“சரி விடுடா.. நடந்தது ஒரு மிஸ்அண்டர்ஸ்டான்டிங் இதுல யாரு மேலயும் நம்ம தப்பு சொல்ல முடியாது. அவங்க இடத்துல இருந்து பார்த்தா அவங்க ரியாக்ட் பண்ணது கரெக்ட் தானே” என்று ராம் அவளுக்கு சாதகமாக பேசவும்.
அவனை முறைத்து பார்த்த சூர்யா, “உன் அளவுக்கு பெரிய மனசு எனக்கு கிடையாது” என்று அவனை திட்டியவன்.
வேதவள்ளியை நோக்கி சொடக்கிட்டவாறு, “இங்க பாரு என் ஆபீஸ்ல வச்சு அந்த இடியட் அப்படி தப்பா நடந்துக்கிட்டதால் மட்டும் தான் அவனுக்கு வேலை போச்சு. அதுக்காக நீ பண்ணது சரின்னு ஆகிடாது.
அத்தனை பேரு முன்னாடி தப்பே செய்யாத ஒருத்தனை நீ அடிச்சிருக்க. அதுக்கு கண்டிப்பா உனக்கு தண்டனை கிடைத்திருக்கும். பட், என் ஆபீஸ்ல உனக்கு ஒரு பேட் இன்சிடெண்ட் நடந்ததால் உன்னை நான் விடுறேன். இனி என் கண்ணு முன்னாடியே வந்திடாத இங்கிருந்து வெளியே போ” என்றான் தன் பற்களை கடித்துக்கொண்டு.
அவனின் வார்த்தையில் வேதவள்ளிக்கு தான் தூக்கி வாரி போட்டது. தவறே செய்யாமல் தனக்கு ஏன் தண்டனை..
“என்ன சார் பேசுறீங்க நீங்க.. நான் என்ன தப்பு பண்ணேன் தப்பு பண்ணவனுக்கு தண்டனை கொடுத்துட்டீங்க சரி.. தப்பே பண்ணாமல் எனக்கு எதுக்காக தண்டனை?”.
“என்ன.. தப்பு பண்ணலையா.. அப்போ நீ என் பிரண்டை அடிச்சதுக்கு பேர் என்ன?”.
“அதுக்கு தான் நான் மன்னிப்பு கேட்டுட்டேனே.. ப்ளீஸ் சார், எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம். என்னுடைய பைலை வேணும்னா கூட செக் பண்ணுங்க இந்த வேலைக்கு நான் பிட்டா தான் இருக்கேன். என்னால் முடிஞ்ச ஹார்ட் வொர்கை கண்டிப்பா நான் பண்ணுவேன். ப்ளீஸ் சார்.. எனக்கு இப்போ இருக்க சிச்சுவேஷனுக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம்” என்று கெஞ்சாத குறையாக மன்றாடினாள்.
இதுவரை அவள் சந்தித்த ஆண்களில் சூரிய பிரசாத் வித்தியாசமாக அவளின் கண்களுக்கு தெரிந்தான்.
என்ன தான் அவனின் வார்த்தை கரடு முரடாக இருந்தாலுமே அவனிடத்தில் வேலை பார்ப்பது தனக்கு பாதுகாப்பு என்பதை சற்று நேரத்தில் தெரிந்து கொண்டாள்.
வெளியே சென்று மீண்டும் வேறு ஒரு வேலையை தேடி விடலாம் என்ற தன்னம்பிக்கை அவளுக்குள் இருந்தாலும் கூட இந்த அளவிற்கு தனக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான்.
என்ன தான் சிடுமூஞ்சாக இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் மிகவும் கண்ணியமாக இருக்கிறானே..
இங்கே வேலை பார்ப்பது தான் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று மனதிற்குள் எண்ணியவள் எப்படியாவது இவனிடம் பேசி இங்கேயே வேலைக்கு சேர்ந்து விடவும் முடிவு செய்துவிட்டாள்.
“நோ வே.. உனக்கு இங்க வேலை கிடையாது உன்னை கிளம்புனு சொன்னேன்”.
“டேய் விடுடா பாவம் கஷ்டப்படுற குடும்பம் போலருக்கு ஒரு தடவை சான்ஸ் கொடுத்து பார்க்கலாமே” என்று ராமும் கூற.
சூரிய பிரசாத் கோபத்தில் அவனை உறுத்து விழித்தவன், “நீ எல்லாம் திருந்தவே மாட்ட வேலை தானே கொடுக்கிறேன்” என்றவனோ சற்று நேரம் தன் சர்க்கர நாற்காலியில் அமர்ந்து அதை சுழற்றி கொண்டே எதையோ சிந்தித்தான்.
“நீ எந்த வேலைக்காக இங்க வந்து இருந்தாலும் சரி இனி உனக்கு அந்த வேலை கிடைக்காது” என்றவனின் வார்த்தையில் மீண்டும், “சார்.. சார்.. ப்ளீஸ் சார்..” என்று தன் முன்னே கெஞ்ச தொடங்கியவளின் முகத்தை நோக்கி பேசாதே என்பது போல் தன் ஒற்றை விரலை நீட்டியவன்.
“உனக்கு இங்க வேலை இருக்கு. என் பிரண்டு சொல்லி உனக்கு வேலை கொடுக்காமல் போயிடுவேனா என்ன.. உன்னுடைய வேலை மிஸ்டர்.ராம்குமாருக்கு அசிஸ்டென்டா இருக்கிறது”.
“டேய் நானே உனக்கு பிஏவா ஒர்க் பண்றேன். எனக்கு எதுக்குடா அசிஸ்டென்ட்?” என்றவனை தன் பார்வையாலேயே வாயை மூட செய்தவன்.
“இந்த ஜாப் உங்களுக்கு ஓகேன்னா பர்தரா ப்ரொசிட் பண்ணலாம். இல்லைனா யூ மே கெட் அவுட் நொவ்!” என்றான் வார்த்தையில் சற்று அழுத்தத்தை கூட்டி.
அவனின் கேள்விக்கு வில்லில் இருந்து பாயும் அம்பு போல் வேதவள்ளியிடமிருந்து சட்டென்று பதில் வந்தது, “எனக்கு ஓகே தான்”.
சூரிய பிரசாத் தன் கணக்கெடுக்கும் பார்வையால் அவளை துளைத்து எடுக்க.
“என்னம்மா சொல்ற நீ தேடி வந்த வேலை இது இல்லையே..”. என்றான் ராம்.
“அண்ணா நான் இப்போ இருக்க நிலைமையில் எனக்கு கண்டிப்பா வேலை வேணும். எந்த வேலையா இருந்தாலும் பார்க்க நான் ரெடி தான்”.
அவள் கூறி முடிக்கும் முன்னரே தன் எதிரே இருந்த டேபிள் வெயிட்டரை வேகமாக ‘டங்கு.. டங்கு..’ என்று டேபிளின் மீது தட்டினான் சூரிய பிரசாத்.
அதில் இருவருமே அவனை திரும்பி பார்க்க, “இந்த அண்ணன் தங்கச்சி ட்ராமா எல்லாம் வெளியில் போய் வச்சுக்கோங்க. இது என்னோட ஆபீஸ்.. உங்க பாசமலர் படத்தை இங்கே ஓட்டாதீங்க” என்றவன் இப்பொழுது இருவரையுமே முறைத்துப் பார்த்தான்.
அவனின் செயலில் பெருமூச்சை வெளியேற்றிய ராம்குமார், “ஓகே வேதவள்ளி ரிசப்ஷன்ல உங்களுக்கான அப்பாயின்மென்ட் வாங்கிக்கோங்க. அதுலயே நம்ம கம்பெனியுடைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் எல்லாமே இருக்கும். நாளையில் இருந்து கரெக்டா வந்துடுங்க”.
அவளும் இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு வெளியேறினாள்.
இங்கே வேலைக்கு சேர்ந்து எப்படியாவது முன்பணமாக 10 லட்சத்தை வாங்கி நாராயணமூர்த்தியிடம் கொடுத்து விடலாம் என்று பார்த்தால் ஆரம்பமே இப்படி பிரச்சினை ஆகிவிட்டது.
ஏற்கனவே பணத்திற்காக நாடகமாடுகிறேன் என்று கூறியிருக்கிறான். இந்த நிலையில் அவனிடம் போய் பணத்தை கேட்டு நின்றால் நான் பணத்திற்காக அலைகிறேன் என்று தன்னை பற்றி இன்னும் கீழ் தரமாக எண்ணிவிடுவானோ..
அவனிடம் என் மேல் இருக்கும் அபிப்பிராயத்தை சற்று மாற்றி விட்டு எப்படியாவது பண உதவியை கேட்டு விடுவோம் என்று எண்ணிக் கொண்டே தளர்ந்த நடையுடன் தான் தங்கி இருக்கும் ஹாஸ்டலை நோக்கி புறப்பட்டாள்.
“என்ன இருந்தாலும் நீ அந்த பொண்ணுகிட்ட இவ்வளவு ஹார்ஷா நடந்திருக்க வேண்டாம் சூர்யா” என்ற ராம்குமாரின் வார்த்தைகள் சலிப்பாக வெளிவந்தது.
தன் கையில் இருந்த பைலை புரட்டியவன் அவனை நிமிர்ந்தும் பாராமல், “அப்புறம் வேற எப்படி சார் நடந்துக்கணும்?”.
“சும்மா இப்படியே முரண்டு பிடிக்கிற மாதிரி பேசாத.. அந்த பொண்ணு மேல தான் எந்த தப்பும் இல்லைன்னு தெரிஞ்சிடுச்சுல” என்று அவன் கூறி முடிப்பதற்குள்ளாகவே இடைப் புகுந்தவன்.
“எந்த தப்பும் இல்லைன்னு தெரியல.. அவ உன்னை அடிச்சது ரொம்ப பெரிய தப்பு” என்றவனின் பார்வை இப்பொழுது ராம்குமாரை துளைத்தெடுத்தது.
“சரிடா தப்பு தான் ஆனா அந்த பொண்ணு தெரிஞ்சு செய்யலையே தெரியாம தானே செஞ்சுருக்கா.. அந்த சூழ்நிலையில் யாராக இருந்தாலுமே இப்படி தான் நடந்து இருப்பாங்க. உண்மையை சொல்லனும்னா இந்த பொண்ணுக்கு இருக்கிற மாதிரி பல பெண்களுக்கு திருப்பி அடிக்க தைரியம் கூட இல்லாம இருக்கு. அப்படி பார்த்தா இந்த பொண்ணை நம்ம பாராட்டி தான் இருக்கணும்”.
“எதுக்கு உன் கன்னத்துல ஓங்கி ஒன்னு வச்சாலே அதுக்கா?” என்றவனின் வார்த்தையில் நக்கல் கிலோ கணக்கில் கொட்டிக் கிடந்தது.
“சரி விடு.. நடந்தது நடந்து போச்சு திரும்ப திரும்ப இதை பத்தியே பேச வேண்டாம். எதுக்காக அந்த பொண்ணுக்கு எனக்கு அசிஸ்டன்டா வேலை கொடுத்து இருக்க”.
“உன்னை அடிச்சா இல்ல உனக்கு கீழே வேலை பார்க்கட்டும். அப்போ தான் உன் மேல எந்த தப்பும் இல்லை என்று மத்த ஸ்டாப்க்கு புரியும். எல்லார் முன்னாடியும் அவ உன்னை அடிச்சு இருக்கா எல்லாரும் உன்னை பத்தி என்னடா நினைப்பாங்க.
பொண்ணு விஷயத்துல நீ தப்பா நடந்துகிட்டனு நினைக்க மாட்டாங்க.. இப்போ அவ உனக்கு கீழே இருந்து வேலை பார்க்கிறானா உன் மேல எந்த தப்பும் இல்லை என்று எல்லாருக்கும் தெரியும்”.
தன் நண்பன் தனக்காக என்று பார்த்து பார்த்து செய்வதில் ராம்குமார் நெகிழ்ந்து தான் போனான்.
“மச்சான் உனக்கு என் மேல அவ்வளவு பாசமா டா”.
“பாசமும் இல்ல ஒரு மண்ணும் இல்லை” என்று கடுகடுவென்று கூறியவன் மீண்டும் பைலில் தன் பார்வையை பதிக்கவும் ராம்குமாரின் செல்பேசி இசைத்தது.
மெதுவாக திரையில் மின்னும் பெயரை பார்த்தவன் சத்தம் போடாமல் அறையை விட்டு வெளியேறினான்.
தன் நண்பனின் ஒவ்வொரு நடவடிக்கையும் சூர்யாவின் பார்வையில் இருந்து தப்புமா.. இந்த கூத்து பல நாட்களாக நடந்து கொண்டிருப்பதை அறிந்தாலும் ஒன்றும் தெரியாதது போல் கண்டுகொள்ளாமல் இருந்து கொண்டிருக்கிறான்.
வெளியே வந்து அழைப்பை ஏற்ற ராம், “தாத்தா அவன் பக்கத்துல இருக்கும் போது கால் பண்ணாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது.. ஏற்கனவே எண்ணெய் சட்டியில் கடுகை போட்ட மாதிரி பொரிஞ்சுகிட்டு இருக்கான். இதுல நீங்க வேற கரெக்ட் டைமிங்ல கால் பண்றீங்க”.
“அவன் கிடக்கிறான் விடு. அது சரி எனக்கு நியூஸ் வந்துச்சே ஏதோ ஒரு பொண்ணு ரொம்ப நேரமா சூர்யா ரூமுக்குள்ள இருந்தாலாமே அங்க என்னடா நடக்குது?” என்றவரின் குரலிலோ அத்தனை ஆர்வம்.
“எப்படி தான் எல்லா விஷயமும் உங்களுக்கு தெரியுதோ தெரியல. ரொம்ப கிளுகிளுப்பாகாதீங்க.. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இங்க ஒண்ணுமே நடக்கல. உங்க பேரன் அந்த பொண்ண அத்தனை நேரமும் நல்லா வச்சு லெஃப்ட் ரைட் வாங்கிட்டான்”.
“அடப்பாவி! ஒரு பொண்ண கூட நீங்க விட்டு வைக்க மாட்டீங்களா.. ஏன் டா இப்படி எல்லா பொண்ணுங்களையும் திட்டிகிட்டு இருக்கீங்க”.
“ஏன் டா அவன் இப்படி இருக்கான். கடைசி வரைக்கும் கல்யாணமே பண்ணிக்காமல் இப்படியே சன்னியாசியாக போகப்போகிறானா என்ன” என்று அவரின் வார்த்தை சலிப்பாகவும் கோபமாகவும் வெளிவந்தது.
“எனக்கு தெரிஞ்சு அவன் அந்த ஐடியாவில் தான் இருக்கான்னு நினைக்கிறேன்”.
“இதுக்கு மேல இவனை இப்படியே விட்டா சரி வராது. ஏதாவது பண்ணி அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு ஆகணும்”.
“என்ன தாத்தா விளையாடுறீங்களா.. உங்க பேரன் கல்யாணம் பண்ணிப்பான்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?”.
“அதுக்காக இன்னும் எத்தனை நாள் தான் இவன் அடிக்கிற கூத்தை எல்லாம் பார்த்துகிட்டு என்னை கண்டும் காணாமலும் இருக்க சொல்ற.. வயசு வேற ஒரு பக்கம் ஏறிக்கிட்டே போகுது.
இவன் என்னடானா எவளோ ஒருத்தி பண்ண துரோகத்துக்கு கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு இவனுக்கு இவனே தண்டனை கொடுத்துக்கிட்டு இருக்கான். இதுக்கு மேல இவனை இப்படியே விட்டா சரி வராது ஏதாவது பண்ணி தான் ஆகணும்”.