விருகோத்திரனின் துருபத கன்னிகை
அத்தியாயம் 1
“ப்ளீஸ் ஆதவ்.. நான் சொல்லுறதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ” என கண்ணீர் மல்க கெஞ்சிக் கொண்டிருந்தாள் இஷானி..
“நான் சொல்லுறதை நீ புரிஞ்சிக்கோ இஷானி” என அவளுக்கும் மேலாக கெஞ்சிக் கொண்டிருந்தான் ஆதவ்..
“ப்ச்ச்.. என்ன புரிஞ்சிக்கணும்?.. ஹான் என்ன புரிஞ்சிக்கணும் ஆதவ்.. நீ சொல்லுறதை நான் எப்படி ஏத்துக்க முடியும்?” என கெஞ்சலில் ஆரம்பித்து கோபத்தில் முடித்தாள்..
நீண்ட நேரம் அழுதுக் கொண்டிருந்ததால் தொண்டை வேறு கரகரத்து ஒலித்தது..
ஆனால் அதைப் பற்றிய எண்ணம் அவளுக்கு இல்லை..
“இங்கே பாரு இஷா, இப்போ எனக்கு இதைத் தவிர வேறு வழியில்லை” என அழும் குரலில் சொன்னவனை எரிச்சலாக பார்த்தாள் இஷானி..
“என்ன வழியில்லை ஆதவ்.. ஹான்.. என்ன வழியில்லை.. இங்கே பாரு, உங்க அண்ணனுக்கு இந்த தடவை கல்யாணம் நடக்கலைன்னா.. அடுத்த முகூர்த்தத்துல இதை விட ஜாம், ஜாம்னு நாமளே கல்யாணத்தை நடத்தி வைக்கலாம்..” என்றவளை எரிப்பது போல் பார்த்தான் ஆதவ்.
“என்ன பேசிட்டு இருக்க நீ?.. என் அண்ணன் அங்கே மணமேடையில உட்கார்ந்துருக்கான்.. அவனை கீழே இறங்கி வரச் சொல்லுறீயா? என் அண்ணனை அசிங்கப்பட்டு நிக்கச் சொல்லுறீயா?” என சற்று காட்டமாக கேட்க,
“ஏன் அதுல என்ன தப்பு?” என்றவளை விழி விரித்துப் பார்த்தான் ஆதவ்..
“என்ன தப்பா?.. யோசிச்சி தான் பேசுறீயா இஷா..” என சுள்ளென்று எரிந்து விழுந்தவனிடம் என்ன பேசி புரிய வைப்பது என்றே இஷானிக்கு புரியவில்லை..
ஒரு நிமிடம் முழுமையாக அமைதி மட்டும் அந்த அறையை தத்தெடுத்தது..
அவனுக்கு தன் அண்ணனின் வாழக்கைப் போராட்டம்?..
இவளுக்கு வாழ்வா? சாவா போராட்டம்.. எதை செய்வது என்றே இருவருக்கும் புரியவில்லை.
சூழ்நிலைக் கைதியாய் இருவரும் நின்றிருக்க, இருவரிடமும் பேசுவதற்கும், போராடுவதற்கும் எதுவும் இல்லாமல் இருந்தது.
நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்ட இஷானி, தன்னருகில் இருந்தவனை அழுத்தமாக பார்த்தாள்..
“அப்போ இது தான் உன் முடிவா? ஆதவ்” என்றவளின் அழுத்தமான குரல், ஆதவ்வின் உயிர் வரை சென்று தாக்கியது..
தன் மனதிற்கு பொறுக்காத ஒரு செயலை செய்யத் துணிந்தான் ஆதவ்..
“ஆமா இஷா.. இது தான் என் முடிவு, சேலையை மாத்திட்டு வெளியே வா” என்றவனின் வார்த்தையில் உயிரோடு மறித்தாள் பெண்ணவள்..
“என்ன சொல்கிறான் இவன்? அறிந்து சொல்கிறானா? அறியாமல் பிழைக்கிறானா?” என தனக்குள்ளேயே மறுகித் தவித்தவள்,
“நாம இரண்டு வருஷமா லவ் பண்றோம் ஆதவ்” என்றவளை கண்ணீருடன் ஏறிட்டுப் பார்த்தான் ஆதவ்..
ஆம்.. ஆதவ்வும், இஷானியும் இரண்டு வருட காதலர்கள்.. சென்னையில் அவர்கள் சுற்றாத இடமே இல்லை என்கலாம்.. அந்தளவிற்கு காதல்புறாவாக சுற்றித் திரிந்தனர்..
புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், காதலர் தினம் எல்லாமே ஒன்றாகக் கொண்டாடி, காதல் வானில் காதலர்களாய் பறந்துக் கொண்டிருந்த ஒரு காதல் கிளியின் சிறகை ஒடித்து, வேடன் ஒருவன் கையில் கொடுத்தால், அந்தக் காதல் கிளி காதலின் பிரிவு தாளாமல் தவித்து அழுதது..
“நாம ப்ரேக்கப் பண்ணிக்கலாம் இஷானி” என்றவனை உணர்வுகள் மறுத்து ஒரு பார்வை பார்த்தாள்..
“ப்ரேக்கப்பா?..” என ஒற்றை வார்த்தை தான் கேட்டாள்.. அவளின் வார்த்தையில் அதீத வலியை உணர்ந்தான் ஆதவ்..
“ஆமா இஷா.. நாம ப்ரேக்கப் பண்ணிக்கலாம்.. நீ இப்போ சேலையை மாத்திட்டு வா” என்றவனை சட்டையை கொத்தாக பற்றினாள் இஷானி..
அவளின் பொறுமை எல்லாம் காற்றோடு பறந்து போக, “என்ன பேசிட்டு இருக்க ஆதவ். ப்ரேக்கப், அது இதுன்னு.. நாம எப்படியெல்லாம் லவ் பண்ணோம், எப்படியெல்லாம் வாழணும்னு நினைச்சோம்ங்கிறது மறந்துப் போச்சா உனக்கு?. ஆர் யூ மேட்” என அறையை அதிரும் வண்ணம் கத்தினாள்..
தன் எதிரில் ஆங்காரமாக பேசிக் கொண்டிருந்தவளின் வாயை சட்டென்று தன் கரம் கொண்டு பொத்தினான் ஆதவ்..
“ப்ளீஸ்.. கத்தாதடி.. வெளியில இருக்கிறவங்களுக்கு கேட்டுட போகுது?” என கெஞ்சும் குரலில் மன்றாடிட,
“கேட்டா கேட்கட்டும்” என வெறுமையான குரலில் சொன்னவளை அழுத்தமாக பார்த்தான் ஆதவ்..
“இப்போ நீ என்னதான் சொல்லுற இஷா.. இந்த சேலையை மாத்திட்டு வரப்போறீயா? இல்லையா?” என்றவனின் குரலில் ஒரு வித அழுத்தத்தோடு, சற்று கடினம் கூடியது..
“என்னால மாத்த முடியாது” என அவனை விட சற்று தீவிரமான குரலில் சொன்னாள் இஷானி..
“இஷா நான் சொல்லுறதைக் கேளு” என்றவனை திரும்பி பார்த்து முறைத்தவள்,
“நான் ஏன்டா கேட்ணும்?.. நீதான் ப்ரேக்கப்னு சொல்லிட்டல்ல.. இனிமேல் ஒரு நிமிஷம் கூட இங்கே நான் இருக்க மாட்டேன். நான் போறேன்” என்றவள் ஓரடிக் கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள்.
“அம்மாஆஆஆ” என்ற ஆதவ்வின் அலறல் குரல் தான் கேட்டது..
இஷானி வேகமாக திரும்பி பார்க்க, கை நரம்புகளை கூர்மையான கத்திக் கொண்டு அறுத்தபடி நின்றிருந்தான் ஆதவ்..
அவனுடன் போட்ட சண்டையெல்லாம் மறந்தபடி, “ஆதவ்வ்வ்” என அலறியபடி அவனிடம் ஓடினாள்..
“என்ன பண்ணி வச்சிருக்கடா?” என்றவள், தன் சேலை முந்தானையில் அவன் கையை அழுத்தமாக பற்றிட, சட்டென்று அவள் கைகளை தள்ளி விட்டான் ஆதவ்..
அவனின் செய்கை சிறிதும் எதிர்பாராதவள் துடிதுடித்து போனாள்..
அவன் வலி அவளுக்கும் வலியை அல்லவா கொடுக்கும்..
“ப்ளீஸ் ஆதவ்.. கையை கொடு” என்றவளின் கண்ணீரைக் கண்ட ஆதவ்வின் மனமும் வெகுவாய் வலித்தது..
“இல்லை எங்க அண்ணன் அந்த மேடையை விட்டு இறங்கி, அவமானப்படுறதை பார்க்கிறதை விட, போற உயிர் இப்படியே போகட்டும்” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் இஷானி..
“என்ன பேசுற ஆதவ்?.. உங்க அண்ணன் ஒரு ஆம்பிளை.. அவர் மண்டபத்தை விட்டு இறங்குனா, எதுவும் மாறாது.. எல்லாரும் கொஞ்ச நாள் பேசுவாங்க, அப்புறம் மறந்திடுவாங்க.. நாம அதுக்குள்ள அவருக்கு ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடலாம்” என மன்றாடும் குரலில் வேண்டிட,
“இல்லை அவன் பண்ணிக்க மாட்டான்.. ஒரு தடவை அவமானப்பட்டுட்டா, வாழ்க்கையில அவன் திரும்ப பார்க்கவே மாட்டான்.. உனக்கு அவனைப் பத்தி தெரியாது?” என்றவனை அதீத எரிச்சலுடன் தான் பார்த்தாள்..
அவள் ஏன் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்?.. யார் அவன்?.. தன் காதலனின் அண்ணன்? அவனைப் பற்றி அறிந்து வைத்து இவள் என்ன செய்யப் போகிறாள்?..
“ப்ளீஸ்.. ஆதவ் நான் சொல்லுறதை புரிஞ்சிக்கோ..” என்றவளுக்கு கண்ணீர் வந்துக்கொண்டேயிருந்தது.. அதுவும் ஆதவ் கையில் இருந்து ரத்தம் வழிந்து தரையில் விழுவதைப் பார்க்க பார்க்க, இன்னும் இன்னும் அதிகமாக வலித்தது..
“இவ்வளவு வலியைக் கொடுக்கத்தான் இந்த விடியலை எனக்குக் கொடுத்தாயே இறைவா?” என மனதுக்குள், கண்ணுக்குப் புலப்படாத இறைவனிடம் மன்றாடி நின்றாள் இஷானி..
“சிக்கீரம் ஹாஸ்பிட்டல் போகலாம் ஆதவ்.. ப்ளீஸ்.. ப்ளீடிங் அதிகமாகுது” என்றவளுக்கு கண்ணீரை தாண்டி, வெறுமையான நிலைக்கு மனம் செல்ல ஆரம்பித்தது..
“எங்க அண்ணன் கல்யாணம் நடந்த அடுத்த நிமிஷம் நான் ஹாஸ்பிட்டல் போறேன்” என்றவனை பேரதிர்ச்சியுடன் பார்த்தாள் இஷானி..
“என்னடா பேசுற?.. கல்யாணமே வேண்டாம்னு நான் சொல்லுறேன்.. நீ என்னடான்னா?.. கல்யாணம் நடந்தே தீரணும்னு சொல்லுற?..” என்றவளின் இதயம் பாறாங்கல்லாய் கனத்து வலிக்க ஆரம்பித்தது..
“நீ இந்த சேலையை மாத்திட்டு வெளியே வா” என்றவனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தாள் இஷானி..
“சேலையை மாத்து, சேலையை மாத்துன்னா, என்ன பேசுறன்னு புரியுதா, இது என்ன சாதாரண சேலையா, கூரைப்புடவை ஆதவ்.. இதைக் கட்டிட்டு நான் வெளியேப் போனா, நான் உங்க அண்ணனோட மனைவியாகிடுவேன்” என்றவளுக்கு துக்கம் தொண்டையடைத்தது..
அதை அவனும் அறிவானே?.. மனதை கல்லாக்கிக் கொண்டு தானே இப்படி ஒரு செயலை செய்யத் துணிந்தான்..
“அதை தான் நானும் சொல்லுறேன்.. நீ கட்டிட்டு வெளியே வா” என்றவனின் கன்னத்தில் தன் ஆத்தீரம் தீரும் மட்டில் அடித்துக் கொண்டேயிருந்தாள்..
அவளின் வலியை அவனும் உணர்ந்தான் போல, தன் கைகளில் ரத்தம் வடிய, சட்டென்று அவள் காலிலேயே விழுந்து விட்டான்..
திடீரென்று தன் கால்களில் விழுந்தவனை அதிர்ந்து பார்த்தாள் இஷானி..
அதுவரை அவனுடன் சண்டை போட்டு, அடித்து, திட்டி மிரட்டிக் கொண்டிருந்த விழிகள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தது..
“ப்ளீஸ் இஷானி.. இதைத் தவிர எனக்கு வேற வழி தெரியலை.. எங்க அண்ணா மனசுல நீ இருக்கிறன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே, என் மனசுல இருந்து உன்னை விலக்கிட்டேன்” என்றவனின் வார்த்தையில் இஷானியின் உணர்வுகள் மறிக்க ஆரம்பித்தது..
“விலக்கி விட்டானா?.. என்னைய்யா?..” என்றவனை அப்படியே பார்த்தபடி நின்றிருந்தாள் இஷானி..
“என்னை விட்டு விலகிட்டீயா ஆதவ்?”என்றவளின் மெல்லிய குரல், அவனை உயிர் வரை சென்று தாக்கியது..
விலகிவிட முடியுமா அவனால்?.. இரண்டு வருட காதல் பெரிதா? இருபத்தி ஏழு வருடம் தன்னை சுமந்த அண்ணன் மேல் வைத்திருக்கும் பாசம் பெரிதா? என்றவனுக்கு அண்ணன் மேல் கொண்ட அன்பே பெரிதாய் பட்டது..
“ஒரு பெண்ணை உயிரோடுக் கொல்லும் வேளையை தான் செய்ய ஆரம்பித்தான்..
“எனக்கு அண்ணா தான் முக்கியம் இஷானி” என்றவனை வெறுமையாக பார்த்தவள், “வெளியே போ ஆதவ். நான் சேலையை மாத்தணும்” என்றவளிடம், ஏதோ சொல்ல வர,
அவனை தன் ஒற்றைக் கை உயர்த்தி தடுத்து நிறுத்தியவள், “வெளியே போடா” என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தவாறே வெளியேறினான்..
அவன் அறையை விட்டு வெளியே செல்லவும், கதவை அறைந்து சாத்தினாள் இஷானி..
என்ன செய்வாள்? தான் அன்பு வைத்த ஒருவனே, தன்னை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி விடுவதை அறிந்தவளுக்கு கண்ணீர் தான் வந்தது..
அழுதாள் வாய் விட்டு கதறியழுதாள், வெளியே கேட்டு விடுமோ என அஞ்சி, தன் வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள்..
“பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என்ற ஐயரின் குரலில் அழுது விழிகளுடன் கண்ணாடி முன் சென்று நின்றாள் இஷானி..
“அக்கா ரெடியாகிட்டீங்களா?” என்றவாறே உள்ளே நுழைந்தாள் யாழினி..
“என்னக்கா இன்னும் சேலை கூட மாத்தலை?” என்றவள் இஷானி முகத்தைப் பார்க்க, ஏற்கனவே சிவப்பு நிற செங்கொழுந்தாய் இருப்பவள், இப்பொழுது அழுதழுது சிவப்பு நிறமாகவே மாறி நின்றாள்..
கன்னத்தில் ரூஜ் தடவாமலே கன்னக்கதுப்பு சிகப்பாய் மாறியிருந்தது..
“அக்கா நான் சேலை மாத்தி விடவா?” என சற்று தயங்கியவாறே கேட்க,
“ம்ம்” என ஒற்றை வார்த்தை தான் உதிர்த்தாள் இஷானி. இதற்கு முன்பு இஷானிக்கு யாழினி தான் தாவணி எல்லாம் கட்டிவிட்டிருக்கிறாள் என்பதால், இஷானிக்கு எந்த வித கூச்சமும் இல்லை..
சாதாரணமாக நின்றவளை சர்வ அலங்காரமாக சொரூபினியாக ரெடியாக்கினாள் யாழினி..
“ஊர்க்கண்ணே படும் அளவிற்கு அவளை லக்ஷனம் பொருந்திய பெண்ணாய் அலங்கரித்தவள், அறையை திறந்து வெளியே வர, அங்கு அமர்ந்திருந்தவனை பார்த்ததுமே இஷானியின் மனம் சுணங்கியது..
அரை மணி நேரத்திற்கு முன்பு அவளின் மனதை ஆக்கிரமித்தவன் வேறு ஒருவன்.. ஆனால் இந்நொடி முதல் அவளை ஆக்கிரமிக்கப் போறவன் ஒருவன் என நினைக்கும் பொழுதே அழுகையை தாண்டி ஒரு வித ஆத்திரமும், கோபமும் தான் வந்தது..
இந்நிலைக்கு தனக்கு வர யார்க் காரணம்? இவன் தான்.. மணமேடையில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் இவன் தான். தன் வாழ்க்கை சீரழிய காரணம் என நினைக்கும் போதே எரிச்சல் தான் வந்தது.. ஆதவ்வை பற்றிய சிறு எண்ணமும் அவளுக்கு இல்லை..
அவன் மண்டபத்தில் இருக்கிறானா? இல்லையா? என்பதை அறியக்கூட அவள் மனம் விரும்பவில்லை.
நின்றாள்.. மணப்பெண்ணின் அறை வாசலில் திடமாக நின்றாள்.. அவளின் கண்ணீர் கண்களை மறைக்க தனக்குள்ளேயே வெம்பி, வெதும்பியவாறே நின்றாள்..
“வாங்க க்கா” என யாழினி, தோளோடு அணைத்தவாறே இஷானியை மணமேடையில் அமர வைத்தாள்..
தன்னருகில் இருப்பவனை ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை.. அவளுக்கு அவன் புதிதானவன் அல்ல.. இரண்டு மாதங்களாய் தினமும் அந்த முகத்தை பார்த்திருக்கிறாள். ஆனால் பேசியதில்லை..
ஒரு வார்த்தை அவனுடன் கதைத்ததில்லை.. அவனுக்குள் எப்படி என் மீதான காதல் வந்தது? என்ற கேள்விக்கு விடை தான் அவளால் காண முடியவில்லை..
அழுத்தமான பார்வையை தனக்கு முன்னால் இருப்பவர்களின் மீது செலுத்தியபடி அமர்ந்தவளின் கழுத்தோடு உறவாட ஆரம்பித்தது, அவன் உரமேறிய கைகளில் தழுவியிருந்த மங்களநாண்..
கண்ணின் கருவிழிகளை மட்டும் கீழிறக்கிப் பார்க்க, அவளின் நெஞ்சாக்கூட்டில் உறவாட ஆரம்பித்தது, அவன் கைகளில் ஏறிய தாலி..
பூர்வ பந்தமாய் ஏற்பட வேண்டிய உறவு, அவளின் கண்ணீரில், இதயத்தைக் கொன்று ஏறியது..
வலித்தது.. மிக மிக வலித்தது.. பெண்களுக்கு வலி என்ன புதிதா? அனுபவித்தாள்.. இதையும் கடந்து வெளியே செல்லுவோம் என தனக்குள்ளேயே உருப்போட்டுக் கொண்டு இந்த வலியையும் அனுபவித்தாள்..
“பொண்ணு நெத்தியில குங்குமம் வைங்கோ” என்ற ஐயரின் வார்த்தையில், தன்னருகில் தன் சரிபாதியாக இருப்பவளை தோளோடு அணைத்தவாறே, தன் வலது கரத்தினால் உச்சி வகுட்டில் குங்குமம் வைத்தவனின் விழிகளும்,
தான் காதலித்தவனின் அண்ணனையே மணந்து, தன் இதயத்தை யாரோ பிடுங்கி எடுத்தாற் போன்று வலியை அனுபவித்துக் கொண்டிருந்தவளின் விழிகளும் ஒன்றொடோன்று உரசிட,
என்ன நினைத்தாளோ? பேதையவள்.. அவனின் கண்களை நேருக்கு நேராக பார்த்தாள்..
அவளின் கண்களில் ஒரு வித வைராக்கியம் பிறந்தது.. நீ தானே என் காதலை பிரித்தாய்? நீதானே என் காதல் பிரிவதற்கு ஒரு காரணம்? என நினைத்துக் கொண்டே,
“நானும் உங்க தம்பியும் இரண்டு வருஷமா காதலிச்சோம்” என மனதில் உள்ளதை அப்படியே சொன்னாள்.. அவனை தவிர மற்றவர்கள் யாரும் காதிலும் விழாதபடி..
அதைக் கேட்டவனின் விழிகள் அதிர்ச்சியில் அகல விரிந்தது..
Thali kattraduku munnadi solli irrukalam