அந்த ஐந்து நட்சத்திர விடுதியினுள் நுழைந்த மகிழுந்து விடுதியின் வாசலில் நிற்க அதிலிருந்து இறங்கினான் அந்த ஆறடி ஆண் மகன்..
அவன் இந்திர தனுஷ்..
பல நாட்களாய் மழிக்கப்படாத அடர்ந்த தாடியும் மீசையும் கண்களில் ஏதோ ஒரு வித ஆத்திரமும் சோகமும் கோபமும் கலந்திருக்க உயிர்ப்பில்லாத ரௌத்ர விழிகளோடு கண் முன்னே வருபவர்களை எரிப்பது போல் கூர்ந்து பார்த்தபடி இறங்கியவனை தேடி அந்த விடுதியின் பணியாளர் ஒருவர் ஓடி வந்து வணக்கம் வைத்தார்..
“வெல்கம் சார்..”
தன் வாழ்வில் இழக்க கூடாத எதையோ தொலைத்துவிட்ட அதீத விரக்தி அவன் கண்களில்.. முகத்தில் ஒரு வித இறுக்கமும் சோகமும் கலந்து மொத்தத்தில் பார்ப்பவர்கள் கோவக்காரன் முசுடு முரடன் என்று சொல்வது போல் அமைந்திருந்தது அவன் உருவம்..
அழுத்தமான விழிகளுடனே அவர் பக்கம் திரும்பி பார்த்தவன் மெல்ல தலையை அசைத்து விட்டு விடுதியினுள் போக எத்தனித்த நேரம் ஒரு சிறிய குழந்தையின் சிரிப்பொலியும் அதன் நடையை எதிரொலிக்கும் கொலுசொலியும் அவன் கவனத்தை ஈர்க்க சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தான்..
அந்த விடுதியின் பூங்காவில் இருந்து இரண்டு வயதே ஆன குழந்தை ஒன்று சிரித்துக் கொண்டே வெளியே ஓடி வர அதன் பின்னே ஒரு பெண்மணி “சக்திமா.. நில்லுடா ஓடாத..” என்று அந்த குழந்தையை பிடிக்க அதன் பின்னே ஓடி வந்து கொண்டிருந்தாள்..
கலகலவென சிரித்தபடி ஓடி வந்த அந்த பச்சிளம் குழந்தையை பார்த்த நொடி அவன் முகத்தில் இருந்த இறுக்கம் சற்றே தளர்ந்து இதழில் ஒரு மெல்லிய புன்னகை பூத்திருந்தது..
“சத்தி பை பை போதேன்..”
தத்தக்கா பித்தக்காவென்று காலடியை மாறி மாறி வைத்தபடி ஓடி வந்த அந்த குட்டி தேவதையை வந்த வேலையை மறந்து கண்களில் கனிவோடு இதழில் ஒரு அழகான முறுவலோடு பார்த்து ரசித்து கொண்டு இருந்தான் இந்தர்..
அதே சமயம் அந்த வளாகத்தின் உள்ளே ஒரு மகிழுந்து வேகமாய் சீறிக்கொண்டு நுழைய அதை கண்டவன் உயிரும் உடலும் மனமும் ஒருங்கே நடுங்கித் தான் போனது..
அந்தக் குழந்தை அந்த வண்டி வந்து கொண்டிருந்த பாதையை நோக்கி குதூகலமாய் சிரித்தபடி அந்த பெண்ணின் கையில் அகப்பட்டு விடக்கூடாது என்று வேகமாய் ஓடி வந்திருக்க அவன் இதயமோ ஒரு நொடி நின்று துடித்தது..
அந்த வண்டி அந்த குழந்தைக்கு மிக அருகில் நெருங்கி இருந்தது..
ஆனால் அந்த மழலை மொட்டு அதை கவனிக்காமல் உற்சாகத்தோடு குஷியாக இன்னும் வேகமாய் அந்த மகிழுந்துவை பாராமல் அந்த பாதையை நோக்கி முன்னேற ஒரு நொடி ஆடித்தான் போனான் அதை கண்ணுற்ற அந்த அழுத்தக்காரனும்..
அதற்கு மேல் ஒரு நொடியும் தாமதிக்காமல் நாலு கால் பாய்ச்சலில் அந்த வண்டிக்கு முன்னால் ஓடி சென்றவன் கண்ணிமைக்கும் நேரத்தில் சரியாக குழந்தை வண்டியில் அகப்பட இருந்த நேரம் தரையில் இருந்து குழந்தையை அள்ளி தன்னோடு இறுக்கிக் கொண்டு அந்த குட்டி பெண்ணை அணைத்த படி அந்த பாதையின் பக்கவாட்டில் பாய்ந்து விழுந்திருந்தான்..
அந்த பிஞ்சு குழந்தையின் பின்னே ஓடிவந்த பெண்மணியோ அந்த காட்சியை பார்த்தபடி நெஞ்சில் கை வைத்து அப்படியே உறைந்து நின்று விட்டாள்..
அங்கு நடந்த அதிரடி நிகழ்வில் பயந்து போய் வீல்வீல் என கதறிக் கொண்டிருந்தது அந்த குழந்தை..
அவனோ அந்த குழந்தையை இன்னும் இறுக்கி அணைத்து வருடியபடி அந்த இடத்தில் இருந்து எழுந்தவன் “ஒன்னும் இல்லடா.. ஒன்னும் இல்ல சக்திமா..” என்று சமாதானப்படுத்த அவன் குரல் அழுது கொண்டிருந்த குழந்தையிடம் என்ன மாயம் செய்ததோ..
ஏதோ ஒரு மின்விசையை இயக்கி அழுகையை நிறுத்தியது போல் சட்டென அவளின் அழுகை நின்று கன்னத்தில் வடிந்திருந்த கண்ணீர் கோடுகளுடனே பெரிதாய் இதழ்விரித்தாள் அந்தச் சுட்டிப் பெண்..
அவனோ அந்த பால்பற்களின் முல்லை சிரிப்பில் தன் இதயத்தையே தொலைத்து நின்றான்..
சட்டென அவன் கன்னத்தில் அந்தச் சுட்டி தன்சிறு முகை இதழை பதித்து “அவ்வா” என்று மழலை மொழி சாரலை வீசிய படி தன் அன்பை வெளிப்படுத்த அவனுக்கோ அந்த நொடி அவனுக்குள் என்ன நிகழ்ந்தது என்றே விளங்கிக்கொள்ள முடியவில்லை.. தனக்குள் ஏதோ ஒன்று நெகிழ்ந்து உருகுவது போன்ற ஒரு உயிர் தீண்டலை உணர்ந்திருந்தான் அந்த நேரம்..
அந்த சிறுபிள்ளையின் முகத்தை கண்ணிமைக்காமல் விழியது அலைபாய பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு உள்ளுக்குள் சொல்ல முடியாத ஏதோ ஒரு ஆனந்த நிலை..
இந்த உலகத்தில் பெரிய அரிய பொக்கிஷத்தை தன் கையில் சுமந்து இருப்பதாய் உணர்ந்தான் அக்கணம்..
குழவியின் நெற்றியில் வாஞ்சையாய் முத்தமிட்டான் அவன்.. அந்த பெண் மகவோடு தனக்கு ஏதோ பல ஜென்ம பிணைப்பும் பந்தமும் இருப்பதாய் உணர்ந்தான் அவன்..
“அழகு குட்டி.. இப்படித்தான் ஓடி வருவீங்களா செல்லம்? இத்தனை நேரம் அந்த வண்டி இடிச்சிருந்தா பாப்பாக்கு அடி பட்டிருக்கும் இல்ல?”
சற்றுமுன் அவன் முகத்தை பார்த்தவர்கள் இப்போது பேசுவது அவன் தானா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு மென்மை குடிகொண்டிருந்தது அவன் வார்த்தைகளில்..
இப்படி உணர்வுகளின் பிடியில் அவன் சிக்கி தவித்துக் கொண்டிருந்த நேரம் அந்தக் குழந்தையை துரத்திக் கொண்டு ஓடி வந்த பெண் ஒரு நிம்மதி பெருமூச்சோடு அவன் அருகில் வந்து “தேங்க்யூ சார்.. தேங்க்யூ சோ மச்.. ஒரு நிமிஷம் எனக்கு உயிரே போயிடுச்சு தெரியுமா? என்னடா சக்தி? இப்படி பண்ணிட்ட.. உனக்கு ஏதாவது ஆகியிருந்தா உங்க அம்மாக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்..?”
அவள் பேசிக் கொண்டே அந்த குழந்தையை வாங்குவதற்கு கையை நீட்ட அவ்வளவு நேரம் அந்த பிஞ்சு முகத்தை பார்த்து மலர்ந்திருந்த அவன் முகம் அந்த பெண்ணின் பக்கம் திரும்பியதும் ஏகத்துக்கும் இறுகிப்போய் இருந்தது கோபத்தில்..
“உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? நீங்க இவளோட அம்மா இல்லையா? உங்களை மாதிரி ஒரு இர்ரெஸ்பான்சிபில் பெர்சன் கிட்ட இந்த மாதிரி ஒரு அழகான பூவை கொடுத்து பார்த்துக்க சொன்ன அந்த அதிமேதாவி யாரு?”
“ஐயோ சார்.. என் பாஸ் குழந்தை சார் இவ.. அவங்களுக்கு மீட்டிங் இருக்கிறதுனால அந்த ரூம்ல வச்சுக்க முடியாதுன்னு மீட்டிங் முடியற வரைக்கும் நான் இவளை பார்த்துக்கலாம்னு இங்க லான்ல விளையாட்டு காட்ட வந்தேன்.. ரெண்டு பேரும் பால் விளையாடிட்டு இருந்தோம்.. பாலை போய் எடுத்துட்டு வரதுக்குள்ள இந்த மாதிரி பண்ணிட்டா..”
“சும்மா காரணம் சொல்லாதீங்க.. உங்க கிட்ட இந்த குழந்தையை கொடுக்க முடியாது.. முதல்ல இவங்க அம்மா கிட்ட நாலு கேள்வி கேட்டுட்டு அப்புறம் தான் பிள்ளையை ஹேண்டோவர் பண்ணுவேன்.. உலகத்துல குழந்தை இல்லன்னு எத்தனையோ பேரு கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க.. அவங்களுக்கு எல்லாம் கொடுக்காம உங்களை மாதிரி பொறுப்பில்லாதவங்களுக்கு குழந்தையை கொடுக்கிறாரே அந்த கடவுள்.. அவரை சொல்லணும்..”
அந்த பெண்ணிடம் ஏகத்துக்கும் எரிந்து விழுந்தவன் “முதல்ல உங்க பாஸ் எங்க இருக்காங்க.. சொல்லுங்க..” அதிகார தோரணையோடு கேட்டான் அவளிடம்..
“அவங்க மீட்டிங் ரூம்ல இருக்காங்க சார்..”
“அந்த ரூமுக்கு என்னை கூட்டிட்டு போங்க..”
அவன் முன்னே கையை காண்பிக்க அவளும் அவனை சிறிது அச்சத்தோடு பார்த்துக் கொண்டே அந்த அறையை நோக்கி நடந்தாள்..
அறையின் முன்னே வந்து நின்றவன் புருவம் சுருங்க யோசனையோடு பார்த்தான் அந்த அறையை..
“ம்ம்.. நான் சம்யுக்தா மேடமை மீட் பண்ண வேண்டிய ரூம் ஆச்சே இது.. சம்யுக்தா மேடம் ரொம்ப வயசானவங்களாச்சே.. அவங்களுக்கு நிச்சயமா ரெண்டு வயசுக்குள்ள குழந்தை இருக்க முடியாது..”
இப்படி யோசித்தவன் அவள் பக்கம் திரும்பி “சம்யுக்தா மேடம் தான இங்க..” என்று இழுக்க..
“இல்ல சார்.. சம்யுக்தா மேடம் வரல.. சம்யுக்தா ஆர்ச்சரி அகாடமி இன்சார்ஜ் மிஸ்.வில்விழி மேடம் தான் வந்திருக்காங்க.. சக்தி அவங்களோட குழந்தை தான் சார்..”
“ஓ.. ஆனா சம்யுக்தா மேடம் தானே என்னை மீட் பண்ணறதா இருந்தது..”
“ஆமா சார்.. ஆனா அங்க ஒரு ஈவன்ட் இருந்ததுனால அவங்களால வர முடியல.. உங்களுக்கு மெயில் பண்ணி இருந்தோமே..”
சட்டென தன் சட்டை பையில் இருந்து கைபேசியை எடுத்து பார்த்தவன் “ப்ச்.. மெயில் அனுப்பி இருக்காங்க.. நான் தான் மிஸ் பண்ணிட்டேன்..” என்றவன் அந்த அறை கதவை மெல்ல தட்டி விட்டு உள் நுழைந்தான்..
குழந்தை அவன் கன்னத்தில் இருந்த தாடியை கைவிரலால் வருடி “அவ்வு.. அவ்வா.. சத்தி அவ்வா..” என்று சொல்லிக் கொண்டே வர அதன் மழலை மொழியில் அவன் கவனம் முழுவதும் இருக்க உள்ளே வந்த பிறகுதான் எதிரில் அமர்ந்திருந்தவள் யார் என்று நிமிர்ந்து பார்த்தபடி “மிஸ். வில்விழி..” என்றவன் அப்படியே அதிர்ந்து போனான் அங்கே அமர்ந்திருந்தவளை கண்டு..
தான் காண்பது உண்மைதானா..? கண் எதிரில் இருக்கும் பிம்பம் அவளுக்கு சொந்தமானது தானா? ஒருவேளை தன் கண்கள் தன்னை ஏமாற்றுகின்றதோ? என்ற சந்தேகத்தில் கண்களை கசக்கி மறுபடியும் பார்த்தவனால் தன் விழிகளையே நம்ப முடியவில்லை..
யாரை இறுதிவரை பார்க்கவே மாட்டோமோ என்று நினைத்து மூன்று வருடங்களாக உருகி அவள் நினைவில் மறுகி அந்தப் பிரிவு துயரில் உருகுலைந்து போய் இருந்தானோ அவளை மீண்டும் கண்ட நொடி வாடியிருந்த அவன் முகம் பிரகாசமாய் மலர்ந்திருந்தது.
“மலரு.. மலரு..” என்றவன் முகம் சுருக்கி அந்தப் பெண்ணின் பக்கம் திரும்பி “ஹலோ இவங்க மலர்விழி.. நீங்க என்ன இவங்க பேரை தப்பா சொல்றீங்க..?” என்று கேட்க மலர்விழி என்று அவனால் அழைக்கப்பட்டவளோ முகத்தில் சிறு அதிர்வும் இல்லாமல் “வாங்க மிஸ்டர் இந்திர தனுஷ்.. அவங்க தப்பா சொல்லல.. நீங்க சொல்ற பேர்ல இப்ப இங்க யாரும் இல்ல.. என் பெயர் மிஸ்.வில்விழி பரிமேலழகர்.. அந்த மலர்விழி செத்துப் போய் ரொம்ப நாளாச்சு..”
சிறு தடுமாற்றமும் இல்லாத ஆளுமை நிறைந்த குரலில் அவள் சொல்லி இருக்க அவள் பதிலில் ஒரு நொடி அதிர்ந்தாலும் அடுத்த நொடியே எப்போதும் அவன் கண்களில் குடி கொண்டிருக்கும் திமிரும் தீர்க்கமும் மறுபடியும் ஓடி வந்து ஒட்டிக் கொண்டது..
இதழ் ஓரமாய் இறுமாப்போடு ஏளன புன்னகை சிந்தியவன் “அது எப்படி நீங்க மிஸ் ஆக முடியும்..? எப்போவுமே என்கிட்ட இருந்து நீங்க மிஸ் ஆகவே முடியாது.. ஏன்னா உங்க பேரு மலர்விழியோ இல்ல வில்விழியோ.. சட்டப்படி நீங்க இன்னும் என் மனைவிதான்.. அதனால நீங்க வில்விழியா மாறி இருந்தாலும் இப்போவும் சரி இனிமேலும் சரி மிஸஸ்.இந்திரதனுஷா மட்டும் தான் இருப்பீங்க.. இதுவரைக்கும் இதுல எந்த மாற்றமும் இல்லை.. இனிமேலும் வராது.. என்ன மிஸஸ்.இந்திரதனுஷ்.. நான் சொல்றது சரிதானே?”
அவன் கேட்கவும் இப்போது அதிர்வது அவள் முறையானது.. முகம் முழுக்க
கோவத்தோடு அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் வில்விழியாய் மாறி இருந்த மலர்விழி..