அவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் தான் அமர்ந்திருந்தான் சூர்யா.
வீடு வந்து சேரும் வரையிலுமே ஒரே புலம்பல் தான்.
வீட்டையும் அடைந்து விட்டார்கள்..
மணி நள்ளிரவை நெருங்கி விட்டது.
கை தாங்கலாக சூர்யாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். அதுவரையிலும் தாத்தா உறங்க செல்லாமல் கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் தான் அமர்ந்திருந்தார்.
அவரை சற்றும் எதிர்பாராத ராமோ, “சூர்யாவை ரூம்ல படுக்க வச்சுட்டு வரேன் தாத்தா” என்று விட்டு சூர்யாவை அவன் அறையின் கட்டிலில் படுக்க வைத்து விட்டு வெளியேறினான்.
“என்னை ஏன்டா எல்லாரும் ஏமாத்துறாங்க.. என்னை பார்த்தா ஏமாளி மாதிரியா தெரியுது.. எஸ்.. ஐ அம் ஃபுல்.. எல்லாத்தையும் நம்பிடுவேன்” என்று குளறியபடி கட்டிலில் படுத்து கிடந்தான்.
அவனின் வார்த்தைகள் ஹாலில் அமர்ந்திருந்த தாத்தாவின் செவிகளையும் எட்ட தவறவில்லை.
ஏற்கனவே வருத்தம் இழைந்தோடிய முகத்தோடு அமர்ந்திருந்தவரின் முகம் மேலும் வருத்தத்தை வெளிப்படுத்த அவரை பார்த்த ராமிற்கும் நெருடலாக தான் இருந்தது.
இந்த வயதான காலத்தில் அவருக்கு தான் எத்தனை வருத்தம் என்று எண்ணியவாறு அவர் அருகில் வந்து அமர்ந்தவன்.
தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, “தாத்தா நீங்க ஒன்னும் பீல் பண்ணாதீங்க சீக்கிரமே சூர்யா சரி ஆகிடுவான்” என்று எப்பொழுதும் கூறும் அதே வார்த்தைகளை இன்றும் உதிர்த்தான்.
அவனை விரக்தியான சிரிப்பினோடு ஒரு பார்வை பார்த்தவர், “நீ சொல்றது பச்ச பொய்ன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.. ஆனாலுமே நம்ம மன ஆறுதலுக்காக திரும்பத் திரும்ப இதையே சொல்லிக்கிட்டு இருக்கோம்”.
“இந்த கிழவனை பத்தின எண்ணமே அவனுக்கு கொஞ்சம் கூட இல்லடா இருந்திருந்தா இப்படி எல்லாம் நடந்துப்பானா”.
“அவனுடைய சூழ்நிலையில் இருந்து பார்த்தா அவன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் அவனை இப்படி மாத்தி இருக்கு. அவன் பக்கமும் நியாயம் இருக்கு தான தாத்தா”.
“உண்மை தான்டா.. அவன் வாழ்க்கையில் நடக்க கூடாததெல்லாம் நடந்து போச்சு. நான் ஒன்னும் இல்லன்னு சொல்லலையே.. அதுக்காக அதையே நினைச்சுக்கிட்டு வாழ்க்கை முழுக்க இவனும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்த போறானா..
எனக்கு ஒன்னும் அவனை மாதிரி சின்ன வயசுல இல்ல.. நாளைக்கு நான் இருப்பேனா மாட்டேனா என்று கூட தெரியாது. நானும் போய் சேர்ந்துட்டா அவனுக்குனு யாருடா இருக்கா.. அவனுக்கு ஒன்னுனா அவனுக்கு ஒரு துணை வேண்டாமா?
எங்க அவனை இப்படியே ஒத்தையில் விட்டுட்டு போயிடுவேனோனு என் மனசு கடந்து அடுச்சுக்குது. அவனுக்காகவே என் உசுர கையில் புடிச்சுகிட்டு உக்காந்து இருக்கேன் டா” என்றவரின் குரல் இறுதியில் கம்மியது.
அவர் அருகில் அமர்ந்த ராம் அவரின் கையை பிடித்துக் கொண்டு, “தாத்தா இப்படி எல்லாம் பேசாதீங்க.. உங்களுக்கு எதுவும் ஆகாது. அது மட்டும் இல்ல சூர்யாவும் இப்படியே இருந்திட மாட்டான். நிச்சயம் எல்லாம் மாறும் நான் அவன்கிட்ட பேசுறேன்.
நீங்க கண்டதை யோசிச்சு உங்க மனசை போட்டு கெடுத்துக்காதீங்க.. மணி ஆயிடுச்சு படுங்க” என்றதோடு மட்டுமல்லாமல் மேலும் சற்று நேரம் அமர்ந்து அவருடன் பேசி அவரை இயல்பாக்கிவிட்டே அங்கிருந்து கிளம்பினான்.
அன்று இரவு முழுவதும் தாத்தாவிற்கு ஏனோ மனம் பிசைந்து கொண்டே இருந்தது. சூர்யாவின் இயல்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது போல் தோன்றியது.
இதை இப்படியே விட்டால் சரி வராது இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனேயே படுத்திருந்தவர் வெகு நேரம் கழித்து மாத்திரையின் வீரியத்தால் கண்ணயர்ந்தார்.
ஹாஸ்டலில் இப்பொழுது தான் பெயருக்கு உணவை கொறித்து விட்டு அறைக்குள் நுழைந்தாள் வேதவள்ளி.
மணி பத்தை தாண்டி விட்டது. அவளின் செல்பேசி சிணுங்க தொடங்கியது. எடுத்துப் பார்த்தாள்.. நாராயண மூர்த்தியின் எண் தான்..
தன் நிலையை எண்ணியே சலிப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது.
அழைப்பை ஏற்கவே இல்லை முழுதாக சிணுங்கி விட்டு அணைந்து இருந்தது. சற்று நேரத்தில் புதிய எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலியுடன் திரையில் பளிச்சென்று வெளிச்சம் பரவவும்..
எப்படியும் நாராயணமூர்த்தி தான் ஏதேனும் அனுப்பி இருப்பார் என்ற பதட்டத்துடனேயே எடுத்து பார்த்தாள். புதிய எண்ணில் இருந்து வந்திருந்தது.
பார்க்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவள் அமர்ந்திருக்கவும் அடுத்தடுத்த குறுஞ்செய்தி வந்ததற்காக ‘டிங் டிங்’ என்று ஒலியை எழுப்பிக் கொண்டே இருந்தது.
சரி யார் என்று பார்த்து விடலாம் என்ற எண்ணத்துடன் அதை திறந்து பார்த்து விட்டாள்.
கையின் நடுக்கத்தால் தன் நிலை மீறி செல்பேசி நழுவி கீழே விழுந்த சத்தத்தில் அவளுடன் தங்கி இருக்கும் சீதா என்னும் பெண், “என்ன ஆச்சு உனக்கு ஏன் இவ்வளவு ஷிவராகுற” என்று கேட்டவாறு அவள் நழுவ விட்ட செல்பேசியை எடுத்து பார்த்தாள்.
அவளின் விழிகளும் அதிர்ச்சியில் பெரிதாக விரிந்து கொண்டது.
ஒற்றை கையை வாயின் மீது வைத்தவாறு, “என்னடி இது?”.
அப்பொழுது தான் தன்நிலை அடைந்த வேதவள்ளி அவளிடம் இருந்து தன் செல் ஃபோனை பறித்து அழுகையும் ஆத்திரமுமாக வந்திருந்த குறுஞ்செய்தி மொத்தத்தையும் அழித்தாள்.
மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்து விழுந்தது.
“போன் எடுக்கலைன்னா இனி இப்படி தான் உனக்கு 18 பிளஸ் வீடியோஸ் வரும்” என்ற மிரட்டலுடன் அனுப்பியது வேறு யாரும் அல்ல நாராயணமூர்த்தி தான்.
இதுவரை அவர் மீது இருந்த வெறுப்பு உச்சம் தொட்டது.
இவ்வளவு கீழ்த்தரமாக நடக்கும் ஆளா இவன் என்று எண்ணும் பொழுதே, ‘ஆமா.. அவருடைய பொண்ணு வயசுல இருக்க உன்னை படுக்கைக்கு அழைக்கிறவர் தானே.. அவர்கிட்ட மனசாட்சியை நீ எதிர்பார்க்கலாமா’ என்று அவளின் மனசாட்சியே அவளை நோக்கி கேள்வி எழுப்பியது.
ஆம், அதுவும் சரி தானே.. இரக்கமற்ற சுயநலவாதி தானே இந்த நாராயண மூர்த்தி.
அவளின் சிந்தனையை கலைக்கும் பொருட்டு சீதா அவளை போட்டு உலுக்கியவாறு, “என்னடி இதெல்லாம்.. யார் உனக்கு இப்படி எல்லாம் அனுப்புறது?”.
இதுவரை வேதவள்ளி இதைப்பற்றி யாரிடமும் கூறியது கிடையாது. அவளுக்கு என்று நண்பர்கள் கல்லூரியில் இருந்தார்கள் தான். ஆனாலுமே தன்னை பற்றிய அனைத்தையும் சொல்லும் அளவிற்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை.
அவளின் தாயின் மறைவிற்கு பிறகு தான் இந்த ஹாஸ்டலிற்கு வந்து சேர்ந்தாள். அப்பொழுது இருந்தே சீதாவும் வேதவள்ளியும் ஒரே அறையில் தான் தங்கி இருக்கின்றனர்.
சீதாவிற்கு பெரும்பாலும் நைட் ஷிப்ட் வேலை தான் இருக்கும் என்பதால் வேதவள்ளி பகலில் விழித்திருக்கும் பொழுது அவள் தூங்கிக் கொண்டிருப்பாள்.
இரவில் வேதவள்ளி தூங்கும் பொழுது அவள் வேலைக்கு சென்று இருப்பாள். இருவரும் பார்த்துக் கொள்வதே அரிது தான். இதில் எங்கிருந்து சீதா உடன் இவள் நட்புறவாடுவது.
அதிலும் தன் நிலையை பற்றி விளக்கி கூறினால் அவள் தன்னைப் பற்றி ஏதேனும் தவறாக எண்ணிவிடுவாளோ என்ற பயமும் அவளுக்குள் இருந்தது. அதனாலேயே தன் நிலையை குறித்து யாரிடமும் வேதவள்ளி பகிர்ந்து கொள்ளவில்லை.
சிறு வயது முதலே ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்தவள் தனக்குள்ளேயே அனைத்தையும் மறைத்து வைத்துக் கொண்டாள்.
இன்று அவளால் சற்றும் அடக்க முடியவில்லை. பொல பொலவென கண்ணீர் வழிய..
அவளை பார்த்த சீதா பதட்டத்தோடு, “என்னடி ஆச்சு என்ன பிரச்சனைன்னு சொல்லேன் எதுக்கு இப்படி அழற.. யாராவது உன்னை மிரட்டுறாங்களா”
விம்மி அழுதபடி அவளிடம் தன்னை பற்றிய மொத்த விபரத்தையும் கூறினாள். அவள் கூறியதை கேட்ட சீதா அதிர்ச்சியாக அமர்ந்திருந்தாள்.
“இப்படி எல்லாம் கூடவாடி பண்ணுவாங்க” என்றவளுக்கும் வேதவள்ளியின் நிலையை எண்ணி பரிதாபமாக தான் இருந்தது.
“எனக்கு இப்போ என்ன பண்றதுனே தெரியல.. வேலைக்கு போய் எப்படியாவது இவங்க காசை கொடுத்துடலாம்னு நினைச்சேன். ஆனா இன்டர்வியூக்கு போன இடத்திலும் பெரிய பிரச்சனையாகிடுச்சு” என்றவள் அதனை தொடர்ந்து இன்று நடந்த சம்பவத்தையும் விளக்கி கூறினாள்.
சீதாவிற்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. சீதாவின் குடும்பம் மொத்தமும் கடலூரை ஒட்டிய கிராமத்தில் தான் இருக்கின்றனர்.
இவள் அங்கே கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் கல்லூரியின் வாயிலாகவே வேலை கிடைத்து இங்கே வந்து ஹாஸ்டலில் தங்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.
இப்படியும் நடக்குமா என்று எண்ணும் பொழுதே அவளுக்குள் ஒரு வித நடுக்கம் பரவியது. வேதவள்ளியின் நிலையில் தன்னை வைத்து கூட அவளால் சற்றும் சிந்திக்க முடியவில்லை.
“சரி அழாத.. எதுக்கும் நீ உன்னுடைய பாஸ் கிட்ட பேசி பாரேன் 10 லட்சம் ரொம்ப பெரிய அமௌன்ட். அவரை மாதிரி ஆளு மனசு வச்சா கண்டிப்பா கொடுக்கலாம். நீ உன்னுடைய சூழ்நிலையை அவர்கிட்ட எக்ஸ்பிளைன் பண்ணி கேட்டு பாரு.. இல்லைன்னா அவருடைய பி ஏ ரொம்ப நல்லவர் மாதிரி தானே தெரிகிறார் அவர்கிட்டயே ஹெல்ப் கேளு”.
இங்கே இவர்கள் பேசிக்கொண்டு இருக்க ராமும் வேதவள்ளியை பற்றிய எண்ணத்தில் தான் கட்டிலில் மல்லாக்க படுத்து கொண்டு இருந்தான்.
அவனின் இதழில் மெல்லிய புன்னகை ஒட்டிக்கொண்டது.
தன் கன்னத்தை தடவி கொடுத்தவன், “பார்க்க தான் குட்டியா இருக்கா என்னா அடி அடிக்கிறா.. என்ன எப்போ பார்த்தாலும் அண்ணா அண்ணானு கூப்பிடுறா.. அதான் கொஞ்சம் இரிடேடிங்கா இருக்கு. நெக்ஸ்ட் டைம் பார்க்கும் பொழுது அண்ணானு கூப்பிட வேண்டாம்னு சொல்லணும்”.
தன்னையும் மீறி வேதவள்ளியின் மேல் ஒருவித ஈர்ப்பு ராமிற்கு ஏற்பட்டு விட்டது அதன் வெளிப்பாடு தான் இது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் அன்றைய இரவை கடந்தனர்.
மறுநாள் விடிந்ததுமே தன் நண்பன் காளிதாஸிற்கு தொடர்பு கொண்டவர். தன் பேரனின் வாழ்க்கையில் நடந்த மொத்தத்தையும் கூறி வருந்தினார்.
“நீ ஒன்னும் கவலைப்படாதடா எல்லாம் சரியாகிடும். எனக்கு தெரிஞ்ச சாமியார் ஒருத்தர் இருக்கார். அவர் கிட்ட போய் உன் குடும்பத்தில் நடந்த விஷயம் எல்லாத்தையும் பத்தி பேசுவோம். அவர் இதுக்கு ஏதாவது ஒரு பரிகாரம் சொல்லுவாரு.. அவர் சொல்ற மாதிரி பரிகாரத்தை செஞ்சா எல்லா பிரச்சனையும் சரியாகி
விடும்” என்று ரங்கராஜிற்கு ஆறுதல் கூறினார்.
இவர்கள் செய்யும் பரிகாரத்தால் சூர்யாவின் வாழ்க்கையில் நடக்க போகும் விபரீதம் என்னவோ..