எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே

4.5
(13)

புயல் – 3

“என்ன உளறுர” என்ற சூரிய பிரசாத்தின் வார்த்தையில், “நான் ஒன்னும் உளறல உண்மையை தான் சொல்றேன். இவர் என்னை தப்பா டச் பண்ணாரு அதனால் தான் நான் அடிச்சேன்” என்று கூறியவளுக்கு அவர்கள் இருவரின் மீதும் அத்தனை கோபம் வந்தது.

தப்பு செய்தது அவன் ஆனால் கேள்வி கேட்பது என்னையா.. என்னை ஏதோ குற்றவாளி போல் நிற்க வைத்து கேள்வி கேட்கிறானே என்று எண்ணுகையில் சூரிய பிரசாத் மீதும் அத்தனை ஆத்திரம் வந்தது.

ஆண்கள் அனைவருமே இப்படி தானே சபல புத்தி கொண்ட சைக்கோக்கள் இதில் இவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா என்று தான் அவளுக்கு எண்ணத் தோன்றியது.

“டேய் மச்சான் என்னை பாத்தா அப்படிப்பட்டவன் மாதிரியாடா தெரியுது. நான் ரொம்ப டீசன்டான ஃபேமிலி டா ரொம்ப ஒழுக்கமானவன்.. இதுவரைக்கும் தப்பா எந்த ஒரு பொண்ணையும் பார்த்தது கூட கிடையாது. என்ன சிஸ்டர் என் மேல போய் இப்படி ஒரு பழியை போடுறீங்களே” என்றான் தன் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.

“பொய் சொல்லாத நீ தான எனக்கு பின்னாடி நின்னுகிட்டு இருந்த அப்போ நீ தான் அப்படி நடந்துக்கிட்ட”.

“வில் யு ப்ளீஸ் ஷட் யுவர் மவுத்! என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல.. அவன் என்னுடைய பிரண்டு அவன் மேலேயே இவ்வளவு பெரிய பொய் புகாரை சொல்றியா.. அவன் எப்படிப்பட்டவன் என்று எனக்கு தெரியும்” என்றவன் அவளை மேலிருந்து கீழ் இளக்காரமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு நக்கலாக சிரித்தவன்.

“என்ன பணத்துக்காக இப்படி எல்லாம் டிராமா பண்றியா” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.

அவனின் வார்த்தைகளில் அவளுக்கு தான் பெரும் அவமானம் ஆகிப்போனது. இன்னும் எத்தனை அவமானங்களை தான் இப்படி சந்திக்க வேண்டும்.

‘பணத்துக்காக நடிக்கிறேனா.. தன்னிடம் ஒருவன் அத்துமீறி உள்ளான் அதற்கு பதிலடி கூட நான் கொடுக்க கூடாதா.. யார் என்ன செய்தாலும் வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்க நான் என்ன ஜடமா’ என்று ஆத்திரமாக வந்தது.

என்ன செய்ய முடியும்.. அவளின் கோபத்தையும், ஆத்திரத்தையும் கண்ணீரால் மட்டும் தானே அவளால் காட்ட முடிகிறது. இப்பொழுதுமே கண்களில் கண்ணீர் கோர்த்துவிட்டது விட்டால் கொட்டி விடும் நிலை தான்.

“ஹேய்.. இந்த அழுது டிராமா பண்ற வேலை எல்லாம் வேண்டாம். நீ அதிரடியா பேசினாலும் சரி.. அழுது டிராமா பண்ணினாலும் சரி.. ஒரு பைசா கூட உனக்கு கிடைக்காது. ஜஸ்ட் கெட் அவுட்” என்றான் உறுமலாக.

“நான் எதுக்காக அழுது டிராமா பண்ணனும். உங்களுடைய பணம் ஒன்னும் எனக்கு தேவையே இல்லை. எனக்கு நடந்த அநியாயத்துக்காக தான் நான் இவரை அடிச்சேன். ஆனா நீங்க என் மேலேயே பொய் பழி சுமத்துறீங்க.. நான் ஒன்னும் பணத்துக்கு அலையுறவ கிடையாது. நான் இங்க வந்ததே ஒரு இன்டர்வியூக்காக தான்”.

“இவ்வளவு நடந்த பிறகும் உனக்கு இந்த வேலை கிடைக்கும்னு நீ நம்புறியா?” என்றான் தன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி கேள்வியாக.

“என்ன சார் பேசுறீங்க.. தப்பு பண்ணது அவரு எந்த தப்பும் பண்ணாம எனக்கு எதுக்காக தண்டனை கொடுக்குறீங்க. எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம் இது மட்டும் இல்லைன்னா..” என்றவளுக்கும் அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைத்துப் போனது.

இந்த வேலை மட்டும் இல்லை என்றால் அவளை மொத்தமாக கூறு போடவே இருவர் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதை பற்றி எல்லாம் எப்படி அடுத்தவர்களிடம் விளக்கி கூற முடியும்.

அவளுக்கு பதில் கொடுக்க வேண்டி தன் வாயைத் திறந்த சூரிய பிரசாத்தை நோக்கி குனிந்த ராம்குமார் கிசுகிசுப்பான குரலில், “மச்சான் அந்த பொண்ண பார்க்கவே ரொம்ப பாவமா இருக்குடா.. அவ சொல்றதெல்லாம் பொய் மாதிரி தெரியல. நாம எதுக்கும் சிசிடிவி கேமராவை செக் பண்ணி பார்க்கலாம். செக் பண்ணி பார்த்தா இந்த பொண்ணு நடிக்கிறாளா இல்லையானு தெரிந்திட போகுது”.

அவனை முறைத்து பார்த்த சூர்யா, “இருந்தாலும் நீ ரொம்ப நல்லவன் தான். வேணும்னா அந்த பொண்ணு கிட்ட போய் இன்னொரு கன்னத்தையும் காட்டி அடி வாங்கிட்டு வா. ஆனா உன் அளவுக்கு நல்லவன் நான் கிடையாது. அவ மூஞ்சியை பாத்தாலே தெரியல அவ நடிக்கிறானு”.

“இல்லடா எனக்கு என்னமோ அந்த பொண்ணு சொல்றது உண்மையா இருக்குமோனு தோணுது. நம்ம எதுக்கும் ஒரு தடவை சிசிடிவி கேமராவை செக் பண்ணி பார்க்கலாமே” என்று அவளுக்காக பரிந்து பேசினான்.

அவனின் லேப்டாப்பிலேயே இருவரும் சேர்ந்து சிசிடிவி கேமராவையும் சரி பார்த்தனர்.

ஆம், அவள் கூறியது போலவே அவளுக்கு பின்னிருந்து ஒரு கை நீண்டு அவளின் இடையை அழுத்தமாக பற்றி இருந்தது. ஆனால் அந்த கைக்கு சொந்தக்காரன் ராம்குமார் கிடையாது.

அவர்களின் அலுவலகத்தில் பணி புரியும் மற்றொரு ஆள். வீடியோவில் இக்காட்சியை பார்த்த சூரிய பிரசாத்திற்கோ கோபத்தில் முகமே சிவந்துவிட்டது.

இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் சம்பாஷனைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வேதவள்ளிக்கோ ஒன்றுமே விளங்கவில்லை.

சட்டென்று சூரிய பிரசாத்தின் முகம் சிவந்து இறுகிப்போக தன் எதிரே இருந்த டேபிளின் மீது வேகமாக தன் இரு கைகளையும் அடித்தவன் கோபமாக எழுந்து நின்றான்.

“டேமிட்! அந்த இடியட்டை உடனே இங்க வர சொல்லு” என்றவன் கோபத்தில் அழுத்தமாக தன் தலையை கோத.

அவனின் ருத்ர தாண்டவத்தை பார்த்து அரண்டு போன வேதவள்ளியோ இரண்டு அடி பின் வைத்து நகர்ந்தவள். வெளிப்படையாக வெடவெடக்கும் தன் கைகளை அழுத்தமாக கோர்த்துக்கொண்டு நின்று இருந்தாள்.

சற்று நேரத்தில் ஒருவன் இவர்கள் இருக்கும் அறைக்குள் நுழைய.

இரண்டே எட்டில் தாவிச் சென்று அவனின் சட்டை காலரை பற்றிய சூரிய பிரசாத், “இடியட்! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தால் ‌என் ஆபீஸ்குள்ளயே ஒரு பொண்ண ஹராஸ் பண்ணி இருப்ப” என்றவாறு அவனின் கன்னங்களில் மாறி மாறி அறைந்தான்.

எதிரில் நின்றவன் நிலை குலைந்து போய், “ஐயோ சார் என்னை மன்னிச்சிடுங்க!” என்று கண்ணீரோடு கையெடுத்து கும்பிடவும்.

“உன்னால இங்க எவ்வளவு பெரிய குழப்பம் நடந்திருக்குன்னு தெரியுமா.. சம்பந்தமில்லாமல் ராம் எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்டு இருக்கான். ஆனா எல்லாத்தையும் செஞ்சுட்டு ஒன்னும் தெரியாதவன் மாதிரி நீ சுத்திக்கிட்டு இருக்கியா..

இதுக்கப்புறம் என் கண்ணுல நீ பட்ட நீ உயிரோடவே இருக்க மாட்ட.. டேய் இப்போவே இவனை வேலையை விட்டு அனுப்பிவிடு” என்றது தான் தாமதம் அவனின் கால்களை கட்டிக்கொண்டவன், “ஐயோ சார் இந்த வேலையை நம்பி தான் என் குடும்பமே இருக்கு. இந்த வேலை போயிடுச்சுன்னா நாங்க எல்லாம் நடுத்தெருவில் தான் நிக்கணும்.

ஏதோ சபலத்தினால் அப்படி ஒரு தப்பு பண்ணிட்டேன். தப்பு தான்.. என்னை மன்னிச்சிடுங்க சார்.. உங்க கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுக்குறேன் வேலையை விட்டு மட்டும் அனுப்பிடாதீங்க”.

அவனிடமிருந்து தன் காலை உதறியவன், “ச்சீ.. என்னை தொடாத.. எவ்வளவு தைரியம் இருந்திருந்தா இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருப்ப. என்கிட்ட வேலைக்கு வரவங்க கூட நேர்மையா உண்மையா இருக்கணும்னு நினைக்கிறவன் நான்.

முக்கியமா இங்க வேலை பாக்குற சக பெண்களுக்கு மரியாதை கொடுக்கணும். ஆனா இப்படி ஒரு காரியத்தை செஞ்ச பிறகு இனி உனக்கு இங்க ஒரு நிமிஷம் கூட இடமில்லை” என்றவனோ உடனே செக்யூரிட்டியை அழைத்து அவனை வெளியேற்றி இருந்தான்.

அவனின் வார்த்தையில் இத்தனை நேரம் அவனின் மேல் இருந்த பிம்பம் வேதவள்ளிக்கு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அவனின் மேல் சற்று மரியாதையும் கூடியது.

அதிலும் பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற அவனின் வார்த்தை அவளின் கண்களையே கலங்கச் செய்தது.

அவனை வெளியேற்றிய பிறகும் கூட சூரிய பிரசாத்திற்கு கோபம் அடங்கவில்லை. தனக்கு முன் இருந்த டேபிளில் கை குற்றி நின்றவன் தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்ப.

வேத வள்ளியோ இவனையே மிரட்சியாக பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள்.

“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?” என்றான் தன் முன்னே நிற்பவளை நோக்கி.

அவனின் திடீர் சாடலில் அவனை புரியாமல் பார்த்தாள்.

“என்ன பாக்குற.. உன்னால் தான் இப்போ இவ்வளவு பெரிய பிரச்சனை”.

“நான் என்ன சார் பண்ணேன்?” என்றவளுக்கு அவனை பற்றிய புரிதல் சற்றும் இல்லை.

இப்பொழுது தான் இவளின் சார்பாக ஒருவனிடம் சண்டையிட்டான். இப்பொழுது திடீரென தன்னையே சாடுகிறானே என்று புரியாமல் பார்த்தாள்.

“நீ மட்டும் அந்த இடத்துல கொஞ்சம் நிதானமா யோசிச்சு செயல்பட்டு இருந்தா என் பிரண்டு எல்லார் முன்னாடியும் அசிங்கப்படாம இருந்திருப்பான்”.

அவளுக்குமே ராம்குமாரின் நிலை இப்பொழுது நன்றாக விளங்கியது. எந்த தவறும் செய்யாமல் அவன் அனைவரின் முன்பும் அவமானப்பட்டு விட்டானே என்று எண்ணியவள்.

“என்னை மன்னிச்சிடுங்க அண்ணா.. என் மேலயும் தப்பு இருக்கு கோவத்துல என்ன பண்றோம்னு தெரியாம பண்ணிட்டேன்” என்று உண்மையிலேயே தன் மனம் வருந்தி அவனிடம் கரம் கூப்பி மன்னிப்பு கேட்டாள்.

“தெரியாம தானே பண்ணீங்க விடுங்க..”.

வேறு என்ன சொல்ல முடியும். எப்படி பார்த்தாலும் அந்த பெண் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் அல்லவா.. அவளின் நிலையிலிருந்து சிந்தித்தான் ராம்குமார் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

“என்னடா விடுங்க.. பெரிய தியாகி இவரு.. யாரு என்ன பண்ணாலும் அதை அப்படியே வாங்கிப்பாரு” என்று தன் நண்பனை திட்டியவன்.

வேதவள்ளியை நோக்கி, “லுக்! உன்னால என் பிரண்டு அத்தனை பேர் முன்னாடி அவமானப்பட்டு தலை குனிஞ்சு நின்னு இருக்கான். என் கம்பெனியுடைய ஸ்டாப்க்கும் வேலை போய் இருக்கு”.

“சார் அவர் என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டதுக்காக தானே நீங்க அவரை வேலையை விட்டு அனுப்புனீங்க” என்றாள் புரியாமல்.

“இங்க பாரு உனக்காக ஒன்னும் நான் அவனை வேலையை விட்டு அனுப்பல. எனக்குன்னு ஒரு ரூல்ஸ் இருக்கு அவன் அதை ஃபாலோ பண்ணல அதனால் மட்டும் தான் அவனை நான் வேலையை விட்டு அனுப்பி இருக்கேன். உனக்காக நான் ஏன் செய்யனும்” என்றான் விட்டேற்றியாக.

தன் நிலையில் அவன் சரியாக இருக்க.. அவனை புரிந்து கொள்ள முடியாமல் தத்தளித்தது பேதையின் மனம்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!