கார் சென்று மின்கம்பத்தில் மோதிய அதிர்ச்சியில்… மகிமா மயங்கி விட்டாள்.
சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை…
அவள் காரில் முன்பாகத்தில் தான் எடுப்பதற்கு ஒன்றும் இல்லாமல் போனது.
சில மணி நேரங்களுக்கு பின் மெதுவாக கண்விழித்தாள் மகிமா…
தன் முன்னால் இருப்பது எல்லாம் மங்கலாக இருந்தது… அவளுக்கு பார்க்கவே கஷ்டமாக இருந்தது… கண்ணை பலமுறை மூடித்திறந்து விழிகளை சுருக்கியபடி பார்க்கவும் அனைத்துக் காட்சிகளும் அவள் விழிகளுக்கு தெளிவாக புலப்பட்டன…
மகிமா மெதுவாக எழும்பப் பார்க்க, அவளால் தன் கை கால்களை அசைக்க முடியவில்லை… அவள் விழிகள் அதிர்ந்து விரிய “நான் ஆக்சிடெண்ட்ல கோமாக்கு போயிட்டேன்னோ… ஐயோ கடவுளே… நான் இன்னும் வாழவே தொடங்கலயே… எனது கல்யாணம் கூட ஆகலயே” என்று அதிர்ந்து கீழே குனிந்து பார்த்தாள்.
அவள் கை கால்களோ இருக்கையுடனே சேர்த்து இருக்கமாக கட்டப்பட்டிருந்தன…
திடுக்கிட்டு போனவள், “என்ன கடத்திட்டாங்களா?” என்று நினைத்த படி அதே அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்க்க… அவளுக்கு முன்னால் உள்ள இருக்கையில் கால் மேல் கால் போட்டபடி… இருக்கையில் ஒரு புறம் ஒரு கையை வைத்து… மற்ற கையை தொடையில் வைத்து ஆளுமையான தோற்றத்தில் படு ஸ்டைலாக அமர்ந்திருந்தான் அபின்ஞான்…
அந்தப் பழுப்பு நிற விழிகளை அன்று போல் இன்றும் அவளால் எதிர் நோக்க முடியவில்லை…
அதுமட்டுமில்லாமல் அவள் குற்றம் உள்ள மனதோ குறுகுறுத்துக் கொண்டிருந்தது…
இவ்வளவு நேரம் இருந்த துணிச்சல் தன்னம்பிக்கை எல்லாம் எங்கு சென்றது என்று அவளுக்கே தெரியவில்லை…
எச்சிலைக் கூட்டி விழுங்கியவள், தற்காலிகமாக வரவழைக்கப்பட்ட தைரியத்துடன், “எதுக்குடா என்ன கடத்தின” என்று கோபமாக கேட்க…
அபின்ஞானோ விழிகள் இடுங்க அவளை பார்த்தான்.
அவனது ஒற்றை கண் வீச்சிலே, அவளுக்கு கை கால்கள் பயத்தில் உதரத் தொடங்கின…
“எதுக்கு சார் என்ன கடத்தினீங்க” என்று திரும்ப மரியாதையாகவே கேட்டாள்.
“நான் எதுக்கு உன்னை கடத்தி இருக்கேன்னு தெரியாதில்ல… புரிய வச்சுட்டா போச்சு” என்று இதழ் வளைத்து நக்கலான புன்னகையுடன் கூற,
“நான் எதுவுமே பண்ணல சார்…” என்றாள் அப்பாவியாக…
“ஆமா… நீ எதுவுமே பண்ணல தான்… என் ஆபீஸ்ல இருந்தது அவ்ளோ பிராட் வேலயும் பண்ணது அந்த கன்யா தான்” என்று அவன் கிண்டலாக கூற,
அவன் நிதானத்திலும் பொறுமையிலும் அவளுக்கு ஈரக்குலை நடுங்கியது…
மகிமாவின் மனமோ, அவன் ஏதோ பெருசா பண்ண போறான் என்று உறுதியாக அடித்துக் கூறிக் கொண்டிருந்தது…
அவளுக்கு தொண்டை உலர்ந்து போய் பேச்சே வரவில்லை…
“நீ ஒண்ணுமே பண்ணல தானே…” என்று அவள் அருகே வந்து நின்று அவள் முகத்தை நோக்கி குனிந்தபடி கேட்க…
“இல்லை” என்பது போல் வேகமாக தலையாட்டினாள் மகிமா…
அவள் முகத்துக்கு நேரே குனிந்தவன் அவளுடைய கழுத்தை நோக்கி கையை நீட்ட, “டேய் பொறுக்கி…என்னடா பண்ற” என்று தன் கை கால்கள் கட்டப்பட்டதால்… அவளால் எதுவும் செய்ய முடியாத பதற்றத்தில் மரியாதையை மறந்து பேசி விட்டாள்…
அவள் தன் வெண் சங்கு கழுத்தில் ‘எம்’ எழுத்துப் போட்ட பென்டென்டுடன் சேர்த்து அணிந்திருந்த மெல்லிய தங்கச் செயினை தன் சுட்டு விரலால் அழுத்தமாக வருடியபடி… அவளை மேலிருந்து கீழ் பார்க்க, அந்தப் பார்வையில் அவளுக்கோ உடல் கூசியது….
“பொறுக்கி ராஸ்கல்” என்று மனதுக்குள் திட்டியவளுக்கு, “ஏன்டா இந்த உடையை அணிந்தோம்” என்று தான் இருந்தது அவன் பார்வையின் வீரியத்தில்…
அவன் தொடுகையால் விளைந்த கூச்சத்தால் எச்சிலை கூட்டி விழுங்கியபடி அவனை அருவருப்பாக பார்த்தவள்… இரு கையின் விரல்களையும் உள்ளங்கையில் அழுத்தி மூடி தன் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றாள்…
மகிமா கைகளை மூடி கோபத்தை கட்டுப்படுத்துவதும்… அவள் எச்சிலை விளங்குவதும் அவன் கழுகு கண்களில் இருந்து தப்புமா என்ன… அவளை இகழ்ச்சியாக பார்த்தபடி… அவள் கழுத்தில் வெளியே தெரிந்த நரம்புகளையும் சேர்த்து வருடியவன், “இந்த செயின் உன் கழுத்துக்கு ரொம்ப அழகா இருக்கு” என்று கூறியபடியே… தன் சுட்டு விரலால் இன்னும் அவள் கழுத்தை அழுத்தமாக வருடினான்…
அவனை அனல் பொதிந்த தீப் பார்வை பார்த்தவள், அவன் தொடுகையால் ஏற்பட்ட வித்தியாசமான உணர்வுகளை அடக்க வழி தெரியாது தலையை அங்கும் இங்கும் அசைத்து அவனிடமிருந்து விடுபடப் பார்த்தாள்…
“நாம சேர்ந்து ஒரு படம் பார்க்கலாமா?” என்று அவள் கழுத்திலிருந்து கையை எடுத்து, அவள் அருகே இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தபடி கேட்டான் அபின்ஞான்…
அவன் கழுத்தில் இருந்து கையை எடுக்கவுமே நிம்மதியாக மூச்சு விட்ட மகிமா, “ஐயோ… எப்பிடியோ இவன் என்ன கண்டுபிடிச்சிட்டான்… ஆனா நான் சிசிடிவி எல்லாம் ஹெக் பண்ணி இருந்தேனே…” என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
“பார்க்கலாமா…? என்று அவளை பார்த்து சிரித்த படி கேட்டவன், முன்னாள் இருந்த பெரிய திரையை உயிர்ப்பித்தான்…
ஏற்கனவே அதிர்ச்சியிலிருந்து இருந்தவளுக்கு திரையில் சென்ற காட்சிகளை பார்த்ததுமே மயக்கம் வந்துவிடும் போலிருந்தது… இது எப்படி நடந்தது என்று அவளுக்கு புரியவில்லை…
அவள் அல்லவா அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஹெக் பண்ணி செயலிழக்க செய்துவிட்டு உள்ளே நுழைந்தாள்…
பின்னே எப்படி அவள் உள்ளே வந்ததிலிருந்து… அவள் போகும் வரையுள்ள அனைத்து காட்சிகளும் அச்சு பிசகாமல் பதிவாகி இருக்கும்…
அவனை புரியாத பார்வை பார்த்தாள்…
‘ஏசியன் நம்பர் ஒன் ஜெம் கம்பெனி… நீ லேசா வந்து என் ப்ராஜெக்ட்ட திருடிட்டு போலாம்ன்னு நினைச்சியா? நீ மெயின் சிசிடிவிய தான் ஹெக் பண்ணி இருந்த… ஆனா நான் ஆபீஸ் முழுக்க மினி கேமரா பிட் பண்ணி இருக்கேன், அது எங்க இருக்குன்னு கூட உன்னால கண்டுபிடிக்கவே முடியாது… என்று கண் சிமிட்டியவன், “யூ பிளேய்ட் வெல், பட் யூ காண்ட் பீட் மீ… சோ… உன் மிஷன் ஃபெயிலியர் ஆயிடுச்சு” என்று உச்சி கொட்டியபடி அபின்ஞான் கூற…
“உண்மயாவே நான் எதுவும் பண்ணல சார்… நீங்க என்ன தவறா நினைச்சுட்டு இருக்கீங்க… நான் திருடினத்துக்கு ஆதாரம் ஏதாவது இருக்கா?” இப்போது அவள் தன் கெத்தை விட்டுக் கொடுக்காமல் கேட்க,
அவனோ இரு பக்கமும் தலையாட்டி அவ்வறை அதிரச் சிரித்தபடி, அவன் மூச்சுக்காற்று அவள் மேல் படுமளவுக்கு நெருங்கி நின்று, “ஓஹ்… ஆதாரம் வேணும்ல… மேடம் போட்டிருக்கீங்களே இந்த அழகான செயின் சிசிடிவில அழகா பட்டிடுச்சு…” என்று மீண்டும் அதை வருடி அச்செயினை தூக்கி காட்டியபடி படி கூற,
“கடவுளே இத மறந்துட்டேனே” நினைத்தவள், “தெரியாம பண்ணிட்டேன்… என்ன மன்னிச்சிடுங்க…” என்று ஒரேயடியாக சரணடைந்து விட்டாள்…
“ஆஹான்… இவ்ளோ பெரிய தப்பு பண்ணியிருக்க…தண்டன வேணாமா? ஈஸியா மன்னிச்சுடணுமா??” என்று அவளிடமே கேட்க,
அவனை அப்பாவியாக பார்த்தபடி மகிமா அமர்ந்திருக்க… “உன் டிரஸ்ஸ பார்த்தாலே உன் கேரக்டர் எப்படின்னு விளங்குது, இந்த அப்பாவி நடிப்பெல்லாம் இனி என்கிட்ட வேகாது… உன் உண்மையான முகம் எனக்கு நல்லாவே தெரியும்…” என்றபடி அவள் கை கட்டினை அவிழ்த்து விட…
மகிமா முகத்தை சுளித்தபடி… “கால் கட்டெம் கொஞ்சம் அவுத்து விட்டா குறஞ்சா போவான்” என்று நினைத்தபடி தன் கால் கட்டை அவிழ்த்துக் கொண்டள், வலித்துக்கொண்டிருந்த கைகால்களை தடவினாள்… கால்கைகளில் கயிறு கட்டி இருந்த இடங்கள் சிவந்து கன்றிப் போயிருந்தன…
“ராட்சஷன் எவ்ளோ இறுக்கமா கட்டிருக்கான்” என்று மனதில் திட்டிக் கொண்டிருந்தாள் மகிமா…
“ஆமா… நீ (Archaeology) ஆர்கியோலோலஜி ல ரிசர்ச் செய்ய உன் அண்ணா கிட்ட பெர்மிஷன் வாங்க தானே என் கம்பெனிக்கு வந்த” என்று கேட்க,
“இதெல்லாம் எப்படிடா உனக்கு தெரியும்?” என்பது போல் பார்த்து வைத்தாள் மகிமா.
“நீ செஞ்ச வேலக்கி… நான் உனக்கு எதிரா போலீஸ்ல ஒரு என்ட்ரி போட்டா நீ உன் ஆயுசு பூரா ஜெயில்ல களி தான் தின்னனும்… உன் ஆராய்ச்சிய தூக்கி குப்பல தான் போடணும்” என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்தபடி கூற…
“ஐயோ… இவன் பார்வையே சரி இல்லையே… நான் வாசிச்ச நாவல்கள்ல வர மாதிரி தண்டனையா எடக்கு முடக்கா எதாவது கேட்டிடுவனோ… இல்லாட்டி ஒன் நைட் ஸ்டே பண்ண கூப்பிடுவானோ” என்று அவள் மனம் ஏதேதோ யோசிக்க ஆரம்பித்திருந்தது…
“இப்ப உன்ன என்ன பண்ணலாம்…” என்று தன் ட்ரிம் பண்ணிய தாடியை வருடியபடி யோசிப்பது போல் பாவனை காட்டியவன்,
“இந்த ரிசர்ச்ச பண்றதுக்காக உன் அண்ணாக்கு எப்படி ஹெல்ப் பண்ணியோ… அதே மாதிரி நீ எனக்கு ஒரு வேல செய்யணும்”… என்று கூற,
“சே… சே… என் மைண்ட் தான் ரொம்ப மோசமா யோசிக்குது போல… இவன் கொஞ்சூண்டு நல்லவன் தான்…” என நினைக்கும் போதே,
அபின்ஞான், “நீ எனக்கு ஹெல்ப் பண்ணா உனக்கு இந்த ரிசர்ச் செய்றதுக்கு நானே ஹெல்ப் பண்ணுவேன்…” என்றான்.
“என்னடா ஆளாளுக்கு என்ன வெச்சு விளையாடுறீங்களா…? அவனும் சொன்னான் அவன் வேலய செஞ்சா ஹெல்ப் பண்றன்னு… இப்ப நீ என்ன கடத்திட்டு வந்துட்டு, ஹெல்ப் பண்றன்னு சொல்ற… நடுவுல
மாட்டிகிட்டு நான்தான் திண்டாடுறேன்” என கத்தி… அவன் மண்டையை சுவரில் கொண்டு போய் அடிக்க வேண்டும் போல் இருந்தது மகிமாவுக்கு…
வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாததால் அவனை மனதினுள் வருத்தெடுத்துக் கொண்டிருந்தாள்…
உன் அண்ணா, எனக்குத் தெரியாம ரகசியமா ஆஸ்திரேலியா போக பிளேன் போட்டுட்டு இருக்கான்… ஆனா எனக்கு எப்படியோ நியூஸ் வந்துடுச்சு… அதோட நம்மளயும் கூட்டிட்டு போக சொல்லு…” என்றான் அபின்ஞான்.
“லூசா நீ” என்பது போல் அவனை பார்த்தவள், “என்ன கூட்டிட்டு போறதுல பிரச்சன இல்ல… பட் உன்ன” என்று ஆரம்பித்தவள் அவன் பார்வையில்,
“உங்கள எப்படி கூட்டிட்டு போறது?” என்று தன் புருவம் சுருக்கி கேட்டாள் மகிமா.
“உன் புருஷனா கூட்டிட்டு போ…” என்றானே பார்க்கலாம்…
அவனை அதிர்ந்து பார்த்தவள்,
“என்னது… உனக்கு என்ன பைத்தியமா? என்னால உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்று மரியாதையை மறந்துவிட்டு கத்த…
“எனக்கும் உன்ன மாதிரி அன்னக்காவடி பொண்ண கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்ல” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே…
“என்னடா சொன்ன…” என்று மஹிமா எகிறிக் கொண்டுவர,
“கூல் பேபி… நாம கல்யாணம் பண்ணிட்டு எங்க வேலை முடிஞ்ச உடனே டிவோர்ஸ் பண்ணிக்கலாம்… அங்க போறதால உனக்கும் உன் ரிசர்ச்ச பண்ணலாம்… அதோட எனக்கும் என் வேலய பார்த்த மாதிரியும் இருக்குமே” என்று தன் தாடியை வருடியபடி கூற…
அவனை யோசனையாக பார்த்தவள், “ஏன்… உன்கிட்ட ஆஸ்திரேலியா போறதுக்கு பணமில்லையா??” என்று கேட்க,
அவளின் நக்கலில், “ஏய்” என்று கர்ஜித்தவன், “நான் பேசுனத வெச்சி, நான் ரொம்ப நல்லவன்னு மட்டும் நினைச்சுடாதே… எனக்கு ஒரு விஷயம் வேணும்னா நான் எந்த எல்லைக்கும் போவேன்” என்று அபின்ஞான் கூறிய சத்தத்தில் அவள் மேனியோ நடுங்கத் தொடங்கியது…
அக்குரலிலும் அவன் பார்வையின் வீரியத்திலுமே அவளுக்கு உள்ளுக்குள் பயப்பந்து உருள ஆரம்பித்தது…
“நான் போக வேண்டிய இடத்துக்கு தான் தேவ்’வும் போறான்… நான் தனியா போனா… என்ன வேல பார்க்க விடவே மாட்டான்… ஏதாவது ஒன்னு செஞ்சி தடுத்துட்டே இருப்பான்… அதனால அவன் கூடவே போலாம்னு முடிவு எடுத்துட்டேன்” என்றான்.
“உன் திமிர அடக்க அவனாவது இருக்கானே… கடவுளே நான் இதுக்கே உனக்கு நூறு தேங்காய் உடைக்கிறேன்” என வேண்டிக் கொண்டவள் எதுவும் பேசாமல் இருக்க,
“என்ன முடிவு எடுத்திருக்க… நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டான்.
இப்பொழுது மறுக்க முடியாத நிலையில் இருந்தாள் மகிமா.
“நான் முடியாதுன்னு சொன்னா?” என்ற மகிமா கேள்வியாக நிறுத்த,
“வேறென்ன… ஜெயில்ல களி திங்க வேண்டியது தான்” என்று அவன் தோல்களை குழுக்கியபடி கூற,
“குட் கேர்ள்… இப்படித்தான் புத்திசாலித் தனமா முடிவெடுக்கணும்… உன் அண்ணா கூட சேர்ந்து ரொம்ப முட்டாள் ஆயிட்ட…” என்றவன், “வா இப்ப கோவிலுக்கு போலாம்” என்று கூற, “என்னது…? இப்பவே கல்யாணமா…?” என்று அதிர்ந்து நெஞ்சில் கையை வைத்துக் கொண்டாள்…
“உன்னை எல்லாம் நம்ப முடியாது… நானே வில்லன்… ஆனா நீ என்னை விட சரியான கேடியா இருக்க… அதனால உடனுக்குடனே வேலய முடிச்சுடனும்…” என்றவன், அடுத்த இரு மணித்தியாலங்களில்… நாலைந்து போன் காலிலே அனைத்து வேலைகளையும் முடித்து விட்டான்…
அடுத்த சில நிமிடங்ககளில் அவளிடம் ஒரு சேலையை கொடுத்தவன், “பாஸ்ட்டா கட்டிட்டு வா” என்றபடி அறையில் இருந்து வெளியே சென்றான்.
அவன் போவதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் குனிந்து அவன் அவள் கையில் திணித்து விட்டு சென்ற சேலையை பார்த்து, “எல்லாமே பிளான் பண்ணிருக்கான்” என்று முனுமுனுத்தபடியே அவளும் சேலையை கட்டியபடி வெளியே வந்தாள்…
சிவப்பு நிறத்தில் தங்க ஜரிகை போட்ட பட்டு புடவை உடுத்தி, அவன் கொடுத்த நகைகளையும் அணிந்திருந்தாள். முகத்தில் எந்த அலங்காரமும் இன்றியே அழகாக இருந்தாள்.
அவளை ஆராய்ச்சியாக பார்த்து, “நாட் பேட்” என்ற படி அவளை கோயிலுக்கு அழைத்துச் சென்றான் அபின்ஞான்…
அபின்ஞானும் வேட்டி சட்டையில் கம்பீரமாக இருந்தான்… ஆனால் அதை எல்லாம் பார்க்கும் மனநிலை அவளுக்கில்லை.
அவனுக்கு இருந்த பணப்பலத்துக்கும் அதிகாரத்துக்கும் இந்த திடீர் திருமணம் கூட இரு மணித்தியாலங்களிலே சாத்தியமாக இருந்தது…
அங்கே அவனது நண்பன் கரனும் சஞ்சனாவும் வந்திருந்தனர்…
“மகிமா அவர்களை அதிர்ச்சியாக பார்க்க, நான் நாம்ம காதலிக்கிறதா சொல்லி அவங்கள கூப்பிட்டேன்… அவங்க உன் அண்ணா தான் நம்ம காதலுக்கு எதிரின்னு நெனச்சிட்டு இருக்காங்க” என்றவன் சிரித்தபடியே முன்னோக்கி நடக்க,
“வாய்க்கு வாரதெல்லாம் அடிச்சு விடுவீங்களா?” என்று அவள் அண்ணாவை மாட்டி விட்ட கோபத்தில் கேட்க,
“உன்ன விடவா..? நான் பேசிட்டேன்…” என்றபடி நடக்க, அவளுக்கு பேச மறு வார்த்தை வரவில்லை.
மணமேடையிலிருந்து எல்லாமே அமைக்கப்பட்டிருக்க, இருவரும் அங்கு சென்று அமருவது மட்டும் தான் பாக்கி.
இருவரும் அமர்ந்து கொண்டனர்…
ஐயரும் மந்திரங்களை உச்சரிக்க… அபின்ஞான் மகிமாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான்…
கரனும் சஞ்சனாவும் அர்ச்சதை தூவி அவர்களை வாழ்த்தினர்…
சஞ்சனாவுக்கோ மகிமா அவனை திருமணம் செய்ததை நினைத்து அதிர்ச்சியாக இருந்தாலும்… அவளுக்கோ அபியின் திருமணம் முடிந்ததால், “அப்பாடா…” என்று இருந்தது… “நான் தப்பிச்சேன்… அம்மா கிட்ட அத்தானை நல்லா போட்டு கொடுத்துட்டு… நான் இனி சிங்களா சுத்த போறேன்” என்று சந்தோஷத்துடன் நினைத்துக்கொண்டாள்.
மகிமாவுக்கு சஞ்சனாவுடன் பேசக்கூட நேரம் இருக்கவில்லை…
அடுத்து அவர்கள் நால்வரும் இறங்கியதோ ரிஜிஸ்டர் ஆபீஸின் முன்னால் தான்…
மகிமா அபின்ஞானை சந்தேகமாக பார்த்து, “மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ண போறோமா?” என்று கேட்டாள்.
“ம்ம்… உன்ன நம்ப முடியாது… ஏதாவது சொல்லிட்டு இடைல ஓடிப் போயிடுவ, இல்லன்ன போலீஸ்ல கூட நீ என்ன பிடிச்சு கொடுத்துடுவ, எல்லாம் பக்க ஆதாரத்தோடு இருக்கணும்… அதுக்காக தான் இந்த ஏற்பாடு” என்று அவள் காதருகே குனிந்து அவள் காதனியை சரி செய்வது போல சொன்னான்.
அனைத்துமே நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் நடந்தும் முடிய, மணமக்கள் இருவரும் மகாதேவ்’வின் முன்னால் சென்று நின்றனர்…
தாலி அணிந்து நெற்றியில் குங்குமத்துடன் வந்து நின்ற தன் தங்கையின் கோலத்தை பார்த்து அதிர்ந்தவன், அவள் அருகே நின்ற அபின்ஞானை பார்த்து கொதித்தெழுந்து விட்டான்.
“டேய் அவள என்னடா பண்ணி வெச்சிருக்க…?” என்றபடி அவன் அணிந்திருந்த சேட் காலரை பிடித்து இழுத்து அவன் முகத்திலே குத்தியிருந்தான் மகாதேவ்….
மகாதேவ் அபின்ஞானுக்கு அடித்ததை கண்டு கண்களை விரித்தாள் மகிமா, “வாவ்… செம பஞ்ச் டா… இவனுக்கு இது தேவைதான்” என்று மனதினுள் மகிழ்ந்தவள் வெளியே எந்த உணர்வும் இல்லாமல் நின்றிருந்தாள்…