சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 27 ❤️❤️💞

4.9
(17)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 27

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

“நான் ஷாலினியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்..”

அவன் சொன்னதை கேட்டு சுந்தரிக்கு கண்கள் ஏனோ குளமாகின..

தலையை குனிந்து அவனிடம் இருந்து தன் கண்ணீரை மறைத்து “கங்கிராஜுலேசன்ஸ் சார்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து காலி ரசகுவளையை எடுத்துக்கொண்டு உள்ளே  வேகமாக சென்றுவிட்டாள் பேதையவள்..

உள்ளே சென்று ரசக்குவளையை வைத்தவள் நேரே தன் அறைக்குச் சென்று கதவை சாத்திக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதாள்.. அவள் ஏன் அப்படி அழுகிறாள் என்று அவளுக்கே புரியவில்லை..

அன்று பாட்டி அவளிடம் “அவளும் சுந்தரும் வாழ்க்கையில் ஒன்று சேர வேண்டும்” என்று சொன்னபோது “அவர் எங்க.. நான் எங்க.. அவர் நினைக்கிற மாதிரி மனைவி அவருக்கு கிடைக்கணும்” என்று வாய்விட்டு சொல்லியவளுக்கு இன்று அதே நல்ல செய்தியை அவன் சொல்லும்போது ஏனோ உயிரை உரித்து எடுப்பது போல் வலித்தது.. இந்த வலியை அவளால் தாங்கவே முடியவில்லை..

ஏதோ விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷம் தன் கையை விட்டுப் போனது போல் துடித்தாள் அவள்..

ஒரு பத்து நிமிடம் அழுதவள் அதன் பிறகு “நான் ஏன் இப்படி அழுதுகிட்டிருக்கேன்.. இந்த விஷயத்தை கேட்டு நான் சந்தோஷம் தானே படணும்.. சுந்தர் சார் நினைச்ச மாதிரியே அவருக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கப் போகுது.. அந்த சந்தோஷத்தை ஆசையா நம்ம கிட்ட பகிர்ந்துக்கணும்னு வந்திருக்கார்.. இப்படி ஒரு கங்கிராஜூலேசன்ஸ் மட்டும் சொல்லிட்டு உள்ள வந்துட்டோமே.. அவர் நம்மளை பத்தி என்ன நினைச்சுருப்பாரு..?” என்று எண்ணியவள் குளியலறைக்கு சென்று முகத்தை கழுவி துடைத்துக் கொண்டு வெளியே வந்தவள் நேரே சமையலறைக்கு சென்றாள்..

இங்கே சுந்தரோ “நம்ம எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொன்னோம்.. கங்க்ராஜுலேசன்ஸ்னு ஒரு வார்த்தையில சொல்லிட்டு சுந்தரி உள்ள போய்ட்டாங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டு என்னோட இந்த சந்தோஷத்தை ஷேர் பண்ணிப்பாங்கன்னு நெனச்சேன்.. சரி.. அவங்க சந்தோஷமா தான் இருப்பாங்க.. எப்படி அதை வெளிக்காட்டறதுன்னு தெரியாம போயிருக்கலாம்..” என்று நினைத்தவன் தன் அறைக்கு செல்ல எழுந்தான்..

அப்போது  சமையலறையில் இருந்து நெய் வாசனை நாசியை துளைக்கவும் ஆர்வம் மேலிட்டு அங்கே சென்று பார்த்தான்..

அங்கே சுந்தரி கேசரி செய்து கொண்டிருந்தாள்.. “என்ன பண்றீங்க சுந்தரி..?” என்று கேட்டுக்கொண்டே வந்தவன் வாயில் ஒரு தேக்கரண்டி கேசரி எடுத்து ஊட்டி விட்டாள்.. சுந்தரி..

“எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்கீங்க.. அதை கொண்டாட வேண்டாமா? அதான்.. என்னால பெரிசா  எதுவும் பண்ண முடியலன்னாலும் ஏதோ என்னால முடிஞ்சது.. ஸ்வீட் பண்ணேன்.. ஸ்வீட் எடுங்க.. கொண்டாடுங்க..” என்று விளம்பர பாணியில் சொல்லி அவனுக்கு இன்னும் கொஞ்சம் கேசரி எடுத்து கொடுக்க அவனும் அதை எடுத்து அவள் வாயின் அருகில் கொண்டு வந்து நீட்டினான்..

அதை வாங்கிக் கொண்டவள் கண்களில் இருந்து கண்ணீர் வெளியே எட்டிப் பார்த்து விடுமோ என்று அவளுக்கு பயம் எடுத்துக் கொள்ள இன்னும் கொஞ்சம் கேசரியை எடுப்பது போல் வேறு பக்கம் திரும்பியவள் அவனுக்கு தெரியாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டு திரும்பவும் அவன் பக்கம் திரும்பினாள்..

“நெஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்.. நீங்களும் ஷாலினி மேடமும் கல்யாணம் பண்ணிக்கிட்டு உலகத்துல இருக்குற அத்தனை சந்தோஷமும் கிடைச்சு நல்லா வாழணும்னு நான் அந்த சாமி கிட்ட வேண்டிக்கிறேன்..”

அவள் மனதார வாழ்த்த “தேங்க்யூ சோ மச் சுந்தரி…. இதைவிட அழகா யாராலயும் என் சந்தோஷத்தை பகிர்ந்துக்க முடியாது.. நான் பாட்டிகிட்டயும் இந்த விஷயத்தை சொல்லணும்.. நான் போய் சொல்லிட்டு வரேன்.. பை த வே கேசரி ரொம்ப நல்லா இருக்கு.. எனக்கு ஒரு கப்ல போட்டு கொடுக்கறீங்களா?” என்று கேட்டான் சுந்தர்..

“அதுக்கு என்ன சார்..? கொடுத்துட்டா போச்சு..”

ஒரு கிண்ணத்தில் அவனுக்கு கொஞ்சம் கேசரியை போட்டுக் கொடுத்தாள்..

அதை எடுத்துக் கொண்டு பாட்டியின் அறைக்கு உற்சாகத்தோடு சென்றான் சுந்தர்..

“பாட்டி… ஸ்வீட் சாப்பிடுங்க..” என்று கொஞ்சம் கேசரி எடுத்து பாட்டிக்கு கொடுக்க போனவன் பாட்டி முகம் சுருக்கி “என்ன விஷயம்? கேசரி எல்லாம் கொடுக்கிற? ஆஃபீஸ்ல ஏதாவது உனக்கு அவார்டு கொடுக்கிறாங்களா?” என்று கேட்டாள்..

“அதெல்லாம் இல்ல பாட்டி.. இது அதைவிட சந்தோஷமான விஷயம்.. நான் எனக்கு ஒரு கனவு இருக்குன்னு சொன்னேன்ல என் கல்யாணத்தை பத்தி.. அந்த மாதிரி ஒரு பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்க போறேன் பாட்டி.. இன்னைக்கு அந்த பொண்ணு கிட்டயும் அதை சொல்லி அந்த பொண்ணும் சம்மதம் சொல்லிட்டா.. அதான் அந்த சந்தோஷத்தை சுந்தரி கிட்ட ஷேர் பண்ணேன்.. அவங்கதான் கேசரி பண்ணி கொடுத்தாங்க பாட்டி.. “

மறுபடியும் பாட்டிக்கு கேசரி ஊட்டப் போக அவன் கையைப் பிடித்த பாட்டி “யாருப்பா அந்த பொண்ணு?” என்று இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார்..

“உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணு தான் பாட்டி.. இங்க வந்தாளே ஷாலினி.. அவ தான் பாட்டி..”

பாட்டிக்கு முகத்தில் மகிழ்ச்சிக்கு பதில் கவலை ரேகைகள் படிந்தது..

“சுந்தர்.. அந்த பொண்ணு உனக்கு நல்ல துணையா இருப்பான்னு எனக்கு தோணலப்பா.. என்னை மன்னிச்சிடு.. என்னால இந்த கேசரியை சாப்பிட முடியாது.. ஏனோ என்னால உனக்காக சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிக்க முடியல.. எனக்கு அந்த பொண்ணை பார்த்தா அவ்வளவு நல்ல அபிப்பிராயம் வரல..” என்று பாட்டி சொல்ல உற்சாகமாய் இருந்த சுந்தரின் முகமோ வாடிய மலராய் சுருங்கிப் போனது..

“என்ன பாட்டி இப்படி சொல்றீங்க?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் சுந்தர்..

“இல்லப்பா. அவ கொஞ்சம் தன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கு மத்தியில ஏற்றத்தாழ்வு ரொம்ப பாக்குறான்னு தோணுது பா.. சில பேரை மனுஷங்களாவே மதிக்க மாட்டேங்கிறான்னும் தோணுது.. நீ எல்லாருக்கும் பாரபட்சம் பார்க்காம அன்பு காட்டுவே.. உனக்கு அவ சரியான துணையா இருப்பாளான்னு எனக்கு சந்தேகமா இருக்கு..”

அந்தக் கேள்வி சுந்தருக்குள்ளேயே கொஞ்சம் இருக்கத் தான் செய்தது..

அவள் தன் அலுவலகத்தில் இருக்கும் பணியாளர்களை நடத்தும் விதம் சுந்தரியிடம் அவள் நடந்து கொள்ளும் விதம் இதையெல்லாம் பார்க்கும் போது பாட்டி சொல்வது எவ்வளவு உண்மை என்று அவனுக்கு புரிந்தது.. ஆனாலும் மற்ற சில இடங்களில் அவளுடைய சில நல்ல குணங்களையும் பார்த்திருப்பதால் பாட்டி சொல்வதை அவனால் முழுதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

“பாட்டி.. எல்லா நேரத்திலயும் ஷாலினி அப்படி எல்லாம் இல்ல பாட்டி.. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அன்னைக்கு ரோட்ல ஒரு வயசானவங்க ரோடு கிராஸ் பண்ண முடியாம தவிச்சுக்கிட்டு இருந்தாங்க.. என்னை வண்டியை நிறுத்த சொல்லிட்டு ஓடி போய் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணா பாட்டி ஷாலினி.. அது மட்டும் இல்லாம நீங்க ரொம்ப உடம்பு முடியாம கஷ்டப்பட்டுட்டு இருந்தப்போ ஷாலினி தான் உடனடியா டாக்டருக்கு ஃபோன் பண்ணி அந்த ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் உங்களுக்கு வேகமா ட்ரீட்மென்ட் பண்ண வச்சா பாட்டி.. நீங்க என்னடான்னா அவளை பத்தி இப்படி சொல்றீங்க..?” என்று வருத்தத்தோடு சொன்னான் சுந்தர்..

“உனக்கு அந்த பொண்ணு பிடிச்சிருக்குன்னா எனக்கு சந்தோஷம்தான் பா.. ஆனா அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ எவ்வளவு தூரம் சந்தோஷமா இருப்பேன்னு என்னால உறுதியா சொல்ல முடியல.. ஆனா இப்ப நீ சந்தோஷமா இருக்கே.. உன் சந்தோஷத்துக்காக நான் இந்த கேசரியை சாப்பிடுறேன்”

பாட்டி அவன் கையில் இருந்து கேசரியை கொஞ்சமாக எடுத்து உண்டாள்..

“தேங்க்ஸ் பாட்டி.. இது போதும் எனக்கு.. உங்க ஆசீர்வாதம் கிடைச்ச மாதிரி இருக்கு.. எனக்கும் ஷாலினிக்கும் கல்யாணம் நடந்தா உங்க ஆசீர்வாதத்தாலே என்ன குறை இருந்தாலும் அதை மறந்துட்டு நாங்க நல்லா வாழ்வோம் பாட்டி..”

“சரிப்பா.. ரொம்ப நேரம் ஆயிடுச்சு.. போய் படுத்துக்கோ..” என்று பாட்டி சொல்லவும் “ஓகே பாட்டி.. குட் நைட்..” என்று சொல்லிவிட்டு வந்த சுந்தருக்கோ மனம் வீட்டுக்குள் வரும்போது கொண்டிருந்த அமைதியையும் சந்தோஷத்தையும் இழந்து விட்டிருந்தது..

“பாட்டி சொல்வது போல் ஒரு வேளை தன் வாழ்வில் ஷாலினியால் சந்தோஷம் கிடைக்காமல் வேறு மாதிரி இருந்தால் என்ன செய்வது?” என்று யோசித்துக் கொண்டே வந்தவன் பாட்டியின் அறைக்கு அவருக்கு துணைக்கு படுத்து கொள்ள வந்த சுந்தரியின் மேல் மோதினான்..

அவன் மோதிய வேகத்தில் சுந்தரி அப்படியே கீழே விழப் போக அவள் இடையை வளைத்து தாங்கி பிடித்தவன் பார்வை அவள் கண்களில் பதிந்தது..

அவள் கண்கள் கலங்கி இருப்பதை கண்டவன் “என்ன சுந்தரி.. உங்க கண்ணு கலங்கி இருக்கு.. அழுதீங்களா..?” என்று அவன் கேட்கவும் அவளோ தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அவன் கையில் இருந்து எழுந்து நின்றவள் “இல்ல சார்.. சமையல் ரூம்ல கண்ணுல ஏதோ விழுந்துருச்சு.. அதான் கண்ணு கலங்கியிருக்கு” என்று கண்ணை கசக்குவது போல் பாசாங்கு செய்தபடி சொன்னாள்..

“ஓ… தூசி விழுந்திருச்சா? இருங்க நான் எடுக்கிறேன்” என்று சொல்லி அவள் கண்ணை தன் இரண்டு விரல்களால் பிடித்தவன் தன் வாயிலிருந்து காற்றை ஊதி அவள் கண்களுக்குள் செலுத்த அந்த காற்று அவள் உடலின் அத்தனை செல்களிலும் கலந்து ஒரு புதுவித உணர்வினை தூண்ட  அந்த உணர்விலே தன்னை மறந்து அவள் கண்களை மூடி இருந்தாள்..

அவள் மூடியிருந்த கண்களை பார்த்தான் சுந்தர்.. அந்த அழகிய மீன் போன்ற நீண்ட கண்கள் மூடி இருக்க அதன் நீள நீளமான இமைகளில் கண்ணின் ஈரம் பட்டு நனைந்திருக்க அதில் அப்படியே தன்னை மறந்து போனான் அந்த ஆடவன்..

ஏதோ ஒரு உந்துதலில் அவள் கன்னங்களை தன் கைகளில் ஏந்தியவன் அவளுடைய மூடிய இரு கண்ணிலும் மயிலிறகால் வருடுவது போல் மென்மையாய்  முத்தம் பதித்தான்…

அவன் கொடுத்த முத்தத்தில் சிறிது திடுக்கிட்டு கண் விழித்து பார்த்த சுந்தரி “சார் விடுங்க சார்” என்று அவன் கையை தன்னிடம் இருந்து விலக்கினாள்..

அவனோ தான் செய்த செயலால் பதற்றம் அடைந்தவன் “ஐ அம் சாரி சுந்தரி.. நான் ஏன் இப்படி பண்ணினேன்னு எனக்கே தெரியல.. ஏதோ உங்க கண்ணை பார்த்ததும் என்னால என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியல.. ஐ அம் வெரி சாரி சுந்தரி.. என்னை மன்னிச்சிடுங்க.. நான் இப்படி பண்ணி இருக்கவே கூடாது..”

அவன் திரும்ப திரும்ப மன்னிப்பு கேட்க “அய்யோ.. பரவால்ல சார்.. ஏதோ தெரியாம பண்ணிட்டீங்க.. நீங்க இதை மறந்துடுங்க.. நானும் மறந்துடறேன்.. நான் பாட்டி ரூமுக்கு போறேன் சார்..”

அவனை பார்க்காமல் தலையைக் குனிந்த படி சொல்லிவிட்டு பாட்டியின் அறைக்குள்  ஓடி கதவை சாத்திக் கொண்டாள்..

சுந்தரின் மனமோ மிகுந்த குழப்பத்துடன் “எனக்கு என்ன ஆகுது..? நான் ஏன் இப்படி நடந்துக்குறேன்..? சே.. என்ன வேலை இது.. நான் செஞ்சது பச்சை பொறுக்கித்தனம்.. ஷாலினியை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லிட்டு சுந்தரிக்கு இப்படி.. சே.. “

தன் கையை கோவத்தில் தன் தொடையில் குத்தியவன் “எனக்கு ஒரு வேளை சுந்தரியை ரொம்ப புடிச்சி இருக்கா? இல்லையே.. எனக்கு ஷாலினியை தானே ரொம்ப பிடிச்சிருக்கு.. அவ தானே என் கனவுப்படி இருக்கா.. அப்படி எனக்கு அவ மேல தான் லவ் இருக்குன்னா நான் ஏன் சுந்தரி கிட்ட இப்படி எல்லாம் நடந்துக்கிறேன்.. கடவுளே.. இது என்ன குழப்பம்..? என்னையே என்னால புரிஞ்சுக்க முடியலையே..” என்று குழம்பினான்..

பிறகு “அது ஏதோ சுந்தரி கண்ணை கிட்ட பார்த்த உடனே அழகா இருக்கிறதா தோணி கிஸ் பண்ணிட்டோம்.. தப்புதான்.. இனிமே அவங்களை விட்டு கொஞ்சம் தள்ளியே இருப்போம்.. ஆனா நம்ம மனசுல ஷாலினி தான் இருக்கா..”

தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு தன் அறைக்கு சென்றான் சுந்தர்..

பாட்டியின் அறைக்குள் வந்த சுந்தரி கண்ணில் ஆறாய் கண்ணீர் பெருகிக்கொண்டிருக்க அதை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு ஓரமாய் காலை மடித்து அமர்ந்து தலை குனிந்து கொண்டு அழுது கொண்டிருந்தாள்..

பாட்டிக்கு அவள் நிலை புரிந்திருக்க “என்ன சுந்தரி அழறியா?” என்று கேட்டார்..

சுதாரித்த சுந்தரி “நான் எதுக்கு அழணும் பாட்டி.. அதுலாம் ஒன்னும் இல்ல‌‌.. சுந்தர் எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்காரு..  நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பாட்டி..”

“உன் வார்த்தையில தான் சந்தோஷம் இருக்கே தவிர உன் முகத்திலயும் கண்ணுலயும் அதுக்கான எந்த அறிகுறியும் தெரியல சுந்தரி.. இந்த பாட்டிகிட்டயே பொய் சொல்றியா?”

பாட்டி சரியாய் அவள் நாடி பிடித்து கேட்கவும் அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதாள் சுந்தரி..

“அடி பைத்தியக்காரி.. உனக்கே தெரியாம அவன் மேல உயிரையே வச்சிருக்கே நீ.. உனக்கு ஒரு நல்லது நடக்க மாட்டேங்குது.. இந்த சுந்தர் பையன் போயும் போயும் அந்த ஷாலினி வலையில விழுந்துட்டானேடி..”

புலம்பிக்கொண்டே பாட்டி அவள் தலையை ஆதரவாக தடவி கொடுக்க அவளும் பாட்டி நெஞ்சிலே முகம் புதைத்துக் கொண்டு அதை அன்னை மடியாய் நினைத்து அழுது கொண்டிருந்தாள்..

“நீ அழாத சுந்தரி.. உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா தான் நடக்கும்.. எனக்கு தெரிஞ்சு சுந்தர் ஷாலினியை விரும்பல.. அவன் சிநேகிதங்க கிட்ட போட்ட சவால்ல ஜெயிக்கணும்ங்குறதுக்காக அதுக்கு ஏத்த மாதிரி இருக்கற ஷாலினியை ஒரு பிடிவாதத்தில கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணி இருக்கான்.. ஷாலினியை கல்யாணம் பண்ணிக்கிட்டான்னா அவன் வாழ்க்கைல ரொம்ப கஷ்டப்படுவான்.. நான் வேணா சுந்தர் கிட்ட ஒரு தடவை நீ அவனை விரும்புறேன்னு சொல்லி உன்னை கட்டிக்க சொல்லி கேட்கவா? ஒருவேளை நான் சொன்னா அவன் அதை பத்தி யோசிச்சு பார்ப்பான் சுந்தரி.. உனக்காக இல்லனாலும் அவனுக்காக நீ அவனை விரும்பறங்கறதை நான் அவன்கிட்ட சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி  சொல்லத்தான் போறேன் சுந்தரி..” என்றாள் பாட்டி..

அதைக் கேட்ட சுந்தரி ஒரு நொடி பதறிப் போனாள்..

தொடரும்..

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்து

க்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!