அன்னமே 24
அத்தியாயம் 24
“அன்பு அப்ப உனக்கும் பொண்ணு பார்க்கறேன். எங்க ஒண்ணு விட்ட அண்ணன் மக இருக்கா. அவ வீட்டுலே பேசறேன். படிச்ச பொண்ணு வீட்டை பொறுப்பா பாத்துக்குவா. அவளை பாத்துட்டா அவளைத் தவிர யாரையும் உனக்கு புடிக்காது”
“நா விழுந்த மாதிரி நீயும் மொத்தமா விழுந்துடுவ கண்ணு சுதாரிச்சுக்க. அனுபவப்பட்டவன் சொன்னா கேட்டுக்க. பின்ன கண்ணை கசக்கிட்டு நின்னா நா பொறுப்பில்ல சொல்லிப்புட்டேன்” தயாளன் மகனுக்கு மட்டும் கேட்க அடிக்குரலில் சொன்னார்.
“என்ன ஆச்சு?” சுலோச்சனா இருவரையும் கண்ணாடியை இறக்கி அடிக்கண்ணால் பார்த்தார்.
“அம்மா சொன்னா புத்தியா சொல்லுவா கண்ணு. மறுக்காம காதில் வாங்கிக்கோன்னு புத்திமதி சொன்னேன் சுலோ” சமாளித்தார் மீசையை நீவி.
“பாத்துக்க. என்னைக் கட்டுனதில இருந்துதான் உங்கப்பனுக்கு இந்த வீடு சக்கர மில்லுன்னு சொத்து சேர்ந்துச்சு. அப்படித்தான் என்ற ஊட்டு பொண்ணுங்களை கட்டிட்டு வந்தா நல்ல ராசி அன்பு” சுலோச்சனா பெருமிதமாக கணவனை பார்க்க.
“ஊடு மில்லு இதெல்லாம் சரிதான் கருப்பா. ஆனாக்கா இடம் உன்ற பட்டனுது இதையும் தெரிஞ்சுக்க” தயாளன் சின்ன குரலில் மகன் காதில் சொல்லிவிட்டு,
“அதுபாரு கருப்பா. உங்கம்மா வந்த ராசிதான் எல்லாமே. அம்புட்டுத்தான் நா சொல்லிப்புட்டேன். முழிச்சுக்க” தலையை சொரிந்தவர்,
மகன் முழங்கையால் ஓங்கி இடுப்பெழும்பில் இடிக்க “இனி நா வாய தெறக்கல கண்ணு. நீ பேசு உன்ற தாயிகிட்ட” வாயை மூடியேவிட்டார்.
“அம்மா நா பேச வரத மொதல்ல கேளும்மா. எனக்கு படிச்சவ பொண்டாட்டியா வரத் தேவையில்லை. என்னை அனுசரிச்சு எம்பட தேவைய கவனிக்கறவளா இருந்தா போதும். அம்புட்டுத்தான்”
“அதெப்பிடி. சுலோச்சனா மருமகள்னா படிச்சிருக்கணும் அன்பு”
“அதான் சொன்னேனம்மா. எனக்கு படிப்பு முக்கியமில்லை எம்மனசுக்கு புடிக்கணும் அம்புட்டுத்தான். படிப்பு கவுரவமுன்னு பாத்து கட்டிட்டு வந்து பொழப்புக்கு ஆவாம இருந்தா என்ன பண்ணுறது. நாளைக்கு கைப்பட்டா குத்தம், கால்பட்டா குத்தமுன்னு நிப்பாங்க. புள்ள முத்தா வேல முத்தான்னு பாக்கையில எனக்கு ரெண்டுமே முத்தா தங்கமா ஊட்டுக்கு அடக்கமா இருக்கற ஒரு பொண்ணை புடிச்சுப் போச்சும்மா. நீதான் அவுங்க ஊட்டுல பேசி கட்டி வைக்கணும் சொல்லிட்டேன்” கருப்பன் இதான் பேச்சென முடித்துவிட்டான்.
“அன்பு” சுலோச்சனா இறைந்தார் கோபமாக.
“அம்மா நா போய் கேட்டா அந்தாளு மதிக்க மாட்டாரும்மா. அப்பனுக்கும் அப்பத்தாவுக்கும் அந்த அளவுக்கு அறிவு பத்தாது. நீதாம்மா எனக்கு அந்தப் பிள்ளையை கட்டி வைக்கணும்” எழுந்தவன் சுலோச்சனா காலில் விழுந்தான்.
“அடேய் டேய் எமகாதாண்டா நீ” தயாளன் மூக்கின் மேல் விரல் வைத்தார்.
“உன்னைக் கண்டாத்தான் அவங்க கிடுகிடுன்னு நடுங்குவாங்கம்மா. நீ வந்து பேசும்மா” என கால்களை உடும்பாக பற்றிக்கொண்டான்.
“டேய் வெக்கமால்ல?” தயாளன் அவனை எழுப்ப முயன்று கேட்டார்.
“எங்கம்மா கால்ல உழுறதுக்கு என்னைய்யா வெக்கம். நீ பொத்திட்டு ஓரமா போயி நில்லுய்யா” அவரை ஓரம் கட்டினான்.
வெளிய அப்பத்தா திறந்த வாய மூடாம நின்னு விட்டார். இவனுக்கு காரியமாவ அந்த சிறுக்கிகிட்ட போய் அப்பத்தாவுக்கு அறிவு இல்லன்னுட்டானே. மானக்கேடானது அவருக்கு.
சுலோச்சனாவுக்கு குளிர்ந்து போனது. மாமியா கிழவிக்கு அறிவு இல்லைன்னு சொல்லிட்டான் என் மகன். பெருமையாய் கண்ணாடியை துடைத்து மீண்டும் அணிந்தவர் புருஷனை மிதப்பாய் பார்த்தார்.
“என்ற சுலோகண்ணு புத்திசாலி பொண்டாட்டின்னு நெனைச்சேன். கடைசியில நீயும் இவன்கிட்ட ஏமாற போறியேம்மா. அதான் எம்மனசுக்கு உறுத்தலா இருக்குது” நினைத்ததை அப்படியே வாய்விட்டே சொல்ல.
அதை காதில் வாங்காத சுலோச்சனா, குனிந்து மகனை தூக்கி அமரவைத்தார். அப்பனையும் தூக்கி வளத்த அப்பத்தாவயும் கூடக் கண்டுக்காம எங்கிட்ட வந்து கல்யாணம் பண்ணி வையின்னு நிக்கறானே. இத்தன வருசமா இவனை மடியில போட்டு தாலாட்டினது கூட இல்லையே நெகிழ்ந்து மகன் உச்சி முடியை விரல்களால் கோதி ஒழுங்காக்கி விட்டார்.
“யாருப்பா உனக்குப் பிடிச்ச பொண்ணு?” ஆர்வமாக கேட்ட சுலோச்சனா அது செவ்வந்தியாக இருக்குமென கொஞ்சம் கூட அப்போதைக்கு நினைச்சுப் பார்க்கல. எதார்த்தமாக கேட்டார் வரும் பதில் அறியாமல்.
“செவ்வந்திம்மா”
“என்னது?” அவர் முகம் விளக்கெண்ணையை குடிச்ச மாதிரி போனது.
“அடடே அந்த வாயாடி சிறுக்கி எவ்வீட்டுக்கு மருமவளா வரணுமா. நடக்கவே நடக்காது சொல்லிட்டேண்டா. உங்கப்பனுக்கு புடிச்சுப் போச்சுன்னு இவளை கட்டிட்டு வந்தான். இப்ப நீ ஆரம்பிக்கற. அதெல்லாம் முடியாது நா சொன்ன பொண்ணத்தான் நீ கட்டியாவனும். இல்லாட்டி என்ற சொத்துல சல்லிப் பைசாவ கண்ணுல காட்டுமாட்டேன்” அப்பத்தா ஆங்காரமா வந்து நின்றார்.
‘அடடா இந்தக் கிழவிக்கு செவ்வந்தியை பிடிக்காதா?’ சுலோச்சனா முகம் வெளிச்சமாக, “நல்ல பொண்ணுப்பா அவ. என்ன பேசுனாலும் எதுத்து ஒரு வார்த்த பேசமாட்டா தெரியுமா?” சுலோச்சனா செவ்வந்தியை பற்றி நல்ல விஷயங்களை அடுக்கினார்.
செவ்வந்தி வீட்டு தெருமுக்கிலேயே அமுதா நாட்டுப்புறப்பாட்டு ஒலிக்க இன்று அதிசயமாக இளவரசனின் குரல் இசைப்பாட்டு பாடியது. ஆத்தாலும் மவளுமா இருந்தா எப்பவும் ஆனதுதானன்னு தூக்கி போட்டுட்டு அவங்கவங்க வேலைய பாப்பாங்க.
ஆனாக்க இன்று இளவரசன் குரல் சீறும் சிங்கத்தின் குரலாக அமுதாவின் பேச்சுக்கு பதில் பேச கண்ணப்பன் வீட்டுக்கு பக்கத்தில் இருக்க புள்ளையார் கோயில்ல வேலை இருக்கற மாதிரி உட்கார்ந்தார்கள்.
“ரெண்டு வாரமா பாக்கறேன் ஒரு வேல வெட்டியும் செய்யறது கெடையாது. உங்கப்பனே பாலை கொண்டு போய் ஊத்திட்டு வராப்புல. அந்தாளு என்னமோ இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கான். நீ பேய் அடிச்ச கணக்கா இருக்க” புகையும் அடுப்பை ஊதுங்குழல் வைத்து ஊதி நெருப்பை பத்தவைத்த அமுதா பாட்டுப் பாட.
“அம்மா ஆரம்பிக்காத. செத்த வாய மூடு மவராசி. எந்நேரமும் நொய்யு நொய்யுன்னு ஈ மாதிரி காதுல கத்திட்டே இருக்காத. நானே குழம்பிப்போய் கெடக்கன்” செவ்வந்தி அரிசியை சுத்தம் செய்து கிடைத்த கல்லை எடுத்து கட்டிலில் படுத்து வானத்தை ஆராச்சி பண்ணிய இளவரசன் மீது வீசினாள்.
“எம்மேல எதுக்கு வீசிட்டு இருக்க. கைய ஒடப்பேன் ஒழுங்கா இரு” இளவரசன் ஒரு கல்லை எடுத்து இட்டான்.
“எதுக்கு இப்ப கத்துற. காதே வலிக்குது கெரகம்” காதை மூடி சொன்னாள் செவ்வந்தி.
“அத நீ சொல்லாத. வாயாடிபுள்ள அமைதியாயிருக்கப்பட்டு அம்மா ஆச்சரியத்துல கேக்குறாங்க” இளவரசன் அவளை ஏச.
“அப்படிச் சொல்லுடா சிங்கக்குட்டி. கேக்கறதுக்கு ஆளில்லைன்னு அப்பனும் மவளும் நீயில்லாத நேரத்துல என்னை வாயை பிடுங்குதுங்க” அமுதாவுக்கு கொள்ளை பெருமிதம் மகன் தன் பக்கம்ன்னு.
“அதான நல்லாச் சொல்லுவ நீ. சாவறப்ப கஞ்சி ஊத்துற மவராசனை விட்டுக் கொடுப்பியா நீ” செவ்வந்தி நீட்டி நெளித்து சொன்னாள்.
“சரிடி எனக்கொரு சந்தேகம் வருது”
“உனக்கு சந்தேகம் வரலைன்னாத்தான் பேச்சு”
“கோட்டிச்சிருக்கி. பேசுறத கேளுடி” செவ்வந்தியை வாயை மூட வைத்த அமுதா,
“ஆமா உங்கப்பனுக்கு என்னாச்சுடி. உன்னை வெளியவே விடறது இல்ல. ஏதாச்சும் தப்பு தண்டா பண்ணிட்டியா?” அமுதா பேச தெரியாம பேச.
“அடியே கொழுப்பெடுத்த பொம்பளை என்ன பேச்சு பேசுறவ” செவ்வந்தி எடுத்தெறிந்த தண்ணிக்குடம் பறந்து வந்து அமுதா தலையில் விழப் பார்க்க
இளவரசன் அமுதாவை காப்பாத்தினான், “அப்பனுக்கு மட்டும் உங்க பேச்சு காதுல கேட்டுச்சு. இன்னைக்கு செருப்புலயே அடிவாங்குவீங்க ரெண்டு பேரும். லீவுன்னு கண்ணை மூடி படுக்க முடியுதா. எப்ப எது மண்டை மேல வந்து உழுவும்னு பயமா இருக்குது. இந்நேரம் வரைக்கும் இந்த சின்ன கழுத கல்லை கல்லை தூக்கி வீசி தூக்கத்த கெடுத்தா. இப்ப உன்னை கொல்ல பாக்குறாம்மா. சத்தியமா சொல்றேன் இவ போற எடத்துல மாமியார் மண்டையை உடைச்சுட்டு ரெண்டே நாளுல வாழாவெட்டியாத்தேன் திரும்பி வருவா பாரு” அமைதி சின்னமான இளவரசனே பொங்கி எழ.
“அண்ணா நீ இருக்க பாத்தியா?” அடிதொண்டையில் கத்த ஆரம்பித்த செவ்வந்தி வாயை மூடிக்கொண்டாள்.
பார்வையாலேயே சாம்பலாக்க முயலும் கண்ணப்பனையும், “அடக்கடவுளே”ன்னு சலிப்பா பாத்த கருணாவும். “எப்ப பாரு இதேதான்” ன்னு அம்சாவும் முறைச்சுட்டே வர அவர்களுக்கு பின்னே வந்தவர்களை பார்த்தும் பேய் அடிச்ச மாதிரி நின்னாள்.
“அம்சா செவ்வந்தியை உள்ள கூட்டிட்டு போ புள்ள” அவர்களை உள்ளே அனுப்பிய கருணா,
“என்னம்மிணி வேடிக்கை பாத்துட்டு நிக்கறவ. வந்தவங்களை வாங்கன்னு சொல்லிட்டு போய் காப்பி தண்ணி வச்சு கொண்டாம்மிணி” அமுதாவையும் ஒரு விரட்டு விரட்டி நிலைமையை சடுதியில் சமாளித்தார் கருணா.
“வாங்க வாங்க வாங்க” இருந்த மாதிரி வராதவங்க வரவும் அமுதாவுக்கு கைகால்கள் நடுக்கமெடுத்துப் போக செய்வதறியாம நின்றார்.
“அட என்ன கண்ணு நாங்க என்ன அசலா அன்னியமா. இந்த நடுங்கு நடுங்குற என்னவோ உன்னைய பொண்ணு பாக்க வந்த கணக்கா” ராமாயி அமுதாவை பேச வைக்க நினைத்தார்.
“அத்த அந்த பிள்ள உனக்கு மவ முறையாவுது. பேசனுமுன்னு லூசு மாதிரி பேசி வைக்காத” கண்ணப்பன் அவர் மூக்கை உடைத்தார்.
“சரிடா இப்ப என்ன நாந்தேன் தப்பு. விடு அப்படியே இருக்கட்டும்” “இக்கென்ன வேடிக்கை பாக்குறவ போ சொன்னதை செய்யி” அமுதாவை அனுப்பிய ராமாயி உக்கார்ந்தார்.