அவள் அவனையே அதிர்ந்து பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள். அவளால் சற்றும் நிலை கொள்ளவே முடியவில்லை..
நடந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை..
ஒரு நொடி அவளின் மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது.
எதை பற்றியும் சிந்திக்கவும் முடியவில்லை..
தன்னை சுற்றி நடப்பதை தனக்குள் உள்வாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. ஏதோ பித்து பிடித்தவள் போல் நின்றிருந்தாள்.
அவளின் தோளை சுற்றி தன் கையை போட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டவன், “இப்போ இவ மேல எல்லா உரிமையும் எனக்கு மட்டும் தான் இருக்கு. இவ என்னோட பொண்டாட்டி! இவ மேல இனி எவனோட மூச்சு காத்தாவது பட்டுச்சு அப்புறம் அவனோட மூச்சையே நிறுத்திடுவேன்” என்றான் கர்ஜனையாக.
சூரியா தாலியை அணிவிக்க சென்ற நொடியே பல கேமராக்கள் அங்கே நடக்கும் சம்பவத்தை தங்களுக்குள் உள்வாங்க தொடங்கி விட்டது.
ஏதோ சினிமா காட்சியை பார்ப்பது போல் சுற்றி நின்று இவர்களை வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டனர்.
சட்டென்று அவன் தாலியை கட்டியது வேதவள்ளிக்கு மட்டும் அதிர்ச்சி அல்ல..
பிரேமும் அக்ஷ்ராவும் கூட அதிர்ந்து தான் பார்த்தனர்.
அதிலும், அக்ஷ்ராவிற்கு இதனை சற்றும் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. தான் அவனை விட்டு பிரிந்தது முதல் அவன் தன்னை நினைத்தே உருகுவான் என்று கர்வமாக எண்ணிக் கொண்டிருந்தாள்.
இத்தனை நாட்கள் அவனும் அப்படி தானே இருந்தான். ஆனால் இன்று அவளின் அத்தனை கர்வமும் ஒரே நொடியில் தகர்த்தெறியப்பட்டதை அவளால் சற்றும் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
அந்த கோபம், ஆத்திரம் அப்பட்டமாக அவளின் முகத்தில் தெரிந்தது.
இவர்களையும் தாண்டி பேரதிர்ச்சியோடு அதிர்ந்து விழித்தது இரு விழிகள்..
அது வேறு யாரும் அல்ல சடகோபன் தான்.
எப்படியும் வேதவள்ளியை இன்று அடைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தவருக்கு இப்பொழுது அவள் வேறொருவனின் மனைவி ஆகிவிட்டதை சற்றும் யோசித்தும் பார்க்க முடியவில்லை.
அதிலும், பிரபலமான தொழில் அதிபரின் மனைவி. இனி அவள் மேல் கை வைக்க முடியுமா என்று எண்ணியவருக்கு பெரும் ஏமாற்றமே எஞ்சி இருந்தது.
“ச்ச” என்று எரிச்சலோடு கூறியவர். அதற்கு மேல் அங்கே நிற்காமல் கடகடவென மதுபானங்கள் அடுக்கி வைத்திருந்த இடத்தை நோக்கி நடந்தார்.
அப்பொழுது அவ்விடம் வந்து சேர்ந்த குபேரன் சூர்யாவின் கையை பிடித்து குலுக்கியவர், “கங்கிராட்ஸ் சூர்யா.. என்னுடைய ஃபங்ஷனுக்கு வந்து தான் உங்களுக்கு மேரேஜ் ஆகணும்னு இருந்து இருக்கு போலருக்கு. யு போத் லுக் மேட் ஃபார் ஈச் அதர்” என்று குளறியபடியே வாழ்த்துகளை தெரிவித்தார். அவருமே போதையின் பிடியில் தான் இருந்தார்.
வேதவள்ளிக்கு கொஞ்சம் கொஞ்சமாக நிதர்சனம் உரைக்க. இப்பொழுது என்ன செய்வதென்று தெரியவில்லை. அதிலும் சூர்யாவின் கரம் வேறு தன்னை சுற்றி அவனோடு தன்னை இறுக்கமாக பிணைத்திருப்பது அவளுக்கு சற்று அசௌகரியமாக தான் இருந்தது.
ஆனால் அப்படியெல்லாம் எதுவும் சூர்யாவிற்கு இல்லை போலும்.. மற்றவர்களிடம் பேசுவதில் கவனமானவன் அவளை தன்னுடன் வைத்திருப்பதையே மறந்து போனான்.
குபேரனுக்கு நன்றி தெரிவித்தவன். மேலும் சிலரும் அவனுக்கு வந்து வாழ்த்தியவர்களுக்கும் நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து வேதவள்ளியுடன் வெளியேற எத்தனித்தவன்.
பிரேமையும் அக்ஷ்ராவையும் உறுத்து விழித்து விட்டு, “நீ எனக்கு குட் நியூஸ் சொன்ன மாதிரி நானும் உனக்கு சீக்கிரமாவே குட் நியூஸ் சொல்றேன் பிரேம். என்னால முடியுமா முடியாதானு சீக்கிரமே உங்களுக்கு காட்டுறேன்” என்று அவ்வளவு போதையிலும் காரமாக அவனை பார்த்து உரைத்து விட்டே வெளியேறினான்.
முற்றிலுமாக தன்னிலை இழந்தவனை மிகவும் கடினப்பட்டு பின்னிருக்கையில் அமர வைத்தவளுக்கு இப்பொழுது என்ன செய்வது என்று ஒன்றும் விளங்கவில்லை.
இவளுக்கும் வண்டியெல்லாம் ஓட்ட தெரியாது. யாரிடம் உதவி கேட்பது எப்படி வீடு சென்று சேர்வது என்றே தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.
அந்த பார்ட்டிக்கு வந்திருந்த ஒருவன் இவ்வளவு நேரம் தான் செல்பேசியில் எடுத்த வீடியோவை காண்பித்துக் கொண்டே மற்றொருவனுடன் பேசிக்கொண்டு இருந்தான்.
“இங்க பாத்தியா டா சூர்யா சார் செம மாஸ்டா எப்படி எல்லாம் டயலாக் பேசி இருக்காருன்னு பாரு.. வாவ்! ஐ ஆல்வேஸ் அட்மையர் ஹிம்”.
“ஆமா மேரேஜ் ஆகி அவங்களுக்குள்ள டைவர்சும் ஆகிடுச்சு. அவங்களுக்குள்ள ஏதோ பெரிய பிராப்ளம் போலருக்கு. பட், பிசினஸை பொருத்தவரைக்கும் நம்மள மாதிரி எங்ஸ்டர்ஸ்க்கு நிச்சயமா சூர்யா ஒரு ரோல் மாடல் தான். எனக்கு எப்பயுமே சூர்யா தான் என்னுடைய ரோல் மாடல். அதுலயும் இன்னைக்கு அவர் பேசின டயலாக்சும் அவர் நடந்து கொண்ட விதமும் ரொம்பவே மாஸா இருந்துச்சு” என்று சூர்யாவின் புகழ் பாடிக்கொண்டே சமூக வலைத்தளத்தில் தன் பக்கத்தில் அந்த வீடியோ காட்சியை பதிவேற்றம் செய்தான்.
பதிவேற்றம் செய்த சற்று நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் அந்த வீடியோவை பார்த்திருப்பதையும், ஷேர் செய்திருப்பதையும் பார்த்து ஆச்சரியமடைந்தவன்.
“பாத்தியாடா கமெண்ட்ஸ் எல்லாம் சும்மா தெறிக்குது. அதுக்குள்ள எத்தனை பேரு வீடியோவ பார்த்து லைக் பண்ணி இருக்காங்க ஷேர் பண்ணி இருக்காங்கன்னு பாரு.. என்னை மாதிரி சூர்யா சாருக்கு இன்னும் நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க போலருக்கே.. அதிலும், அவருடைய கேர்ள் ஃபேன்ஸ் எல்லாம் தான் பாவம் எல்லாம் அழற மாதிரி இமோஜி போட்டுட்டு இருக்காங்க” என்று கூறி நகைத்தான்.
“டேய் என்னடா அதுக்குள்ள உன் அக்கவுண்ட்ல போட்டுடியா.. ஏன் டா இப்படி பண்ண ஏதாவது பிரச்சனை ஆகிட போகுது” என்ற அவனின் நண்பனை பார்த்தவன், “என்னடா நான் என்ன பொய்யான விஷயத்தையா போட்டு இருக்கேன். எப்படியும் அவங்களே நாளைக்கு மேரேஜ் ஆன விஷயத்தை அனவுன்ஸ் பண்ண தான் போறாங்க. அதுக்கு முன்னாடி நான் போட்டுட்டேன் நாமளும் கொஞ்சம் டிரெண்டாகிக்கலாம் இல்ல”.
“அதுவும் சரி தான் அப்போ என்னையும் டேக் பண்ணு”.
சற்று நேரத்திலேயே அந்த வீடியோ காட்டுத்தீ போல் பரவ. சூர்யாவின் தாத்தா ரங்கராஜின் நண்பர் காளிதாஸ் அவருக்கு தொடர்பு கொண்டு இந்த வீடியோவை பற்றி கூறியவர் அவருக்கும் அந்த வீடியோவை அனுப்பி வைத்தார்.
ரங்கராஜுக்கு இது பேரதிர்ச்சி தான்.
திருமணம் என்றாலே வெறுப்பவன் எப்படி இப்படி ஒரு திருமணத்தை செய்திருப்பான் என்று எண்ணியவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
பிறகு தன் நண்பன் அனுப்பிய வீடியோவை பார்த்த பிறகு இப்பொழுது நன்கு விளங்கி விட்டது. போதையின் பிடியில் தான் தன் பேரன் நிதானம் இழந்து செய்வதறியாது இத்திருமணத்தை செய்திருக்கிறான் என்பது.
எப்படியோ தான் அந்த ஜோசியரிடம் சென்று வந்ததின் பலன் தான் அவனுக்கு இப்பொழுது திருமணம் ஆகி இருப்பது என்று எண்ணியவர் மனமாற இறைவனுக்கு தன் நன்றியை தெரிவித்தார்.
மேலும், அந்த வீடியோவில் அக்ஷ்ராவும் பிரேமும் நின்றிருப்பதும் அவர்களுடன் இவன் கோபமாக பேசுவதும் கூட பதிவாகி இருந்தது. அதை பார்த்தவருக்கு சற்று முகம் இறுக தான் செய்தது.
அவர்கள் அவனிடம் என்னவெல்லாம் பேசி இருப்பார்கள் என்பது அவனின் பதிலை வைத்தே யூகித்தவருக்கு கோபம் தலைக்கேறியது. ஆனாலும் அனைத்தும் நன்மைக்கே என்று நினைத்துக் கொண்டார்.
அவர்கள் இப்படி பேசியதன் விளைவு தானே இந்த திருமணம்.. இனியாவது தன் பேரனின் வாழ்க்கை நல்ல முறையில் மாற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
“அம்மா நீங்க ஒன்னும் பயப்படாதீங்க அதான் டாக்டர் அப்பாவுக்கு ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டார் இல்ல.. இன்னைக்கு நைட் ஸ்டே பண்ணி இருந்தா போதும் நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். நான் சூர்யாக்கு கால் பண்ணி சொல்லிட்டு வந்துடுறேன்” என்றவாறு தன் செல்பேசியை எடுத்துக்கொண்டு தனியாக வந்தவன் அதை உயிர்பிக்கவும்.
அவனுக்குமே அந்த வீடியோவை பலமுறை பலர் அனுப்பி இருந்தனர்.
“என்ன இது எல்லாரும் ஒரே வீடியோவை நமக்கு சென்ட் பண்ணி இருக்காங்க.. என்ன வீடியோன்னு தெரியலையே” என்று சிந்தித்துக் கொண்டே அதை திறந்தவனின் விழிகள் அதிர்ச்சியில் அதிர்ந்து விழித்தன.
அவனால் சற்றும் இதை நம்ப முடியவில்லை. அதுவும் சூர்யா வேதவள்ளியின் கழுத்தில் தாலி கட்டும் காட்சியை பார்க்கும் பொழுது ஏதோ ஒரு மெல்லிய வலி அவனின் இதயத்தில் ஏற்பட்டது.
அதையும் தாண்டி சூர்யாவா இப்படி என்று அவனால் சற்றும் நம்பவே முடியவில்லை. வீடியோவை முழுவதாக பார்த்தவன் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவிற்கு யூகித்து விட்டான்.
இப்பொழுது என்ன செய்வது என்று அவனுக்குமே ஒன்றும் விளங்கவில்லை. உடனே அவன் அழைத்தது என்னவோ சூர்யாவின் எண்ணிற்கு தான்.
அழைப்பை ஏற்கும் நிலையில் எல்லாம் சூர்யா இல்லையே.. அங்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற வேதவள்ளி தான் ராம்குமாரின் எண்ணை பார்த்ததும் அழைப்பை உடனே ஏற்றாள்.
“ஹலோ.. ராம் சார்..” என்ற அவளின் பதட்டமான குரலே எடுத்துரைத்தது அவளின் நிலையை.
“ஆங் சொல்லுங்க வேதவள்ளி எங்க இருக்கீங்க?”.
அவளோ அழுகையினோடு, “சார் இங்க பெரிய பிரச்சினையாகிடுச்சு எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.. சூர்யா சார் டிரிங்க் பண்ணிட்டு அவருடைய கண்ட்ரோல்லையே இல்ல.. இப்ப எப்படி அவரை வீட்டுக்கு கொண்டு வர்றதுன்னும் தெரியல”.
“ஓகே ஓகே.. நான் சீக்கிரமே அங்க வரேன் அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு அடுத்த 15 நிமிடத்தில் அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்தான்.
“அவன் என்னை பார்த்து எப்படி அப்படி எல்லாம் பேசலாம். ஏன் என்னால் உன்னை சந்தோஷமா வச்சுக்க முடியாதா.. அவன மாதிரி என்னாலயும் குட் நியூஸ் சொல்ல முடியாதா என்ன.. கண்டிப்பா சொல்லுவேன்”.
இவன் என்ன கூறுகிறான் எதைப்பற்றி கூறுகிறான் என்பது கூட அவளுக்கு விளங்கவில்லை. அவளுக்கோ அடுத்து என்ன என்று தான் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
வீடியோ வெளியே கசிந்த விவரமும் அவளுக்கு தெரியவில்லை.
அவ்வளவு ஏன்.. போதை தெளிந்தால் சூர்யா எப்படி மாறுவான் என்று நினைத்தே அவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது.