காளையனை இழுக்கும் காந்தமலரே : 07

4.9
(10)

காந்தம் : 07

கேசவன் நீண்ட நாட்களுக்கு பிறகு அன்று அவர்களின் ஐடி கம்பனிக்கு வந்திருந்தார். வந்தவர் தனது அறையில் இருந்த சிசிடிவியை செக் பண்ணியவாறு இருந்தார். அவரின் கண்களுக்கு அன்று சபாபதி மோனிஷாவை கத்தியது தென்பட்டது. உடனே அவர் மோனிஷாவை தனது கேபின்க்கு வருமாறு கூறினார். 

அவர் அழைத்ததும் தான் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே வைத்து விட்டு உள்ளே வந்தாள் மோனிஷா. அங்கே கதிரையில் இருந்த கேசவனிடம் ஓடி வந்து, அவரை அணைத்துக் கொண்டாள். அவரும் பாசத்துடன் மோனிஷாவை அணைத்தார். 

அவரிடம் இருந்து பிரிந்தவள், “டாடி நீங்க எப்போ வந்தீங்க…?” என்றாள். அவரும், “இங்க வந்து ரொம்ப நாளாச்சு டா அதுதான் பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்….. உன்னோட வேலை எப்பிடி போகுது…? எம்டியா பொறுப்பேத்துக்கனு சொன்னாலும் வேணாம்னு சொல்ற. முதல்ல இவங்களோட இருந்து வேலை கத்துக்கணும்னு சொல்ற….” என்றார். 

“டாடி போதும். நான் ரெண்டு வருஷத்துக்கு வேலை பார்த்திட்டு, அப்புறம்தான் எம்டியா பொறுப்பேத்துப்பன்….” என்ற மகளை பார்த்தவர், “அதெல்லாம் சரி மோனிமா, அந்த சபாபதி எதுக்கு உங்கிட்ட சத்தம் போட்டான்…. எவ்வளவு தைரியம் இருந்தால் என் பொண்ணுக்கிட்டையே அவன் இப்பிடி சத்தம் போடுவான்…. முதல்ல அவனை என்ன பண்றன் பாரு…” என சத்தம் போட்டவரை அமைதிப் படுத்திய மோனிஷா, அவரிடம் தயக்கத்துடன் பார்த்தாள். 

எப்பவும் எதுக்கும் அஞ்சாது இருக்கிற மகள், இப்போது தயங்குவதைப் பார்த்து அவருக்கு குழப்பமாக இருந்தது. “மோனி எதுவா இருந்தாலும் டாடிக்கிட்ட தயங்காம சொல்லுமா….” என்றார். தந்தை கொடுத்த ஊக்கத்தில் தனது மனசில் உள்ளதை சொல்ல ஆரம்பித்தாள். 

“டாடி நான் சபாபதியை லவ் பண்றன். எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனால் அவரு என்னை லவ் பண்ண முடியாதுனு சொல்றாரு…..” என்றாள். “என்ன உன்னை வேணாம்னு சொல்றானா….? அவனுக்கு எவ்வளவு நெஞ்சளுத்தம். எல்லாம் உன்னை சொல்லணும் ஊர்ல எத்தனையோ பிஸ்னஸ்மேன் இருக்கும் போது நம்மகிட்ட கைநீட்டி சம்பளம் வாங்கிறவனை லவ் பண்றேன்னு சொல்ற….” என்று கோபப்பட்டார்.

அவரது கோபத்தை பார்த்து பயந்தாலும்,” டாடி அவரை நான் லவ் பண்ண காரணமே அவரது குடும்பம் அப்பா. அவங்களோட து கூட்டுக் குடும்பம். அதுதான் அவங்களை எனக்கு ரொம்ப பிடிச்சது. நம்மளோட வீட்ல நாம சேர்ந்து இருந்திருப்பமா? அண்ணா மும்பைல, நீங்க இங்க, நான் இத்தனை நாள் ஊட்டில, இப்போதான் இங்க இருக்கிறன். எனக்கு குடும்பமா இருக்க ரொம்ப பிடிக்கும் அப்பா. ப்ளீஸ் அப்பா, சபாவோட ஒரு தடவை பேசுங்க….” என்று தவித்தாள். 

அவளை இதுவரை எதற்குமே தவிக்க விடாத கேசவன்,”சரி நீ போ, நான் சபாபதிகூட பேசுறன்….” என்றார். அவளும் தலையசைத்து விட்டு வெளியே சென்றாள். மகள் சென்றதும் சபாபதியை வரசு சொல்லி விட்டு அவனுக்காக காத்திருந்தார். 

சபாபதியும் எம்டி கூப்பிடுவதால் வேகமாக வந்து, அனுமதி கேட்டுவிட்டே உள்ளே வந்தான். கேசவன் அவனை பார்வையாலே எடை போட்டார்.” சார் கூப்டீங்க..” என்றான். தனக்கு முன்னால் இருந்த கதிரையில் அவனை இருக்க சொல்ல, சபாபதியும் குழப்பத்துடன் இருந்தான். 

பெருமூச்சொன்றை விட்ட கேசவன் பேச ஆரம்பித்தார். “சபாபதி உங்களைப் பற்றி, உங்க குடும்பத்தை பற்றி சொல்லுங்க….” என்றார். சபாபதிக்கு ஒன்றும் விளங்கவில்லை. இவர் வரச் சொல்லிவிட்டு இப்போ எதுக்கு நம்மளோட குடும்பத்தை பற்றி கேட்கிறாரு என்று யோசித்தான். 

அவனது மனநிலையை அறிந்தவர், “நான் காரணமில்லாமல் எதுவும் கேட்க மாட்டேன்.சபாபதி நீங்க முதல்ல சொல்லுங்க. அப்புறம் நான் சொல்றன்……” என்றார். சபாபதியும் தனது தாத்தா, பாட்டி, அப்பா, சித்தப்பா என்று தனது ஊரையும் குடும்பத்தையும் பற்றிச் சொன்னான். அதைக் கேட்ட கேசவனின் நெற்றி சுருங்கியது. 

சபாபதி எல்லாம் சொன்ன பிறகு கேசவன் அவனிடம், “சபாபதி என் பொண்ணு உங்களை லவ் பண்றா. நான் மற்றவங்களை போல காதலுக்கு எதிர்ப்பு கிடையாது. எனக்கு சம்மதம். ஆனால் நீங்க என் பொண்ணை வேணாம்னு சொல்லிட்டீங்களாம்னு, அவ ரொம்ப கவலைப்படுறா…..” என்றார். 

அவரு சொன்னதை கேட்ட சபாபதிக்கு ஒன்றும் புரியவில்லை. அவரது பொண்ணைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்தப் பெரிய கம்பனியோட எம்டி பொண்ணு என்னை லவ் பண்ணுதா என மனசுக்குள் பேசிக் கொண்டு இருந்தான். 

கேசவன்தான் மீண்டும் பேசினார். “என்ன சபாபதி, என் பொண்ணு யாருனு யோசிக்கிறீங்களா…? உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சவதான். மோனிஷா தான் என்னோட பொண்ணு.. சின்ன வயசில இருந்தே நான் அவ ஆசைப்பட்டதை செய்து குடுத்திடுவன்…. அவ இப்போ உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறா. ஆனால் நீங்க பிடிக்கலைன்னு சொல்றீங்க.. எதனால என் பொண்ணை வேணாம்னு சொல்றீங்கனு தெரிஞ்சிக்கலாமா….?” என்று கேட்டார் கேசவன். 

அதற்கு சபாபதி சொன்ன பதிலில் சிரிப்பு வந்தது. 

ஐசியூக்கு வெளியே துர்க்கா ஊரிலுள்ள எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டிருந்தார். வள்ளியும் அவள் பங்கிற்கு வேண்டுதல் வைத்துக் கொண்டு இருந்தாள். நிஷா பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தாள். 

உள்ளே மலர்னிகாவிற்கு உரிய சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. வைத்தியர்கள் அவர்களது பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தனர். இரண்டு மணி நேரங்களின் பின்னர் வெளியே வந்த டாக்டரிடம் வேகமாக வந்தார் துர்க்கா. 

“டாக்டர் என் பொண்ணு எப்பிடி இருக்கா…..? அவளுக்கு ஒண்ணுமில்லை தானே.. நல்லா இருக்கால்ல டாக்டர்….?” என கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தார் துர்க்கா. அவரை அமைதியாக இருக்க சொன்ன டாக்டர், “பயப்படுறதுக்கு ஒண்ணுமில்லை அம்மா.. கொஞ்ச நேரத்தில அவங்களை வார்டுக்கு மாத்திடுவாங்க. நீங்க அதுக்கு பிறகு போய் பார்க்கலாம்….” என்றார். 

டாக்டர் சொன்னதைக் கேட்டதும் தான் துர்க்காவிற்கு போன உயிர் மீண்டும் வந்து போல இருந்தது. அவருக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னார். டாக்டர் அது என்னோட கடமை என்று சொல்லிவிட்டு சென்றார். 

காளையன் நெல்லு மூடைகளை சரிபார்த்து வண்டியில் ஏற்றிக் கொண்டு இருந்தான். அப்போது ஒரு மூட்டை சிறியதாக இருந்தது. காளையனுக்கு சந்தேகம் வந்தது. மூட்டையை எடுத்து வைத்த கதிரிடம், சிறிய மூட்டையை கீழே இறக்க கூறினான். அங்கிருந்த கத்தியை எடுத்து மூட்டையில் குத்தினான். 

மூட்டையில் இருந்து வந்ததை பார்த்த காளையன் அதிர்ச்சி அடைந்தான் 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

1 thought on “காளையனை இழுக்கும் காந்தமலரே : 07”

Leave a Reply to Babubuvana Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!