சக்தி, ‘ஐயையோ! அப்பாவா…’ என்று மெல்லிய குரலில் முனுமுனுத்தவன் சாந்தியிடம் கண்ணை காட்டிவிட்டு நைசாக அங்கிருந்து நழுவி விட்டான்.
பிறகு, சாந்தி சமாளிப்பாக, “இதோ அவன் ரெடி ஆகிட்டாங்க… நம்ப கிளம்பிடலாம் இன்னும் 5நிமிஷம் தான்” என்கவும்.
அந்த சமயம் சரியாக மகேஷ் ஃபோனுக்கு யாரோ அழைப்பு கொடுக்க அந்த போனை ஏற்றவர் மீட்டிங்கை பற்றி பேசிக் கொண்டே தூரமாக சென்றுவிட்டார்.
சாந்தி மனதில், ‘நல்ல வேலை யாரோ போன் பண்ணி நம்பள காப்பாத்தி விட்டுட்டுட்டாங்க’ என்று நினைத்துக் கொண்டு.
தாம்புலம், பழத்தட்டு, பூ என எல்லாவற்றையும் எடுத்து சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
சக்தி அவசரமாக அறையின் உள்ளே நுழைந்தவன், “டேய் மச்சான்…. இன்னும் இங்க என்னடா பண்ணிட்டு இருக்க? அங்க உங்க அப்பா ஆபீஸ் ல மீட்டிங் இருக்கு மணி ஆகுதுன்னு காலில் சுடுதண்ணீர் பட்டது போல் குதிச்சுக்கிட்டு இருக்காரு…”
“ஆனா, நீ என்னடான்னா இங்க உக்காந்துட்டு விசில் அடிச்சுகிட்டும், கண்ணாடி பார்த்துக்கிட்டும் கூலாக கிலம்பிக்கிட்டு இருக்க… அப்படி அந்த கண்ணாடியில் உனக்கு என்ன தான் தெரியுதோ” என்று அவனும் அருகில் வந்து எட்டிப் பார்க்க.
அவன் தலையில் நறுக்கென்று கொட்டிய ருத்ரன், “நான் தான் ரெடி ஆகிட்டு இருக்கேன்ல தள்ளிப்போ” என்று அவனை தள்ளிவிட்டான்.
சக்தி, “நீ ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க டா….” என்றவன் சிறிது நேரம் மௌனமாகி போனான்.
ருத்ரன், “என்ன டா ரொம்ப சைலண்டா இருக்க… நீ இப்படி இருக்க ஆல் கிடையாதே…” என்றான்.
அதற்கு மேல் தன் மனதில் எதையும் பூட்டி வைக்க முடியாத சக்தி, “நீ நல்லா யோசிச்சியா…. இந்த கல்யாணம் அவசியம் உனக்கு தேவையா… இந்த பொண்ண தான் நீ கல்யாணம் பண்ணி ஆகனுமா?” என்றான்.
ருத்ரன் சட்டென்று நிமிர்ந்து அவனை இரண்டு நிமிடம் யோசனையாக பார்த்தான்.
சக்தி, ‘இந்த கல்யாணம் வேண்டாம் என்று முடிவு பண்ணு டா…..’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருக்க.
ருத்ரன், “ஹ்ம்ம், நல்லா யோசிச்சுட்டேன் டா நான் கல்யாணம் பண்ணா…. இவளைத்தான் கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன்”
என்று தன் கையில் வைத்திருந்த கோட்டை தூக்கி தன் மேனியில் போட்டவன் கம்பீர நடையுடன் அவன் அம்மா சாந்தியின் அருகில் வந்து நின்றான்.
சாந்தி கண்கள் மின்ன, “என் பையனுக்கு இந்த டிரஸ் எவ்ளோ பொருத்தமா இருக்கு” என்று தன் கையால் திருஷ்டி சுத்தியவர், “உன்ன எந்த பொண்ணுக்கு பிடிக்காமல் போகும்… ராஜா மாதிரி இருக்கப்பா..” என்றார் பெருமையாக.
மகேஷ் ஃபோனை துண்டித்து விட்டு அந்த இடத்திற்கு வந்தவர், “மணி ஆச்சு எல்லாரும் கிளம்பிட்டிங்கலா இல்லையா” என்றார் கோபமாக.
மகேஷ், “இப்போ நீ பேசுறது ரொம்ப முக்கியமா… எனக்கு மீட்டிங்கு நேரம் ஆகுது ன்னு சொல்லிட்டு இருக்கேன் நீ என்னடான்னா இங்கேயே வளவளன்னு பேசிக்கிட்டு இருக்க….”
“நல்லா கேட்டுக்கோ… அங்க போனோமா பொண்ண பார்த்தோமா புடிச்சிருக்கா இல்லையா என்றதை பளிச்சென்று சொன்னோமா திரும்பி வந்தோமான்னு இருக்கணும் புரியுதா” என்றார்.
அதில் சற்று முகம் வாடி போன சாந்தி, “சரிங்க” என்றவர் மனதில், ‘அப்படி என்ன தான் அந்த ஆஃபீஸ் ல வச்சிருக்காரோ தெரியலை… எப்பயும் பிள்ளையை விட ஆஃபீஸ் தான் முக்கியம் இவருக்கு’ என்று நினைக்கையில்
மகேஷ், “டேய் சக்தி நீயே காரை எடு” என்றார்.
“இவருக்கு வேறு வேலையே இல்லையா என்னை பார்த்துட்டா போதும் நான் தான் கார் ஓட்டணும்னு சொல்லுவாரு… என்ன பார்த்தா என்ன இவருக்கு டிரைவர் மாதிரி தெரியுதா” என்று ருத்ரனிடம் புலம்பினான்.
ருத்ரன், “இருக்குமோ” என்றான் யோசிப்பது போல்.
அதில் கோபமடைந்த சக்தி, “அப்போ நான் டிரைவர் மாதிரி இருக்கேனா…” என்றான் அவனை முறைத்துக் கொண்டே.
மகேஷ், “அங்கு என்ன புலம்பி கிட்டு இருக்க” என்றார் அதட்டலாக.
சக்தி, “ஒன்னும் இல்லப்பா உங்க பையன் கிட்ட இந்த டிரஸ் அவனுக்கு ரொம்ப அழகா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தேன். இதோ கிளம்பலாம்” என்று டிரைவர் சீட்டில் சென்று அமர்ந்து கொண்டான்.
பிறகு, அனைவரும் காரில் ஏறிவிட சக்தி காரை பார்த்து மெதுவாக செலுத்திக் கொண்டிருந்தான்.
மகேஷ் கோபமாக அவன் தலையில் கொட்டியவர், “இப்படி போனால் நம்ம எப்போ போய் சேருவது.. பொண்ணு வீட்டுக்கு சீக்கிரமா போக வேண்டாமா? எனக்கு மீட்டிங்கு மணி ஆகுது சொல்லிட்டு இருக்கேன் நீ என்னடான்னா இப்படி காரை தள்ளிகிட்டு போற” என்றார்.
சக்தி, “நான் வேகமா ஓட்டனா இவருக்கு பொறுமையா போனு சொல்லி தலையில் கொட்டுவாரு… அதுவே நான் பொறுமையா போனா வேகமா போ சொல்லி தலையில் கொட்டுவாரு…”
“இந்த ஆள புரிஞ்சுக்கவே முடியாது எப்படித்தான் ருத்ரன் தினமும் இவரை சமாளிக்கிறானோ தெரியல” என்று முனுமுனுத்தான்.
சக்தி, “ஒன்னும் இல்லப்பா ரோட்ல போறவங்க எல்லாம் நம்மை இடிக்கிற மாதிரியே கிட்ட கிட்ட வரானுங்க” என்று சம்பந்தமே இல்லாமல் பேசி வாயை மூடி கொண்டான்.
யாழினியின் வீட்டு வாசலில் நின்ற கார்… ஹாரன் சத்தமாக ஒலிக்க அந்த சத்தத்தில் பார்த்திபன் மற்றும் சங்கர் இருவரும் ஒருசேர ஓடி வந்து வாசலில் நின்றார்கள் வரவேற்புகாக.
மகேஷ் முதலில் இறங்கி விட சங்கர், “வாங்க..… வாங்க…..” என்று உள்ளே அழைத்துச் சென்றார்.
பிறகு, ஒவ்வொருவராக இறங்க கடைசியாக கார் கதவை திறந்து கொண்டு இறங்கிய நம் நாயகன் ருத்ரன் முதலில் தன் கோட்டை சரி செய்து கொண்டு. பிறகு, தன் கைகளால் கேசத்தை கோதி விட்டவன் கம்பீரமாக நிமிர்ந்து பார்த்தான்.
அவனின் செயல் ஒவ்வொன்றையும் கவனித்த பார்த்திபன், ‘பரவாயில்லையே நம்ம தங்கச்சிக்கு நல்லா கம்பீரமான மாப்பிள்ளை தான் பார்த்து இருக்கோம் போலயே’
‘பார்க்க நல்லா அழகா, உயரமா, கலரா, கம்பீரமா இருக்காரு…. கண்டிப்பா இவன் யாழினிக்கு பொருத்தமா தான் இருப்பான்’ என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டான்.
ருத்ரன், “ஹலோ….” என்று தன் கைகளை பார்த்திபன் முன்பு நீட்ட… பார்த்திபன் அவன் கையை குலுக்கி, “வாங்க மாப்ள…. உள்ள வாங்க….” என்று அன்போடு வரவேர்த்தான்.
சாந்தி உள்ளே செல்லும் வழியில் அந்த வீட்டை முழுதாக நோட்டம் விட்டபடியே சென்று அமர்ந்தார்….
அவர் வீட்டை சுற்றி முற்றி பார்ப்பதை தவறாமல் கவனித்த சக்தி, “என்னம்மா இந்த வீட்டை நம்ம பேசாமல் விலைக்கு பேசிடுவோமா? உங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு போலயே வீட்டையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க வந்து உட்கார்ந்ததிலிருந்து” என்றான் கிண்டலாக.
சாந்தி , “அது இல்ல டா… வீடு சின்னதாக இருந்தாலும் நல்லா அமைப்பாதான் இருக்கு. இவங்கள பார்க்க கொஞ்சம் நம்ம பையன் சொன்ன மாதிரி வசதியில் கம்மியாக தான் தெரியுது” என்று ஒரு பெருமூச்சை வெளியிட்டவர்…
“என்ன பண்றது என் பையன் இந்த பொண்ண தான் கட்டுவேன்னு சொல்லிட்டான்… அவன் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று மெல்லிய குரலில் முனுமுனுத்தார்.
மகேஷ் தன் தொண்டையை சரி செய்து மெல்லிய குரலில், “அங்கு என்ன முணுமுணுப்பு… நானும் பாத்துட்டே இருக்கேன் காலையில் வீட்ல இருந்து எல்லாரும் மாத்தி மாத்தி முணுமுணுத்துட்டே இருக்கீங்க சீக்கிரம் பொண்ண வர சொல்லு பாத்துட்டு கிளம்பும்வோம்” என்றார் வழக்கம் போல் உற்றென்று.
சாந்தி, “வந்த இடத்தில் கூட எப்படி பேசுறாரு பாரு டா… அவங்க காதுல விழுந்தா அவங்க என்ன நினைப்பாங்க நம்மள பத்தி” என்று சக்தியின் காதில் கிசுகிசுத்தார்.
பார்த்திபன், “நான்தான் பொண்ணோட அண்ணன் பார்த்திபன். மாப்ள என்கிட்ட தான் பேசினார்…. என் தங்கச்சி காலேஜ் விட்டு வரும்போது அவள பார்த்ததுமே மாப்ளைக்கு ரொம்ப பிடிச்சு போய் அவ பின்னாடியே வந்து எங்க வீட்டையும் கண்டுபிடிச்சு இருக்காரு”
“என் தங்கச்சிக்கு காலேஜ் முடியுறதுக்காக தான் ஒரு வருஷம் காத்திருந்ததாக என்கிட்ட சொன்னாரு. மாப்பிள்ளை கூட என் தங்கச்சி காலேஜ்ல தான் படிச்சதாக என்கிட்ட சொன்னாரு”
“இந்த அளவுக்கு என் தங்கச்சியை நேசிக்கிற ஒரு மாப்பிள்ளை எனக்கு எங்க தேடினாலும் கிடைக்க மாட்டார் அதனால் தான் நானும் சரின்னு சொல்லிட்டேன்”
“இன்னும் சொல்லப் போனால் எனக்கும் அவர பார்த்ததுமே ரொம்ப பிடிச்சிடுச்சு அவர் பேசின விதமும் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. அதான் பொண்ணு பார்க்க சரின்னு சொன்னேன்” என்கவும்.
மகேஷ், “ஹ்ம்ம், அப்புறம் என்ன அதான் அவனே எல்லாத்தையும் உங்க கிட்ட பேசிட்டானே நீங்களும் அவன்கிட்டயே பேசிட்டீங்க அப்புறம் பெரியவங்க என்று நாங்க எதுக்கு இங்க வந்து இருக்கோம்” என்றார் சற்று கடுமையாக.
அதில் பார்த்திபன் புரியாமல் அவரைப் பார்க்க… சாந்தி அந்த சூழலை சரி செய்ய எண்ணி சிரித்துக் கொண்டே…
“இந்த காலத்துப் பசங்க எல்லாம் இப்படித்தான் இருக்காங்க ஒரு பொண்ண பார்த்ததும் பிடிச்சு போச்சுன்னு தைரியமா போய் பேசிட்டு வந்திடுறாங்க” என்றவர் “அவங்க எல்லாம்?” என்றார் கையை வலதுபுறம் காட்டி.
“அப்புறம் இவங்க தான் என்னோட அம்மா இவங்க தான் என்னோட அப்பா” என்று குமுதம் மற்றும் சங்கரை அறிமுகம் செய்து வைத்தான்..
இருவரும் அவர்களுக்கு வணக்கம் உரைக்க மகேஷ் தலையை மட்டும் அசைத்து வைத்தார்.
சாந்தி, “வணக்கம் நான் ருத்ரன் ஓட அம்மா. இவரு என்னோட வீட்டுக்காரர்.. இவன் வந்து சக்தி என் பையனோட உயிர் நண்பன் எங்களுக்கு இன்னொரு பையன் மாதிரி.. சரி நல்லநேரம் முடியப் போகுது பொண்ண வர சொல்றீங்களா” என்றார்.
குமுதம், “இதோ வர சொல்றேன்” என்று “ஏய் மயிலு…. நம்ம யாழினியை அழைச்சிட்டு வா… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாம் வந்துட்டாங்க” என்றார்.
யாழினி ஆரெஞ்சு வண்ண பட்டுப்புடவையை அணிந்து கொண்டு கழுத்தில் மெல்லிய சங்கிலியும் கையில் ஓர் வளையல் மற்றும் ஓர் மோதிரமும் காதில் சிறிய ஜிமிக்கியும் அணிந்து கொண்டு இரண்டு முழம் மல்லி பூ முன் பக்கம் தொங்கவிட்டபடி….
வட்டமான முகத்தில் அளவாக பொட்டு வைத்து எந்த ஒரு ஒப்பனைகளும் இல்லாமல் கையில் காபி டம்ளருடன் மெழுகு ஓவியமாய் வந்து நின்றாள் பெண் அவள்.
ருத்ரன் அவளை மேலிருந்து கீழ் வரை நோட்டம் விட்டவன், “எனக்கு பொண்ண பிடிச்சிருக்கு” என்றான் பளிச்சென்று அனைவர் முன்பும்.