இன்னும் அவன் பார்வை குளத்து நண்டு மாதிரி ஊறிய பிரம்மை வந்துட்டு போவ, தேய்த்துவிட்டாள் குறுகுறுத்த இடமெல்லாம்.
அமுதா வாய்க்கு வாய் சொன்னபடி அவிழ்த்துவிட்ட கழுதை மாதிரி நேரம் கெட்ட நேரத்தில் வயல் வரப்பில் சுத்துவாள் செவ்வந்தி.
பாலை ஒவ்வொரு இடத்துக்கும் ஊற்றிவிட்டு காலி கேனை கருப்புச்சாமி வயலில் இருக்க சாலையில் கழுவி கமுத்தி வைப்பாள்.
அவன் சொன்ன வேலையை செய்யும் செவ்வந்தி கையோடு களையோடு கீரையை பிடுங்கி வாய்க்கால் கடைசி மடையில் வீசுவாள். வேலை முடிய பிடுங்கிய கீரைகளை சுத்தம் பண்ணி வகைக்கு தனியா கட்டுப்போட்டு டீ கடையில் ஓரமாய் வைத்துவிட்டு வீடு வந்து சேருவாள்.
வீட்டுக்கு ஒதுங்கும் ஐந்து நாள் தவிர்த்து நாள் தவறாது வயல் வேலைக்கு வருவாள்.
மதியம் கருப்புச்சாமி காடை, புறா வாத்து, மீனு கோழின்னு எதையாவது பிடித்து வர, அவன் ருசிக்கு தக்க காரசாரமாய் வறுத்துக் கொடுக்கணும். ராமாயி தன் கையால் வடித்த சோறும், மிளகு ரசமும் கொடுத்தனுப்புவார்.
கருப்புச்சாமி இந்தா புள்ள நீயும் கொஞ்சம் தின்னுன்னு சொல்லும் கஷ்டத்தை அவள் தரமாட்டாள். ஆக்கியதில் தனக்கும் ஒரு பங்கை வட்டிலில் போட்டு ஓரமாய் உக்காந்து, கண்ணில் தண்ணீர் வழித்தோட, மூக்கை உறிஞ்சியவாறே தின்னு முடிப்பாள்.
வட்டிலை வழித்து நக்கியவாறே இன்னும் இருக்கா என சட்டியை திறந்து பாக்க போக, “கைய வச்ச தண்ணி தொட்டிக்குள்ள கல்ல கட்டி இறக்கிடுவேன். திருட்டு நாயே” கரண்டியால் அடிக்க வருவான்.
சம்பாதிச்ச பணத்தை பக்கத்துல இருக்க வங்கியில் பத்திரப்படுத்துவாள். இதுவே தினப்படி வேலைகள் அவளுக்கு.
‘சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி நல்லா இருந்த மச்சான நானே கெடுத்துப்புட்டேன். மூடிட்டு தவணியை கட்டிக்கிட்டு வேலை பாத்துருக்கணும். மீன் வாசம் அடிக்குமுன்னு அந்தாளு துண்டை எடுத்து எனக்கு நானே சூனியம் வச்சிட்டன்’
“செவ்வந்தி நில்லு புள்ள” டீ கடைக்கார கருணா கூப்பிடும் குரல் செவியில் கேக்கவே இல்லை அவளுக்கு. ஆளை துளைக்கும் பார்வை அவளை அக்கம் பக்கம் பார்க்க விடாமல் செய்தது.
கருணா கடையில் உட்கார்ந்து டீ குடித்த கண்ணப்பன் போகும் மகளை நம்ப முடியாம பார்த்தார். தான் பெத்த மவளா இப்படி அடக்க ஒடுக்கமா நடந்து போறது. “இல்ல இல்ல நம்ம பொண்ணா இருக்காது. அவ எம்புட்டு சூட்டிப்பா இருப்பா. இது சாது மாதிரி ரோட்டுல நவுந்து போகுது” கண்ணை கசக்கி பார்த்தவருக்கு தன் மகள் உருவம் தட்டுப்பட.
கருணாவுக்கும் அதே சந்தேகம் வர, நடக்கறது உண்மையா பொய்யா என அறிய வேண்டி தனக்கு ஒரு ஸ்பெஷல் டீ கொதிக்க கொதிக்க ஒரு டம்ளரில் ஊற்றினார். அதை கண்ணப்பன் கையில் சுருக்குன்னு சூடு பட வைக்க.
“என்ன கண்ணப்பா உன் மவ திரும்பி பாக்காம போறா. அதிசயமால்ல இருக்கு, உன் மவ வாய் பேசாம போறது” கடையில் ஆள் இல்லாத குறைக்கு கண்ணப்பனிடம் பேச உட்கார்ந்தார் கருணா.
“உடம்பு முடியாம இருக்கும் கருணா” மகள் அமைதி அவருக்கு கவலையை தந்தது.
‘யார்கிட்டயாவது பேச்சு வாங்கி கட்டியிருப்பாளோ. ராமாயி அத்த மருமவ சுலோச்சனா கொடுக்கியாச்சே. எம்புள்ளைய ஏதாச்சும் சொல்லியிருக்கட்டும் வீட்டு வாசல்ல நின்னு என்ன ஏதுன்னு கேட்டுப்புடனும். சோறு போட்டு வளத்தறது நானு. கண்ட நாய்ங்க வாயில விழணும்னு எம்பொண்ணுக்கு என்ன தலையெழுத்து’ மவகிட்ட விசாரிக்காம இதான் நடந்துருக்கும்னு முடிவுக்கு வந்தார் கண்ணப்பன்.
“ஊர்ல இருக்கவன்கிட்ட வம்பு பேசறேன் கண்ணப்பா. அதில உன்ற வீட்டு விஷயம் இருக்காது சாமி சத்தியமா சொல்லிட்டன். செவ்வந்தி புள்ள என் மக வயசு. அது பத்தி பொறணி பேசிடுவேன்னு நினைச்சா நம்ம பழக்கத்துக்கு மதிப்பில்லடா” கருணா டீயை குடித்தபடி சொன்னார்.
“டேய் எனக்கு தெரியாதா உன்னப் பத்தி. எனக்கும் இந்தப் புள்ள பத்தின யோசனதான் ஒடிட்டு இருக்கு” கண்ணப்பனுக்கு டீ தொண்டைக்குள்ளேயே நின்னது.
“கண்ணப்பா நீயும் நானும் இன்னிக்கு தேதியில பழகுன ஆளுன்னு நினைச்சு கதை அளக்காத. பாட்டன் காலத்துல இருந்து இந்த கடை இருக்கு, உன் வீட்டுல இருந்துதான் கடைக்கு பாலும் லிட்டர் கணக்குல வருது. உன்ன பத்துன அக்கற எங்கிட்ட இருக்க போய்த்தான் உக்காந்து பேசறேன் சொல்லிட்டேன்” கருணா விடவில்லை.
“நா ஒன்னு சொல்லுவன். வெட்டு வெடுக்குன்னு பேசிப்புடாத. இவன் சொன்னதுல விஷயம் இருக்கான்னு பாருடா. பொட்டப்புள்ள விஷயம் யாரும் சொல்லல இது வர. நானா அப்ப அப்ப சொல்ல நினப்பேன். எங்க உனக்கும் எனக்கும் பகையாகிப் போவுமோன்னு விட்டுட்டன்” கருணா பொடி போட்டு சொன்னார்.
கண்ணப்பனுக்கும் கருணா மீது நம்பிக்கை இருந்தது. அதனால் மறுத்து எதையும் சொல்லலை. வீட்டுல அமுதாகிட்ட எதையாவது பேசினா பயந்து போய் ஒரேயடியா வீட்டுல முடக்கிப் போடப் பார்ப்பா.
இளவரசன் பரமசாது அப்பாவி வேலைக்கு போவான் வருவான். வீண் பேச்சு பேசமாட்டான். மூச்சு விடணும் என்றால் கூட அவசியம் இருந்தால்தான் விடணும் என்ற கொள்கை அவனுக்கு. பேசினால் சக்திகள் விரயம் ஆகும் என்பான். செவ்வந்தி வாயை திறந்தால் உடனே காதில் ஹெட்போனை வைத்துக் கொள்வான்.
ஊருக்குள்ள கண்ணப்பனுக்கு இப்படி ஒரு பையன் இருப்பதே புதிதாய் குடிவந்த மக்களுக்கு தெரியாது.
செவ்வந்திக்கு கண்ணப்பனின் அம்மா செல்லாயி குணம். ஓட்டைப் பானைக்குள் நண்டு விட்ட மாதிரி லொட லொடன்னு அமுதாவை சண்டைக்கு இழுப்பாள்.
கண்ணப்பன் இருக்கும் நேரம் மட்டும் ஓரளவு வாய் அடங்கும். இல்லையா அவரையும் தூண்டிவிட்டு அமுதாவின் பிறந்த வீட்டைப் பத்தி நொட்டை சொல்ல ஆரம்பிப்பாள். பிறந்த வீட்டை குறை சொன்னால் அமுதாவுக்கு கோபம் வந்துவிடும். சோறு தண்ணி திங்காம கிடப்பா. கண்ணப்பன் கெஞ்சி உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார்.
சண்டையை ஆரம்பித்து வைத்தவளோ சுகவாசியாக சுத்துவாள்.
கருணாவிடம் மனசுவிட்டுப் பேச எத்தனித்தவர், “சொல்லுப்பா என்னன்னு. இந்தப் பிள்ளை முகத்தைப் பார்த்து டீ தண்ணி இறங்க மாட்டேங்குது தொண்டைக்குள்ள. என்னோட பைக்கு எங்க நின்னாலும் பார்த்த நேரத்துல அப்பனுதுதான்னு என்னை தேடுவா. உனக்கே தெரியுமே. யோவ் தகப்பா எங்கய்யா போனன்னு கேட்டு உன்ற கடையே சிரிப்பா சிரிக்குமே. இப்ப ரோட்டுக்கு கிட்டக்கவே வண்டி நிக்குது. பாக்காம போறா” கையில் இருந்த டம்ளரை அப்படியே குடிக்காம வைத்தார்.
“கண்ணப்பா உன் மககிட்ட சொல்லு. இனிக் களை வெட்ட போவ வேணாம்னு சொல்லி வை”
“என்னாச்சு கருணா. யாராவது பேசிட்டாங்களா?” பெத்த தகப்பனுக்கு மொத்த உடம்பும் ஆடிப்போனது. வயசுப்பொண்ணு தப்பான பேர் வாங்கிடக்கூடாதுன்னு மனசு பதறுச்சு.
“யாரும் எதுவும் பேசல கண்ணப்பா. எனக்கா தோணுச்சு. கருப்பன் இள வயசுப் பையன் முப்பது வயசாச்சு, உன் பொண்ணுக்கும் சின்ன வயசு பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருக்க வேண்டாம்னு நினைக்கறன். களை வெட்டற வேலைக்கு போனவ திரும்பி வர்ற நேரமா கண்ணப்பா இது?. என்னதான் பொண்ணு மேல நம்பிக்க இருந்தாலும் இப்படி நேரங்கெட்ட நேரத்துல வரது தப்பு. உக்கார வச்சுப் பேசு அவகிட்ட”
“எம் மவ தங்கமடா. நீ கண்டதையும் பேசாத” கண்ணப்பன் முகம் சுருங்கியது.
“உம் மவ தங்கம்தான்யா. என்ற கண்ணுக்கும் அப்படித்தான் தெரியுது. ஆனாக்கா ஊரு கண்ணுக்கு அப்படி தெரியுமுன்னு நினைக்கறயா?. ஊருதுன்னா பறக்குதுன்னு சொல்லுற கூட்டம்டா இதெல்லாம். அடுத்தவன் வீட்டுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்கலன்னா தூக்குல தூங்கிடுவானுங்க. அம்புட்டு வெறி வம்பு பேச”