சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 29 ❤️❤️💞

5
(12)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 29

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

உள்ளே சென்று சுந்தரி அங்கிருந்த திரைச்சீலைகளை எல்லாம் மறைத்துவிட்டு உடைமாற்றிக்கொள்ள போக பிரசாதோ அங்கிருந்த கதவிடுக்கின் வழியே அவள் உடை மாற்றுவதை பார்க்கும் எண்ணத்தோடு ஒரு கண்ணை மூடி மறு கண்ணை அந்த கதவிடுக்கில் வைத்தான்..

அப்போது வேகமாக அவன் தலையை யாரோ பிடித்து அந்தக் கதவிலேயே மோதினார்கள்..

“அ…ம்..மா…!!” என்று கத்தியவன் முன் தலையில் ரத்தம் வடிந்து கொண்டிருக்க தலை சுற்றி கண்கள் மறைக்க மெல்ல கண்ணை இடுக்கிக் கொண்டு திரும்பி பார்க்க அங்கே சுந்தர் ருத்ர மூர்த்தியாய் நின்றிருந்தான்..

“ஏய் நாயே.. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இந்த வேலை பண்ணுவ..?” என்று மறுபடியும் அவன் சட்டை காலரை பிடித்து அங்கிருந்து எழுப்பி இழுத்துக் கொண்டு வந்தான்..

சத்தம் கேட்ட சுந்தரியும் தன் உடையை மாற்றாமல் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தாள்..

அங்கே சுந்தர் கண்கள் சிவந்து ஆத்திரத்தோடு பிரசாத்தின் சட்டை காலரை பிடித்துக் கொண்டு அவனை எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.. அதை பார்த்த சுந்தரிக்கு என்ன நடந்ததோ என்று பதட்டம் பிடித்துக் கொண்டது..

“சார் சார்.. என்ன சார் ஆச்சு? ஏன் அவருக்கு அடிபட்டு இருக்கு? ” என்று பதட்டமாக கேட்டுக் கொண்டு வந்தாள்..

சாப்பிட்டுக் கொண்டிருந்த எல்லோரும் எழுந்து அந்த இடத்திற்கு ஓடி வந்து ரத்தம் சொட்ட சொட்ட நின்றிருந்த பிரசாத்தை பார்த்து திடுக்கிட்டனர்..

“கேக்குறாங்க இல்ல..? சொல்லுடா.. என்ன ஆச்சுன்னு.. நீ என்ன பண்ணுனன்னு வாயை திறந்து சொல்லு பாக்கலாம்..” என்றான் சுந்தர்..

சுந்தரிக்கோ ஒன்றும் புரியவில்லை.. “என்ன சார் ஆச்சு?” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே சுந்தர் வெறி கொண்ட சிங்கமாய் ஓங்கி பிரசாத்தின் முகத்தில் குத்தி கீழே தள்ளி அவனை மேலும் மேலும் அடித்து துவைத்து கொண்டு இருந்தான்..

அதைப் பார்த்து அரண்டு போன சுந்தரி ஓடி சென்று சுந்தரை பிடிக்க மற்றவர்களும் பிரசாத்திடமிருந்து அவனை பிடித்து பின்னால் இழுத்தார்கள்..

“என்னை விடுங்க… இன்னைக்கு இவனை கொன்னு போட்டுடறேன்.. என்ன தைரியம் இருந்தா இந்த கேவலமான காரியத்தை நீ பண்ணி இருப்ப? பொறுக்கி நாயே..” என்று திட்டிக்கொண்டே இருந்தான் சுந்தர்..

“சார் நிறுத்துங்க சார்.. என்னன்னு சொல்லிட்டு அடிங்க.. அப்படி என்ன செஞ்சாரு அவரு? இப்படி கண்ணு மண்ணு தெரியாம அவரை போட்டு அடிக்கிறீங்க? செத்து கித்து போயிட போறாரு சார்..”

 கணேஷ் சொல்ல “சாகட்டும்.. இவன் பண்ண வேலைக்கு இவனை எல்லாம் உயிரோடவே விடக்கூடாது..” மறுபடியும் பல்லை கடித்துக் கொண்டு சுந்தர் முன்னேற அவனைப் பிடித்து இழுத்து அடக்கிய சுந்தரி “அப்படி என்னதான் சார் பண்ணார் அவரு?” என்று சுந்தரை  கேட்டாள்..

“சுந்தரி.. நீங்க அந்த ரூம்ல டிரஸ் மாத்த போனீங்க இல்ல.. இந்த பொறுக்கி..” என்று அவனை மறுபடியும் அடிக்கச் சென்றவனை சுந்தரி இழுத்து பிடித்து சுந்தரை தீர்க்கமாய் பார்க்க “இவன்  கதவிடுக்கு வழியா நீங்க டிரஸ் சேஞ்ச் பண்றது பாக்க ட்ரை பண்றான் சுந்தரி..” என்று கண்ணை மூடிக்கொண்டு மறுபடியும் பல்லை கடித்துக் கொண்டு சொன்ன சுந்தரை அவன் பக்கம் முன்னேறாமல் பிடித்து வைப்பது பெரும்பாடாய் இருந்தது..

சுந்தர் சொன்னதை கேட்டு சுந்தரிக்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்தது என்று தெரியவில்லை.. நேரே அந்த பிரசாத்திடம் சென்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்..

“உன்னை அவரு நிஜமாவே கொன்னு போட்டு இருக்கலாம்டா.. ஆனா அதனால அவரு ஜெயிலுக்கு போயிருவாரே.. அதான் அவரை புடிச்சு இழுத்து வச்சிருக்கேன்.. பொம்பளைங்கன்னா அவ்வளவு கேவலமா போச்சா உனக்கு? கொன்னுடுவேன் உன்னை.. இன்னொரு முறை இந்த மாதிரி எல்லாம் பொண்ணுங்க கிட்ட நடந்துக்க நினைச்சே.. ” என்று தன் சுட்டு விரலை அவன் முன்னே நீட்டி எச்சரித்தவள் “சீ.. நீ எல்லாம் ஒரு ஆளு.. பொம்பளை பொறுக்கி”  என்று சீறியவளை பார்த்து சுந்தருக்கு அவளுக்குள் இப்படி ஒரு வீராவேசம் நிறைந்த பெண் இருக்கிறாள் என்பதை நினைத்து ஆச்சரியமாக இருந்தது..

தன் பெண்மைக்கு ஒருவன் கேடு விளைவிக்க நினைத்தான் என்று தெரிந்த அடுத்த நொடி அவள் பத்திரகாளியாய் மாறி இருந்தாள்.. அவள் முகம் பார்த்தவனுக்கு அவன் வீட்டில் இருந்த அமைதியான சுந்தரியின் சிறு சாயல் கூட தென்படவில்லை..

அப்போது சுந்தர் “இவனை முதல்ல போலீஸ்ல புடிச்சு கொடுக்கலாம்.. இன்னியிலிருந்து உனக்கு இந்த கம்பெனியில வேலை கிடையாது..” என்று சொல்ல அந்தக் கூட்டத்தில் இருந்து அதுவரை மனம் இரண்டாய் பிளந்து போய் இருக்க அங்கு நடந்தது எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிரசாத்தின் மனைவி ஓடி வந்து சுந்தரின் காலில் விழுந்தாள்..

“சார்.. தயவு செஞ்சு எனக்காகவும் என் பிள்ளைக்காகவும் அவரை மன்னிச்சிருங்க சார்.. அவருக்கு வேலை இல்லனா அது அவருக்கு மட்டும் தண்டனை இல்ல சார்.. எனக்கும் என் பிள்ளைக்கும் சேர்த்துதான் தண்டனை.. இந்த மனுஷன் இப்படி ஒரு பொறுக்கித்தனம் பண்ணிட்டு திரியுறாரு.. அவருக்காக உங்ககிட்ட மன்னிப்பு கேக்கறதுக்கு கூட எனக்கு வெக்கமாதான் இருக்கு.. ஆனா என்ன பண்றது? வீட்டில சம்பாதிக்கிற ஒரே ஒருத்தர் அவர் தானே?” என்று கதறினாள்..

அவளை பார்த்த சுந்தர் ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்று “முதல்ல நீங்க எழுந்திருங்கம்மா… இதுக்கு முடிவு எடுக்கற பொறுப்பை நான் சுந்தரி கிட்டயே கொடுக்கிறேன்.. நீங்க அவங்ககிட்டயே கேளுங்க.. அவங்க என்ன டிசைட் பண்றாங்களோ அதையே பண்ணுவோம்..” என்று சுந்தர் சொல்லிவிட அவள் சுந்தரியை நோக்கி வந்தாள்.. அவள் காலில் விழ போனவளை சுந்தரி பிடித்து நிறுத்தி “கால்ல எல்லாம் விழாதீங்க.. என்னோட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” என்றாள்..

அவள் என்னவென்பது போல் பார்க்க “இந்த மாதிரி ஒரு  மனுஷனோட  வாழனுங்கறதுக்காக மன்னிக்க சொல்றீங்களா? இல்ல இவருக்கு வேலை போயிடுச்சுன்னா உங்க குடும்பம் நடுத்தெருவில நின்றுவீங்களேன்னு மன்னிக்க சொல்றீங்களா? ” என்று கேட்டாள் சுந்தரி..

“இந்த மாதிரி பொறுக்கித்தனம் பண்றவனை புருஷன்னு சொல்லிக்க எந்த பொண்ணுமா ஆசைப்படுவா? ஆனா எனக்கு வேலை கிடையாது..  நான் மட்டும் தனியா இருந்தா எங்கேயாவது பத்து பாத்திரம் தேச்சாவது வயித்தை கழுவிப்பேன்.. ஆனா இந்த குழந்தை இருக்கே.. அதுக்கு இந்த மனுஷன் கொண்டு வர்ற பணம் எனக்கு வேணும்மா.. இந்த ஆள் இல்லாம இந்த குழந்தையை தனியா எப்படி வளர்ப்பேன் நான்..? பெண் குழந்தை வேற..” என்று கதறினாள் அந்த பெண்..

“அப்படின்னா இந்த கம்பெனியில நான் சுந்தர் சார் கிட்ட உங்களுக்கு வேலை போட்டு தர சொல்றேன்.. உங்க குழந்தையை நீங்க உங்க கூடயே வச்சுக்கோங்க.. ஆனா உங்க புருஷனை இந்த கம்பெனியில் இதுக்கு மேல வேலைக்கு வச்சிருந்தா இந்த கம்பெனியில் வேலை செய்ற மத்த பொண்ணுங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்குன்னு சொல்லுங்க.. இன்னிக்கி அந்த ரூம்ல வந்து நான் டிரஸ் மாத்தும்போது எட்டிப் பார்த்தவர் நாளைக்கு லேடிஸ் பாத்ரூம் பக்கம் போய் இதையே பண்ண மாட்டாருன்னு என்ன நிச்சயம்?” என்று கேட்டாள் சுந்தரி..

அவள் கேட்பது நியாயமாக படவே “நீங்க முடிவு செய்றப்படியே செய்யுங்கம்மா.. என்ன..? இந்த ஆளு செஞ்சது வெளியில தெரிஞ்சா என் புள்ளையையும் என்னையும் எல்லாரும் கேவலமா பாப்பாங்க..” என்று புலம்பினாள் அந்த பெண்..

“உங்க வீட்டுக்காரரை போலீஸ்ல புடிச்சு கொடுக்கல.. ஆனா தொடர்ந்து அவரை இங்க வேலை செய்ய அனுமதிக்க முடியாது.. சுந்தர் சார் அவரு செஞ்சிட்டு இருந்த வேலையை இந்த அம்மாவுக்கு கொடுக்க முடியும்னா கொடுத்துருங்க..” என்று சுந்தரி சொல்லவும் “அந்த ஆளு இங்க டிரைவரா இருந்தாரு.. நீங்க என்னமா படிச்சு இருக்கீங்க?” என்று அந்த பெண்ணை பார்த்து கேட்டான் சுந்தர்..

“நான் பிளஸ் டூ படிச்சிருக்கேன் சார்..” என்று அந்தப் பெண் சொல்ல சுந்தர் யோசித்தான்.. சுந்தரியை தனியே அழைத்தவன் “சுந்தரி அவங்க பிளஸ் டூ தான் படிச்சிருக்காங்க.. அவங்களுக்கு இங்க தைய தெக்குற வேலை தான் கொடுக்க முடியும்.. அது கூட அவங்களுக்கு தெரியுமான்னு எனக்கு தெரியல.. அவங்களுக்கு வேற என்ன வேலை கொடுக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.. எந்த வேலை கொடுத்தாலும் பிரசாத் சம்பாதிச்சதுல பாதி சம்பளம் தான் அவங்களுக்கு கிடைக்கும்” என்று சுந்தர் சொல்ல.. “ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க சார்.. நான் அவங்களோட பேசிட்டு வந்து சொல்றேன்” என்று சொன்ன சுந்தரி அந்த பெண்ணிடம் சென்றாள்..

இதற்கு அவள் என்ன தீர்வு சொல்லப் போகிறாள் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர்..

அவளை தனியாக அழைத்து ஏதோ கேட்டவள் மறுபடியும் சுந்தரிடம் வந்து “சார்.. அவங்க ரொம்ப நல்லா சமைப்பாங்களாம்.. நான் என்ன சொல்றேன்னா அவங்களுக்கு இங்கேயே ஒரு கேண்டீன் வைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணி குடுங்க..  இங்க கம்பெனியில் இருக்கிற ஆளுங்களுக்கு எல்லாம் ஏதாவது வாங்கணும்னா அவங்க கேண்டின்ல இருந்து வாங்கி சாப்பிடட்டும்.. அதனால அவங்களுக்கும் வருமானம் கிடைக்கும்.. இந்த மாதிரி இக்கட்டான நேரத்துல நம்ம ரொம்ப தூரத்தில் இருந்து சமைச்சு கொண்டு வர்றதுக்கு ஆள் தேட வேண்டாம்.. இங்க கம்பெனி பக்கத்துலயே கிட்சன் இருக்கிறதுனால அங்கேயே சமைச்சுக்கலாம்..” என்றாள் சுந்தரி..

ஒரு நொடியில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்ட அவள் புத்தி சாதுர்யத்தை நினைத்து சுந்தர் பிரமித்தான்.. அந்த பிரசாத்துடன் பேசும்போது அவள் குரலில் இருந்த ஆளுமை.. அந்த நிறுவனத்தில் இருந்த மற்ற பெண்களின் பாதுகாப்பு பற்றி அவள் யோசித்தது.. இப்போது இந்த பிரச்சனைக்கு மிக வேகமாகவும் விவேகமாகவும் ஒரு தீர்வு கண்டது.. இதை எல்லாம் காணும் போது அவன் கண்ணுக்கு அவள் ஒரு சிறந்த நிர்வாகியாக தோன்றினாள்..

“ஓகே சுந்தரி.. நீங்க சொல்ற மாதிரியே பண்ணிடலாம்.. நீங்க அவங்க கிட்ட போய் விஷயத்தை சொல்லிடுங்க.. இன்னும் ஒன் வீக் டைம்ல அவங்களுக்கு கடை ஏற்பாடு பண்ணி கொடுத்துடலாம்..”

அதன் பிறகு நேரே பிரசாத்திடம் வந்தவன் அவனை இன்னும் ரெண்டு அடி அடித்து இழுத்துக்கொண்டு போய் கம்பெனிக்கு வெளியில் தள்ளினான்..

சுந்தரி அந்த பெண்ணிடம் விஷயத்தை சொல்ல அவள் சுந்தரி காலிலேயே விழுந்தாள்..

 “என் புருஷன் உனக்கு அவ்வளவு கேடு பண்ணப்பவும் நீ எனக்கு எவ்வளவு நல்லது பண்ணி இருக்கமா.. நெஜமா சொல்றேன் இந்த ஜென்மம் இருக்கிற வரைக்கும் இந்த நன்றி கடனை நான் மறக்க மாட்டேன்..” என்று அழுதாள் அந்த பெண்..

“உங்களுக்கு வேலை கொடுத்திருக்கிறது சுந்தர் சார்.. அவருக்கு போய் உங்க தேங்க்ஸ சொல்லுங்க.. நான் சும்மா ஐடியா தான் கொடுத்தேன் அவருக்கு..”

“இல்ல சுந்தரி.. அவங்க சரியா தான் சொல்றாங்க.. நிச்சயமா உங்களுக்கு தோணினது எனக்கு தோணி இருக்காது.. நான் அவங்கள ஒன்னு ஏதாவது தையல் வேலை பண்ண சொல்லி இருப்பேன்.. இல்லன்னா டிரைவிங் கத்துட்டு வர முடியுமான்னு கேட்டு இருப்பேன்.. ஆனா அவங்களுக்கு என்ன தெரியும்னு கேட்டு அதுக்கேத்த மாதிரி ஒரு வேலை ஏற்பாடு பண்ண சொல்லி கம்பெனியையும் இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலை வரும்போது அதை தீக்கறதுக்கு அதையே வழியா சொன்னிங்களே.. ஹாட்ஸ் ஆஃப் சுந்தரி… உங்களோட பிரசன்ஸ் ஆஃப் மைண்ட் ரொம்ப பாராட்டப்பட வேண்டியது..”

“அய்யோ சார்.. போதும் சார்.. என்னை புகழ்ந்தது.. எல்லாத்தையும் நீங்க செஞ்சுட்டு நான் ஏதோ ஒரு வார்த்தை சொன்னேன்.. அதுக்காக நான் செஞ்சதா சொல்லாதீங்க சார்.. சரிங்க சார்.. வீட்ல ரதி தனியா இருப்பா..  நான் கிளம்புறேன் சார்.. இல்லன்னா நீங்க இப்படியே தான் பேசிகிட்டு இருப்பீங்க.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு..” என்று சுந்தரி சொல்ல “அந்த டிரஸ்ஸை சேஞ்ச் பண்ணிட்டு போகலையா?” என்று சுந்தர் கேட்டான்..

“இல்ல சார்.. இப்போ திரும்பி போகும் போதும் எப்படியும் மழையில் தான் நனைஞ்சுட்டு போவேன்.. அந்த புது டிரஸ் திரும்பி நனையும்.. தேவையில்லை சார்.. நான் இப்படியே வீட்டுக்கு போயி மாத்திக்கிறேன்.. ” என்று சுந்தரி சொல்ல “ஒரு நிமிஷம் சுந்தரி..” என்று அவசர அவசரமாக உள்ளே அவன் அறைக்கு சென்றான்.. அங்கிருந்து அவன் கொடுத்த அந்த சுடிதாரை எடுத்து வந்தான்..

“சுந்தரி இன்னைக்கு நீங்க பண்ணின வேலைக்கு எவ்வளவு கிஃப்ட் தந்தாலும் போதாது.. இந்த சின்ன கிஃப்ட்டை நீங்க எனக்காக அக்செப்ட் பண்ணிக்கோங்க.. இதை இங்கே வச்சுட்டு போகாதீங்க.. இதை நீங்களே போட்டுக்கோங்க..” என்று சுந்தர் சொல்லவும் புன்னகைத்துக் கொண்டே அதை வாங்கிக் கொண்டாள் சுந்தரி..

“ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்றாள்..

ஷாலினி மதியம் 2 மணிக்கு மேல் சுந்தரின் கைபேசிக்கு அழைத்தாள்.. ஆனால் அவன் அவள் அழைப்பை ஏற்காமல் இருக்கவே கம்பெனியின் தொலைபேசிக்கு அழைத்தாள்..

 அப்போது அந்த அழைப்பை ஏற்ற கணேஷ் “ஹலோ..” எனவும் “ஹலோ.. யாரு கணேஷா?” என்று கேட்டாள் ஷாலினி..

“ஷாலினி மேடம்.. குட் ஈவினிங் மேடம்.. கணேஷ் தான் பேசுறேன்..” என்றார் கணேஷ்..

“குட் ஈவினிங்.. ஆமா சுந்தர்  ஃபோனே எடுக்க மாட்டேங்கறாரு.. எங்கேயாவது வெளில போய் இருக்காரா..?” என்று ஷாலினி கேட்கவும் “இல்ல மேடம்.. அது கம்பெனியில கொஞ்சம் பவர் கட் ஆயிடுச்சு.. கொஞ்சம் இருட்டா இருக்கு.. அதனால குழந்தைகள் எல்லாம் பயப்படுறாங்க. இங்க ஒரு நாலு அஞ்சு குழந்தைங்க இருக்காங்க… அதான் அவரு ஜெனரேட்டர் பேக்கப் வெச்சு பவர் கொடுக்கணும்னு இன்னும் ரெண்டு பேரோட அதை போய் பார்க்க போய் இருக்காரு மேடம்..”

“ஓ அப்படியா..? அப்புறம் அங்க எல்லாரும் எப்ப வீட்டுக்கு போவாங்க..?”

 “இப்ப எங்க மேடம் வீட்டுக்கு போறது..? இன்னும் ரெண்டு நாள் ஆகும்.. எல்லார் வீட்லயும் எப்படியும் தண்ணி இருக்கும்.. அதனால அதெல்லாம் வடிஞ்ச பிறகு தான் போக முடியும்.. ஆனா இன்னிக்கு காலையில சுந்தரி மேடம் வந்து எல்லாருக்கும் சாப்பாடு குடுத்தாங்க.. அதனால ஏதோ இன்னிக்கு ஒரு நாள் பட்டினி கிடக்காம நாங்க எல்லாரும் இப்ப நிம்மதியா இருக்கோம்.. ” என்று அவர் சொல்ல “என்ன சுந்தரி அங்க வந்தாளா?” என்று கேட்ட ஷாலினியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது..

தொடரும்..

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!!

நேத்து யூடி போடாம இருந்ததற்காக உங்களுக்கு இன்னிக்கு ரெண்டு  யூடி கொடுத்திருக்கேன்… இதையும் படிச்சு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க.. இனி தெனமும் ஒரு யூடி தவறாம கொடுக்க முயற்சி பண்றேன்..

நன்றி ஃப்ரெண்ட்ஸ்..

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!