தேன் 12
“ஹலோ பாஸ்..”
“சொல்லு கண்ணாயிரம்..” என்று ஒரு திடமான குரல் அதிர்ந்து ஒலித்தது.
அந்தக் குரல் ஒருவரின் மனதில் பயத்தை உண்டு பண்ண கூடிய அளவு மிகவும் கனமான குரலாகும்.
அந்தக் குரலுக்கு தெரியும் கண்ணாயிரம் முக்கியமான விடயத்துக்கு மட்டும்தான் தனக்கு அழைப்பு எடுப்பான் என்று,
“என்ன கண்ணாயிரம் சொல்ல வந்த விஷயத்தை நேரடியா சொல்லு என்ன பிரச்சனை..?” என்று அவனது குரலின் தொணியை வைத்து ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது என்று அந்த குரல் ஊகித்தது.
கண்ணாயிரத்துக்கு தெரியும் அவனது முதலாளி மிகவும் புத்திசாலி அதோடு சாமர்த்தியமானவர் என்று அதனால் அவன் கூற முன்னே நடந்தது என்ன என்று இந்நேரம் அவரது காதுக்கு எப்படியாவது போய் சேர்ந்திருக்கும் அதனை ஊர்ஜிதப்படுத்தவே தன்னிடம் அந்த விடயத்தை வினவுகிறார் என்பது அவன் அறிந்ததே.
“ந…ம்….ம நம்ம சேகர்..” என்று சொல்ல வந்த விடயத்தை சொல்ல முடியாமல் அவன் திக்கில் திணறி நிற்க,
“போலீஸ் கிட்ட மாட்டிட்டானா..?”
“ஆமாங்க பாஸ் அவனை காப்பாத்துறதுக்கு ரொம்ப முயற்சி பண்ணினேன் ஆனா என்னால முடியல..”
“வாய மூடுடா பிளடி மு***** இந்த முடியல, இயலாது என்ற வார்த்தை நம்மளோட அகராதியிலேயே இருக்கக் கூடாது..”: என்று அந்த குரல் இடித்துக் கூறியது.
அந்த கோபம் கொண்ட குரலால் சில நிமிடம் எதுவுமே பேச முடியாமல் பயத்தில் ஆழ்ந்தவன்,
“இல்ல பாஸ்…” என்று தனது முதலாளியை சமாளிப்பதற்காக வழி தேடினான்.
“கண்ணாயிரம் அடுத்தது என்ன..?”
“அதுதான் என்ன பண்றதுன்னு தெரியல சேகர் ரொம்ப விசுவாசமானவன் அவன் எப்படியும் போலீஸ் கிட்ட உளறி இருக்க மாட்டான்..”
“ஹா… ஹா… ஹா..” என்று வானமே இடிந்து விழும் அளவு பெரிதாக சிரித்தது அந்தக் குரல். ஏனோ தெரியவில்லை கண்ணாயிரத்துக்கு அந்த சிரிப்பின் ஓசை காதில் விழுந்ததும் உடல் முழுதும் உதறல் ஏற்பட்டது.
“அதெப்படி நீ சொல்லுவ இந்த உலகத்துல எல்லாருமே உயிருக்கு பயந்தவன் தான்..”
“அப்போ இப்பபோ என்ன பண்றது பாஸ்..?”
“பிளான் டி..” என்று கூறியதும் அந்தப் பக்கம் இருந்த கண்ணாயிரத்துக்கு நாடி நரம்பெல்லாம் சுர் என்று உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல உடல் அதிர்ந்து அடங்கியது.
“அது வந்து..” என்று கண்ணாயிரம் எதையோ கூற வர அவனது அழைப்பு உடனே துண்டிக்கப்பட்டது.
என்னதான் கண்ணாயிரம் விளக்கம் கொடுத்தாலும் பாஸின் முடிவுக்கும், பேச்சுக்கும் மறு பேச்சு கிடையாது என்பது அவர்களின் முதலாளி, தொழிலாளி என்ற பிணைப்பு அறிந்த உண்மையே.
ஒரு தடவை அவனுடைய பாஸ் முடிவெடுத்தால், உலகமே அழிந்தாலும் அதில் மாற்றம் எதுவும் கிடையாது. அதோடு தொழிலில் இவன் பெரியவன், இவன் சிறியவன் என்ற ஏற்றத்தாழ்வு எதுவும் அவனுடைய பாஸ் யாரிடமும் காட்டியதில்லை.
யார் பிழை செய்தாலும் ஒரே தண்டனை தான். யார் சிறப்பாக வேலை செய்தாலும் அவர்களுக்கு ஒரே ரொக்க பணம்தான் அப்படி ஏற்றத்தாழ்வு இல்லாமல் அவர் அவர்களை வழி நடத்துவது கண்ணாயிரத்திற்கு முதலாளி மேல் மிகுந்த பிடிப்பும், ஈடுபாடும் ஏற்படும் முதல் காரணமாகும்.
அதனால் தான் அவன் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தனது முதலாளியுடன் விசுவாசமாக இணைந்து வேலை செய்து வருகின்றான்.