற…” என எழுந்தார்,
கோகி நடந்ததை சொல்ல சிவத்திற்கு கோபம் வந்துவிட்டது.
“இன்னைக்கு அவனா நானான்னு ஒரு கை பார்த்துட்டு வந்துறேன்!” என கோபத்தில் துள்ளினார்.
“உட்காருப்பா.” என்ற மகளின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியாக அமர்ந்தார்.
அப்பா “சாப்பிட்டல்ல தூங்கு. பக்கத்து தெருவுல தைய்க்கிறதுக்கு துணி தர்றதா சொன்னாங்க. நானும் கோகியும் வாங்கிட்டு வர்றோம். நான் வர்ற வரைக்கும் நீ இங்கேதான் இருக்கணும். சரியா?”
“சரித்தா. நான் எங்கேயும் போகல.” என அமைதியாக பதிலளித்தார்.
“அம்மா பார்த்துக்கோ” என தன் தகப்பனை பார்த்து கண்ணை காட்டிவிட்டு கோகியும் செம்பாவும் கிளம்பினர். அந்த நேரத்தில் ராசாத்தி, தன் அண்ணனின் அருகில் வந்து அமர்ந்தாள்.
“ஏன் அண்ணே இப்படி குடிக்கிற? நீ குடிக்கிறதாலதானே மருது மாதிரி பொறுக்கி பசங்க நம்ம வீட்டு பெண்ணுகிட்ட வாலாட்டுறாங்க…”
என்றவரது குரலில் விரக்தியும் வேதனையும் கலந்திருந்தது. ஆனால், நல்லசிவம் அமைதியாக இருந்தார்.
அண்ணே..! உங்கிட்ட தான் கேக்குறேன். இப்படியே கல்லை விழுங்குன மாதிரி இருந்தால் என்ன அர்த்தம்.
நான் ஏன் குடிக்கிறேன் சொல்லு…
“அதையும் நீயே சொல்லிடு” என்றார் ராசாத்தி.
“வேற எதுக்கு குடிப்பாங்க சாகறதுக்குத்தான்.”
என்னங்க..! அண்ணா…! என தன் மனைவியும், தங்கையும் பதற அதை பார்த்து சிரித்தவர்.
“பதறாதீங்க…! உண்மைய சொல்லப்போனால் என்னால் என் குடும்பத்துக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. எல்லாம் என் ஆத்தா, என்னை பெத்தவ பாத்துக்குறாள். அவளை பேச்சுக்கு ஆத்தான்னு சொல்றேன்னு நினைச்சியா, ராசாத்தி..! இல்லை, இங்க இருந்து சொல்றேன் என தன் இதயத்தை சுட்டிக்காட்டினார். என்னை பெற்றவள் சோறு ஊட்டி வளர்த்தாள். அதை இப்போது என் மகள் செய்கிறாள், அப்போ அவள் என் அம்மாதானே.
அவர் குரலில் இருந்த வலி சந்திரா, ராசாத்தி இருவரின் மனதையும் பிசைந்தது.
தொண்டையை செருமியபடி “நான் சுமக்க வேண்டிய சுமையை அவ தலையில் ஏத்திக்கிட்டாள். எல்லாரும் ஓடி விளையாடி சந்தோஷமா இருக்க வேண்டிய வயசுல, என் பொண்ணு காட்டுல களை எடுக்கவும் உரம் சுமக்கவும் போனாள். நான் நல்லா இருந்திருந்தால் என் பிள்ளைக்கு இந்த நிலைமை வருமா, என் வீட்டு இளவரசி. அவ என் மகள் இல்லை. என் குலசாமி.
தொண்டையை செருமியபடி
“ எனக்கு இரண்டும் பொம்பள பிள்ளைங்கன்னு நான் கவலைப்பட்டதே இல்லை. மூத்தவ அமைதியான குணம். கோபமே வராது அவங்க அம்மா மாதிரி. ஆனால், என் ஆத்தாவை நான் ஆண்பிள்ளை மாதிரி வளர்த்து இருக்கேன். யாருக்கும் வளைந்து போக மாட்டாள். அவ தைரியம், துணிச்சலும் அவளை காப்பாற்றும்.” இன்னும் எத்தனை நாளைக்கு என் ஆத்தாளுக்கு நான் பாரமா இருப்பேன் சொல்லு…! இப்போது கூட என் மகள் நான் குடிச்சிருக்கேன்னு வெறும் வயிரா படுக்க கூடாதுன்னு சாப்பாடு கொடுத்துட்டு போறாள். நான் இருந்து என் மகள் கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை. அதான் குடிக்கிறேன். நீ கூட உன் அண்ணண் குடிக்கிறதுக்கு காரணம் சொல்றேன்னு நினைப்ப, அப்படி இல்லை. இதோ உன் மதனி. பெரிய பணக்கார வீட்டு பொண்ணு. அந்த வீட்டோட இளவரசியா வாழ்ந்தவள். என் மேல் விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணி எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருப்பாள் தெரியுமா. உனக்கு தெரியாதது இல்லை. ஆனாலும் ஒரு நாள் கூட என் மனசு கஷ்டப்படுற மாதிரி அவள் பேசினது இல்லை. இப்படி தினம் தினம் என்னையே நினைச்சு நான் வருந்தி சாகறதுக்கு பதில் அந்த விபத்தில் என் உயிர் போயிருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டுருப்பேன். ஆனால் இப்படி முதுகு வளைந்து எந்த வேலையும் செய்ய முடியாத நிலைமை வரும்னு நான் நினைக்கலை. குடிச்சிட்டு ரோட்ல வர்ற வண்டியில் எதுலையாவது விழுந்துடலாம்னு தோணும். ஆனால் என் ஆத்தா முகத்தை பாக்காமல் என்னால் இருக்க முடியாதுன்னு ஓடி வந்துடுவேன்” என கண்ணீர் வடித்தார் நல்ல சிவம்.
அவர் குரல் கமறியது. அதில் அத்தனை வலி.
தன் அண்ணன் கலங்குவதை கண்ட ராசாத்தியும் தன் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார்.
நம்மளை வேணான்னு விட்டுட்டு போனாளே, அவளையும் நான் நல்லாதான் வளர்த்தேன். அவளை நான் குறை சொல்ற மாதிரி வளர்க்கவில்லை. அவளும் இந்த குடும்பத்துக்கு இன்னொரு தூணாகதான் இருந்தாள். என்ன ஒன்னு, நம்ம எல்லார்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம். அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்து கொடுத்திருப்போம். உன் மகன்கூட நிச்சயம் முடிந்து இரண்டு நாளில் வீட்டைவிட்டு ஓடிபோய்ட்டாள். முன்னாடியே சொல்லியிருந்தால் உனக்கு அவமானம் வந்திருக்காது. ஆனால், என் மகளால் பட்ட அவமானத்தை ஒரு நாளும் நீயும் உன் மகனும் சொல்லிகாட்டியதில்லை. எனக்கு இருந்த ஒரு குற்றவுணர்ச்சி உன் பையன் கல்யாணம் ஆகாமல் ரொம்ப நாள் இருந்ததுதான். இப்போ அவனுக்கும் கல்யாணம் முடிந்து ஒரு குழந்தையும் பிறந்துடுச்சு. அது ஒரு தாய்மாமனாய் எனக்கு நிம்மதி” பெருமூச்சொன்றைவிட்டார்.
மூத்தவள் அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை தேடி போனாள். எங்கே இருக்காளோ, என்ன பண்றாளோ, எதுவும் தெரியலை. நம்மளை தேடி வரவும் இல்லை. எங்கேயோ சந்தோசமா இருக்காள், சந்தோஷமா இருக்கட்டும். அதே மாதிரி என் ஆத்தா வாழ்க்கையை நினைச்சி நான் கஷ்டபட மாட்டேன். ஏன்னா அவள் என் குலசாமி அம்சம். அவள் தங்கமான மனசுக்கு அவள் அரசனோட அரசி மாதிரி வாழ்வாள். இன்னும் ரெண்டு மூணு நாள்ல வேலைக்கு போக போறாள். இவ்வளவு நாள் காட்டிலும் வேலை பார்த்து, ராத்திரி முழுக்க முழித்து இருந்து துணியும் தைய்த்து கொடுப்பாள். இனிமே காட்டு வேலைக்கு போக மாட்டள் இல்லை. அவளோட கை இனிமேல் மறத்து போகாதுல்ல ராசாத்தி. அதற்கு மேல் பேச அவருக்கு சுயநினைவு இல்லை மதுவின் பிடியில் இருந்தார். என் பொண்ணு நல்லா இருப்பாள், நல்லா இருக்கனும் என உளறியபடியே அதே திண்ணையில் படுத்து தூங்கினார்.
சிவத்தை பார்த்து இருவரின் மனமும் வலித்தது.
“தன் குடும்பம் தான் தனக்கு எல்லாம் என வாழ்ந்தவர் தான் நல்லசிவம். விபத்து நடப்பதற்கு முன்புவரை அவருக்கு எந்தவித கெட்ட பழக்கமும் இல்லை. அதே ஊரில் ஒரு செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவர்தான் சந்திரமதி. இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். அதனால், சந்திரமதியை அவள் குடும்பத்தினர் முழுவதுமாக ஒதுக்கி வைத்து விட்டனர். நல்ல சிவம், சந்திரமதி தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள் மனோரஞ்சிதா, இளையவள் செம்பருத்தி.
நல்லசிவத்தின் உடன்பிறந்த தங்கை ராசாத்தி. அவர் கணவர் உயிரோடு இல்லை. ஒரு மகனும் மகளும். மகன் வேலாயூதம் திருமணம் முடித்து திருப்பூரில் குடும்பத்துடன் இருக்கிறான். மகள் கோகிலா.
“ரஞ்சிதாவிற்கும் ராசாத்தியின் மகன் வேலாயுதத்திற்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. நிச்சயிக்கப்பட்ட இரண்டு நாளில் தன் மனதுக்கு பிடித்தவருடன் செல்கிறேன்” என லெட்டர் எழுதி வைத்துவிட்டு போனவள்தான் இன்று வரை இவர்களை பார்க்க வரவே இல்லை.
இரண்டாவது செம்பருத்தி. துரு துருதுருவென சுட்டித்தனம் செய்யும் பெண்ணாய் சுற்றித்திரிந்தவள். ரஞ்சிதாவின் திருமணம் நடப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்தான் நல்லசிவத்திற்கு விபத்து ஏற்பட்டது. அதில் அவர் முதுகின் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலைமை. அப்போது செம்பருத்திக்கு 16 வயது. தன் தந்தையால் வேலை செய்ய முடியாது என்பதால் தாயுடன் எல்லா வேலைக்கும் செல்வாள். நல்லசிவம் எவ்வளவு சொன்னாலும் வீட்டில் இருக்க மாட்டாள் செம்பா. அம்மாவுடன் நானும் செல்கிறேன் என சென்று விடுவாள். அந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த கசப்புகளினால் அவளின் குணமே மாறிவிட்டது. சுறுசுறுப்பு , சுட்டித்தனம் எதுவும் இல்லாமல் தன்னை இறுக்கமாக மாற்றிக் கொண்டவள். தன் தந்தைக்கு விபத்து நடந்ததினால் படிக்க முடியாமல், படிப்பு பாதியில் நிறுத்தினாள். அவள் படிக்க போகாததால் கோகிலாவும் அவளுடன் சேர்ந்து படிப்பை நிறுத்தினாள். பின் இரண்டு வருட இடைவெளி விட்டு மீண்டும் படித்து இப்போதுதான் செவிலியர் படிப்பை முடித்து வேலைக்கு செல்ல தயாராக இருக்கிறார்கள் நம் தோழிகள் இருவரும்.