அத்தியாயம் 4
“அது எப்படி அர்ச்சனா வராமல் நம்ம மட்டும் போவது” என்றான் கார்த்திகேயன்.
“நீ சும்மா இருடா தம்பி அவளை எப்படி நல்ல காரியம் நடக்கிற இடத்திற்கு அழைச்சிட்டு போக முடியும். இருந்து இருந்தும் இப்போ தான் உனக்கு கல்யாணம் நடக்கப் போகுது கூடப் பிறந்தவளா இருந்தாலும் அவள் சகுனத் தடை தான் அதனால பேசாமல் கிளம்பு. நிச்சயதார்த்தம் முடிஞ்ச கையோட கல்யாண ஏற்பாட்டையும் பார்க்கனும்” என்றாள் அருணா ரொம்ப அக்கரை உள்ளவளைப் போல.
“அண்ணையா அக்கா சொல்லுறதும் சரிதானே நான் இரண்டு நாள் தனியா இருந்துப்பேன்” என்றாள் அர்ச்சனா. “அது எப்படி உன்னை தனியா விட்டுட்டு போறது” என்று கார்த்திகேயன் ஏதோ சொல்ல வர , “என் அம்மா அர்ச்சனாவுக்கு துணையா இருப்பாங்க கார்த்தி” என்றார் கண்ணன்.
“பாவா” என்று அவன் ஏதோ சொல்ல வர, “அம்மாவும் கட்டாயம் வர மாட்டாங்க அவங்க அர்ச்சனாவுக்கு துணையா இருப்பாங்க” என்று கண்ணன் கூறிட, “மாப்பிள்ளை சொல்லுவது போல அர்ச்சனா அருணா மாமியார் கூட இருக்கட்டும் கார்த்தி நாம கிளம்பலாம்” என்றார் சிவநேசன்.
“அண்ணையா நீங்க பத்திரமா போயிட்டு வாங்க” என்ற தங்கையை அணைத்துக் கொண்டவன் , “பத்திரமா இரு அர்ச்சு” என்று கூறி விட்டு கிளம்பினான்.
“என்ன தெய்வானை இன்னைக்காச்சும் பியூட்டி பார்லர் போவியா?” என்ற கலா ராணியிடம் , “சரிம்மா போறேன்” என்று தெய்வானை கிளம்பினாள்.
“என்ன கலா ஒரே யோசனை” என்ற கோகுலகிருஷ்ணனிடம், “நம்ம பொண்ணுக்கு நிஜமாகவே இந்த கல்யாணத்தில் விருப்பம் தானா இல்லை நமக்காக பண்ணிக்கிறாளா” என்றார் கலாராணி.
“பிடிக்கலைன்னு சொன்னால் கல்யாணத்தை நிறுத்தப் போறியா?” என்றார் கோகுலகிருஷ்ணன். “என்ன பேச்சு பாவா வாயில் அடிங்க இது ரொம்ப நல்ல சம்பந்தம். மாப்பிள்ளையும் பார்க்க நல்ல அம்சமா இருக்காரு சொந்தமா இருநூறு ஏக்கர் நிலம் வச்சு விவசாயம் பார்க்கிறாரு. போதாக்குறைக்கு ஆடு, மாடு, கோழி பண்ணை வேற இருக்கு, குடும்பமும் நல்ல குடும்பமா தான் தெரியுறாங்க, எல்லாத்திற்கும் மேல ஜாதகம் நல்லா பொருந்தி இருக்கு இதை விட வேறு என்ன வேண்டும்” என்றார் கலாராணி.
“அப்பறம் ஏன் உன் பொண்ணுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு சந்தேகம்” என்ற கோகுலகிருஷ்ணன் கேட்டிட, “சும்மா தான் கேட்டேன்” என்ற கலாராணி சென்று தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.
“எண்டுக்கு அண்ணையா, மானா இன்டிக்கு டரி நாகு தெளியாடா? நுவ்வு இக்கடா யூனிபான்லோ எண்டுக்கு நிலபாடி உண்டாவது?
(ஏன் அண்ணா நம்ம வீட்டுக்கு எனக்கு வழி தெரியாதா நீ ஏன் யூனிபார்மோட வந்து நிற்கிற)” என்றாள் தெய்வானை.
“அம்மா தான் உன்னை பத்திரமா கூட்டிட்டு வரச் சொன்னாங்க கிளம்பு” என்றான் பிரசாந்த்.
“ஏமி அண்ணையா ஒரே யோசனையா வர” என்ற தெய்வானையிடம், “ஒன்றும் இல்லை” என்ற பிரசாந்த் , “தெய்வா ஒரு வேளை பாவா கல்யாணத்திற்கு அப்பறம் நம்ம வீட்டோட மாப்பிள்ளையா வர முடியாதுன்னு சொன்னால் நீ என்ன பண்ணுவ” என்றான்.
“அண்ணையா நீ ஏன் அதை யோசிக்கிற” என்ற தெய்வானையிடம், “அவருக்கு பிரதான தொழில் விவசாயம் அதை விட்டுவிட்டு வருவாரா?” என்றான் பிரசாந்த்.
“அண்ணையா இப்போ அது பிரச்சினை இல்லை உனக்கு என்னை பற்றி தெரியும் தானே அதனால் நீ எதையும் யோசிக்காமல் நிம்மதியா என் கல்யாண வேலையை பாரு” என்றாள் தெய்வானை புன்னகையுடன்.
“என்ன இது குருவிக்கூடு மாதிரி வீடு” என்ற அருணாவை முறைத்த கண்ணன், “உன் தம்பி வெளிநாடு போவதற்கு முன் உங்க வீடு இதை விட சின்ன வீடு அது மறந்து போச்சா” என்றார் .
கணவனை முறைத்த அருணா ஏதோ சொல்ல வர , “நீ மட்டும் இந்த கல்யாணத்தை நிறுத்த எதுனாலும் கிரிமினல் வேலை பார்த்தன்னு வை அதற்கு பிறகு உன்னை பற்றி எல்லா விஷயங்களையும் உன் அப்பா, அம்மா, தம்பிகிட்ட சொல்லி கொடுத்துருவேன். அவனுக்கு வந்த சம்பந்தம் எல்லாம் எப்படி தடை பட்டுச்சுனு” என்று கண்ணன் எச்சரிக்கவும் ,அருணா கணவனை முறைத்து விட்டு மௌனமாக அமர்ந்திருந்தாள்.
பெற்றவர்கள், பெரியவர்கள் முன்னிலையில் கார்த்திகேயன், தெய்வானை இருவரின் திருமணமும் நிச்சயம் செய்யப்பட்டது.
தெய்வானையின் முகத்தில் அப்படி என்ன தான் கண்டானோ அவனால் அவளை விட்டு பார்வையை விலக்கவே முடியவில்லை. அவளோ அவனை பார்த்து புன்னகைத்து விட்டு தலையை கவிழ்ந்து கொண்டாள்.
அருணா தெய்வானை யின் கழுத்தில் மாலை அணிவித்து தம்பியின் சார்பாக தங்க மோதிரத்தை அவளது கையில் அணிவித்து விட்டாள். அதே போல் பிரசாந்த் கார்த்திகேயனின் கழுத்தில் மாலை அணிவித்து அவன் கையில் மோதிரத்தை அணிவித்து விட்டான்.
“நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்தது. இன்னும் இரண்டு வாரத்தில் கல்யாணம் நீங்கள் எல்லோரும் எங்க கூடவே வந்திரலாமே சம்மந்தி” என்ற சிவநேசனிடம், “இங்கேயும் சிலரை கல்யாணத்திற்கு அழைக்கனும் சம்மந்தி அதனால் இரண்டு நாட்களில் வந்துடுறோம்” என்று கூறினார் கோகுலகிருஷ்ணன். அவர்களும் சந்தோஷமாக கிளம்பி சென்று விட்டனர்.
அருணாவால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. “பொண்ணு வேற அவ்வளவு அழகா இருக்காளே , இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்தலாம்” என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்
சந்தோஷமாக அமர்ந்து இருந்த சௌந்திரவள்ளியின் அருகில் வந்த அருணா “அம்மா அந்த பொண்ணு நிறைய படிச்சுருக்கும் போல” என்று தூண்டில் போட ஆரம்பித்தாள்.
“ஆமாம் அருணா எம்டெக் படிச்சுருக்காள்” என்று கூறிய சௌந்திரவள்ளியிடம், “ஏம்மா படிச்சுட்டு வேலைக்கு போயிட்டு இருக்கிறாள் அந்த பொண்ணு அவள் எப்படி நம்ம ஊரில் வந்து குப்பை கொட்டுவாள் எனக்கு என்னவோ தம்பியை வீட்டோட மாப்பிள்ளையா அழைச்சிட்டு போயிருவாளோன்னு தோனுது” என்றாள் அருணா.
“அது எப்படி வீட்டோட மாப்பிள்ளையா அனுப்ப முடியும் என் ஒரே மகன் டீ , இப்போவே இந்த கல்யாணத்தை நிறுத்துறேன் அப்படிலாம் சொல்லுவேன்னு நினைச்சியா அருணா” என்று சிரித்தார் சௌந்திரவள்ளி.
“அம்மா” என்று அதிர்ந்த அருணாவிடம், “உன் தம்பிக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைத்தால் போதும் என்னோட கடமை முடிஞ்சுரும் அப்பறம் கடைசி வரை உன் அப்பாவும், நானும் அர்ச்சனாவை பார்த்துக் கிட்டு எங்க காலத்தை ஓட்டிருவோம். உன் தம்பிக்கு பொண்டாட்டி கூட தனியா போயி வாழ ஆசை இருந்தால் தாராளமாக போகட்டும்” என்ற சௌந்திரவள்ளி, “அவன் உன் தம்பி டீ அவன் வாழ்க்கையில் இருந்தும் இருந்து இப்போ தான் ஒரு நல்லது நடக்கப் போகுது அதை கெடுத்து விட்டுராதே உன்னை கை எடுத்து கும்பிடுறேன்.
பொண்ணு வீட்டுக்காரங்க வரும் நேரம் ஆச்சு. இன்னைக்கு தாலிக்கு தங்கம் உருக்க போகிறோம் இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் அதனால் தயவு செய்து எந்த குட்டி கலாட்டாவும் பண்ணி விட்டுராதே” என்று கூறினார்.
அருணாவுக்கு தான் செருப்பால அடிச்சது போல ஆகிவிட்டது.
“ஏன் டீ நீ திருந்தவே மாட்டியா” என்ற கண்ணனிடம் பதிலேதும் சொல்லாமல் சென்று விட்டாள் அருணா.
“கார்த்தி எல்லாம் ரெடி தானே” என்ற சிவநேசனிடம், “எல்லா ஏற்பாடுகளும் பண்ணிட்டேன் நைனா நாம கிளம்பினால் சரியாக இருக்கும்” என்று கார்த்திகேயன் தன் குடும்பத்துடன் தங்கம் உருக்க ஆசாரி வீட்டிற்கு சென்றான்.
“என்ன தெய்வா இது” என்ற பிரசாந்த்திடம், “ப்ளீஸ் அண்ணையா எனக்காக இதை பாவா கிட்ட கொடுத்துட்டு வா” என்றாள் தெய்வானை. “உன் ஆளுக்கு சட்டை எடுத்தால் அதை நீ தான் டீ கொடுக்கனும் என்னை போயி கொடுத்துட்டு வரச் சொல்லுற” என்றான் பிரசாந்த்.
“மீ செல்லி கோசம் இது கூடா செய்யலேறா? (உன் தங்கச்சிக்காக இது கூட செய்ய மாட்டியா?) அண்ணையா” என்றாள் தெய்வானை.
“நேனு தானி சரிசேஸ்டான்னு, எக்குவாகா நடின்காகு (சரி செய்றேன் கொடு ரொம்ப நடிக்காதே)” என்ற பிரசாந்த் அவள் கொடுத்த சட்டையை வாங்கிக் கொண்டு கார்த்திகேயனின் வீட்டிற்கு கிளம்பினான்.
“இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் அவர் கிட்ட ஃபோன்ல கூட பேசியதில்லை ஆனால் அவருக்கு புது சட்டை எடுத்துட்டு வந்திருக்காளாம். அதை போட்டுட்டு சாயங்காலம் கோவிலுக்கு அவரு வரனுமாம் இவளை” என்று நினைத்துக் கொண்டு கார்த்திகேயனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
“என்ன வீட்டில் யாரையும் காணோம். வீடு திறந்திருக்கு ஆள் யாரும் இல்லை” என்று நினைத்தவன் அந்த பெரிய வீட்டின் வாசலில் நின்று “பாவா, மாவய்யா, அத்தகாரு” என்று அவன் சத்தமிட “யாரு” என்றாள் அர்ச்சனா.
“அப்பாடா யாரோ வீட்டில் இருக்காங்க” என்று நினைத்தவன், “பாவா வீட்டில் இல்லையா?” என்றான் பிரசாந்த்.
“நீங்க யாரு?” என்று கேட்டபடி வந்த பெண்ணைக் கண்டு அதிர்ந்து போனான் பிரசாந்த்.
வெள்ளை புடவை அணிந்து, காது, கழுத்தில் ஆபரணங்கள் ஏதும் இல்லாமல், நெற்றியில் பொட்டும் இல்லாமல் விதவைக் கோலத்தில் வந்து நின்ற பெண்ணைக் கண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றான் பிரசாந்த்.
“யாரு வேண்டும் வீட்டில் யாரும் இல்லை” என்று அவள் மீண்டும் கூறிட, “நான் பிரசாந்த். தெய்வானையோட அண்ணன்” என்றான். “வாங்க , வாங்க என்ன விஷயம் அண்ணையா, நைனா, அம்மா எல்லோரும் தாலிக்கு தங்கம் உருக்க ஆசாரி வீட்டிற்கு இப்போ தான் கிளம்பி போனாங்க” என்றாள் அர்ச்சனா.
“இந்த பார்சலை பாவா கிட்ட கொடுத்துட்டு போகலாம் என்று வந்தேன்” என்று பிரசாந்த் கூறிட, “நீங்க ஆசாரி வீட்டிற்கு தானே போவீங்க அங்கே வச்சு அண்ணையா கிட்ட கொடுங்க” என்றாள் அர்ச்சனா.
“இல்லைங்க நீங்களே பாவா கிட்ட கொடுத்துருங்க தெய்வா அவருக்காக பார்த்து பார்த்து வாங்கின சட்டை” என்றான் பிரசாந்த்.
“அதனால் தான் நீங்களே கொடுத்துருங்கன்னு சொன்னேன். என் கை பட்டால் புதுத் துணி தீட்டாகிரும் பிறகு அம்மா அண்ணையாவை இந்த சட்டையை போட விட மாட்டாங்க” என்று அவள் கூறிட அந்த நேரம் சரியாக தெய்வானைக்கு வாங்கிய புடவையை எடுக்க வீட்டிற்கு வந்தான் கார்த்திகேயன்.
“பிரசாந்த்” என்ற குரலில் இருவரும் திரும்பிட கார்த்திகேயன் வந்தான். “என்ன இங்கே வந்துருக்கீங்க” என்றவனிடம் “தெய்வானை இதை உங்க கிட்ட கொடுத்துட்டு வரச் சொன்னா பாவா அதான் வந்தேன். உங்க சிஸ்டர்கிட்ட இதை உங்க கிட்ட கொடுக்க சொல்லி கொடுத்தால் வாங்க மாட்டேங்கிறாங்க” என்றான் பிரசாந்த்.
“சரி நானே வந்துட்டேன்ல என்கிட்டயே கொடுங்க” என்று அதை வாங்கிக் கொண்டான் கார்த்திகேயன்.
(…. மயக்கியே…)