11. நேசம் கூடிய நெஞ்சம்

4.9
(7)

நெஞ்சம் – 11

அவன் கையை உதறி விட்டு சென்றவளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. ஆனாலும் அவள் மேல் எந்த தப்பும் இல்லை என்பதாலும், அவளை சுத்தமாக கண்டுகொள்ளாமல் இருப்பவனுக்கு அவளை பற்றி பேச வேண்டிய தேவை இல்லை என்று தோன்றியதாலும் அவனிடம் துணிந்து பேசிவிட்டாள் மலர்.  நிச்சயம் ஆத்திரம் அடைந்து இருப்பான் என்று தான் நினைத்தாள். ஆனால் என்று அவள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறான் அர்விந்த்? கோபப்படுவான் என்று அவள் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக, அட, நம்ம சிங்கம் சிலிர்த்து எழுந்துடுச்சே…. என்று அவன் சிரித்து கொண்டு இருந்தான்.

அவள் பின்னேயே சென்றவன், “பேச்செல்லாம் நல்லா தான் பேசுற…. ஆனா இப்படி ஒரு மாசம் ஆன உடனே ஊருக்கு போறேன்னா என்ன அர்த்தம்? இன்னொரு ஆள் இப்போ உடனே எங்க தேடுறது? எங்க அம்மா பத்தி யோசிச்சியா?” என்றான் விஷ்வா.

அவனை முறைத்து பார்த்தவள், “ஒரு ரெண்டு நாள் லீவ் கூட உங்க வீட்டில வேலை செய்றவங்களுக்கு கொடுக்க மாட்டீங்களா சார்?”

“லீவ்வா….? ஆனா நீ போறேன் சொல்ற மாதிரி தான் அப்பா சொன்னார், வேற ஆள் எல்லாம் கூட தேடுறாரே?” குழம்பினான் அர்விந்த்.

“என்ன வேற ஆள் தேடுறீங்களா?” கேட்டவாறு அர்விந்த் கூப்பிட கூப்பிட நிற்காமல் வேகமாக அருணாவின் அறைக்கு சென்றாள் மலர்.

“ஏன்மா, நான் தான் ஊருக்கு போகலைனு உங்க கிட்ட சொல்லிட்டேனே, அப்பறமும் ஏன் வேற ஆள் தேடுறீங்க? நீங்க என் மேல அன்பா இருக்கீங்கனு தானே என் மனசில் இருக்கிறதை சொன்னேன்…. அது தப்புன்னா மன்னிச்சுடுங்க மா” என்றவள், அங்கேயே இருந்த தியாகுவிடமும், “மன்னிச்சுடுங்க சார்” என்றாள் கண் கலங்க.

“அச்சோ, என்ன மா? இப்போ என்ன ஆச்சு?” என்றனர் இருவரும் புரியாமல்.

மலரின் பின்னாலே வந்த தலைவர் தான் புரிந்துக் கொண்டதை சொல்ல, “ஐயோ” என்ற தியாகு நடந்ததை எல்லாம் கூறி, “பாவம் சின்ன பொண்ணு ஊருக்கு போய்ட்டு வரட்டுமேனு நாங்களா தான் ஆள் தேடினோம் அதுவும் ஒரு வாரத்துக்கு மாதிரி தான்டா” என கூற, மற்றவர்கள் என்ன உணர்வில் இருந்தார்களோ தெரியாது, ஆனால் மலர் நெகிழ்ந்து மனம் உருகி போனாள். நொடியும் தாமதிக்காமல் அவர்கள் இருவர் காலையும் தொட்டு வணங்கினாள்.

“ஹேய், என்னமா இதெல்லாம், சும்மா இரு” என்று தியாகு அதட்ட,

“உங்களை மாதிரி, அம்மா மாதிரி மனசு இருக்கவங்க ரொம்ப அபூர்வம் சார்!” என்றாள்.

“ஒரு வாரத்துக்கு எல்லாம் வேண்டாம், ஒரு மூணு நாள் போய்ட்டு வரட்டும், நாமளே சமாளிச்சுக்கலாம்” என்றான் அர்விந்த். இப்போது அருணா அவர் வேலைகளை அவரே பார்த்துகொள்கிறார். பாட்டிக்கு தான் ஆள் தேவை, மற்றும் சமையல். அனைவருக்கும் அது சரி என்பதால் அவளுக்கு திருவண்ணாமலை வரை பஸ்ஸில் டிக்கெட் போட்டான் அர்விந்த். அங்கு இருந்து அவளே போய் கொள்வேன், சர்ப்ரைஸாக இருக்கட்டும் வீட்டினருக்கு என்றாள் மலர். ஊருக்கு போவதற்கு முன் இங்கே அவர்களுக்கு ஓரளவுக்கு சமாளித்து கொள்ள தேவையான சமையல் செய்து வைத்து விட்டு கிளம்பினாள் மலர்.

அன்று அவளை பஸ் ஏற்றி விட அர்விந்த் தான் கிளம்பினான். இரவு ஒன்பது மணிக்கு பஸ். இருவர் மட்டும் என்பதால், காரில் பின்னால் அமர போனவளை முன்பக்கம் அமருமாறு கூறினான் அர்விந்த். அவனுடன் தனியே பயணம் என்பது இம்முறை அவளை மிரட்டவில்லை.

இப்போது வரை அவனுடன் பெரிதாக எதுவும் பேசுவதில்லை மலர். அர்விந்தும் பழைய மாதிரி வம்பு செய்வதில்லை, அதே சமயம் கண்டுகொள்ளாமல் இருப்பதுவும் இல்லை. எதாவது பேசுவான், கேட்டதற்கு பதில் சொல்வாள் மலர். அவளை பொறுத்தவரை போதுமடா பட்டது என்கிற மனநிலை தான். அவனின் மீதான மயக்கம் ஓடிப்போனாலும், அவனின் தாக்கம் அவளிடம் நிறைய உண்டு! அதை அவள் வெளிகாட்டுவது இல்லை, அவ்வளவே!

கார் கிளம்பிய சற்று நேரத்திற்கு எல்லாம், பாட்டு ஒலிக்க விட்டான் அர்விந்த். சும்மா இருந்திருந்தால் கூட மனம் அமைதியாக இருக்கும்! அவன் வேண்டுமென்றே சூழ்நிலையை உருவாக்கினான். மன்மதனை வெறுப்பேத்தா விட்டால் எப்படி?

தேன்தெறிக்கும் தென்றலாய்

நின்னருகில் வந்து நான்

சேலை நதியோரமாய்

நீந்தி விளையாடவா…..

அந்த வரிகளில் மலரின் கற்பனை தறி கெட்டு பாய்ந்தது. அர்விந்துமே அமைதியாக பாட்டை ரசித்தபடி மோன நிலையில் வண்டி ஒட்டி கொண்டு இருந்தான். இருவரும் எதுவும் பேசவே முயற்சிக்கவில்லை. மலர் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க, அவன் பேசிய சிறு சிறு பேச்சும் சட்டென்று முடிந்து விட்டது. ஒருவழியாக பெங்களூர் போக்குவரத்தில் ஊர்ந்து அவர்கள் சரியாக பஸ் கிளம்பும் நேரத்திற்கு தான் சென்றார்கள். சற்று நேரம் கூட பேச நேரமில்லாததல், உடனே அவளை பஸ் ஏற்றி விட்டது போல் அவன் மனம் தவித்தது. பஸ்சில் ஏறி அமர்ந்தவளுக்கு அவனை காண வழியில்லை. பஸ் கிளம்பும் நேரம் ஆததால் அவள் அவனிடம் ஒழுங்காக சொல்லிக்கொள்ள கூட இல்லை. ஆக அவளுமே ஏதோ ஒரு தவிப்புடன் கிளம்பினாள். ஒரு மாதமும், சில நாட்களும் தான் என்றாலும் அவர்களுக்குள் பல்வேறு விஷயங்கள் நடந்தேறி இருக்க, இருவருக்குமே ஒருவரின் பிரிவு ஏனென்று தெளிவாக புரியாமல் மிகவும் கடினமாக இருந்தது. அவளை அழைக்கலாமா என்று ஒரு நிமிடம் யோசித்தவன், வேண்டாம், நாம் எதையும் ஓவரா செய்ய வேண்டாம் என்று விட்டு விட்டான். அவளுமே அதே போல் தான் சிந்தித்தாள்.

பஸ் கிளம்பி ஒரு மணி நேரம் ஆகி, பெங்களூர் ஹைவேசை தொட்ட சில நிமிடங்களில் பஸ்சை நிறுத்தி விட்டார் டிரைவர். பஸ்ஸில் ஏதோ கோளாறு, இனி இந்த பஸ் செல்லாது எனக் கூறினார். அவர்கள் கம்பெனியில் இருந்து இன்னொரு பஸ் ஏற்பாடு செய்கிறோம் என்று கூறி அனைவரையும் பஸ்ஸில் இருந்து இறங்கச் செய்தனர். அவரவர் பெட்டியையும் எடுத்துக் கொள்ள செய்தனர். இதோ வருகிறது, இதோ வருகிறது என்றவர்கள், நாற்பது நிமிடம் கழித்து அவர்கள் நிறுவனத்தில், பஸ் ஏதும் தற்போது இல்லை, உங்கள் பணத்தை திருப்பி தந்து விடுகிறோம், அவ்வளவு தான் முடியும் என்று சொல்ல, அங்கே ஒரே கூச்சல் மற்றும் குழப்பம். பயணிகள் எவ்வளவு சண்டை போட்டும், அவர்கள் பணம் மட்டுமே திருப்பி தர முடியும் என்று சொல்லிவிட, அவர்களை அசிங்கமாக திட்டியபடி அவரவர் அங்கிருந்து கிளம்பும் வழியை பார்த்தனர். அழுகையே வந்து விட்டது மலருக்கு. வேறு பஸ் வரும் என்று சொல்லியதால் அவள் அர்விந்திற்கு அழைக்க வில்லை. இப்படி சொல்லிவிடவே வேறு வழியில்லாமல் அவனை அழைத்தாள். அழைத்து விபரம் சொல்ல, அவன் அவளை ஏன் முன்பே சொல்லவில்லை என்று திட்டினான். பஸ்சில் இருப்பவனிடம் கொடுக்க செய்து, தான் வந்து அவளை அழைத்து செல்லும் வரை அவளின் பத்திரம் அவர்களின் பொறுப்பு என்று சொல்லி, அவளிடம் தான் வந்து விடுவேன், தைரியமாக இரு என்று சொன்னான். அவன் கிளம்பி வர எப்படியும் நேரம் ஆகுமே, கொஞ்சம் பயமாக இருந்தாலும், மற்ற பயணிகள் இருக்கவே கொஞ்சம் தைரியமாக இருந்தாள் மலர். ஆனால் நேரம் செல்ல செல்ல, கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய, வரவழைத்துக் கொண்ட தைரியம் காணாமல் போக ஆரம்பித்தது. ஐயோ, பஸ் நின்ற உடனேயே அரவிந்தை அழைத்து இருக்க வேண்டும் என்று இப்போது நினைத்து நினைத்து வருந்தினாள் மலர். பலர் ஒன்றாக சேர்ந்து சேர்ந்து கிளம்பினர், இவளையும் ஒரு சிலர் கேட்க, இவள் ஆள் வருவதாக சொல்லவும் அனைவரும் கிளம்பி விட்டனர். எஞ்சி இருந்தது, பஸ் டிரைவர், மற்றொருவன், மலர் மட்டுமே. எங்கே இருக்கீங்க என்று அர்விந்தை அவள் அழைக்க, இன்னும் இருபது நிமிடம் ஆகும், மீண்டும் அழைக்காதே, போனில் சார்ஜ் இல்லை என்றான். அவனுக்கு புரிந்தது அவளின் மனம்! அவளுக்கு தெரியாதே அவன் இவளுக்காக எவ்வளவு வேகமாக வருகிறான் என்று! அந்த இருபது நிமிடமும் முடிந்து மேலும் பத்து நிமிடம் ஆகிக் கொண்டு இருந்தது. அந்த தனிமை, அந்த இரு ஆண்கள் அவளை பார்க்கும் பார்வை, அந்த யாருமற்ற இடம், இருட்டு, வேகமாக செல்லும் வாகனங்கள் என அந்த சூழ்நிலை அவளை மொத்தமாக மிரட்டி, அவளின் இதயத்துடிப்பை மொத்தமாக ஏற்றி விட்டது. பயத்தில் இதயம் தொண்டை வர துடிக்க, தன் இதயம் வெடித்து விட போகிறதோ என்று பயந்து போனாள் மலர். பயப்படதே, பயப்படதே என்று அவள் எவ்வளவு சொல்லிக்கொண்டாலும் அவளால் முடியவில்லை. முகம் முழுவதும் சட்டென்று அதீத சூட்டை உணர்ந்தாள் மலர். கை கால் எல்லாம் நடுங்கியது, தன்னை மீறி தனக்கு என்னவோ ஆகிறது என்று அவள் உணரும் நேரத்தில், சர்ரென்று அரவிந்தின் கார் வந்து நிற்க, அவன் இறங்கினான். அவனை கண்ணில் காண, வேகமாக எழுந்தது மட்டும் தான் மலருக்கு தெரியும், சடாரென்று வேரருந்த மரம் போல் தரையில் சாய்ந்தாள் மலர்.

விழி! விழி! கத்திக்கொண்டே அவள் அருகில் ஓடி வந்தான் அர்விந்த். அவளுக்கு சற்று தள்ளி இருந்த ட்ரைவருக்கும் இன்னொருவனுக்கும் ஒன்றும் புரியவில்லை, இருந்தும் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு ஓடி வந்தனர்.

மலரை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, அவர்கள் கொண்டு வந்த தண்ணீரை வாங்கி அவள் முகத்தில் தெளித்து உலுக்கினான் அர்விந்த். அவளின் நாடித்துடிப்பை பார்க்க, அது வேகமாக தான் அடித்தது. மீண்டும் அவளின் கன்னத்தை தட்ட, அவனை சிறிது நேரம் டென்ஷன் செய்து பின் கண் விழித்தாள் மலர்.

“மேடம் டென்ஷன் ஆயிட்டாங்க சார், வேற ஒண்ணுமில்லை, அழைச்சிட்டு போங்க” என்ற இருவரும் சற்று தள்ளி நிறுத்தி இருந்த பஸ்ஸை நோக்கி சென்று விட்டனர்.

கண் விழித்தவள் அவனை கண்டதும் அவன் மடியில் இருந்தவாறே அவன் கழுத்தில் தன் கரங்களை மாலையென கோர்த்து, அவனை இறுக்கி கட்டிக் கொண்டு அத்தனை நேரம் இருந்த மன அழுத்தத்தை எல்லாம் அழுது கரைத்தாள்.

தன்னை கட்டிக்கொண்டு அழும் அவளின் உணர்வுகள் புரிய, அவளை வெகுவாக சமாதானம் செய்தான் அர்விந்த். அவளை போலவே அவனுக்கும் தான் மிகுந்த டென்ஷன். ஆனால் அவனின் எந்த உணர்வையும் காட்டிக்கொள்ளாமல் அழும் அவளை தேற்றினான்.

“சரிமா…. சரிடா…. அழாதே…. நான் தான் வந்துட்டேன்ல….ஒன்னும் இல்லைடா…. நீ பத்திரமா தான் இருக்க, நல்ல பொண்ணுல…. அழாதே மா….ப்ளீஸ்….”

அவனின் சமாதானம் அவள் அழுகையை இன்னும் கூட்ட, இன்னும் அழுதாள் மலர். இப்போது தன் மொழியை மாற்றினான் அவன்,

“ஏய்! போதும்டி! நான் எவ்ளோ டென்ஷனா வந்தேன் தெரியுமா? எங்களை நம்பி வந்த பொண்ணு, புது ஊர், பாஷை வேற தெரியாது…. உன்னை சீக்கிரம் வந்து அழைச்சுக்கணும்னு…. நான் வந்த வேகத்துக்கு…. கடவுள் புண்ணியம் தான்….” என்றவனின் வாயை பொத்தி இன்னும் கண்ணீர் விட்டாள் மலர்.

ஐயோ, என்ன சொன்னாலும் அழறாளே என்று நினைத்தவன், போதும் வா மிச்சத்தை வீட்டில் போய் அழலாம்” என்றான்.

எழுந்து நின்றவள் இன்னும் தேம்ப, அவளை பார்க்க மிகவும் பாவமாக இருக்க, சரிமா ஒன்னும் இல்லைமா என்று மென்மையாக சொல்லி, அணைத்துகொண்டான் அர்விந்த். அடுத்து அடுத்து நேர்ந்தது எல்லாம் ஏன் நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை, ஆனால் நடந்தது!

அணைத்தவன், தேம்பும் அவளின் முகத்தை தன் தோளில் இருந்து நிமிர்த்தி, நெற்றியில் முத்தமிட்டான். அவள் அழுகை கொஞ்சம் குறைந்தது போல் இருந்ததோ…. அல்லது அவனின் டென்ஷன் குறைந்ததோ…. முத்தத்தை தொடர்ந்தான். விழி என்றவன், அவனை நிமிர்ந்து பார்த்த விழிகளில் முத்தமிட்டான். பின் மெதுவாக, இரண்டு கன்னம் என மெதுவாக வந்தான். கன்னத்தில் இருந்து யோசித்தால் செய்யமாட்டோம் என்று நினைத்தானோ என்னவோ சட்டென்று அவள் இதழில் தன் இதழை அழுத்தமாக பதித்தான். பதித்தவன் மிக வேகமாக அவளின் இதழை சுவைத்தான். வேகம் வேகம் தான். அவனின் அத்தனை நேரம் அவளை பற்றிய கவலை அனைத்தும் மறந்து போகும் அளவிற்கு அவளின் இதழில் தன்னை தொலைத்தான் அரவிந்த்.

கொஞ்சம் கூட அவனின் இதழ் முற்றுகையை எதிர்பார்க்காதவள், திகைத்து, தடுமாறி அவனையே பற்றுக்கோலாக கொண்டு அதை சமாளித்தாள்!

நெஞ்சம் கூடி விட்டதா?

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “11. நேசம் கூடிய நெஞ்சம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!