சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 32 ❤️❤️💞

4.9
(12)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 32

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

சுந்தரி அசையாமல் அப்படியே கல் போல இருக்கவே அவளுக்கு பாட்டி இறந்த அதிர்ச்சியில் ஏதோ ஆகிவிட்டதோ என்று பயந்தான்.. சுந்தர்..

அப்போது வெளியே வந்த டாக்டர் சுந்தரியை பார்த்து “இன்னுமா இவங்க அப்படியே உட்கார்ந்துட்டு இருக்காங்க..” என்று கேட்க “டாக்டர்.. எவ்வளவு கூப்பிட்டாலும் அசைய மாட்டேங்குறாங்க.. இப்படியேதான் வெறிச்சு பார்த்துட்டு உட்கார்ந்து இருக்காங்க.. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு டாக்டர்.. ” என்றான் சுந்தர் அவரிடம்..

“சுந்தரி.. மிஸ். சுந்தரி..”

மருத்துவர் அவள் கன்னத்தை தட்டி அழைத்து பார்க்க அவள் எதுவும் சலனமே இல்லாமல் அமர்ந்திருந்தாள்..

 “மிஸ்டர் சுந்தர்.. அவங்க இப்படியே இருந்தாங்கன்னா இவங்களுக்கு நல்லதில்ல… அவங்களை எப்படியாவது அழ வைங்க.. அவங்க அதிர்ச்சியில் அப்படியே உறைஞ்சி போயிருக்காங்க.. அவங்களுக்கு சொல்லி புரிய வச்சு அவங்க ஃபீலிங்க்ஸை லெட் அவுட் பண்ணாதான் நல்லது..நீங்க கொஞ்சம் அவங்க கூடவே இருந்து அவங்க கூட கொஞ்ச நேரம் பேசி பாருங்க.. அப்படியும் அவங்க இப்படியே இருந்தாங்கன்னா நான் ஏதாவது அவங்களை ரிலாக்ஸ் பண்றதுக்கு ட்ரீட்மென்ட் குடுக்கறேன்.. ” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விட்டார் மருத்துவர்..

“சுந்தரி ப்ளீஸ் அழுதுடுங்க.. பாட்டி நம்மளை விட்டுட்டு போயிட்டாங்க.. என்னை பாருங்க சுந்தரி.. ப்ளீஸ் சுந்தரி”

அவள் கன்னத்தை தட்டி தட்டி சொல்ல அவள் காதில் எதுவுமே விழவில்லை.. அப்படியே ஒரே இடத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தவளை இனி என்ன செய்வது என்று தெரியாமல் சுந்தர் உள்ளுக்குள் கலவரமுற்றிருந்தான்..

பிறகு ஏதோ யோசனை வந்தவனாக ஓங்கி அவள் கன்னத்தில்  அறைந்தான்..

அந்த அறையின் வேகத்திலும் அது தந்த வலியிலும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டாள் சுந்தரி.. சுந்தரை கண்ட அடுத்த கணம் அவள் கண்களில் பொல பொலவென கண்ணீர் வழிந்தது..

“ஐயோ சார்.. பா..பா..பாட்டி நம்மளை விட்டுட்டு போயிட்டாங்களே சார்.. இனி எனக்குன்னு யாரு சார்..” என்று கத்தி அழுதவள் அப்படியே மயக்கமாகி விழவும் அவளை மார்போடு தாங்கி கன்னத்தை தட்டி எழுப்பினான் சுந்தர்..

ஆனால் அவள் எழுந்திருக்காமல் போகவே அங்கிருந்த செவிலியை அழைத்து கொஞ்சம் தண்ணீர் கொண்டு வர சொன்னான்.. தண்ணீர் தெளித்து அவளை எழுப்பிட கண் விழித்தவள் சுந்தரை பார்த்து கதறி கதறி அழ தொடங்கினாள் சுந்தரி..

“ஐயோ.. என்னால பாட்டியை காப்பாத்த முடியலயே.. சார்.. அவங்களை இப்படி விட்டுட்டேனே… என்னை ஏமாத்திட்டு போயிட்டாங்களே..”

தன் இருகைகளாலும் தலையில் அடித்துக் கொண்டு அழுதவளின் கைகளைப் பிடித்து தடுத்த சுந்தர் “என்ன சுந்தரி..? நீங்க என்ன பண்ணுவீங்க.. பாட்டியோட விதி முடிஞ்சிடுச்சு.. அதுக்கு நீங்க எப்படி காரணமாக முடியும்? நீங்க அழாதீங்க..”  சுந்தரியை அணைத்து அவள் தலையை வருடி ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான் சுந்தர்..

அவளோ அவன் முகத்தைப் பார்த்து புலம்பி அழுதுகொண்டே  இருந்தாள்.. “நான் எவ்வளவு சீக்கிரம் அவங்களை ஆஸ்பிட்டல் கூட்டிட்டு வர முடியுமோ.. கூட்டிட்டு வரணும்னு ரொம்ப முயற்சி பண்ணேன் சார்.. என்னால முடியலையே சார்.. என்னை இன்னொரு முறை அனாதையாக்கிட்டு பாட்டி போயிட்டாங்களே சார்.. ஏன் சார் எனக்கு இப்படி ஒரு தலைவிதி..? என் மேல பாசம் காட்டுறவங்க அத்தனை பேரும் என்னை விட்டுட்டு போயிடுறாங்களே சார்.. நான் அப்படி என்ன சார் பாவம் பண்ணேன்? நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவ சார்.. என்னோட துரதிர்ஷ்டத்துனாலதான்  சார் பாட்டிக்கு இப்படி ஆயிடுச்சு..”

தன் தலையில் அடித்துக் கொண்டு மறுபடி கதறி அழுதவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் சுந்தர் தத்தளித்துக் கொண்டு இருந்தான்..

அவனுக்கே இப்போது ஆறுதல் தேவைப்பட்டிருக்க சுந்தரியோ அவனை விட பெரும் அதிர்ச்சியில் இருந்தாள்.. பல மணி நேரம் அவள் போராடி பாட்டியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தும் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று அவ்வளவு நேரம் அவளுக்கு இருந்த மன அழுத்தம்.. கவலை.. அத்தனையும் சுந்தரின் தோள்களில் கண்ணீர் வடிவில் கொட்டி தீர்த்தாள் ..

சிறிது நேரம் அழுதவள் அவன் கண்ணீரில் அவள் தோள் நனைய ஆரம்பித்த போது தான் தன்னை போலவே அவனுக்கும் பாட்டியை இழந்தது எவ்வளவு பெரிய வலியை கொடுத்திருக்கும் என்று உணர்ந்தாள்..

“சார் சார்..” என்று அவன் முகத்தை பார்த்து கண்ணீர் மழை பொழிந்து கொண்டிருந்த அவன் கண்களை துடைத்து “அழாதீங்க சார்.. அழாதீங்க..”

அவனுக்கு அவள் ஆறுதல் சொல்ல முயற்சி செய்ய அவனோ “எப்படி சுந்தரி.. அழாம இருக்க முடியும்..? எங்க அம்மா மாதிரி தினமும் எனக்கு பார்த்து பார்த்து சோறு போட்டவங்க சுந்தரி.. அப்படியே என்னை விட்டுட்டு போயிட்டாங்க சுந்தரி.. பாட்டி மாதிரி என்னை கவனிச்சிக்க இந்த பூமியில வேற யாருமே இல்லையே.. சுந்தரி..”

அவன் குழந்தை போல் அவள் தோளில் முகம் புதைத்து அழுதான்..

அவன் தலையை கோதி குழந்தையை சமாதானப்படுத்துவது போல் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் சுந்தரி.. அப்போது அலுவலகத்திலிருந்து விஷயம் கேள்விப்பட்டு எப்படியோ மருத்துவமனைக்கு வந்திருந்தாள் ஷாலினி..

வந்தவள் மருத்துவமனைக்குள் நுழைந்த உடனே கண்டது சுந்தரும் சுந்தரியும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்த காட்சியை தான்..

அது பொறுக்காதவள் நேரே சுந்தர் அருகில் சென்று “சுந்தர்.. என்ன ஆச்சு..?” என்று கேட்க அவள் பக்கம் திரும்பிய சுந்தர் “பாட்டி எனபோயிட்டாங்க ஷாலினி.. என்னை பாத்து பாத்து கவனிச்சுக்கிட்ட ஒரு ஜீவன்.. அவங்களும் என்னை விட்டு போயிட்டாங்க..” என்று புலம்பினான்..

ஷாலினியோ “அழாதீங்க சுந்தர்.. என்ன பண்றது..? அவங்க போக வேண்டிய நேரம் வந்துட்டது.. போய்ட்டாங்க.. இதுக்கு யார் என்ன பண்ண முடியும்..?”

அவன் கையைப் பிடித்து ஆறுதல் சொல்ல சுந்தரிக்கோ ஒருவேளை அவள் உதவி இருந்தால்.. சமயத்திற்கு அந்த மருத்துவரிடம் பாட்டியை அழைத்துப் போயிருந்தால் பாட்டி பிழைத்திருப்பாரோ என்று மனதில் தோன்றியது.. ஆனால் அவள் சுந்தரி ஆயிற்றே..  மனதில் நினைத்ததை வெளியில் சொல்லவில்லை..

ஷாலினியிடம் இருந்து கைகளை விலக்கி தன் தலையில் வைத்துக்கொண்ட சுந்தர் “எல்லாம் முடிஞ்சிடுச்சு ஷாலினி.. எனக்குன்னு இருந்த உண்மையான கடைசி உறவும் போயாச்சு..” என்றான் சுந்தர்..

இதுதான் சமயம் என ஷாலினி..” ஏன் சுந்தர் அப்படி சொல்றீங்க? அதுதான் நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோமே.. உங்களுக்கு உங்க மனைவியா என் உறவு கிடைக்க போகுதே.. உங்களுக்கு நான் இல்லையா? இப்படி எல்லாம் பேசாதீங்க சுந்தர்.. எனக்கு ரொம்ப ஹர்ட் ஆகுது..”

அவன் ‌கன்னத்தில் கை வைத்து சொல்லி  அவள் நடிக்க சுந்தரோ “தேங்க்ஸ் ஷாலினி.. ஆனாலும் பாட்டி இடத்தை வேற யாருமே நிரப்ப முடியாது ஷாலினி..” என்றான் சுந்தர் அவள் கையை தன் கன்னத்திலிருந்து விலக்கியபடி..

அதற்குள் அங்கே வந்த மருத்துவர் “சுந்தர்.. எல்லா ஃபார்மாலிட்டீஸூம் முடிஞ்சிடுச்சு.. இப்போ பாட்டியை ஹேன்ட் ஓவர் பண்ணணும்.. அவங்க உறவுக்காரங்க யாராவது இருக்காங்களா?” என்று கேட்டார் மருத்துவர்..

சுந்தர் யோசித்து “ஒரு நிமிஷம் டாக்டர்.. அவங்களுக்கு ஒரு பிள்ளை இருக்காரு.. நான் அவருக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லி வர சொல்றேன்..” என்றான்..

தன் கைபேசி எடுத்து பாட்டியின் பிள்ளை சேகரை அழைத்தான்..

“ஹலோ.. யாரு?” என்று அழைப்பை ஏற்ற சேகர் கேட்க “நான் சுந்தர் பேசுறேன்…” என்று இவன் சொன்னவுடன் சேகருக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது..

“நீ எதுக்குடா எனக்கு ஃபோன் பண்ண?” என்று அவன் கேட்க “பாட்டி இறந்து போயிட்டாங்க.. அதான் உனக்கு சொல்லலாம்னு ஃபோன் பண்ணேன்..” என்றான் சுந்தர்..

“ஓ அப்படியா..? இப்ப அதுக்கு நான் என்ன பண்ணனும்..? அதுக்கு எனக்கு எதுக்கு ஃபோன் பண்ண?” என்று சேகர் கேட்கவும் சுந்தர் கோபத்தில் கையை இறுக்கி பல்லை கடித்தான்..

“நீதானடா அவங்க புள்ள.. அவங்களுக்கு கடைசி காரியம் எல்லாம் நீ தானே செய்யணும்..?” என்று கேட்க “அவங்க சொத்து எல்லாம் எனக்கு கொடுக்க மாட்டாங்களாம்..  ஆனா இது செய்யறதுக்கு மட்டும் நான் வேணுமா..? அதையும் நீயே பண்ணிடு.. அதான் அவங்க சொத்தை அமுக்கிட்டிங்க  இல்ல நீயும் அந்த சுந்தரியும்.. அதுக்கு பதிலா இதை பண்ணிரு.. இப்பதான் ரத்த சொந்தத்தோட அருமை எல்லாம் தெரியுதா உங்களுக்கு..? அந்த கெழவி மூஞ்சிலேயே எனக்கு முழிக்க வேண்டாம்..” என்று கூறி இணைப்பைத் துண்டித்தான் அந்த சேகர்..

ஒரு பெருமூச்சை விட்ட சுந்தர் ” டாக்டர்.. அவர் வரலைன்னு சொல்லிட்டாரு..  பாட்டியோட கடைசி ரிச்சுவெல்ஸ் எல்லாம் நானே பண்றேன்.. நான் அவங்களை எங்க வீட்டுக்கு எடுத்துட்டு போறேன் டாக்டர்.. ” என்று சொன்னவன் அவர் கொடுத்த தாள்களில் எல்லாம் கையெழுத்து போட்டு பாட்டியின் உடலை வாங்கி சென்றான்..

பாட்டிக்கு பேரனாய் எல்லா ஈமக்கடன்களையும் முறையாக செய்தான் சுந்தர்.. அவனுக்கு எல்லா விதத்திலும்  உறுதுணையாய் இருந்தாள் சுந்தரி..

ஆனால் அழுது அழுது அவள் கண்களில் கண்ணீரே வற்றிப் போயிருந்தது.. பாட்டி இறந்த அன்று மருத்துவமனைக்கு வந்த ஷாலினி அதன் பிறகு வீட்டிற்கு பாட்டியின் உடலை எடுத்து வந்தவுடன் சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு சென்றவள்தான்..

அதன் பிறகு அந்தப் பக்கமே எட்டி பார்க்கவில்லை.. ஊருக்கு சென்று இருந்த நடராஜனும் மேகலாவும் மழையில் மாட்டிக் கொண்டு திரும்பவும் வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்..

விஷயம் கேள்விப்பட்டு அவர்கள் கைபேசியிலேயே சுந்தருக்கு ஆறுதல் சொல்ல தான் முடிந்தது.. அவர்களால் அங்கிருந்து கிளம்பி வர முடியவில்லை..

பாட்டி இறந்து போனதற்காக சுந்தர் சுந்தரி மட்டுமில்லாமல் இயற்கையே அழுதது போல் மழை அந்த இரண்டு நாட்களுக்கு கொட்டி தீர்த்தது..

மூன்றாம் நாளிலிருந்து சுந்தர் கார்மெண்ட்ஸ்சுக்கு போக வேண்டும் என்று கிளம்ப ஆரம்பித்தான்.. மனம் அமைதி இல்லாமல் இருந்தாலும் அங்கே வேலை செய்யும் அத்தனை பேருக்காக தான் சென்று தான் தீர வேண்டும் என்று முடிவு செய்தவன் காலையில் கிளம்பி கீழே வரவும் சுந்தரி அங்கே அடுக்களை வாசலில் அப்படியே சுவற்றில் சாய்ந்த படி சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்தவன்.. “சுந்தரி நான் கார்மெண்ட்ஸ் வரைக்கும் போயிட்டு வரேன்” என்றான்..

“சரிங்க சார்.. இன்னைக்கு கொஞ்சம் மழை குறைஞ்ச மாதிரி இருக்கு இல்ல..? ஏதாவது செஞ்சு கொடுக்கிறேன்.. சாப்பிட்டு போங்களேன்..” என்றாள்..

“இல்ல சுந்தரி.. எனக்கு எதுவும் சாப்பிடணும் போல இல்ல.. நான் கிளம்பி போயிட்டு வரேன்..” என்றான் சுந்தர்..

“நீங்க வீட்ல இருந்தா பரவால்ல.. வெளியில போறீங்க.. அங்க எப்படி இருக்குமோ..? இன்னும் பத்து நிமிஷத்துல ஏதாவது செஞ்சு கொடுத்துடறேன்.. சாப்பிட்டு போங்க..” என்று சொன்னவள் அவனுக்காக அவசர அவசரமாய் ஏதோ சிற்றுண்டி செய்து அவனை வற்புறுத்தி சாப்பிட வைத்தாள்..

சுந்தரி பாட்டியை போலவே அவனை வற்புறுத்தி சாப்பிட வைத்ததை பார்த்து அவனுக்கு பாட்டியே அவள் உருவத்தில் வந்து அவனை சாப்பிட வைத்தாற்போல் தோன்றியது.. அவன் மனம் இல்லாமல் கொஞ்சமாக உண்டு விட்டு கிளம்பிச் சென்றான்..

அவனை வற்புறுத்தி சாப்பிட வைத்த சுந்தரியோ இரண்டு நாட்களாய் எதுவும் சாப்பிடாமலே அமர்ந்து இருந்தாள்.. அவ்வப்போது அழுதுகொண்டு இனி என்ன செய்வது என்று தெரியாமல் பித்து பிடித்தவள் போல் இருந்தாள் அவள்..

இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்தது அவளுக்கு என்னமோ போல இருந்தது.. மயக்கமாக இருக்கவும் அப்படியே வரவேற்பறையில் இருந்த கதிரையில் சாய்ந்து படுத்து விட்டாள்..

ரதி பாட்டி இறந்த அன்றே அந்த சூழலில் குழந்தையை வைத்திருக்க மனம் இல்லாமல் தன் வீட்டிற்கு போய் இருந்தாள்..

வீட்டிற்கு வெளியே தண்ணீர் சூழ்ந்திருந்தாலும் வீட்டிற்குள் தண்ணீர் இல்லாமல் இருந்தது..

இரண்டு நாட்கள் ஆனதால் அவளுக்கு சுந்தரியை அதற்கு மேல் சுந்தர் வீட்டில் விட்டு வைக்க கூடாது என்று தோன்றியது.. பாட்டி இல்லாமல் அவள் அங்கு இருந்தால் எல்லோரும் அவளை தவறாக பேசுவார்கள் என்று எண்ணியவள் பக்கத்து வீட்டு ராசாத்தி அக்காவிடம் சென்றாள்..

“அக்கா  பாட்டி இறந்துட்டாங்க.. சுந்தரி இதுக்கு மேல அங்க இருக்கறது அவ்வளவு நல்லதா எனக்கு படல.. அந்த சுந்தருக்கும் இன்னும் கல்யாணம் ஆகல.. இவ அங்க இருந்தா ஊரெல்லாம் தப்பா பேசுவாங்க இல்லக்கா..? அதனால நான் போய் அவளை இங்கயே கூட்டிட்டு வந்துடலாம்னு நினைக்கிறேன்.. என் கூட கொஞ்சம் துணைக்கு வர முடியுமாக்கா..? ஊரெல்லாம் தண்ணியா இருக்குது..” என்றாள் அவள்..

“இரு இரு.. இந்த மனுஷன் ஸ்டாண்ட்ல இருந்தா இவரையே ஆட்டோ எடுத்துட்டு வர சொல்றேன்.. நம்ப ரெண்டு பேரும் போய் சுந்தரியை கூட்டிட்டு வந்துடலாம்..” என்று சொன்ன ராசாத்தி அக்கா அவள் கணவரை கூப்பிடவும் இருவரும் ஆட்டோவில் ஏறி சுந்தரியின் வீட்டுக்கு பயணப்பட்டார்கள்..

இங்கே அலுவலகத்தில் மனம் எந்த வேலையிலும் ஒட்டாமல் மதியமே வீட்டுக்கு திரும்பி விட்டிருந்தான் சுந்தர்..

சுந்தரி வரவேற்பறையில் இருந்த கதிரையில் படுத்துக் கொண்டிருப்பதை பார்த்தவன் “சுந்தரி..”  என்று அழைத்து அவளை எழுப்ப முயல அவளோ எழும்பாமல் போகவே கொஞ்சம் படபடப்பாய் இருந்தது சுந்தருக்கு..

“சுந்தரி சுந்தரி..” என்று அவள் கன்னத்தை தட்டி எழுப்பியவன் அவள் அப்படியும் எழுந்து கொள்ளாமல் போகவே சமையல் அறைக்கு சென்று சிறிது தண்ணீர் எடுத்து வந்து அவள் வாயில் குடிக்க கொடுத்தான்..

கண்களையும் தண்ணீரால் துடைத்து விட்டான்.. சுந்தரி மெதுவாக கண்ணை திறக்கவும் “என்ன ஆச்சு சுந்தரி..?” என்று கேட்டான் சுந்தர்..

“ஒன்னும் இல்ல சார்..” என்று எழுந்து உட்கார முனைந்தவள் மறுபடியும் தலை கிறுகிறுக்க அப்படியே முன்பக்கமாய் சாய்ந்தவளை தன் தோளில் தாங்கிக் கொண்டான் சுந்தர்..

“சுந்தரி.. என்ன ஆச்சு? நீங்க சாப்டீங்களா இல்லையா.?” என்று தோளில் சாய்ந்திருந்தவளை கேட்க கண்கள் சொறுகி இன்னும் மயக்கமாய் இருக்க கஷ்டப்பட்டு கண்ணை திறந்தவள் வாசலில் ரதியும் ராசாத்தியும் நின்று கொண்டிருந்ததை பார்த்தாள்..

“ஏன் ரதி.. உன் தங்கை என்னவோ இங்க தனியா இருந்தா தப்பா பேசுவாங்கன்னு கூட்டிட்டு போலாம்னு வந்தேன்னு சொன்னே.. இங்கே என்னடான்னா.. இவ நிரந்தரமா இங்கேயே தங்கறதுக்கு வழி பண்ணிட்டு இருக்கா போல இருக்கு..” என்றாள் ராசாத்தி ரதியிடம்..

தொடரும்..

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு

செய்து பதிவு பண்ணுங்க..!!

நன்றி ஃப்ரெண்ட்ஸ்..

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!