சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 33
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
சுந்தர் தோளில் மயக்கமாய் இருந்த சுந்தரி கஷ்டப்பட்டு கண்ணை திறந்தவள் வாசலில் ரதியும் ராசாத்தியும் நின்று கொண்டிருந்ததை பார்த்தாள்..
“ஏன் ரதி.. உன் தங்கை என்னவோ இங்க தனியா இருந்தா தப்பா பேசுவாங்கன்னு கூட்டிட்டு போலாம்னு வந்தேன்னு சொன்னே.. இங்கே என்னடான்னா.. இவ நிரந்தரமா இங்கேயே தங்கறதுக்கு வழி பண்ணிட்டு இருக்கா போல இருக்கு..” என்றாள் ராசாத்தி எடக்காக ரதியிடம்..
ரதிக்கோ அவர்கள் இருந்த நிலைமையை பார்த்து ஏற்கனவே அதிர்வாய் இருக்க ராசாத்தியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.. “சுந்த..ரீ..ய்..!!” என்று வாசலில் இருந்து கத்தியவளின் சத்தத்தில் மயக்கமாய் இருந்தவள் கூட அதிர்ச்சியில் விழி விரித்து பார்த்தாள்..
“பாட்டி செத்துப் போய் ரெண்டு நாள் கூட ஆவல.. அதுக்குள்ள இப்படி நடந்துக்குறாங்களே ரெண்டு பேரும்.. இவ்வளவு நாளா இந்த வீட்டிலேயே ரெண்டு பேரும் ஒண்ணா இருந்திருக்காங்க.. பாட்டி வேற உடம்பு சரியில்லாம படுத்த படுக்கையா இருந்திருக்காங்க.. அவங்க கண்ணு மறைவா இன்னும் என்ன என்ன கூத்து நடந்துருக்குதோ இந்த வீட்டில.. அம்மாடி.. உங்க கூட எல்லாம் எனக்கு சகவாசம் வேண்டாம்மா.. நான் ஒழுங்கா என் புருஷனோட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கேன்.. உங்க கூட சேர்ந்தேன்னா என் பேரும் கெட்டுப் போயிடும்.. நான் வரேன்..” என்று சொன்ன ராசாத்தி அங்கிருந்து அப்படியே வெளியே சென்று விட்டாள்..
ஆட்டோவில் வந்து ஏறியவளை பார்த்த அவள் கணவன்.. “என்னடி நீ மட்டும் தனியா வர்ற? அவங்க ரெண்டு பேரும் எங்க?” என்று கேட்க.. “யோவ்.. நான் ஏதாவது சொல்லிட போறேன்.. பேசாம ஆட்டோவை கிளப்பி வீட்டுக்கு போயா..” என்றாள் ராசாத்தி..
“ஏண்டி.. நீ தானே அவங்க ரெண்டு பேரும் தாயில்லா புள்ளைங்க.. அவங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் செய்யணும்னு என்கிட்ட அடிக்கடி சொல்லுவ..”
“ம்ம் ம்ம்… ஆமா.. அப்பன் ஆத்தா இல்லாத புள்ளைங்களா இருந்தாலும் கண்ணியமா இருக்கும்னு நினைச்சேன்.. இப்பதானே தெரியுது இவங்க பணத்துக்காக என்ன வேணா பண்ணுவாங்கன்னு.. அந்த சுந்தரி பொண்ணு பாட்டிக்கு உடம்பு சரியில்லைங்கற சாக்க வச்சு இங்க வந்து என்னெல்லாம் வேலை பண்ணிட்டு இருக்கா.. யாரும் இல்லாத வீட்டில.. சீச்சீ.. சொல்லவே எனக்கு நாக்கு கூசுது..” முகத்தை அருவருப்பாக வைத்து கொண்டு சொன்னாள் ராசாத்தி..
“ஏய்.. அந்த சுந்தரி பொண்ணை பார்த்தா அப்படி எல்லாம் தெரியலடி.. நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு இருப்பே..”
“யோவ்.. நான் பார்த்ததை நீ பார்க்கல.. பேசாம வண்டி ஓட்டுயா.. ஆத்திரத்தை கிளப்பாதே.. இவளுகளுக்கு போய் இத்தனை நாள் உதவி செஞ்சிட்டிருந்தேனேன்னு எனக்கே என் மேல வெறுப்பா இருக்குது..” என்றவள் அவள் கணவனின் சட்டையை இழுத்து, “அப்புறம்.. இந்த நல்ல பொண்ணு நொள்ள பொண்ணுன்னெல்லாம் சொல்லிக்கிட்டு மறுபடியும் அந்த சுந்தரிக்கு ஏதாவது உதவி செய்றேன்னு போகாத.. அப்புறம் நான் எங்க ஆத்தா வீட்டுக்கு நடையை கட்டிடுவேன்… சொல்லிப்புட்டேன்..” என்று மிரட்டினாள் அவள்..
இங்கு நேரே உள்ளே சென்ற ரதி “ஏய் சுந்தரி.. என்னடி கோலம் இது..? என்ன பண்ணிட்டு இருக்க நீ? உன்னை எதுக்கு இந்த வீட்டுக்கு அனுப்பிச்சேன்.. யாரும் இல்லாத வீட்ல இது என்னடி அசிங்கம் பண்ணிட்டு இருக்க..?” என்று கத்தினாள்..
அவள் பேச்சைக் கேட்டு சுந்தர் தாங்கள் இருந்த நிலையினால் அவள் சுந்தரியை தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்து சட்டென தன் தோளிலிருந்து சுந்தரியை விலக்கி அப்படியே அந்த சோஃபாவில் படுக்க வைத்தான்..
அவன் அங்கிருந்து எழுந்து சோஃபாவின் பக்கத்தில் ரதிக்கு வழி விட்டு நிற்க சுந்தரி எழுந்து ரதியை பார்த்து “ரதி..!!” என்று அழைத்தபடி அவளை நோக்கி நடந்து வந்தாள்.. அப்படியே அவள் நடக்க முடியாமல் மயக்கமாய் சரிந்து விழுந்தாள்..
அப்போதுதான் அவளுக்கு ஏதோ உடல்நிலை சரியில்லை என்பதை புரிந்து கொண்டாள் ரதி..
அப்போதும் அருகே நின்றிருந்த சுந்தர் அவளை தாங்கி பிடித்து “இருங்க சுந்தரி.. உங்களுக்கே மயக்கமா இருக்கு.. நீங்க ஏன் எழுந்துக்குறீங்க..? ஒரு நிமிஷம் இப்படியே உட்காருங்க.. நான் உள்ள போய் உங்களுக்கு கொஞ்சம் ஜூஸ் எடுத்துட்டு வரேன்..” என்று சொன்னவன் சமையல் அறைக்கு ஓடவும் ரதி ஓடி வந்து சுந்தரியை தாங்கி பிடித்தாள்..
“என்னாச்சு சுந்தரி..? ஏன் உனக்கு மயக்கமா வருது..?” என்று அவள் கேட்க சுந்தர் உள்ளிருந்து குளிர்சாதன பெட்டியில் இருந்த பழச்சாற்றை எடுத்து ஒரு குவளையில் ஊற்றி எடுத்துக் கொண்டு வந்து “அவங்க ரெண்டு நாளா ஒண்ணுமே சாப்பிடல… இன்னைக்கு காலையில என்னை வற்புறுத்தி சாப்பிட வச்சு ஆஃபீஸ்க்கு அனுப்பிச்சாங்க… ஆனா எனக்கு அவ்ளோ அட்வைஸ் பண்ணவங்க எதுவுமே சாப்பிடாம பாட்டியை நெனச்சு அழுதுகிட்டே இருந்திருக்காங்க.. அப்புறம் மயக்கம் வராம என்ன செய்யும்?” என்று சொன்னவன் “இந்தாங்க சுந்தரி.. இந்த ஜூஸை குடிங்க..” என்று சொல்லி அவள் கையில் கொடுக்க அவள் கை நடுக்கம் எடுத்ததை பார்த்தவன் அவனே அவள் வாயில் அந்த குவளையை எடுத்துக் கொண்டு போய் வைத்தான்..
அவளுக்கும் அந்த நேரத்தில் அந்த பழச்சாறு தேவைப்பட மடக் மடக்கென்று அதை ஒரே மூச்சில் குடித்து முடித்தாள்..
“சாரி சுந்தர் சார்.. நான் ஏதோ தப்பா நினைச்சுட்டேன்..” என்று ரதி சொல்ல “என்னை நீங்க தப்பா நினைச்சது கூட பரவால்ல.. ஏன்னா என்னை பத்தி உங்களுக்கு தெரியாது.. ஆனா சுந்தரி உங்க தங்கை தானே.. அவங்களை பத்தி உங்களுக்கு தெரியாதா? நீங்க எப்படி அவங்களை தப்பா நினைச்சீங்க..? அவங்க உங்க ரத்தம் தானே..? நீங்க அவங்களை சந்தேகப்பட்டீங்கன்னா உங்களையே நீங்க சந்தேகப்படுற மாதிரி இல்லையா? ஏன் சுந்தரியை பத்தி உங்களுக்கு தெரியாதா..? கொஞ்ச நாள் அவங்களோட பழகின நானே எந்த நிலைமையிலும் அவங்களை தப்பா நினைக்க மாட்டேன்.. ஏன்னா அவங்க ஒரு நெருப்புன்னு எனக்கு தெரியும்.. அப்படி இருக்கிறப்போ அவங்க சொந்த அக்கா நீங்க… நீங்க இப்படி அவங்களை சந்தேகப்பட்டு பேசினது அவங்க மனசை எவ்வளவு ஹர்ட் பண்ணி இருக்கும்னு யோசிச்சீங்களா?” என்று கேட்டான் சுந்தர்..
“தப்புதான்.. ஆனா ராசாத்தி அக்கா அப்படி பேசுறதை கேட்ட உடனே எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு” என்றாள் ரதி..
தனக்காக சுந்தர் ரதியிடம் வாதாடுவதை கேட்ட சுந்தரிக்கு மனதிற்கு ஆறுதலாய் இருந்தது..
“சரி.. விடுங்க.. பரவால்ல.. கொஞ்சம் உள்ளே போய் அவங்களுக்கு கொஞ்சம் சாப்பாடு எடுத்துட்டு வந்து குடுங்க.. பாவம் எதுவுமே சாப்பிடாம பட்டினியா இருந்ததால தான் அவங்களுக்கு மயக்கம் வந்துருச்சு.. ரெண்டு நாளா அழுதுகிட்டே வேற இருக்காங்க..” என்றான் சுந்தர்..
சரி என தலையாட்டிவிட்டு அவள் உள்ளே சென்று சுந்தரிக்கு சாப்பாட்டை எடுத்து வந்து கொடுத்தாள்..
அவள் சாப்பிட்டு முடித்தவுடன் “சார் அப்ப நான் சுந்தரியை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு போறேன் சார்.. எங்களை பத்தி நல்லா தெரிஞ்ச ராசாத்தி அக்காவே இன்னைக்கு எப்படி பேசினாங்கன்னு பார்த்தீங்க இல்ல..? அப்படி இருக்கும் போது இப்ப பாட்டியும் இல்லை.. சுந்தரி இதுக்கு மேல இங்க இருந்தான்னா ஊரெல்லாம் அவளை பத்தி ரொம்ப தப்பா பேசுவாங்க சார்.. அதனால சுந்தரி என்கூட எங்க வீட்டிலேயே இருக்கட்டும் சார்.. நீங்க உங்க வீட்ல சமையல் வேலை செய்ய வேற ஆள் பார்த்துக்கோங்க சார்.. இந்நேரம் ராசாத்தி அக்கா அங்க போய் எங்க ஏரியால என்ன சொல்லி வச்சிருக்காங்களோ.. அதையே எப்படி சமாளிக்க போறோம்ன்னு தெரியல.. இதுக்கு மேலயும் இவ இந்த வீட்ல இருந்தான்னா நாங்க எல்லாரோட ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டி இருக்கும் சார்..”
ரதி சொன்னதில் இருந்த நியாயம் என்னதான் சுந்தருக்கு புரிந்தாலும் அவனால் சுந்தரி அங்கிருந்து நிரந்தரமாக அவள் வீட்டுக்கு போவதை பற்றி யோசிக்கக்கூட முடியவில்லை..
“சுந்தரி இங்க நைட்டு தங்கினா தானே பிரச்சனையாகும்.. ஆனா எங்க வீட்ல அவங்க சமையல் வேலை செய்யறதால என்ன பிரச்சனை வந்திட போகுது..? காலையில வந்து ஒரு மணி நேரம்.. ஈவினிங் வந்து ஒரு மணி நேரம் சமைச்சிட்டு போகட்டும்.. கார்மெண்ட்ஸ்ல வந்து வேலை செய்யட்டும்.. இதுல உங்களுக்கு எதுவும் பிராப்ளம் வராதே ரதி.. பாட்டி இருக்கும்போது அவங்களுக்கு செய்ய வேண்டியது எல்லாம் செய்யறதுக்காக சுந்தரி நைட் இங்க தங்க வேண்டியதா போச்சு.. அதனால அவங்க பேசி இருக்கலாம்.. ஆனா வீட்டு வேலை செய்றவங்க அப்புறம் வாட்ச்மேன் வேலை செய்றவங்க அவங்க போற மாதிரி தானே சுந்தரி இனிமே இங்க சமையல் வேலைக்கு வர போறாங்க.. அதனால என்ன பிராப்ளம் வரப்போகுது?”
“இதுக்கு முன்னாடி அதனால எதுவும் ப்ராப்ளம் வந்திருக்காது சார்.. ஆனா இப்போ ராசாத்தி அக்கா இங்க நடந்ததை பார்த்துட்டு போனப்பறம் என்னென்ன நடக்கும்னு தெரியல.. தொடர்ந்து சுந்தரி இங்க வந்தா இன்னும் நாக்கு மேல பல்லை போட்டு ஏதேதோ பேசுவாங்க.. அதான் உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் சார்.. அவளை விட்டுடுங்க.. அவ வேற ஏதாவது வேலை தேடிக்கட்டும்”
சுந்தரிக்கோ ரதி தன்னை எதுவுமே கேட்காமல் அவளே முடிவெடுத்து இப்படி பேசிக் கொண்டே போனது மனதில் வலித்தது..
ஆனால் அவள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று உணர்ந்தவள் “ஆமா சுந்தர் சார்.. ரதி கரெக்டா தான் சொல்றா.. நான் வேற வேலை தேடிக்கிறேன்.. இதுக்கு மேல நான் இங்க வேலை செஞ்சா உங்க பேரும் கேட்டு போயிடும்..” என்றாள்..
“நீங்களே இப்படி முடிவு பண்ணப்புறம் நான் என்ன சொல்ல முடியும்? சரி சுந்தரி.. போயிட்டு வாங்க.. உங்களுக்கு கூடிய சீக்கிரம் ஒரு நல்ல வேலை கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்.. ஆல் த பெஸ்ட்..” என்று சொன்னவன் அதன் பிறகு சுந்தரி போய் அவள் பையை எடுத்துக் கொண்டு ரதியுடன் கிளம்பி போவதை முகத்தில் கவலை ரேகையுடன் பார்த்துக் கொண்டே நின்றான்..
சுந்தரியும் வாசல் தாண்டி செல்லும் வரை திரும்பி திரும்பி சுந்தரை பார்த்து கொண்டே “போய் வருகிறேன்..” என்று சொல்லி தலையை ஆட்டி விட்டு சென்றாள்..
சுந்தரியும் ரதியும் அவர்கள் வீடு இருக்கும் பகுதிக்கு வர அவர்கள் அந்த பகுதியில் நுழைந்த அடுத்த நிமிடம் அவர்கள் இருவரையும் எல்லா கண்களும் பார்த்த பார்வையில் பல கேள்விகள் இருந்தன.. அவர்களைப் பார்த்த சில பெண்கள் கிசுகிசுவென்று ரகசியமாக அவர்களை பற்றி சுற்றி இருந்த பெண்களிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க இன்னும் சிலர் அவர்களைப் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டார்கள்..
ராசாத்தி அங்கு இருந்த பெண்களிடம் சுந்தர் வீட்டில் நிகழ்ந்ததை பற்றி சொல்லி இருக்கிறாள் என்று இருவருக்கும் புரிந்தது..
தலையை குனிந்து கொண்டு நேரே வீட்டிற்கு வந்தவர்கள் கதவை திறந்து உள்ளே போய் அடைந்து கொண்டார்கள்..
உள்ளே அடைந்தவர்கள் மறுநாள் காலை தண்ணீர் லாரி வரும் வரை வெளியே வரவில்லை..
“சுந்தரி.. பேசாம வேற ஏதாவது ஏரியால வீடு பார்த்து போயிடலாமா?”
ரதி கேட்க சுந்தரியோ “வேண்டாம் ரதி.. அங்கேயும் போயி அங்க இருக்கறவங்க ஏதாவது சொன்னாங்கன்னா வேற இடம் பார்ப்பியா? இப்படியே எவ்ளோ இடத்துக்கு மாறி மாறி ஓடிட்டு இருக்குறது? இங்கயே இருந்து நம்ம தைரியமா இந்த பிரச்னையை ஃபேஸ் பண்ணுவோம்.. எவ்வளவு நாள் தான் இவங்க இப்படி பண்ணிட்டு இருப்பாங்க..? கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாயிடும்..” என்றாள் சுந்தரி..
“ம்ம்ம்ம்.. நீ சொல்றதும் சரிதான்..” என்றவள் தன் குழந்தையை கவனிக்க எழுந்து சென்றாள்..
ஏற்கனவே பாட்டி திடீரென இல்லாமல் போனது விரக்தியின் உச்சத்துக்கே சுந்தரைக் கொண்டு போயிருக்க இப்போது சுந்தரியும் அந்த வீட்டை விட்டு போனதில் அவனுக்கு அந்த வீடே மயானமாய் தோன்றியது தனிமையில்..
அப்படியே தலையில் கை வைத்துக் கொண்டு வரவேற்பறையில் அமர்ந்தவன் எதிலும் மனம் ஒட்டாமல் மறுபடியும் அவன் கார்மெண்ட்ஸுக்கே கிளம்பி சென்றான்..
இரவு வெகு நேரம் வரை அங்கேயே இருந்து விட்டு நடு இரவில் வீடு வந்து சேர்ந்தான்.. அப்படியே களைப்பில் தன் அறைக்கு சென்று படுத்தவன் உறங்கியும் போனான்..
செங்கதிரோன் தன் ஒளிக் கதிர்களை பார் எங்கும் வீசி பூமியை ஒளிமயமாய் மாற்றிக் கொண்டிருந்தான்..
படுக்கையில் இருந்து எழுந்த சுந்தர் முன்னாள் நிகழ்ந்தது எதுவுமே நினைவில் இல்லாமல் தன் காலை கடன்களை முடித்து தயாராகி கீழே இறங்கி வந்தவன் “சுந்தரி.. சீக்கிரம் காபி டிஃபன் எடுத்து வைங்க.. கார்மெண்ட்ஸ் போகணும்.. டைம் ஆச்சு..” என்று சொல்லிக் கொண்டே சாப்பாட்டு மேஜையின் பக்கம் போனான்..
அங்கே அமர்ந்தவன் “என்ன சுந்தரி.. ரெடி ஆயிடுச்சா? டைம் ஆச்சு…” என்று அழைத்துக் கொண்டே இருக்க பதில் எதுவும் வராமல் இருக்கவே சமையல் அறைக்குள் சென்றவன் அங்கு இருந்த நிலை பார்த்தபோதுதான் சுந்தரி அந்த வீட்டில் இல்லை என்ற ஞாபகமே அவனுக்கு வந்தது..
பிறகு பெருமூச்சு விட்டவன் “சரி.. ஹோட்டலில் சாப்பிட்டுட்டு போலாம்..” என்று வாசலை நோக்கி
நடக்க அப்போது எதிரே அவன் சித்தப்பாவும் சித்தியும் வாசலில் வந்து நின்றார்கள்..