“சார் நான் எவ்வளவு தடவை சொல்றது நீங்க நினைக்கிற மாதிரி நாங்க காதல் ஜோடியும் கிடையாது, தற்கொலை பண்ணிக்கிறதுக்காக கடல்லகுதிக்கவும் கிடையாது சார்.. சும்மா அதையே சொல்லி சொல்லி டார்ச்சர் பண்ணாதீங்க.. நாங்க சொல்றத கொஞ்சம்வாது கேளுங்க சார்..”சஷ்டி ஆத்திரமாக அதே நேரம் படப்படப்பாக கத்திக் கொண்டிருந்தாள்.
ஆனால் அதனை கேட்கத்தான் அந்த போலீஸ் ஸ்டேஷனில் யாரும் தயாராகவே இல்லை.. “அட என்னமா நீ.. இத நீ நூறு தடவை சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம்.. ஏன்னா இன்னைக்கு காலையில தான் ஒரு ஜோடி அந்த கடலில் விழுந்து செத்து போயிட்டாங்க.. அவங்களோட உடம்பு இந்த பக்கம் எடுத்த வேகத்துக்கு நீங்க சாகுறதுக்கு ரெடியாகிட்டீங்க..”கான்ஸ்டபிளும் அவளைப் பார்த்து எகிறிக்கொண்டிருந்தார். அவரின் பணிசுமை அவருக்கு..
சஷ்டியோ தலையில் கை வைத்தவாறே உட்கார்ந்தவள்.. “சார் எங்களுக்கு தற்கொலை பண்றதுக்கு எந்த ஒரு மோட்டிவ்வும் கிடையாது சார்..அது மட்டுமில்ல நானும், அவரும் வேற வேற தெரியுமா.. நாங்க லவ்வர்ஸ் கூட கிடையாது.. ஏன் இதுக்கு முன்னாடி இவர நான் பாத்தது கூட இல்ல..”என்று புலம்பியவளோ.. “சார் தயவு செஞ்சி கொஞ்சம் நான் சொல்றத பொறுமையா கேளுங்க.. நீங்க பாட்டுக்கு ஏதாவது கதை எடுத்துக்கிட்டு கதை கட்டிட்டு இருக்கீங்க..”அவளும் வேகமாக பேசிக் கொண்டே இருந்தாள்.. அவளுக்கும் என்னடா இது தேவை இல்லாமல் தொல்லையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டோமோ என்ற கடுப்பு வேறு.. அவள் பார்வை அடிக்கடி தன் அருகில் பம்மிக்கொண்டு நிற்பவனின் பக்கம் அனலாக தெறித்தது.
“அட உனக்கு ஏற்கனவே சொன்னதுதான்மா.. நீ என்ன சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம்.. ச்ச ச்ச உலகம் ரொம்ப கெட்டுப்போச்சி… இப்ப எல்லாம் தற்கொலை பண்ணிகுறதுன்னு பீச்சுக்கோ, இல்ல ரயில்வே ஸ்டேஷனுக்கோ போய் நின்னுட வேண்டியது.. அப்புறம் கையும் களவுமா போலீஸ்கிட்ட மாட்ன வேகத்துக்கு நாங்க லவ்வர்ஸும் கிடையாது ஒன்னும் கிடையாது.. நாங்க கடலுக்கு நடுவுல நின்னு சும்மா பேசிகிட்டு இருந்தோம்,ரயில் தண்டவாளத்துக்கு நடுவுல நின்னு சும்மாதான் சார் பேசிக்கிட்டு இருந்தோம்னு ஏதாவது ஒரு கதை கட்ட வேண்டியது.. நீ சொல்ற மாதிரியே பல கதைகளை நாங்களும் கேட்டாச்சுமா.. சும்மா அதே கதையை சொல்லாத..” என்று கான்ஸ்டபிளோ…
“போங்க போய் அங்க உட்காருங்க.. சார் இப்போ வருவாரு.. அப்போ பேசிக்கலாம்..”என்றவரும் தன் இடத்திற்கு செல்ல..
சஷ்டிக்கு கோவம் மலை ஏறியது.. “சார் கொஞ்சமாச்சும் ரெஸ்பெக்ட்டா பேசுங்க சார்..” என்று கூற.
“ஓஓ அப்படியா உங்கிட்ட ரெஸ்பெக்ட்டாவே பேசுறோம்.. சொல்லுங்க மேடம் நீங்க தற்கொலை பண்ணிக்க நினைக்கலைனா அப்புறம் நடுக்கடல்ல நின்னு என்னாத்த மேடம் பண்ணிக்கிட்டு இருந்தீங்க..மீன் புடிச்சிட்டு இருந்தீங்களா அதுவும் ஜோடியா..” என்று அவரும் நக்கல் தோணியில் கேள்வி கேட்க..
அதில் ஆத்திரப்பட்ட சஷ்டியும் தன்னுடைய ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு கார்டை எடுத்து அவரிடம் நீட்டியவள்.. “சார் இது என்னோட பிசினஸ் கார்ட்.. இதுல வேணா பாருங்களேன் இது என்னோட ஆபீஸ் தான்…” என்று அவளும் எவ்வளவோ அவர்களை சமாளிக்க பார்க்க.. அந்த கான்ஸ்டபிள் அதனை வாங்கி பார்த்த வேகத்திற்கு..
“ஓஓஓ.. இப்போ புரிது..”என்றவர்.. “ம்ம் அதான பார்த்தேன் எங்கேயோ பழக்கப்பட்ட முகமாவே இருக்கேனு பார்த்தேன்.. நீங்க மாடலா.. நிறைய புக்ல அப்புறம் ஆட்ல கூட உங்கள பாத்திருக்கேன்மா நானு,..” என்று அவளை ஏற இறங்க பார்த்தவரை கண்டவளுக்கு இது என்னடா இது மீண்டும் ஒரு தலைவலி என்று நினைத்தவாறு சஷ்டி உட்கார்ந்தேவிட்டாள்…
மீண்டும் அவள் பார்வை தனக்கு அருகில் ஒரு மூலையில் பம்மிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் அந்த ஆண்மகன் மீதுதான் இருந்தது.. அவனோ ஒரு பக்கம் சுருண்டு உட்கார்ந்து இருந்தவன் இந்த பக்கமும், அந்த பக்கமும் மாறி மாறி மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“எல்லாம் இவனால வந்தது..” என்று தலையில் அடித்துக் கொண்ட சஷ்டிக்கோ ஆத்திரம் அதிகமாக… “இவ்ளோ பெரிய பிரச்சனைக்கு காரணமே இவன் தான்.. ஆனா ஆள் அப்டியே பதுங்கி உக்காந்துருக்கான் பாரு..”திட்டியவளின் மனமோ அவளையே சாடியது.. “உனக்கு இது தேவையாடி.. யாரோ என்னவோ பண்றாங்கன்னு வேடிக்கை பாத்துட்டு போகாம இப்படி அவனுக்கு உதவி செய்யப் போறேன்னு சொல்லிட்டு இப்படி நீயாவே ஒரு வினைய இழுத்துகிட்டு வச்சிருக்க.. நீ ஒரு மாடல் அதுவும் ஃபேமஸான மாடல் வேற நாளைக்கு இது மட்டும் மீடியாவுக்கு தெரிஞ்சது எல்லா இடத்திலும் கிழி கிழின்னு போட்டு கிழிச்சு எடுத்துடுவாங்க,,, உன்னோட ரெஸ்பெக்டே போயிடும்.. இத்தனைக்கும் மேல அந்த துஷ் மட்டும் இதை பார்த்தான் அவ்வளவுதான் அவனுக்காக தான் நான் சூசைட் அளவுக்கு போயிட்டேனு வேற நினைச்சுப்பான்.. ஐயோ இது நமக்கு எவ்ளோ அசிங்கமா ஆயிடும்…” என்று நினைத்தவாறே தலையிலேயே ஒரு அறை அடித்துக் கொண்டிருக்க…
“அட மாடல் மேடம் ரொம்ப தட்டாதீங்க.. அப்புறம் இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையும் கரைஞ்சி காணாமல் போய்ட போது…” என்று அந்த வாய் ஓவரான கான்ஸ்டபிள் கிண்டலாக கூற..
அதில் அவரை வெடுக்கென்று நிமிர்ந்து முறைத்து பார்த்தவளோ.. “இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும் சார்.. நான் மட்டும் வெளியில் போனா உங்க மேல கேஸ் போடுவேன் தெரியுமா…” என்று சஷ்டியும் சும்மா இருக்காமல் வாய் விட..
“ம்ம்ம் போடுங்க மேடம் நல்லாவே போடுங்க.. உங்கள வெளியில விட்டா தானம்மா கேஸ் போடுவீங்க.. சூசைட் பண்றது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா.. இதுக்கு போலீஸ் கேஸ் போட்டோ ஆறு மாசத்துக்கு வெளியில வர முடியாது… அப்டியே வந்தாலும் கோர்ட்டு, கேஸுனு அலஞ்சுகிட்டு இருக்கணும்.. இது உன்னோட கெரியருக்கு எவ்ளோ பெரிய பிரச்சனை தெரியும்ல..” என்று அவரும் அவளை மிரட்டலாக கூறினார்.
அதனைக் கேட்ட பெண்ணவளும் “ஜோலி முடிஞ்சது..” என்ற நிலையிலையே உட்கார்ந்துவிட்டாள்…
“ம்ம் ஆமா மேடம் உங்கள பத்தி மட்டும் சொன்னீங்க.. சாரை பத்தி எதுவுமே சொல்லலையே..”என்றார் இன்னொரு கான்ஸ்டபிள்.
“ம்ச் எனக்கே அவர பத்தி எதுவும் தெரியாது சார்..”சலித்தவாறே தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டாள் பெண்ணவள்..
“ஹான் அப்டியா.. உலக மகா நடிகை மேடம் நீங்க.. மாடலுக்கு பதிலா ஆக்டிங்க் போயிருக்கலாம்.. எப்படி தெரியாம இருக்கும் அதும் உங்க லவ்வர பத்தி உங்களுக்கே தெரியாமையா இருக்கும்…” என்று அவரும் மறுபடியும் கதைக்கட்ட..
அவளுக்கோ காது, மூக்கில் புகை வராத அளவிற்கு கடுப்பாகியது.. ஒருக்கட்டத்தில் “ம்ம்ம் கட்டுங்க கட்டுங்க ஏதாவது ஒரு கதையை கட்டிக்கிட்டே இருங்க..” என்று புலம்பியவாறு உட்கார்ந்திருந்தாள்..
அந்த கான்ஸ்டபிளோ அங்கு உட்கார்ந்திருந்த அந்த ஆடவனிடம் பார்வையை திருப்பியவர் இப்போது கேள்விக்கனைகளை அவனிடம் கேட்க ஆரம்பித்தார். “ம்ம்ம் சொல்லுங்க சார் நீங்க என்ன வேலை பாக்குறீங்க..” என்று அதட்ட…
அதில் அவன் உடலோ அதிர கான்ஸ்டபிளை பாவமாக பார்த்தவனை கண்டு யாருக்கு என்றாலும் பாவம் என்று தான் தோன்றும்… அவன் முகம் அப்படி இருந்தது.
அவர் கேட்ட கேள்வியில் யார் ஆர்வம் காட்டினார்களோ இல்லையோ சஷ்டியின் கண்கள் ஆர்வமாக அவனை பார்த்தது.. சஷ்டியின் காதுகள் அவனின் பதிலுக்காக கூர்மையானது.. அவன் கூறும் பதிலுக்காக அவள் எதற்காக காத்திருக்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை..
அவனோ திருத்திருவென்று விழித்துக் கொண்டிருக்க.. “இந்த பார்வைய மட்டும் மாத்தவே மாட்றான்டா.. இவன பாத்த நொடியில இருந்து இதே பார்வையை பார்த்து பார்த்து இம்சை பண்றான்..” என்றவாறே சஷ்டி உட்கார்ந்திருக்க…
“ம்ம் சொல்லுங்க சார்.. உங்க பேர் என்ன.. நீங்க என்ன வேல செய்றீங்க.. எதுக்காக பீச்ல போய் சூசைட் பண்ண பாத்தீங்க..” என்று அந்த கான்ஸ்டபிள் சிறுபிள்ளையை கேள்வி கேட்பது போல் கேட்க..
அவனோ தயங்கியவாறே.. “என் பேரு கர்ணன் சார்..” என்றான் பதறியவாறு..
“ஓ கர்ணனா.. அம்மா நீங்க மகாபாரதத்துல வர கர்ணனா..” என்று அவரும் கிண்டல் செய்து கொண்டிருக்க.. அதனை கேட்க கேட்க சஷ்டிக்கு கோவம் அதிகமாகியது..
“ம்ச் சார் அவர எதுக்கு சார் ஓட்டுறீங்க..” என்று அவளும் இடையில் வாய் விட..
“ம்ம்ம் பாத்தியா பாத்தியா இவர யாருனே தெரியவே தெரியாதுன்னு சொன்னீங்களே மேடம்… இப்ப என்னன்னா உங்க லவ்வர ஏதோ கிண்டல் பண்றேன்னு உங்களுக்கு கோவம் வருது..” என்று மறுபடியும் அவர் கதை கட்ட..
அவளுக்கோ ஐயோடா என்பது போல தான் உட்கார்ந்துவிட்டாள்.
“ம்ம்ம் சொல்லுங்க மிஸ்டர் கர்ணன் சார் நீங்க என்ன வேலை பாக்குறீங்க.. உங்க வீட்டு அட்ரஸ் இதெல்லாம் கொஞ்சம் சொல்லுங்களேன்..” என்றார் கான்ஸ்டபிள்.
அவனோ அதற்கு பதிலுக்கு எச்சில் விழுங்கியவாறே.. “அது வந்து சார்.. நானு.. நானு… ஒரு டாக்டர்..” என்றான் தயக்கத்துடன்.
அதில் சஷ்டி அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.. “வாட் டாக்டரா…” என்று அவளும் வேகமாக கத்த… இது கான்ஸ்டபிளுக்கே கொஞ்சம் அதிர்வாக தான் இருந்தது..
“ஆஆ… என்னது டாக்டரா..”என்றவர் கர்ணனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்க்க.. அவருக்கோ அவனை எந்த கோணத்தில் பார்த்தாலும் ஒரு மருத்துவன் போல தெரியவில்லை..
“ம்ம் எங்க உங்க ஐடி கார்ட் காட்டுங்க பார்ப்போம்…”அவன் மருத்துவன் தானா என்பதை உறுதிப்படுத்த கேட்ட கான்ஸ்டபிளிடம் கர்ணனோ தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்து அதில் இருக்கும் தன்னுடைய மெடிக்கல் ஐடி கார்டை எடுத்து நீட்டினான்..
அதனை பார்த்து கான்ஸ்டபிள் இன்னும் அதிர்ச்சி அதிகமாகியது தவிர குறையவில்லை… “என்னது டாக்டரையே தற்கொலை பண்ண வைக்கிற அளவுக்கு அப்படி என்னதான்மா பிரச்சனைய கொடுத்த…” என்று மறுபடியும் அவர் சஷ்டியிடமே வர..
அவளோ வெகுண்டு எழுந்துவிட்டாள்… “ம்ம்ச் சார் என் வாயை ஏன் கிளறுறீங்க… எதுனாலும் அவர் கிட்ட கேளுங்க சார்.. ஏற்கனவே அவர் டாக்டருன்றதே இப்போதான் தெரிஞ்சிச்சி.. அதுவே எனக்கு அதிர்ச்சியா இருக்கு.. இதுல இவரு வேற..”கடுப்பாக கூறிய சஷ்டியோ கர்ணனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தாள். அவளுக்கும் அவனை எந்த விதத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.
ஆள் அவ்வளவு சாதாரணமாக இருந்தான். வெள்ளையில் கட்டம் போட்ட சட்டையும், அதற்கு மேட்ஷாக ஒரு கறுப்பு நிற பேண்டை போட்டுக்கொண்டு.. முகத்தில் ஒரு பொட்டு மூசையும், தாடியும் ஏன் முடியும் கூட இல்லாமல் மழுக்கென்று வழித்து வைத்து, தலையை ஒருபக்கம் வகுடு எடுத்து வாறிக்கொண்டு டாக்டர் என்பதற்கே எந்த அறிகுறியும் இல்லாமல் தான் இருந்தான்.
இத்தனைக்கும் மேல் அவன் முகத்தில் டன் கணக்காக அப்பாவித்தனமும், மிரட்சியும் வழிந்தது. அவன் சிவந்த உதடுகளோ பயத்தில் நடுங்கியது. அதனை பார்த்த சஷ்டிக்கு இன்னும் அவன் மருத்துவனா என்பதனை ஏற்கவே முடியவில்லை.
“டிவில எல்லாம் டாக்டர்ஸ மாஸ்ஸா காட்டுறாங்க.. நாமளும் ஹாஸ்பிட்டல் போறப்போ அப்டிதானே பாக்குறோம்.. ஆனா இவன் மட்டும் ஏன் இப்டி அம்மாஞ்சியா இருக்கான்…”என்று அவள் யோசிக்காமலில்லை.
“அட டாக்டர் தானே சார் நீங்க.. ஒரு உயிரோட மதிப்பு உங்களுக்கு தெரியாதா… நீங்களே உயிர போக்குகிறதுக்காக போய் சூசைட் பண்ண போயிருக்கிங்க.. உங்கள எல்லாம் என்ன சொல்றது..” என்று மறுபடியும் சஷ்டி அதட்ட.
“அட மேடம் நான் தான் பேசிட்டு இருக்கேன்ல.. கொஞ்சம் சும்மா இருங்க மேடம்..” என்ற கான்ஸ்டபிளோ.. “எதுக்கு சார் தற்கொலை பண்ணிக்க போறீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்னு எங்களுக்கு நல்லாவே தெரியுது.. ஆனா அதுக்காக எதுக்கு இந்த சூசைட்னு தான் எனக்கு புரில.. ரெண்டு பேரும் நல்ல பொஷிஷன்ல இருக்கீங்க.. அப்புறம் ஏன்..”என்று யோசித்தவர்.. “ஓஓஒ உங்க வீட்ல உங்க லவ்வ ஒத்துக்கலையோ..” என்று கான்ஸ்டபிள் கூற…
அந்த நேரம் விறுவிறுவென்று உள்ளே வந்து இன்ஸ்பெக்டரை பார்த்து அந்த கான்ஸ்டபிள் கப் என்று அடங்கிப் போனார்.. “சார்..” என்று வேகமாக ஒரு சல்யூட் வைக்க… அந்த இன்ஸ்பெக்டரோ சரி என்று தலையாட்டியவரின் பார்வை சஷ்டியிடமும், கர்ணனிடம் தான் திரும்பியது..
“என்னையா யார் இவங்க..” என்று ஆளுமையாக கேட்ட அந்த இன்ஸ்பெக்டரை பார்த்து..
“சார் அந்த பீச்ல சூசைட் அட்டென்ட் பண்ண போனாங்கன்னு உங்களுக்கு கால் பண்ணி சொன்னேனே சார்..” என்று கூறவே…
“ஓஓ.. ஆமா அவங்களா இவங்க ரெண்டு பேரும்..” என்று இருவரையும் மேலே இருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவரோ.. “இவங்க ரெண்டு பேரோட பேரண்ட்ஸ்சையும் இம்மீடியட்டா வர சொல்லு..” என்றார்..
அதில் சஷ்டிக்கு பகீரென்று ஆனதோ இல்லையோ கர்ணனுக்கு நெஞ்சே வெடிப்பது போல அவ்வளவு பெரிய அதிர்ச்சி… கர்ணனோ அதிர்ச்சியில் “நோ..” என்று வேகமாக கத்தினான்..
சஷ்டியோ அதில் புரியாமல் கருணனை பார்த்தாள்… கர்ணனின் உடல் வெடவெடக்க… “சார் நீங்க என்னை என்ன வேணாலும் பண்ணிக்கோங்க சார் ஆனால் எங்க அப்பாக்கு மட்டும் கால் பண்ணிடாதீங்க சார்..”கருணன் நமக்காகவே வாயை விட..
அதில் அந்த இன்ஸ்பெக்டரோ கான்ஸ்டபிளை பார்த்து “இவரோட அப்பா இன்னும் ஒரு மணி நேரத்துல இங்க வந்தாகணும்..” என்று அதிகாரத்துடன் கூறியதை பார்க்க கர்ணனுக்கும் நெஞ்சுவலியே வந்துவிட்டது…
“ஆஆ அய்யோ அம்மா…” என்று நெஞ்சை பிடித்தவன் அப்படியே உட்கார்ந்து விட.. சஷ்டிக்கோ ஒன்றும் புரியவில்லை.. அடுத்த ஒரு மணி நேரத்தில் படபடவென்று ஒரு நான்கு பேர் வெள்ளை வேஷ்டி ,சட்டையில் காவல்நிலையத்திற்குள் நுழைந்தவர்களை பார்த்த சஷ்டிக்கோ “என்னடா இது ஏதோ தெலுங்கு படத்தை பார்க்கிற மாதிரி இருக்கு…” என்று கேள்வியாக நினைத்துக் கொண்டாள்.
அந்த வெள்ளை சட்டையில் ஒருவர் வேகமாக கர்ணனின் பக்கம் வந்து அப்படியே கருணனை சட்டையை பிடித்து ஒரே தூக்காக தூக்கி மேலே நிறுத்த… அதில் மொத்த காவல்நிலையமும், சஷ்டியும் அவரையே அதிருடன் பார்க்க கர்ணனோ அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தான் பட்டம் போல..