நெஞ்சம் – 1௦
மறுநாள் காலை உற்சாகமாக எழுந்த மலர், பால் எடுக்க போகும் போது வழக்கமாக இருட்டில் அவன் அமரும் இடத்தை கண்களால் துழாவிக் கொண்டே சென்றாள். அவன் இருப்பான் என்று நம்பியவளுக்கு முழு ஏமாற்றம். அதன் பின்னரும் அவள் கண்ணிலேயே படவில்லை அவன். ஜனனி வந்து காபி, டிபன் எல்லாம் அரவிந்தின் அறைக்கே எடுத்து சென்றாள். அவன் ஜனனியிடம் சொன்ன கதையை அவள் மலரிடம் சொன்னாள். ஆபிஸ் வேலையில் ஏதோ பிரச்சனையாம், ஆபிஸ் போக போறானாம். கிளம்பிட்டு இருக்கான் என்றாள்.
“ஐயோ அக்கா, நான் இன்னும் மதிய சாப்பாட்டுக்கு எதுவுமே செய்யலையே?” பதறினாள் மலர்.
“அவன் என்ன ஸ்கூல் பிள்ளையா? அவன் எப்போதும் எடுத்திட்டு போக மாட்டான்…. நீ பொறுமையா சமையல் செய்” என்றபடி சிரித்துவிட்டு போனாள் ஜனனி.
தன் கவனத்தை கொஞ்சம் வாயில் கதவிலேயே வைத்து இருந்தாள் மலர். அதே போல் அவன் வெளியேறும் நேரம் சரியாக அவள் கவனித்து விட, கதவை சாத்தும் சாக்கில் அவனிடம் போனாள். அவள் வருகிறாள் என்று தெரிந்தது அர்விந்திற்கு,ஆனால் கொஞ்சம் கூட திரும்பாமல் வெளியே சென்றுவிட்டான். என் கண்ணை பார்த்து பேசணும்னு சொல்றவர் இப்படி பார்க்காமலே போறாரே! அவ்ளோ டென்ஷனா என்று அவனுக்காக வருந்தியபடி தன் வேலையை பார்க்க போனாள் மலர்.
காரில் ஏறி அமர்ந்தவன், பெருமூச்சு ஒன்றை விட்டான். திரும்பிக் கூட பார்க்காமல் வந்துவிட்டானே தவிர, அது அவனுக்கு சுலபமாக இல்லை. அதுவும் மலரின் முகம் என்னவெல்லாம் ரியாக்ஷன் காட்டும் என்பது வரை அவனுக்கு தோன்ற, மிகவும் கடினப்பட்டு தான் வந்தான்.
அன்று இரவு அவன் வீட்டிற்கே வரவில்லை. வேலை நிறைய, நான் ஆபீஸ்லே இருந்து கொள்கிறேன் என்று தகவல் சொல்லிவிட்டான் வீட்டிற்கு. மற்றவர்களுக்கு இதெல்லாம் பழக்கம் என்பதால் அவர்கள் ஒன்றும் கண்டுகொள்ள வில்லை. இது எதுவும் தெரியாத மலர், ஜனனியிடம் கேள்வியாய் கேட்டாள்.
“அங்கேயே எப்படி கா இருப்பாங்க? படுக்க இடம் இருக்குமா?”
“ரெஸ்ட் எடுக்க இடம் இருக்கும் டா, வேலை இருக்கும் போது படுக்க ஏன் போறாங்க? முழுசா ஆபீசலே இருக்க மாட்டான், பக்கத்தில பிரண்ட்ஸ் இருந்தா அங்க போய்டுவாங்க, ரொம்ப லேட்டா வீட்டுக்கு வர வேண்டாம் நினைப்பான் அர்விந்த் எப்போதும்” என்றாள் ஜனனி.
“அப்போ நாளைக்கு காலையிலே நீங்க ஊருக்கும் கிளம்பும் போது வழியனுப்ப கூட வரமாட்டங்களா?”
“வேலை இருக்குனா நாம அதெல்லாம் எதிர்பார்க்க கூடாது மா. எனக்கு அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை, நானே கிளம்பிடுவேன்!”
ஜனனி மேடம், மலர் மேடமுக்கு உங்களை பத்தி கவலை இல்லை! அவங்க கவலை எல்லாம் வேற இடத்தில!
ஜனனியும் கிளம்பி செல்ல, இரண்டு நாள் வீட்டு பக்கமே வரவில்லை அர்விந்த். மலருக்கு இப்போது பெரிதாக வேலையே இல்லாது போல் இருந்தது. அவள் பெங்களூர் வந்து பதினைந்து நாட்கள் ஆகி இருந்தது. வேலை நிறைய இருந்த போது கூட அவளுக்கு அவளின் வீட்டு நியாபகம் இல்லை. இப்போது அவள் வீட்டினர் நியாபகமாகவே இருந்தது. ஒரு மாசம் கூட ஆகாமல் எப்படி லீவ் கேட்பது? அர்விந்த் வீட்டிற்கு வரமாட்டனா? வெறும் இரு வாரங்களில் தன் வாழ்வில் இத்தனை மாற்றமா? இதெல்லாம் நடந்ததா இல்லை என் கற்பனையா? பல கேள்விகள், எண்ணங்களுடன் சுற்றி கொண்டு இருந்தாள் மலர்.
மூன்றாம் நாள் வீடு வந்தவன், வரும் போதே கையோடு நிவேதாவை அழைத்து வந்தான். அவன் வந்து விட்டான் என்று ஆவலாக அவனை காண வந்தவள், நிவி என்ற பெயரை கேட்டவுடன் அப்படியே பனிக்கட்டி போல் உறைந்து நின்றாள்.
மலர், மலர் என்ற தியாகுவின் குரலில் தெளிந்தவள்,
“டீ போட்டுட்டு வாம்மா, நம்ம வீட்டு மருமக வந்திருக்கு” என்றார்.
டீ போட்டு எடுத்து சென்றவள், டீபாயில் வைத்து விட்டு யார் முகத்தையும் நிமிர்ந்தும் பாராமல் அங்கிருந்து நகர பார்த்தாள். அவளை நிற்க சொன்ன தியாகு,
நிவேதாவிடம், “எங்க கார்டியன் ஏஞ்சல்” என்றார். இவள் இல்லையென்றால் மிகவும் கஷ்டம் என்றெல்லாம் கூறினார். அவரின் நல்ல மனது அவளை அழ வைத்து விடும் போல் இருக்க, “போதும் சார், பாவம் அவங்க” என்று சொல்லிவிட்டு அர்விந்த், நிவேதா முகத்தை கூட பார்க்காமல், அவர்களுடைய கால்களை மட்டும் பார்த்து விட்டு நகர்ந்தாள்.
டின்னர் ஏற்பாடு செய்ய சொன்னார் அருணா மருமகளுக்கு. கிட்சனில் வந்து சேர் போட்டு கொண்டு அவர் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல, அதை கண்ட அர்விந்த் வேகமாக வந்தான்.
“அம்மா நீங்க வாங்க, மலரே நல்லா தான் செய்வா! நிவேதா ஒன்னும் கெஸ்ட் இல்லை, வாங்க” என்று அவரை அழைத்து போய் விட்டான்.
மலரா? வந்த நாளில் இருந்து விழி என்று அழைத்து விட்டு, இப்போது மலரா? கண்ணை கரித்து கொண்டு வந்தது அவளுக்கு. சில விஷயம் சரியாக புரியாவிட்டாலும் சிலது புரிந்தது அவளுக்கு. அவன் மலரிடம் இருந்து தள்ளி இருக்க நினைக்கிறான்! கடந்து போன முதல் பத்து நாட்கள் போல் அவன் இருக்க விரும்பவில்லை என்று புரிந்துக் கொண்டாள். அன்றைய அவனின் ஒதுக்கத்திற்கு பிறகு அவள் அவன் முகத்தை கூட இன்று பார்க்கவில்லை, அதே போல் இனி வரும் நாட்களில் இருந்து விடுவோம் என்றவாறு டிபன் தயார் செய்தாள்.
அவர்கள் அனைவரும் சாப்பிட அமர, யார் முகத்தையும் பாராமல், அவர்கள் தட்டை மட்டும் பார்த்து கேட்டு பரிமாறி விட்டு வேலையை முடித்தாள் மலர்.
அவள் கடமையே என்று இருப்பதை கண்ட அர்விந்திற்கு நெஞ்சை பிசைந்தது. இதற்கு முன்னான அவர்கள் வீட்டு டின்னர் டைம் நியாபகம் வந்தது. விழி வந்ததில் இருந்து அவளை வம்பு பண்ணி அனைவரையும் சிரிக்க வைப்பான் அவன். இன்று அங்கே கொஞ்சமும் கலாட்டா இல்லை, சத்தம் இல்லை. மெல்லிய பேச்சு மட்டுமே இருந்தது. நிவேதா இவனுடன் மட்டும் பேசினாள், தியாகு அவளிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னாள். அவ்வப்போது அருணாவை பார்த்து பார்த்து புன்னகைத்தாள்.
அதை விட முக்கியமாக, மலரை கண்டுகொள்ளாதது போல் ஒதுங்கி செல்வதே அர்விந்திற்கு கஷ்டமாக இருந்தது, இன்று மலர் தன்னை சுத்தமாக ஒதுக்குவது புரிய, எரிச்சலாக இருந்தது அவனுக்கு.
நிவேதா விடைபெறும் நேரம், கொல்லை புறம் சென்று விட்டாள் மலர். மூச்சு முட்டுவது போல் இருக்க, வெளியில் சற்று காற்று வாங்கினால் நன்றாக இருக்கும் என்று போய் விட்டாள். அவள் செல்வதை கவனித்தான் அர்விந்த். நான் ஒதுங்கி போவதில் ஒரு விஷயம் இருக்கு, இவ ஏன் இப்படி பண்றா? இப்போ யார் இவளை என்ன பண்ணா? புசுபுசுவென்று கோபம் பெருகியது. ஆனாலும் கல்லுளிமங்கனாகவே அவளிடம் எதையும் கேட்காமல் அவன் அறைக்குள் சென்றான்.
அடுத்த இரு வாரங்கள் ஆமை வேகத்தில் ஓடியது மலருக்கு. அர்விந்த் ரொம்ப மெனக்கெட தேவையில்லாமல் வேலையில் பிசியானான். காலை கிளம்பி செல்பவன் இரவு கண்ட நேரத்தில் வருவான். காலை மட்டும் உண்ண வருபவனை பார்க்கவோ, அவன் கண்ணில் படவோ மலரே விரும்பவில்லை என்பதால் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு போய் விடுவாள். இரவு சாப்பாடு என்று ஒன்று வீட்டில் இல்லவே இல்லை அவனுக்கு அதனால் ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் பார்த்து கொள்வதில்லை. அவனை பார்ப்பது தான் இல்லையே தவிர அவனின் நடமாட்டம் தெரியும் அவளுக்கு. இரவு முடிந்தவரை அவன் வரும் வரை உறங்காமல் தான் இருப்பாள் மலர். மீறி உறங்கிவிட்டாலும் கதவு சத்தம் கேட்டால் முழித்து விடுவாள். அந்த அளவிற்கு அவனின் நினைப்பாகவே இருந்தாள்.
ஒரு மாதம் ஆனதும், ஊருக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதை மீண்டும் அரிக்க ஆரம்பித்தது. கேட்கவும் சங்கடமாக இருந்தது, ஊருக்கு போக வேண்டாம் என்றும் நினைக்க முடியவில்லை. மூச்சு முட்டும் இந்த சூழ்நிலையில் இருந்து ஒரு மாற்றம் வேண்டும் என்றிருந்தது. இதே யோசனையாக இருந்தவளின் முகம் அவளின் குழப்பத்தை கண்டு அருணாவே கேட்டார்.
“என்னடா வீட்டு நியாபகமா?”
“ஆமா மா! ஒரு மாசம் ஆச்சுல, தங்கச்சி கூட அன்னைக்கு கேட்டா, வர முடியுமானு….”
“உனக்கு போகணுமா மா?”
“இல்லைனு பொய் சொல்ல மாட்டேன், அதே நேரம் உங்களை தனியா விட்டுட்டு போகவும் இஷ்டம் இல்லை மா….”
“போய்ட்டு வா, நான் சமாளிச்சுக்கிறேன்னு சொல்ல முடியாத நிலைமையில இருக்கேன் மா….” வருத்தமாக சொன்னார் அருணா.
“ஐயோ அம்மா, உங்க மேல ஒன்னும் குறை இல்லை, மூணு மாசம் வீட்டுக்கு போக முடியாதுனு தெரிஞ்சு தானே வந்தேன்…. சரி ஆயிடுவேன்மா….”
“ஸாரி மா!” அருணாவின் மென்மையான உள்ளம் மலருக்காக மிகவும் வருந்தியது.
“இப்படி எல்லாம் பேசாதீங்க மா, நான் லூசு மாதிரி உளறிட்டேன் உங்ககிட்ட, நீங்க பூரணமா ஆரோக்கியமாக ஆன அப்பறம் தான் நான் வீட்டுக்கு போவேன்! இப்போ போய் வேலையை பார்க்கிறேன்” என்று போனாள்.
அன்று அருணா அதை தியாகுவிடம் பகிர்ந்து கொள்ள, “ஆள் இல்லைனா எங்க அம்மாவுக்கு உதவி பண்றது கஷ்டம், இல்லைனா நாமளே எதாவது சமாளிச்சுக்கலாம்” என்றார்.
இருவருக்குமே அவள் சின்ன பெண் தானே, பாவம் என்ற வருத்தம் இருந்தது. அன்று நாளெல்லாம் எதாவது செய்து அவளை ஊருக்கு அனுப்பி வைக்கலாமா என்று சிந்தித்தார் தியாகு. அவருக்கு ஒரு யோசனை தோன்ற, அதை விசாரித்து தான் செய்ய வேண்டும் என்பதால் மகனிடமும் கூறலாம் என்று அவனை அழைத்தார்.
“ஹலோ, அர்விந்த் ப்ரீயா?”
“நீங்க சொல்லுங்க பா….”
“உன் சர்கிள்ல யாருக்காவது நல்ல கேர் டேக்கர்ஸ் ஏஜென்சி தெரிஞ்சா கேளுங்க பா, உடனே ஆள் அனுப்புற மாதிரி….”
“யாருக்கு? என்ன விஷயம்? என்ன பா? எனக்கும் ஒன்னும் புரியலை….”
“ஒ ஸாரி பா, நான் விஷயத்தை சொல்லலைல உன்கிட்ட, நமக்கு தான் பா! மலர் ஊருக்கு போகணுமாம், சின்ன பொண்ணு தானே….பாவம்…” என அப்போதும் மகனிடம் விஷயத்தை ஒழுங்காக சொல்ல வில்லை தியாகு.
தெளிவாக விடுமுறை போல் போக நினைக்கிறாள் என்று சொல்லாமல், அவர் போக வேண்டுமாம் என்று மட்டும் கூற, அர்விந்திற்கு கோபம் வந்து விட்டது.
“அவ இஷ்டத்துக்கு சொல்வாளா? வரும் போதே தெரியாதா?”
“டேய், விடுடா, சின்ன பொண்ணு….”
“இதெல்லாம் கொஞ்சம் ஓவர் பா….” அப்பாவும் பிள்ளையும் ரொம்ப தெளிவாக பேசிக்கொண்டனர்!!
அன்று மாலை வரை அவன் ஆத்திரம் குறையாமல், அவளை பார்த்து நன்றாக திட்ட வேண்டும் என்று தோன்ற, இன்று கொஞ்சம் சீக்கிரம் அலுவலகத்தில் இருந்து கிளம்பினான். இரவு தாமதமாக வரும் போதெல்லாம் தானே கதவை திறந்து கொண்டு வருபவன், இன்று சாவி இருந்து காலிங்பெல் அடித்து கொண்டு நின்றான்.
யாரோ வந்திருக்கிறார்கள் போல் என்று இயல்பாக கதவை திறந்தவளின் முகம் அவனை கண்டதும், இவனா இந்நேரத்திலா என்பது போல் அதிர்ச்சியை காட்டியது, அவனை கண்ட அதே வேகத்தில், இவன் முகத்திலே விழிக்க கூடாது என்பது போல் தரையை பார்த்தவாறு நின்று அவனுக்கு வழி விட்டாள் மலர்.
அத்தனை நாளாக அவளின் ஒதுக்கமும் அவனுக்கு எரிச்சல் தானே தந்திருந்தது… அதோடு இன்று ஆத்திரமும் சேர, வார்த்தைகளை கொட்டினான் அர்விந்த்.
“ஒரு வேலையை ஒத்துகிட்டு வந்தா, அதில என்ன கஷ்ட நஷ்டம் வந்தாலும் செய்யணும்! உன் இஷடத்துக்கு, மனசு சொல்ற மாதிரி எல்லாம் நடந்துக்க முடியாது. நீ நினைச்சா ஊருக்கே போறேன்னு சொல்றதை எல்லாம் இங்க ஒத்துக்க முடியாது. கொஞ்சம் கூட மனிதாபிமானம் வேண்டாம்?”
திடீரென்று அவன் படபடவென திட்ட ஆரம்பிக்க அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அவனின் குற்றசாட்டில் உண்மை இல்லை என்பதால்,
“நீங்க தான் சார் உங்க இஷ்டத்துக்கு நடந்துக்கிறீங்க! நான் இல்லை…. வந்த இத்தனை நாளில் என் வேலையிலோ என் நடத்தையிலோ எதாவது குறை, தப்பு இருக்குனு சுட்டிக் காட்டுங்க, பார்போம்! என்று நிமிர்வாக சொன்னவள்,
“ஆனா நீங்க தான் திடீர்னு கோபப்படுவீங்க, நினைச்சா அன்பும் அக்கறையும் காட்டுவீங்க, வேணாம்னா மொத்தமாக உதாசீனம் செய்வீங்க, இப்போ அநியாயமா குற்றமும் சொல்றீங்க! யாருக்கு மனிதாபிமானம் இல்லைனு யோசிங்க!” என்று அவனுக்கு வேகமாக பதில் கொடுத்தாள். கொடுத்ததோடு அங்கிருந்து வேகமாக நகர போனாள் மலர். அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் அவள் கையை அவன் பிடிக்க, இத்தனை நாள் அவளின் உதாசீனம் கொடுத்த வலியில், அதை அவனுக்கு காட்டிவிடும் வேகத்தில்,
“என் கையை விடுங்க சார், இரண்டு வாரம் முன்னாடி இருந்த அரவிந்த் சார்னா அவர்கிட்ட நான் தப்பே பண்ணலைனாலும் பணிஞ்சு போவேன், ஏன்னா அவர் கோபப்பட்டாலும் என் மேல அக்கறையா இருப்பார். இப்போ இருக்க உங்களுக்கு என்னை கேள்வி கேட்கவோ, திட்டவோ எந்த உரிமையும் இல்லை. எதுனாலும் நான் பெரிய சார் கிட்டே பேசிக்கிறேன் என்றவள் கொஞ்சமும் யோசிக்காமல் அவன் கையை எடுத்து விட்டு நகர்ந்தாள்!