எனை ஈர்க்கும் காந்தப்புயலே

4.8
(10)

புயல் – 2

எஸ் பி சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸின் வாயிலில் நின்று இருந்த வேதவள்ளி பல வேண்டுதல்களை வைத்துவிட்டே அப்பெரிய கட்டிடத்தினுள் காலடி எடுத்து வைத்தாள்.

அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டமே அவளை மிரளச் செய்தது. தனக்கு இங்கே வேலை கிடைக்குமா என்று மிகப்பெரிய ஆச்சரிய குறியும் அவளுக்குள் எழுந்தது.

“கடவுளே எப்படியாவது இந்த கம்பெனியில் எனக்கு வேலை கிடைச்சிடனும்” என்று ஒவ்வொரு தெய்வத்தையும் வேண்டிக் கொண்டே அடி மேல் அடி வைத்து அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள்.

ரிசப்ஷனிஸ்ட், “இன்டர்வியூ தேர்ட் ஃப்ளோர்ல நடந்துகிட்டு இருக்கு மேடம். ஆல்ரெடி இன்டர்வியூ ஸ்டார்ட் பண்ற நேரம் ஆகிடுச்சு கொஞ்சம் சீக்கிரம் போங்க எங்க பாஸ்க்கு பன்சுவாலிட்டி தான் ரொம்ப முக்கியம்” என்று அவளின் தலையில் அசராமல் ஒரு குண்டை இறக்க.

அவளின் வார்த்தையில் ஏற்கனவே எங்கே தனக்கு இந்த வேலை கிடைக்காதோ என்ற பதட்டத்தில் இருந்தவளுக்கு மேலும் படபடப்பு கூடிப்போனது தான் மிச்சம்.

அவசர அவசரமாக வேக எட்டுக்களுடன் லிப்டினுள் இவள் ஏற சென்ற சமயம் ஏற்கனவே அது பல ஆட்களை தனக்குள் விழுங்கி இருந்தது. பத்தோடு பதினொன்றாக அவளும் அந்த லிப்ட்டினுள் ஏறிக்கொண்டாள்.

15 பேர் செல்லக்கூடிய பெரிய அளவிலான லிப்ட் தான் அது. இவள் எறியதும் இவளுக்கு பின்னோடு மேலும் 4, 5 பேர் லிப்ட்டினுள் ஏறினார். அத்தனை ஆட்களை அது தனக்குள் விழுங்கி இருந்தாலும் மிகவும் இடுக்கமாக எல்லாம் இல்லை சற்று விசாலமாக தான் இருந்தது.

சரியாக லிஃப்ட் மூன்றாம் தளத்தை அடைந்ததும் வேகமாக சரசரவென முன்னும் பின்னுமாக ஆட்கள் வெளியேற அப்பொழுது பின்னிருந்து ஒருவனின் கை இவளின் இடையில் அழுத்தமாக பதிந்தது.

சட்டென்று நடந்த சம்பவத்தால் பாவை அவளுக்கு மூச்சு எடுக்க முடியவில்லை.

இதுவரை அவள் சந்தித்த இன்னல்கள் எல்லாம் வாய்‌ மொழியாக கேட்டவைகளும், பேருந்து நிலையத்தில் நேரிடும் உரசல்களும் தான்.

ஆனால் அது அனைத்திற்கும் மேலாக முதல் முறை இன்று தான் ஒருவன் இப்படி பொதுவெளியில் வைத்து அவளை தீண்டி இருக்கிறான்.

மற்ற ஆண்கள் மேலிருந்த கோபம் மொத்தமும் ஒன்று திரண்டு தன்னை தீண்டியவனை போட்டு புரட்டி எடுக்கும் அளவிற்கு ஆத்திரம் மேல் எழுந்தது.

என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று புரியாத நிலையில் சட்டென்று திரும்பியவள் தன் எதிரே நின்று இருந்தவனை நோக்கி ஓங்கி ஒரு அறை விட்டாள்.

“பொறுக்கி! யார் மேல கை வைக்கிற..” என்று அவனை முறைத்துக் கொண்டு கூறியவள் படபடக்கும் இதயத்தோடு குடுகுடுவென அவ்விடத்தை விட்டு வெளியேறிவிட்டாள்.

கால் போன போக்கில் நடந்து சென்று பெண்களின் கழிப்பறைக்குள் புகுந்து கொண்டாள். இன்னமுமே அவளின் முழு உடலும் உதறிக் கொண்டு தான் இருந்தது.

முதல் முறை இப்படிப்பட்ட சூழலை கையாள்கிறாள். என்ன செய்வது என்று கூட அவளுக்கு விளங்கவில்லை. சட்டென்று கோபத்தில் அறைந்தும் திட்டியும் விட்டு வெளியேறி விட்டாள்.

வேகமாக பெரிய பெரிய மூச்சுகளாக எடுத்து தன்னை‌ சற்று ஆசுவாசப்படுத்தியவளிற்கு இன்னமுமே அக்கயவன் தீண்டிய இடம் அருவருத்தது. கோபத்தில் அழுகையும் ஆத்திரமுமாக வந்தது.

“பொறுக்கி எவ்வளவு தைரியம்” என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் முணுமுணுப்பாக அவனை திட்டினாள்.

பிறகு குளிர்ந்த நீரை பிடித்து தன் முகத்தை அடித்து கழுவியவளின் கண்ணீரும் அத்தண்ணீரோடு சேர்ந்து இரண்டற கலந்தது.

அப்பொழுது தான் அவளுக்கு அந்த விஷயமே முகத்தில் அறைந்தது. எவனோ ஒருவன் தன்னை தீண்டியதையே தன்னால் அருவருப்பு தாங்க முடியவில்லை.

இதில் அவ்விரு‌ நாய்களும் தன்னை மொத்தமாக வேட்டையாட துடிக்கிறார்களே..

ஒருவேளை, அவர்கள் எண்ணுவது போல் மட்டும் நடந்தால் தன் நிலை என்ன ஆகும்..

அதன் பிறகு இந்த உயிர்‌ இருந்தால் என்ன இல்லாவிடில் என்ன என்று எண்ணியவளுக்கோ பயம் பிடித்துக் கொண்டது.

அவர்கள் எண்ணம் ஒருநாளும் நிறைவேறக் கூடாது. அதற்கு நான் அவர்களிடம் வாங்கிய பணத்தை வட்டியும் முதலுமாக முதலில் திருப்பி கொடுத்தாக வேண்டும்.

அதற்கு தனக்கு இந்த வேலை தான் மிகவும் முக்கியம். வேலை கிடைத்துவிட்டால் எப்படியாவது முதலாளியின் கையில் காலில் விழுந்தாவது அவர்களிடம் வாங்கிய பணத்தை இவர்களிடமிருந்து வாங்கி கொடுத்துவிட்டு அதன் பிறகு காலம் முழுக்க இவர்களின் கீழேயே வேலை செய்ய சொன்னாலும் செய்து விடலாம் என்ற எண்ணம் தான் அவளுக்கு.

ஒருவழியாக தன்னை சற்று திடப்படுத்திக் கொண்டு மீண்டும் அந்த இன்டர்வியூ நடக்கும் ஹாலை நோக்கி வேகமாக விரைந்தாள். இவள் அவ்விடத்தை சென்றடைவதற்குள்ளாகவே இன்டர்வியூ நடைபெற ஆரம்பமாகிவிட்டது.

இங்கே இவளின் நிலை இவ்வாறு இருக்க அந்த குளிரூட்டப்பட்ட ஏசி அறைக்குள்ளோ கடுகடுத்த முகத்துடன் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்க துடிக்கும் எரிமலை போல் ஒருவன் அமர்ந்திருந்தான்.

அவன் சூர்ய பிரசாத்.. எஸ் பி சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸின் உரிமையாளர்.

சூரிய பிரசாதின் ஆருயிர் தோழனும் அவனின் பிரத்தியேக பி.ஏ.வுமான ராம்குமார், “சரி விடுடா மச்சான்” என்றது தான் தாமதம் தன் சிவந்த விழிகளை நன்கு விரித்து அவனை உறுத்து விழித்தவன், “செருப்பு பிஞ்சிடும் நீ வாயை திறந்தினா” என்று கண்டமேனிக்கு அவனுக்கு திட்டினான்.

அவனோ அமைதியாக தன் தலையை தாழ்த்திக் கொண்டு நிற்க.

கோபத்தில் தன் கைவிரல்களை அழுத்தமாக மூடியவன், “என்னால இன்னமும் நடந்ததை ஜீரணிக்கவே முடியல. எப்படி அவ உன்னை அடிக்கலாம் யாருனே தெரியாத எவளோ ஒருத்தி நம்ம ஆபீஸ்க்குள்ளயே வந்து உன் மேல கை வைத்திருக்கா.. நீ இயேசு நாதர் மாதிரி வாங்கிகிட்டு வாயை மூடிக்கிட்டு வர திரும்பி அவ செவிப்பறை கிழியுற மாதிரி ஒன்னு வைக்கிறது இல்ல” என்றான் தன் கழுத்து நரம்பு புடைக்க.

“டேய் அந்த பொண்ணு அடிக்கும்னு நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணல டா. அந்த பொண்ணு ஏன் என்னை அடிச்சதுன்னு கூட தெரியல. அந்த பொண்ணு சட்டுனு எல்லார் முன்னாடியும் அடிச்சிட்டு திட்டுனதும் எனக்கு ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னு தெரியல ரொம்ப ஷாக்கிங் ஆயிடுச்சு.

அந்த பதட்டத்தில் என் பிரெயின் கூட வேலை செய்யல நான் சுதாரிக்கிறதுக்குள்ள அந்த பொண்ணு வேகமா வெளியில் போயிட்டா” என்று தன் பக்கம் நியாயத்தை விளக்கி கூறினான்.

“வாயை மூடுடா ஸ்டுப்பிட்! பேச சொன்னா நல்லா வாய் கிழிய பேசுவ மத்தபடி எதுக்குமே நீ லாயக்கில்லை தண்டம்!” என்ற தன் நண்பனின் திட்டை வாங்கியவனோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு தன் ஒற்றை கையால் கன்னத்தை பொத்தியவாறு, “என்னடா மச்சான் நீயும் இப்படி என்னையே திட்டுற அந்த பொண்ணு கிட்ட வாங்குனதே இன்னும் ஒரு பக்கம் சைடு வாங்கின மாதிரி இருக்கு. வலி தாங்க முடியல ஸ்ஸ்ஆஆ… ஒருவேளை ஜிம்முக்கு போற பொண்ணா இருக்குமோ.. ஒரே ஒரு அடி தான் வச்சா வாயையே திறக்க முடியல டா” என்றான் அப்பாவியாக.

“சரியான திமிரு புடிச்சவ யாருடா அவ எதுக்காக நம்ம ஆஃபீஸ்க்கு வந்து இருக்கா” என்று கேட்டவனுக்கு இறுப்புக் கொள்ளவில்லை.

தன் ஆருயிர் நண்பனின் மீது கை வைத்தவளை இப்பொழுதே கண்டுபிடித்து இங்கு வேலை செய்து கொண்டு இருந்தால் அவளை உடனடியாக இங்கிருந்து துரத்த வேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது.

“எனக்கு என்னடா தெரியும் நானும் இன்னைக்கு தான் அந்த பொண்ண முதல் தடவை பார்த்தேன். இன்னைக்கு காலையில் தூங்கி எழுந்திரிச்சதிலிருந்து நேரமே சரியில்லை. அப்பவே டிவியில் அந்த ஜோசியக்காரர் சொன்னார்.

இன்னைக்கு என் ராசிக்காரர்கள் எல்லாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்னு அவர் சொன்னதை மறந்துட்டு கண்டுக்காம விட்டது தான் இப்போ பெரிய தப்பா ஆயிடுச்சு” என்றவனை மீண்டும் தன் அனல் கக்கும் விழிகளால் கூர்ந்து பார்த்தவன், “போடா லூசு! நான் என்ன பேசிகிட்டு இருக்கேன் நீ என்ன பேசிகிட்டு இருக்க.. பஸ்ட் சிசிடிவி கேமராவை செக் பண்ண சொல்லு அவ யாரு என்னன்னு இன்னும் 5 மினிட்ஸ்ல எனக்கு தெரிஞ்சாகணும்” என்றவன் தன் நெற்றியை நீவிக் கொண்டு கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தான்.

அவன் கூறியது போலவே அடுத்த ஐந்தாவது நிமிடம் அவன் முன்பு நின்று இருந்த ராம்குமார், “மச்சான் தெரிஞ்சிடுச்சுடா அந்த பொண்ணு இங்க இன்டர்வியுவிற்காக வந்திருக்கா”.

“வாட்! இன்டர்வியூக்கா.. இன்னும் வேலையே கிடைக்கல அதுக்குள்ள அவளுக்கு அவ்வளவு திமிரா.. அவளை உடனே இங்க வரவை”.

அங்கே படபடப்புடன் தனக்கு நிச்சயமாக இந்த வேலை கிடைத்தாக வேண்டுமே என்று அமர்ந்திருந்தவளின் முன்பு வந்து நின்ற ஒரு பெண், “உங்களுக்கு இன்டர்வியூ வேற ரூம்ல நடக்க போகுது கொஞ்சம் என் கூட வாங்க” என்று அவளை தன் கையோடு அழைத்துக் கொண்டு சூரிய பிரசாத்தின் அறைக்குள் நுழைந்தாள்.

அப்பெண் கூறியதை கேட்டு சற்று குழப்பமான மனநிலையில் தான் வேதவள்ளி அவளை பின் தொடர்ந்தாள்.

‘தனக்கு மட்டும் ஏன் தனி இன்டர்வியூ?’ என்று குழப்பமாக தான் இருந்தது.

அறைக்குள் நுழைந்தவளுக்கு சூரிய பிரசாத் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவனின் அருகில் நின்றிருப்பவனை மறக்க முடியுமா..

சற்று நேரத்திற்கு முன்பு தானே அறைந்து விட்டு வந்தாள். அந்த பெயர் தெரியாதவனை முறைத்துக் கொண்டே அறைக்குள் இவள் நுழைய.. எதுவோ சரியில்லை என்று மட்டும் அவள் மனம் அடித்துக் கூறியது.

சூரிய பிரசாத்தின் ஒற்றை தலையசைப்பிற்கு அவளை அழைத்து வந்து விட்ட பெண் அங்கிருந்து புறப்பட்டு விட.

அவள் புறப்பட்டது கூட தெரியாமல் வேதவள்ளி ராம்குமாரை முறைத்துக் கொண்டே நின்று இருந்தாள்.

அவளை நோக்கி சொடக்கிட்டவன், “அங்க பாத்தது போதும் இங்க பாரு..” என்று தன் ஆள்காட்டி விரலால் தன்னை நோக்கி சுட்டிக் காட்டினான்.

அவனின் கர்ஜனையில் அவள் உடல் தூக்கி வாரி போட அவனையே மிரட்சியாக பார்த்தாள்.

“எதுக்காக என் பிரண்டை அடிச்ச?” என்றான் தன் பற்களை கடித்துக் கொண்டு சீற்றமாக.

இப்பொழுது அவளுக்கு புரிந்து விட்டது இவன் ஏன் அவளை இங்கே அழைத்து வர வைத்திருக்கிறான் என்பது எச்சிலை கூட்டி விழுங்கியவள், “அவர் என்கிட்ட தப்பா நடந்துகிட்டார்” என்றாள் மெதுவான குரலில்.

அவளின் வார்த்தையில் சூரிய பிரசாத் ராம்குமாரை அதிர்ந்து பார்க்க.

அவனோ வேகமாக ‘இல்லை’ என்று தன் தலையை ஆட்டினான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!