உயிர் தொடும் உறவே அத்தியாயம் -07

4.8
(6)

உயிர் -07

புகழினிக்கு பாண்டியனிடம் ஈஸ்வரன் மற்றும் மீனாட்சியின் திருமணத்தைப் பற்றி பேசிவிட வேண்டும் என எண்ணம் உந்தித் தள்ளினாலும் ஏனோ அமைதியாக இருந்தாள் ‌.

 

” சரி..சரி….புகழினி நீ கிளம்பு…. நேரமாச்சு…. அப்புறம் உங்கண்ணன் அருவா எடுத்துட்டு வந்துடும்…. நானும் காலைல சீக்கிரமா கிளம்பனும். உடம்பை பாத்துக்கோ…மீனாட்சியையும் தான். ஏனோ மனசு சங்கடமா இருக்கு….சொல்லத் தெரியலை. ஏதுனாலும் உடனே எனக்கு ஃபோன் பண்ணு …” என்றவன் எக்குத்தப்பாக கலைந்திருந்த அவளது புடவையை சரி செய்யுமாறு கூறிவிட்டு அவளைக் ‌‌கிளப்பினான்.

அவளுக்கும் மனது ஏனோ பிசைந்தது. இருப்பினும் சிரித்தபடி அவனை திரும்பி திரும்பி பார்த்தபடி வீட்டிற்குச் சென்றாள்.

வாசலிலேயே  நின்றிருந்தான் ஈஸ்வரன். அவளது தோற்றம் அவனுக்கு சந்தேகத்தை விதைத்தாலும் அதனை வெளிக்காட்டாமல்‌,  “எவ்வளவு சொன்னாலும் கேட்கவே மாட்டியா நீயு…? பொழுது போய் இம்புட்டு நேரம் கழிச்சு உனக்கு என்ன அப்படி ஒரு முக்கியமான வேலை.. இராப்‌ பொழுது வயசு பொண்ணு அங்க இங்கன்னு போயிட்டு இருக்காத சொல்லிப்புட்டேன். எல்லா வாயும் நல்ல வாய் கிடையாது. கண்டதை பேசும். பாத்து சூதானாமா இரு” முறைத்துக் கொண்டே திட்டினான்.

அவளோ அதையெல்லாம்  கண்டுகொள்ளாமல்,  “அதான் நீயே சொல்லிப்புட்டியே…. எல்லா வாயும் கண்டதை பேசும்ன்னு …அப்பறம் ஏன் அதை பத்தி கவலைப்படனும். பீ கூல் ப்ரோ….” என்றபடி அவனது தோளில் கையைப் போட்டாள்.

தாய் விசாலாட்சி,

” அடி செருப்பால…எருமை மாடே…என்ன வாய் பேசுற…ஆம்பிளை பையன் அவனே அநாவசியமா நேரம் போனதுக்கு அப்பறம் வெளியே போறது கிடையாது. நீ இன்னோரு வீட்டுக்கு போகப் போறவ…இப்படித்தான் கண்ட நேரத்தில் வெளிய சுத்திட்டு வருவியா…? ரொம்ப படிச்சி டாக்குடராயிட்டோமுன்னு ஏத்தம் கூடி‌ போச்சி டி உனக்கு..‌‌அவன் உன் நல்லதுக்கு சொன்னா…அவன் மேல் கையை போட்டுட்டு நிக்கற…கையை எடுடி அண்ணனா இருந்தாலும் தொட்டு பேசாத சொல்லிப்புட்டேன்.. எடுடி‌ கையை..” என்றவர் அவளது கையை அவன் தோளிலிருந்து தட்டிவிட்டு , “ எப்பா ஈஸ்வரா….அவசியமா இவளுக்கு ஆஸ்பத்திரி கட்டனுமா…? அவளுக்கு ஏழு கழுதை வயசாகிட்டு. நல்ல வரனா பாத்து பட்டு புட்டுன்னு கல்யாணத்தை முடிச்சிடுப்பா. அவ புருசன் வீட்டுக்கு போனதுக்கப்பறம் என்ன வேணா பண்ணட்டும். கழுதை வயசாகுது இன்னும் அடுப்ப பத்த வைக்க தெரிய மாட்டேங்குது. வெளிய சொன்னா வெக்கக்கேடு. “ என அங்கலாய்த்தார்.

சுரு சுருவென கோபம் ஏறியது புகழினிக்கு ,  “எம்மா…நான் ஒரு டாக்டர் மா. ஏம்மா இப்படி கல்யாணம்…கல்யாணம்ன்னு உசிர வாங்குற. நான் படிச்ச படிப்பை கொஞ்சமாவது நினைச்சுப் பாரு  . இப்ப நான் டாக்டருங்கறதையே மறந்து‌ கல்யாணம்‌ கட்டி மாமியா‌ வீட்டுக்கு போய் பத்து பாத்திரம் தேய்க்கனும். அதான் உம்ம ஆசை. அப்படியெல்லாம் சட்டுன்னு என்னோட ஃபுரபெஷன்ன பாதில விட்டுட்டு போக முடியாது மா…பொம்பளைங்கன்னே கல்யாணம், பத்து‌ பாத்திரம்,புள்ளை பெக்குற மெஷின்னு ஒரு வட்டத்தை போட்டு அடைக்காதீக.. மூச்சு முட்டுதும்மா…. அதுக்காக நான் கல்யாணமே பண்ண மாட்டேன், பாத்திரமே கழுவ மாட்டேன், புள்ளையே பெக்க மாட்டேன்னு…சொல்லல. என்னோட ஃபுரோபஷனல் லைஃப்ல நான் கொஞ்சம் செட்டில் ஆகிட்டு அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கறேன்னு தான் சொல்றேன். கொஞ்சம் புரிஞ்சுக்க மா…அண்ணே…! சொல்லு அம்மாகிட்ட “ என அவனையும் துணைக்கு இழுத்துக் கொண்டாள்.

” என்னடி…! தஸ்ஸு, புஸ்ஸுன்னு  இங்குபீஸ்ல உளருன்னா உன்னை அப்படியே விட்டுருவேனா…வயசு ஏற..ஏற..என்னால வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்க முடியாது….ஈஸ்வரா…இவ ஆடுற ஆட்டத்துக்கெல்லாம்‌ ஆடாத‌ பா..” என தாயும் மகளும் அவனை பந்தாடினார்.

அவனோ சலிப்புடன் , “ பொழுது போனா உங்க ரெண்டு‌ பேத்துக்கும்‌ வேற வேலையே இல்லை…என்னைய வச்சே ஒரண்ட இழுங்க. “ என்றவன் தாயின் அருகில் சென்று , “ அம்மா…இங்க‌‌ பாரு…என்னால தான் படிக்க முடியாது போயிட்டு. புகழு நல்லா படிச்சி இம்புட்டு தூரம் உசந்திருக்கு. படிச்ச படிப்பை பயன்படுத்தி நம்ம ஊர்லயே ஆஸ்பத்திரி தொடங்கனும்னு ஆசைபடுது. பொம்ளை புள்ளன்னா கல்யாணம் கட்டி குழந்தை பெத்து குடும்பத்தையே செக்கு மாடு கணக்கா சுத்தி வரணுமா…? அதுக்குன்னு அதெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லல. அதுவும் வேணும். அவங்க ஆசைக்கும் நம்ம‌ மதிப்பும் கொடுக்கனும்‌. உன் புள்ளை நம்ம ஊரு‌ ஏழைபாழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பாக்கனும்.  நல்லா படிக்குற புள்ளைகளை கை தூக்கி விடனும்ன்னு ஆசைப்படுது. இந்த மாதிரி எண்ணமெல்லாம் எல்லாத்துக்கும் வராது. அது நம்ம புகழுக்கு அதிகமா இருக்கு. இதை நினைச்சு நீ பெருமை தான்‌ படணும். படிப்பெல்லாம் வரப்பிரசாதம் மா. “ என்றவன் மணக்கண்ணில் ஏனோ மீனாட்சியின் முகம் ஒரு நொடி தோன்றியது.

“அவளும் நன்றாக படித்திருந்தால்…? இந்நேரம்…?” என்று நினைத்தான்.

 

” சரிப்பு..நீ என்னவோ சொல்லுத…இந்த பழங்கட்டைக்கு அதெல்லாம் மண்டையில ஏற மாட்டக்கி….ஆனா ஒரு தாயா என்னோட ஆசைக்கும் மதிப்பு கொடுங்கப்பா…அம்புட்டுதேன்…” என சோர்வுடன் கூறி விட்டு உறங்கச் சென்றார்.  தளர்ந்த நடையுடன் அவர் செல்வதையே பார்த்தவன் பிறகு புகழினியின் புறம்‌ திரும்பி , “ இங்க பாரு ‌புகழ்…அம்மா உன்னைய‌ நெனச்சு ரொம்ப விசனப்படுது. நான் நம்மூர்ல ஆஸ்பத்திரி கட்ட இடத்தை நாளைக்கு பார்க்கப் போறேன். சீக்கிரம் வேலைய ஆரம்பிச்சிடுலாம். ஆனா அம்மாவோட ஆசையையும் நீ நிறவேத்தனும். அம்மா பாக்குற மாப்பிள்ளையை முரண்டு பிடிக்காம நீ கட்டிக்கிடனும்..” என அலுங்காமல் குண்டைத் தூக்கி போட்டான் ஈஸ்வரன்.

அண்ணனின் பேச்சில் முதல் பாதியை நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டவள் அடுத்த வாக்கியத்தைக் கேட்டு விக்கித்து தான்  போனாள். முறையாக பேச்சிழந்து நின்றாள். சொந்த வாழ்க்கையா…? இல்லை பொது வாழ்க்கையா…? என்ற‌ பெரிய கேள்விக்குறி அவள் முன் நின்றது. பிரச்சினையின் முதல் முடிச்சு விழுந்தது அன்று.

மறுநாள் மருத்துவமனை கட்டுவதற்கான இடத்தை வெறுமனே பார்வையிட்டுச்‌ சென்றான். மற்றொரு இடத்தையும் பார்த்து வைத்திருந்தான்.

நாட்கள் வேகமாக நகர்ந்தது…

லண்டன்  மாநகரம் , வெஸ்ட் மினிஸ்டர் மாகாணத்தில் அமைதியான இரவு நேரத்தில் எளிமையாகவும் நேர்த்தியாக அமைந்திருந்தது அந்த அந்த நவீன மயமான வீடு.

அந்த பிரம்மாண்டமான அறையில் தனது ஆடைகளை அடுக்கி வைத்து விட்டு பெட்டியை நிமிர்த்தி வைத்தான் ஆதித்யன்.

உள்ளூர் வேலைகளை முடித்து விட்டு இந்தியா செல்ல தயாராகி விட்டான். தனது ஃபோனை எடுத்து தனது  தாய் வடிவாம் பாளுக்கு அழைத்தான் .  இரண்டு மூன்று முறை அடித்தப் பின்னர் எடுத்தார் வடிவு ,” ஹலோ…! ஆதி சொல்லுப்பா…. எப்படி இருக்க…? கூப்புட்டு ரொம்ப நாளாச்சு …சாப்டியா…? இப்ப அங்க மணி என்ன ?” என்று நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார்.

நெடு நாளைக்குப் பின்னர் அழைத்திருக்கின்றான் மகன் என்ற பூரிப்பு அவரிடம்.

” ம்ம்… நல்லா இருக்கேன் மா…நாளைக்கு காலையில ‌நான் இந்தியா கிளம்புறேன் …நாளை மறுநாள் சாயந்திரம் வந்துடுவேன் அங்க…” என்றான்.  வடிவாம்பாளுக்கோ தலை கால் புரியவில்லை .

உடனே , ” அப்படியா…! ரொம்ப சந்தோசம் ‌ராசா…இவ்வளவு வருஷம் கழிச்சு இப்பதான் உனக்கு இங்கன‌ வர வழி தெரிஞ்சிருக்கு….ம்ம்…சீக்கிரம் வா ராசா‌.. உனக்காக காத்திருக்கோம் யா…” என்றார் வடிவு.  அதைக் கேட்டு‌ நெற்றியை சுருக்கியவன்‌ ,” ம்ம்..சரி வச்சிடுறேன்…” என்று கூறி விட்டு அவரது பதிலைக் கூட எதிர்பாராமல் வைத்து விட்டான்.

தனது ஆப்பிள்  ஐஃபோனை திறந்து கேலரியில் அவளது புகைப்படத்தை பார்த்தான். அதில் அழகாக சிரித்தபடி தனது நீண்ட பின்னலை முன்னே விட்டு இருந்தாள் மீனாட்சி.

அவனது விரல் அவளது கன்னத்தை வருடியது. மனதில் ஏதேதோ எண்ணம், சொல்ல முடியாத வலி ஊடுருவி சென்று இதயத்தை பலமாகத் தாக்கியது. பள்ளிப் பருவத்திலேயே முளைவிட்ட அவனது நேசம் இன்றும்  உறுதியான ஆலமர வேர் போன்று போல் நன்றாக இதயம் முழுவதும் படர்ந்து உயிரை பிடித்து நிறுத்தியிருந்தது .

அவளை விட்டுக் கொடுத்தால் அவனது உயிரை வேரோடு பிடுங்கி ஏறிந்துவடும் வலி ஏற்படும் என்பது மட்டும் நிச்சயம். தவிப்போடும்‌ ஏக்கத்தோடும தினம் தினம் அவன் எறிந்து சருகாகிக் கொண்டிருக்கின்றான்

அன்று மீனாட்சி ஈஸ்வரனின் கைகளை பிடித்துக்கொண்டு நெருக்கமாக அமர்ந்திருந்த கோலம் இன்றும் அவனது பல இரவுகளை தின்று தீர்க்கிறது. அவள் மனதில் வேறு ஒருவன் என்ற எண்ணமே அவனை நெருப்பாக தகிக்கச் செய்தது. அந்த ஜுவாலையின் உஷ்ணத்தை அவனால் தாங்க முடியாமல் மது ,மாது என்று அனைத்தையும் முயன்று பார்த்தான்.

காதல் நோயின் உக்கிரத்தை எந்த போதை வஸ்துவாலும் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. அனைத்தும் அவன் மன உறுதி முன்பு தோற்றுதான் ‌போனது.

தன்னையே மூழ்கடித்து கொள்ள பல நாடுகளில் தனது வியாபாரத்தை விரிவு படுத்தினான்.

லண்டனிலிருந்து பல ஊர்களுக்கு பயணித்துக் கொண்டே இருந்தான். கோடிகளில் புரண்டாலும் அவனது மனம் எதிர்பார்ப்பது அவளது உள்ளத்தில் தனக்கான சிறிய இடத்தை மட்டுமே . இறுகிப் போயிருந்த அவனது இதயத்தில் மெல்லிய பனிச்சாரலாய் அவளது நினைவுகளே.

அங்கிருந்தால் கண்டிப்பாக ஏடாகூடமாக ஏதேனும் செய்து அவளை காயப்படுத்தி விடுவோம் என்பதினாலேயே பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஓடி வந்து விட்டான்.

தனக்கான அடையாளத்தையும் தொழில் சாம்ராஜ்யத்தையும் வெறி கொண்டு அவன் உருவாக்கியிருப்பதற்கு முக்கிய காரணமே தொழிலில் தன்னை மூழ்கடித்து கொண்டாலாவது மீனாட்சியை மறந்து விட முடியுமா என்ற நப்பாசை தான். அசுரத்தனமான வளர்ச்சியே அவனது காதலின் மூர்க்கத்தை எடுத்துரைக்க போதுமானதாய் இருந்தது.

 

அவளது சாதவீக முகமானது அவனை தினமும் கொன்று தின்கிறதே . ஈஸ்வரனுடன் அவளை இணைத்து பார்த்தற்கே இதயத்தில் ஆயிரம் கோடரிகளால் வெட்டியது போன்றதொரு வலி . தான் மட்டுமே அவளுள்ளததில் இருக்க வேண்டும் என்ற பேராசை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது.

ஈஸ்வரனை‌ப் பிரிந்தால் அவள் துன்பப்படுவாள் , அவளை விட்டுக்கொடுததால் அவனுள் தகிக்கும் நெருப்பு அவனை சுட்டெரித்துவிடும்.

மனத்திற்கும்‌ புத்திக்கும் இடைய‌ அல்லாடினான் ஆதித்யன்.  அழகியப் பெண்ணை ஆசையுடன் மோகித்துக் கொண்டாடினாலாவது அவளது நினைவு காமத்தின் வாசல் முன்பு மறைந்து போகும் என்று நினைத்து அவனை சுற்றி வந்த பெண்ணை தனதறைக்கு வரவழைத்து சல்லாபிக்க எண்ணினான்.

வன்மையான முத்தத்தை தவிர அவனால் அப்பெண்ணிடம் மேலே முன்னேற முடியவில்லை.

மீனாட்சியை தவிர எந்தப் பெண்ணையும் அவனது புத்தியும் மனமும் ஏற்க‌ தயாராக இல்லை. யோசனையில் மூழ்கியிருந்தவனது அலைப்பேசி அலறியது. எடுத்து

 காதில் வைத்தான் .

“ ஏன்டா…! எருமை என்னோட டிக்கெட் கன்பார்ம் ஆச்சா…எத்தனை தடவை கால் பண்றது.. என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ…இந்த தடவை கண்டிப்பா இந்தியா போயாகனும் டா.. ஹலோ…! லைன்ல இருக்கியா டா எருமை மாடே..” என படபடவென்று பொரிந்தாள் அவனது ஆரூயிர்த் தோழி‌ , நலம் விரும்பி, ஆலோசகர் என அனைத்துமாக இருக்கும் நேஹா.

ஆதித்யனோ ,

“ஹேய்…லூசு‌ கன்பார்ம் ஆயிடுச்சுன்னு மெசேஜ் பண்ணினேனே பாத்தியா …? இல்லையா…? “ என்றான்.

 

” ஒரு நிமிஷம்….!” என்றவள் தனது அலைப்பேசியைப்‌ பார்த்து விட்டு, “ஒ.‌.ஓகே…!நேத்து நைட்டே போட்டுட்டியா… ஹி..ஹி.. சாரி..சாரி நைட் ஹாங் ஓவர் அதான்…ஹி.ஹி…சாரி “ என இழுத்தாள்.

 

” அவ்வளோ ஹாங்க் ஓவர் ஆகுற அளவுக்கா குடிப்ப..? பிசினஸ் ரன்‌ பண்றவ கொஞ்சம் கவனமா‌ இரு. அவ்வளவு தான் சொல்லுவேன்…” என‌ நாகரீகமாக அவளது பாதுகாப்பினை பற்றி எடுத்துரைத்தான்.

” மன்திலி ஒன்ஸ் டா …நேத்து அம்மா அப்பா நியாபகம் ரொம்ப வந்துடுச்சு… லோன்லியா ஃபீல் பண்ணுனேன். அதான். சரி ஓகே… எல்லாம் ரெடி பண்ணிடுறேன். ஆஃபிஸ் ஒர்க் எல்லாம் ஷேர்‌ பண்ணி கொடுத்திட்டேன். டூ மன்த்ஸ் ஐ யம் ஹேப்பி பேபி….”. என்று கூறி விசிலடித்தவள்‌ , திடீரென ‌” ஹேய் ..நான்‌ வர்றது உங்க பேரண்ட்ஸ்கு தெரியுமா…? கன்பார்ம் பண்ணிட்டியா…பாவம்‌டா நீயும் நானும் ஜோடியா‌ வந்தத பாத்து பயந்துபட்ட போறாங்க.” என கேட்டாள்.

” இல்ல நேஹா.. பாத்துக்கலாம்…இதெல்லாம் போய் எதுக்கு சொல்லிட்டு…? எனக்கு தூக்கம் வருது….ஏர்லி மார்னிங் த்ரீயோ க்ளாக் பீ ரெடி. ஐ வில் கம் அண்ட் பிக் அப் யூ‌..பை குட் நைட்.” அவ்வளவு தான் பேச்சு என்பது போல் அலைப்பேசி மை அணைத்து விட்டான்.

 “அவசரத்துக்கு  புறந்தவன்…” என‌ முணுமுணுத்து விட்டு தனது வார்ட் ரோப்பிலிருந்து அனைத்து உடைகளையும் களைத்து போட்டுவிட்டு தேவையானவற்றை மட்டும் எடுத்து வைத்து விட்டாள்.

இந்தியா செல்வதற்கு அனைத்து அலுவலக வேலையையும் முன்பே முடித்து வைத்து விட்டு தனது காரியதரிசியான ஃப்ளோராவிடம் முக்கிய‌ ஃபைல்களை ஒப்படைத்து விட்டாள். அலாரத்தை வைத்துவிட்டு உறங்கிப்போனாள்.

நேஹாவினுடைய பெற்றார் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஒரு விபத்தில் சிக்கி இறந்து பேனார்கள். இருவரும் இந்தியர்கள் தான். தங்களுடைய வியாபாரமான குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டு பொருள் தயாரித்தல், குழந்தைகளுக்கான லோஷன், சோப், பவுடர், மசாஜ் செய்யும் எண்ணெய் என ஆதி முதல் அந்தம் வரை குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒருங்கே தயாரித்து சந்தைப்படுத்தினார்கள்.

இந்தியாவில் தலைமை அலுவலகம் இருந்தாலும் லண்டனில் தங்களுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்கள் நேஹாவின் பெற்றோர்கள்.

நேஹாவின் தாய் பத்மினியும் சிறந்த தொழிலதிபராய் இருந்தவர் தான். தந்தை மோகன் திருவாரூரில் பிறந்தவர் . குடும்ப வியாபாரமான குழந்தைகளுக்கான விளையாட்டு மரச்சாமான்கள் தயாரிப்பினை தான்‌ படித்து முடித்த பிறகு அடுத்த நிலைக்கு கொண்டு சென்றார். வியாபார விஷயமாக வெளியூர் சென்றிருந்த போது பத்மினியின் ஆளுமையிலும் , அறிவிலும் வியந்து அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பத்மினியின் குடும்பம் மோகனது குடும்பத்தை விட பல மடங்கு செல்வச் செழிப்பு மிக்கது. எனவே பத்மினியின் குடும்பம் அவர்களை ஒதுக்கி வைத்து விட்டார்கள். சிறிது சிறிதாக தனது வியாபாரத்தை விரிவிபடுத்தினார் மோகன்.

பத்மினியின் ஆலோசனையினால் பிறந்த குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வியாபாரத்தில் இணைத்து நன்றாகவே விரிவுபடுத்தினார்.

நேஹா பிறந்து சில ஆண்டுகள் வரை இந்தியாவில் இருந்தவர் ,மோகனது பெற்றோர் இறந்த பிறகு லண்டனில் குடியேறினார்கள்.

நேஹாவின் கல்லூரி காலத்தில் நட்பானவன் தான் ஆதித்யன். இறுக்கமாய் இருப்பவனை கலாய்த்து, தொண தொணவென‌ பேசி நட்பு பாராட்டினாள். மீனாட்சியின் நினைவில் இருந்தவனது மனம் சிறிது சிறிதாக நேஹாவின் கலகல பேச்சிலும் தூய்மையான நட்பிலும்‌ இளகத் தொடங்கியது.

அவனும் அவளுடன் இயல்பாக பேசிப்‌பழகத் தொடங்கினான். இன்று‌ வரை ஆரோக்கியமான நட்பாக தொடர்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கோர‌‌ விபத்தில்‌ பெற்றோரை இழந்தாள்‌ நேஹா. இடிந்து போயிருந்தவளுக்கு பக்க பலமாக ஆதித்யன் ‌தான் கூட இருந்து அனைத்து காரியங்களும் செய்தான்.

வியாபாரத்த்தின் நுணுக்மான விஷயங்களையும் அவளுக்கு கற்றுத் தந்து அவளுக்கு உதவினான். முன்னமே அவள்‌‌ புத்திசாலி தான் ஆனாலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான வியாபாரத்தை கட்டி ஆளும் மிகப்பெரிய பொறுப்பு அவள் தலையில் விழுந்தது.

சற்று அதிகமான பாரம் தான் , ஆனாலும் ஆதித்யன் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவளுடனேயிருந்து பொறுப்புகளை பிரித்து குழந்தைகளுக்கான ஒவ்வொரு பிரத்யேகமான பிரிவுகளுக்கும் தகுதியான ஆட்களை நியமித்து வரவு செலவுகளை சரிபார்த்து, ஒவ்வொரு பிரிவின் சந்தை நிலவரத்தை துல்லியமாக கணித்து விலை பட்டியலை மாற்றியைமைத்து , விளம்பர பிரிவில் சில புதுமையான யுக்திகளை புகுத்தி அனைத்திலும் ‌மாற்றத்தை கொண்டு வந்தான்.

அவளின்‌ பாதுகாப்பிற்காக தனக்கு விசுவாசாமான இருவரை அவளுக்கு காரியதரிசியாய் நியமித்தான்‌ .

குருவி தலையில் பனங்காயின் பாரம் சுமக்கக் கூடியதாக மாற்றியமைத்தான்.

அவனது செயலையும் திறமையையும் கண்டு வாயடைத்து போய் ‌நின்றாள். நேஹா.

” யூ ஆர் ஜஸ்ட் அமேசிங் மேன்….! , நீ என்ன ரோபாவா…? ஒரே நேரத்துல உன் கம்பெனியையும் ‌பாத்துக்குற என்னோடதையும் பாத்துக்குற .. யப்பா…உன்னை கட்டிக்கப்‌ போற‌ பொண்ணு ரொம்பவே லக்கி…” என்பாள்.

 

அவனோ அதற்கெல்லாம்  சற்றும்‌ அலட்டிக்‌ கொள்ளாமல்‌ “ ஐஸ் வைக்காத..” என்றபடி‌‌ சிரிததுக் கொண்ட சென்றுவிடுவான்.

நேஹாவிற்கு ஆதித்யன் இந்த இரண்டு வருடங்களில் நல்ல தோழன்‌ என்பதைத் தாண்டி தாயும் தந்தையுமாக ஆகிப்‌ போனான். அன்பாக பேசத் தெரியாது ஆனால் அவனது ஒவ்வொரு செயலும் அவனது அவள் ‌மீதான அக்கறையை எடுத்துரைப்பதாக இருக்கும்.

எந்த உணர்வுகளையும் அவ்வளவு எளிதில் வெளியிடவே மாட்டான். வெளியிடவும் தெரியாது என்பதைப் போல் தான் ‌இருந்தான்.

மறுநாள் நேஹா மற்றும் ஆதித்யன் லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து இந்நியாவிற்கு விமானம் ஏறினார்கள்.

இங்கு  புகழனிக்காக மருத்துவமனை கட்டுவதற்கான இடத்தை பார்க்கச் சென்றிருந்தான் ஈஸ்வரன். இடம் அவனுக்கு திருப்தியாக இருந்தது. நிலத்தினுடைய பட்டா எல்லாவற்றையும் சரி பார்த்து கொண்டான்.

அன்று மாலையே புகழினியையும் தனது தாயையும் அழைத்துக் கொண்டு இடத்தை காட்டினான். அவர்களுக்கும் திருப்தியாக இருந்தது. சில வாரங்களில் கட்டிட வேலையை ஆரம்பித்து விடலாம் என்ற முடிவு செய்தனர். புகழினி மகிழ்ச்சியான ச செய்தியை உடனே பாண்டியனுக்கு அலைப்பேசியில் பகிர்ந்து கொண்டாள்.

அவனும் தனது மகிழ்ச்சியை முத்தங்கள் மூலமாக வெளிப்படுத்தினான். தனது சிறு வயது ஆசை ,லட்சியம் நிறைவேற போகின்றது என்பதே புகழனிக்கு‌ ஒரு வித பரவசத்தைக் கொடுத்தது.

பண பலத்தை காட்டுவதற்காகவும் , கவுரவத்தை நிலைநாட்டுவதற்காகவும்‌‌ , முக்கியமாக வருமானத்தை பெருக்குவதற்காக பல செல்வந்தர்கள் பல கோடிக்கணக்கான பணத்தை இறைத்து கட்டப்படும் கட்டிடத்திற்கு மத்தியில் ‌, அடிமட்டத்தில் இருந்து தனது வாழ்க்கையை ஆரம்பித்து , இரத்தத்தை வியர்வையாக சிந்தி , இரவு பகல் பாராது பல வருடங்களாக கடின உழைப்பால் சேமித்த பணத்தில் புனிதமான மருத்துவமனை கட்டிடத்தை எழுப்புவது என்றால் வியக்கத்தக்க விஷயமன்றோ…? .தனது தங்கையின் லட்சியமான ஏழைகளுக்கு தங்களுடைய ஊரிலேயே இலவச மருத்துவ சேவை ஏற்படுத்த தூணாக நின்றவனை யாருக்குத் தான் பிடிக்காது போகும்…?

அத்தகைய உன்னதமானவனையும் வெறுத்து ஒதுக்கும் நாள்‌ வரும் என்று கனவிலும் யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள்.

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!