நெஞ்சம் – 12
சாப்பிட ஆரம்பித்த பின் தான் பசியே தெரிந்தது என்பது போல் பலர் சாப்பிடாமலே இருப்பார், ஆனா சாப்பிட ஆரம்பித்து விட்டால் மூச்சு முட்டும் வரை சாப்பிடுவர்… அதே போல் ஆரம்பிக்கும் வரை அவனின் உணர்வு அவனுக்கு தெரியாது, ஆனால் ஆரம்பித்த பின் அவன் ஆசை அவனை அவளிடம் இருந்து பிரிய விடவில்லை. எந்த இருட்டு, எந்த தனிமை அவளை மிரட்டியதோ, இப்போது அதே தனிமை, அதே இருட்டு அவனுடன் அவளை ஒன்ற வைத்தது. இதழ் மட்டும் போதாது கண்மணியே என்று காதில் கழுத்தில் ஊர்ந்தான் அர்விந்த். அவனின் கரங்கள் ஸ்பரிக்கும் மென்மை அவனை இன்னும் இன்னும் அவளில் ஒன்ற வைத்தது. அவனின் அணைப்பும் முத்தமும் இருக்க இருக்க அதிகமாகி கொண்டே போக, மலரால் தாக்கு பிடிக்க முடியாமல் அவனை கொஞ்சம் அழுத்தி தள்ளினாள். அப்போது தான் சுயஉணர்வுக்கு வந்தான் அர்விந்த். என்ன நடந்தது என்று விளங்க, ஆரம்பித்தது அவன் தானே? ஆனால் நடந்த எதையும் விவரித்து பேசி சரி பண்ண முடியாத செய்கை இது என்று புரிந்தது அவனுக்கு. தவறு தவறு தான்! அதனால் அவள் முகத்தை முழுதாக பார்க்காமல்,
“ஸாரி, வா போலாம்” என்று காரை நோக்கி நடந்தான்.
அவன் பின்னேயே நடந்தவளுக்கு, அரவிந்திற்கும் அவளுக்குமான நெருக்கம் கனவா நினைவா என்று புரியாத நிலை! எனக்கு எங்கு இருந்து இத்தனை தைரியம்? அவளை நினைத்து அவளே அதிர்ந்து போனாள்.
அவள் முன்னே ஏறுவதா, பின்னே ஏறுவதா என்று தயங்க, அதை புரிந்து அவனே அவளுக்கு பின் கதவை திறந்து விட்டான். இருவருக்குமே மிகுந்த தயக்கம் வந்து அப்பிக் கொண்டது. எப்படி இப்படி நடந்தது என்பதை மீறி, இப்படி நடந்துக் கொண்டோமே என்ற சங்கடம் தான் இருவருக்கும். தயக்கம் மௌனத்தை தத்தெடுக்க, அங்கே கனத்த அமைதி நிலவியது. இருவரும் தன்னை பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார்கள் தெரியவில்லையே என்று இருந்தனர். படபடவென பேசும் அர்விந்த் கூட பேச மறந்தவன் போல் இருந்தான். பல மணி நேரமாக இருந்த அவள் மனதின் அலைப்புறுதல் மற்றும் நடந்த அதிர்ச்சியான நிகழ்வு காரணமாக பாதி பயணத்திலேயே தன்னை மீறி உறங்கி விட்டாள் மலர்.
உறங்கியவளை கண்டவனுக்கு மிகுந்த ஆச்சரியம்! எப்படி இவளால் உறங்க முடிந்தது? அவனுக்கு என்ன தெரியும், அவள் மனதில் அவன் இருப்பதும், அவன் மேல் மலையளவு அவள் நம்பிக்கையும் நல்ல அபிப்பிராயமும் வைத்து இருப்பது! இதுவரை அவன் மேல் இருந்த நம்பிக்கையில் தான் இன்று அவனிடம் தன்னை ஒப்புக் கொடுத்து விட்டு இருந்தாள் மலர். ஒரு சின்ன சந்தேகம் வந்து இருந்தாலும் அவனுடனான நெருக்கத்திற்கு வழியில்லை அங்கே!
நான் எப்படி இப்படி அதுவும் விழியிடம்? இவ்வளவு நெருக்கமாக நடந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது இப்போது? என்ன தான் ஆனது எனக்கு? தன்னையே நொந்து கொண்டான் அர்விந்த். என்ன பத்தி என்ன நினைச்சாளோ? கடவுளே…. தலையில் அடித்து கொண்டு புலம்பியபடியே கார் ஓட்டிக்கொண்டு வீடு வரை வந்து சேர்ந்தான் அர்விந்த்.
வீடு வந்ததும் அவளை எழுப்பி விட்டவன், அவள் இறங்கி இவர்கள் வீட்டிற்குள் சென்ற பின், அவன் அறைக்கு போகும் முன்,
“நடந்ததுக்கு ரொம்ப ஸாரி, நான்…. எனக்கு…. என்ன சொல்றதுனே…..” பேசமுடியாமல் அர்விந்த் தடுமாற,
“என் மேலயும் தப்பு இருக்கு, நானும் ஸாரி….” என்றாள் மலர். அவன், சரி போய் தூங்கு என்று நகர போனான், உடனே மலர்,
“நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள். ஏதோ விரும்பாதது தான் வர போகிறது என்று உள் மனம் சொல்ல, “இப்போ நான் ரொம்ப களைப்பா இருக்கேன், தூங்கணும், நாளைக்கு பேசலாம் ப்ளீஸ்….” என்று ஒத்துகொள்ளேன் என்பது போல் அவள் முகத்தை பாவமாக பார்த்தான் அர்விந்த்.
அவ்வளவு தூரம் இந்த இரவு நேரத்தில் வந்து அவளை அழைத்துக் கொண்டு வந்த அவனின் நிலை புரிய, மௌனமாக தலையை ஆட்டி விட்டு படுக்கச் சென்றாள் மலர்.
களைப்பா இருக்கு, தூங்கணும் என்றவனுக்கு தூக்கம் தான் வருவேனா என்றது! எப்படி நான் இப்படி ஆய்ட்டேன்? இன்று நான் அவளிடம் பேசும் முறைக்கும் அவள் வந்த போது இருந்த நிலைமைக்கும் எத்தனை வித்தியாசம்? அன்று அவள் உதவிக்கு என்று வந்த பெண், இன்றோ அவளிடம் நான் கெஞ்சிக் கொண்டு இருக்கிறேன்…..(அதுக்கு முன்னால் கொஞ்சி கொண்டு இருந்தாயடா…. மன்மதனின் மைண்ட் வாய்ஸ் தான்….)
இந்த மாதிரி எங்கேயாவது நடக்குமா? (இந்த ரைட்டர் தான் உன்னை வைச்சு செய்யுது) அவளால் நான் மாறினேனா? அல்லது அவளுக்காக நான் மாறினேனா? கரெக்ட், அந்த பொண்ணை கேர் பண்றேன் பண்றேன்னு என் நிலைமை இந்த அளவு மோசம் ஆய்டுச்சு! அக்கறையை காட்டுறேன்னு என்னை நானே கேவலப்படுத்திக்கிட்டேனே…. சே! எனக்கே என்னை பிடிக்கலை…. அவன் தவித்த மனம் ஏதேதோ சிந்தித்து தன்னை வருத்திக்கொண்டது.
மறுநாள் காலை, இவளை கண்ட தியாகுவிற்கும் அருணாவிற்கும் ஒரே ஆச்சர்யம். நடந்ததை கேள்விப்பட்டு, பத்திரமாக வீடு வந்தாள் என்று சந்தோஷப்பட்டனர். இனி நான் ஊருக்கு போகவில்லை, இரண்டு மாதம் கழித்தே ஊருக்கு செல்கிறேன் என்று கூறி விட்டாள் மலர்.
காலை விடிந்ததில் இருந்து அவனிடம் பேச துடித்து கொண்டு இருந்தாள் மலர். அது தெரிந்தும் அவளை அவாய்ட் செய்தான் அர்விந்த். முன்பும் இதே போல் தான் ஒதுங்கி சென்றான், அப்போது அவர்களுக்குள் இருந்தது வேறு. இப்போது அது போல் இல்லை, அதனால் அவனை அப்படியே ஒதுங்கியே இருக்க விடாமல், மதிய நேரம் பெரியவர்கள் உறங்க, தைரியமாக அவன் அறைக்கு சென்றாள் மலர். இவளை அவன் அறையில் கொஞ்சமும் எதிர்பார்க்காதவனுக்கு மிகுந்த ஆத்திரம். மனதினில், பார் இதெல்லாம் உன் நடத்தையின் விளைவு தான் என்று அவனை திட்டிக்கொண்டான். அதை அப்படியே காட்ட முடியாமல் வேறு விதமாக காட்டினான்.
“நான் சும்மா இல்லை மலர்! வேலை பார்க்கிறேன்!” கடுப்பாக பேசினான் அர்விந்த். அவனின் மனநிலை புரிந்தாலும் அதை பொருட்படுத்தாமல், பேசியே ஆக வேண்டும் அவனிடம் என்ற முடிவில் தொடர்ந்தாள்.
“என்னை ஏன் அவாய்ட் பண்றீங்க? என்னால தான் எல்லாம்னு நினைக்கிறீங்களா?”
“என்னை என்ன நினைச்சே நீ?”
“நான் தப்பு பண்ணேன்னு நினைச்சு தானே நீங்க ஒதுங்கி போறீங்க? முன்னாடியும் இப்படி தான் செஞ்சீங்க, இப்போ தான் அது எனக்கு புரியுது, என்கிட்ட ஏதோ தப்பு இருக்குனு நீங்க நினைக்கிறீங்க….”
முன்பு ஒரு நாள் இதே போல் இவன் அவளிடம் கேட்டு கோபப்பட்டதும், அதற்கு அவள் சொன்ன பதிலும் இப்போது நன்றாக புரிந்தது அர்விந்திற்கு. அதை அவளிடம் சொன்னான் இப்போது.
“நீ சொன்னியே, நாம தப்பு செஞ்சாலும், குற்ற உணர்ச்சியில் ஒதுங்கி போவோம்னு…. இப்போ என் நிலைமை அது தான்!” என்றான் அவமானத்துடன்.
“நீங்க அப்படி நினைக்க வேண்டாம் சார்!”
“நீ எனக்காக அப்படி சொல்லலாம்! நடந்தது பெரிய தப்புனு எனக்கு தெரியும்! என்னால நம்பவே முடியலை நான் செஞ்சதை!”
“நான் ஒன்னு சொன்னா கோபப்பட கூடாது!” பீடிகை போட்டாள் மலர். ஏனோ பக் பக்கென்றது அவனுக்கு. என்ன சொல்ல போகிறாள் இவள்?
“என்ன?” அவன் குரலே வெளியே வரவில்லை.
“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் சார்.” அவனை இலகுவாக்க எண்ணி அவள் ஆரம்பித்ததுது பெரிய பிரளயத்தையே அங்கே ஏற்படுத்தியது.
“அப்படினா?” கூர்மையுடன் வந்தது கேள்வி. அவளை குத்தி கிழிக்க போகுது அவன் வாரத்தைகள் என்று புரியாமல் மேலும் பேசினாள் மலர்.
“நீங்க ரொம்ப வருத்தப்படாதீங்கனு சொல்றேன், நான் உங்களை தப்பா நினைக்கலை….”
“இங்க நீ தப்பா நினைப்பே, நினைக்கலைங்கிறது இல்லை விஷயம்! நான் செஞ்சதே தப்பு! நீ என்னை அப்பாவே அறைஞ்சு இருக்கணும்!”
“நான்…. எனக்கு…. நீங்க நல்லவர், உங்களை போய் எப்படி?” முழு மனதையும் சொல்ல முடியாமல் முழுங்கி முழுங்கி பேசினாள் மலர்.
“நான் நல்லவன், உனக்கு தெரிஞ்சவனா இருந்தா இதை எல்லாம் ஒத்துக்கணுமா? என்ன விழி உளர்றே?”
“ஐயோ! அப்படி இல்லை! அந்த மாதிரி இல்லை….”
“எந்த மாதிரி அப்பறம்? அய்யோ சரி விடு! இதை நினைச்சாலே எனக்கு அசிங்கமா இருக்கு! என்னை நான் என்ன செய்றது? நீ என் பக்கமே வராதே மலர் ப்ளீஸ்!”
அவன் மிகவும் புலம்ப, மலரால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் துணிந்து ஒரு கேள்வி கேட்டாள்.
“ஏன் சார், உங்க மனசு என்ன சொல்லுதுனு நல்லா கேட்டீங்களா? நமக்கு நம்மளை பத்தி தெரியாம இருக்காது சார்! வேணும்னே அதை ஒதுக்கினா தான் உண்டு!” சூப்பர் அப்பு! நல்ல சொல்லு இவனுக்கு! அவனின் மனசாட்சி உற்சாகமாக கத்தியது.
“இப்போ நீ என்ன சொல்ல வரே? நான் வேணும்னே தான் செஞ்சேன்னா?”
“அப்படி இல்லை, ஏன் செஞ்சீங்கனு….”
“அது தானே புரியலை எனக்கு? நீ அழுது அழுது, உன்னை சமாதானம் செய்யணும்னு போய் அது அளவு மீறி போச்சு!”
“யார் என் இடத்தில இருந்து அழுதாலும் இது மாதிரி உங்களால் சமாதானம் செய்ய முடியுமா சார்?”
“மலர்!!” சுதி ஏறியது அவன் குரலில்.
“நீங்க என்ன வேணா சாக்கு கண்டுபிடிங்க சார், ஆனா நான் என் மனசில் இருக்கிறதை சொல்லிட்டு போறேன்! இதை விட எனக்கு வேற வாய்ப்பு கிடைக்காதுனு எனக்கு தெரியும்! என் மனசில் நீங்க இருக்கீங்க, உங்க கோபத்தில் ஆரம்பிச்சு, உங்க அக்கறை அப்பறம் அன்பு எல்லாத்தையும் நான் அனுபவச்சு இருக்கேன். அதுக்கு மேல, சொல்ல தெரியாத, வார்த்தையால் உணர வைக்க முடியாத, உங்க பார்வை மட்டுமே என்கிட்ட சொன்ன சில விஷயத்தில என் மனசை உங்க கிட்ட இழந்துட்டேன்! அதனால் தான் நான் நேத்து அமைதியா இருந்தேன்…. இல்லைனா நீங்க சொன்ன மாதிரி அறைஞ்சு இருப்பேன்! உங்களுக்கும் அதே தான் சார், எல்லார்கிட்டயும் இது மாதிரி செய்ய முடியாது” என்றாள் மெதுவாக.
தன் மனதை, காதலை சொல்கிறோம் என்று படபடப்பாக நின்றவளுக்கு கண்டிப்பாக அசிங்கமாக திட்ட போகிறான் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. ஆனால் அவளை தான் எப்போதும் ஏமாற்றுவானே அவன்! அந்த வகையில்,
நிறுத்த முடியாமல் கடகடவென சத்தமாக சிரித்தான் அர்விந்த். ஏசி ரூம் ஆதலால் தப்பித்தார்கள். இப்படி ஒரு சிரிப்பை அவனிடம் இருந்து கொஞ்சமும் எதிர்பார்க்காதவள், திகைத்த முகத்துடன் நின்றாள்.
சற்று நேரம் சிரித்து முடித்தவன்,
“இந்த மாதிரி சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு, தேங்க்ஸ் விழி” என்றவன்,
“நீ சின்ன ஊரில இருந்து வந்து இருக்க, அதான் உனக்கு ஒன்னும் புரியலை! இது பெங்களூர்! இங்க பொண்ணு தன்னோட பையன் பிரண்ட் கிட்ட ஐ லவ் யூ சொல்லுவா, சில நேரம் அன்பு ரொம்ப அதிகமானா முத்தம் கூட கொடுப்பா! இதெல்லாம் இங்க யாரும் பெரிசா எடுத்துகிறது இல்லை. அதுக்காக நான் செஞ்சது கரெக்ட்னு சொல்லலை, அது தப்பு தான். என்னை பொறுத்தவரை, உன் மேல எனக்கு இருந்த அக்கறை, நேத்து இருந்த டென்ஷன் எல்லாம் சேர்ந்து நான் என்னையே லூஸ் பண்ணிட்டேன்! மொத்தமா சொதப்பிட்டேன்! நீ வேற கதை எல்லாம் சொல்லாதே….ப்ளீஸ்….”
“அவ்ளோதானா சார்? அன்னைக்கு என்னை மால் அழைச்சுட்டு போனப்போ, நடந்த எதுவும் உங்களுக்கு நியாபகம் இல்லையா?” அவன் பேச்சில் கோபம் கடுமையாக வந்தாலும் அமைதியாக கேட்டாள் மலர்.
ஏன் அவனுக்கு நியாபகம் இல்லை, ஓடி ஒளிந்தவன் தானே? ஆனால் அதுக்கு தான் வேறு வர்ணம் பூசி இருக்கானே.
“அதெல்லாம் ஜஸ்ட் உன்னை சந்தோஷமா வைச்சுக்க…. அவ்ளோதான்…. நீ ரொம்ப நல்ல பொண்ணு மலர்.”
“நான் என் மனசுக்கு உண்மையா இருப்பேன் சார் எப்போதும்! உங்களை மாதிரி பேச வராது எனக்கு…. என்ன இருக்கோ என் மனசில் அதை நான் ஆமானு ஏத்துகிறேன், அதுக்காக மனம் இழுக்குற பக்கமெல்லாம் போற ஆளு இல்லை, உங்க விஷயம் மட்டும் தான் இப்படி, அதிலையும் எனக்கு என் தகுதி தெரியும் சார்! நான் உங்களை தான் இருபத்தி நாலு மணி நேரமும் நினைக்கிறேன்! இதை தானே எல்லாரும் ஐ லவ் யூனு சொல்றாங்க! அப்போ ஐ லவ் யூ சார்!” என்றாள் மலர்.
இதெல்லாம் பேச வேண்டும் என்று அவள் வரவே இல்லை! அவன் வருந்துவான் அது தேவையில்லை என்று சொல்ல மட்டும் தான் வந்தாள். ஆனால் அவனின் பேச்சு, அவனின் செயலுக்கு அவன் கொடுக்கும் விளக்கம் எல்லாம் அவளை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருந்தது.
ஒரு நிமிடம் கண்களை இறுக மூடி திறந்தவன், “நீ ஊரில் இருந்து வந்தப்போ எப்படி வந்தே? இப்போ எப்படி பேசுற? இது எப்படி தெரியுமா? என்னோட ஸ்டுபிடிட்டினால்! இப்படி ஒரு நிலைமையை நானே உருவாக்கிட்டேன்! இதை அப்படியே நிறுத்திக்க! நாளையில் இருந்து உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! வந்த வேலையை முடிச்சிட்டு கிளம்பி போய்கிட்டே இரு!” என்றவன் எழுந்து அவளை கதவு அருகே நகருமாறு கையை காட்டினான்.
“ஒன்னே ஒன்னு கடைசியா சொல்லிக்கிறேன் சார், நான் இன்னும் அதே பொண்ணு தான், என் மனசை மறைக்காம சொன்னேனே தவிர, வேற எந்த நோக்கமும் எனக்கு இல்லை! மனசை உரக்க சொல்ற தைரியம் எல்லாருக்கும் இருக்காது சார், அது உண்மையா நேர்மையா இருக்கவங்களால் மட்டும் தான் முடியும்! நான் வேலை பார்க்க தான் வந்தேன்னு எனக்கு நினைவு இருக்கு! தேங்க்ஸ் சார்!” என்றவள் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்த திருப்தியோடு அங்கிருந்து தன் வேலையை பார்க்க சென்றாள்.
மக்களே, கொஞ்சம் கமெண்ட்ஸ் கொடுங்க! என்ன நினைக்கிறீங்கனு …அப்போ தான் அடுத்த எபி எழுத எனர்ஜி வரும்!
Romba nalla poguthu story but 2days ah epi kudukala.interesting.nxt epi vendum
sure, thank you sisi