விஷம் – 16
தன்னுடைய அறைக்குள் இருந்த அர்ச்சனாவிற்கோ இன்று நடந்ததை எல்லாம் எண்ணி உடல் சிலிர்த்தது.
யாழவனைப் பார்த்து முழுதாக ஒரு வாரம் கூட முடியவில்லை அதற்குள் இப்படி என் இதயத்தை் திறந்து விட்டானே.
அவன் முத்தமிட்ட உதடுகளை வருடிப் பார்த்தவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
‘ஐயோ பயந்து போய் மயங்கி வேற தொலைச்சிட்டேன்.. என்ன பத்தி என்ன நினைச்சிருப்பாரோ தெரியலையே..’
அவளை நினைத்து அவளுக்கே சங்கடமாக இருந்தது.
அதே நேரம் “அர்ச்சனாம்மா இவ்ளோ நேரம் உள்ள என்ன பண்ற..? சீக்கிரமா வா சாப்பிடலாம்…” என அவளுடைய அன்னை அழைக்க,
யாழவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவள் தன் தலையை உலுக்கி விட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.
அன்னையைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்குள் சற்றே குற்ற உணர்ச்சி தலை தூக்கியது.
எப்படியாவது அவரிடம் இதைப் பற்றிக் கூற வேண்டும் என சிந்தித்தவாறே ஹாலில் வந்து அமர்ந்தவளின் கரத்தில் உணவுத் தட்டைக் கொடுத்தவர்,
“காலைல வேலைக்குப் போகணும்ல சீக்கிரமா சாப்பிட்டு தூங்கு..” என்றார் அவளுடைய அன்னை.
அவளோ சரி என தலையசைத்தாலும் கூட உணவை உண்ணாது பிசைந்து கொண்டே இருக்க அவளின் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவருக்கோ அவளுடைய நடவடிக்கை சற்றே விசித்திரமாக இருந்தது.
“ஏதாவது பிரச்சனையா அச்சு..?”
“இ.. இல்லம்மா எந்த பிரச்சினையும் இல்லை..”
“அப்போ ஏன்டி ஒரு மாதிரி இருக்க..?”
“நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்மா..”
“என்ன விஷயம் மா சொல்லு..?”
தன் கரத்தில் இருந்த உணவுத் தட்டை மேஜை மீது வைத்து விட்டு கை கழுவி வந்தவளுக்கு தன் அன்னையைப் பார்த்து தயக்கமாக இருந்தது.
“ம்மா.. அன்னைக்கு உடம்பு முடியலன்னு மிட்நைட்ல வீட்டுக்கு வந்தேன்ல..”
“ஆமா..”
“அ.. அன்னைக்கு நடந்ததே வேறமா..” திணறினாள் அவள்.
“எனக்கு எல்லாம் தெரியும்டா..” என அவர் பரிவோடு கூற இவளுக்கோ அதிர்ச்சியில் விழிகள் விரிந்தன.
“என்னம்மா சொல்றீங்க..? என்ன தெரியும்..?” நான் உங்ககிட்ட எதுவுமே சொல்லலையே..” என அவள் அதிர்ந்து கேட்க,
“அன்னைக்கு நீ வரும்போது உன்னோட முகம் ரொம்ப வாடிப் போய் இருந்துச்சு… கண்ணு கலங்கி சிவந்திருந்திச்சு… புதுசா தச்ச ஜூனிஃபார்ம் போட்டுருந்த.. எப்பவுமே மிட்நைட் வராத பொண்ணு அன்னைக்கு வந்து இருக்கேன்னா ஏதாவது பிரச்சனைன்னு தெரிஞ்சது.. பட் சொல்ல விருப்பம்னா நீயே சொல்லி இருப்ப நீ எதுவும் சொல்லாததால நானும் உன்னை தூண்டித் துருவி கேட்கல..
ஆனா உடனே பானுமதிக்கு கால் பண்ணி என்ன பிரச்சனைன்னு விசாரிச்சு நடந்த எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன்..” என்றதும் அவளுக்கோ விழிகள் கலங்கிவிட்டன.
“பானு சொன்னதைக் கேட்டு பதறிப் போய்ட்டேன்மா..”
“சா.. சாரிமா நான் வேணும்னே மறைக்கல.. நடந்தது தெரிஞ்சா நீங்க வருத்தப்படுவீங்கன்னுதான் உங்ககிட்ட சொல்லல..”
“உன்ன பத்தி எனக்குத் தெரியாதா தங்கம்..? என் பொண்ணோட முகத்தை வச்சு அவ எப்படி இருக்கான்னு கண்டுபிடிச்சிடுவேன்.. நீ வேற யூனிஃபார்ம் எல்லாம் போட்டுட்டு வந்தும் கூட கண்டு பிடிக்காம இருப்பேனா..?”
“அப்போ உண்மை தெரிஞ்சதும் என்கிட்ட கேட்டு இருக்கலாமே..?”
“அப்பவே கேட்டு இருந்தா நீ நடந்தத நினைச்சு இன்னும் உடைஞ்சு போயிருப்ப.. சீக்கிரமா அந்த சம்பவத்துல இருந்து வெளியே வந்திருக்க மாட்ட.. அதனாலதான் அமைதியா இருந்தேன்..” என்றதும் தன்னுடைய அன்னையின் மீது இருந்த மதிப்பு அவளுக்கு இன்னும் கூடியது.
“ஜாக்கிரதையா இருமா.. பானு நடந்த எல்லாத்தையும் சொன்னதும் என்னோட உசுரே ஒரு நிமிஷம் போயிடுச்சு தெரியுமா..? நல்ல நேரத்துக்கு அந்த தம்பி வந்து உன்னை காப்பாற்றினார்.. இல்லன்னா என்ன ஆகிறது..?’ என எழுந்து வந்து பாசமாக அர்ச்சனாவின் தலையை அவர் வருட,
தன் அன்னையின் மீது அப்படியே சாய்ந்து கொண்டவளுக்கு விழிகள் கசிந்தன.
“அ.. அம்மா..”
“என்னடாம்மா…? நடந்தத நினைச்சு இன்னும் ஃபீல் பண்றியா..? அவனதான் போலிஸ் பிடிச்சிருச்சுல்ல..?”
“அது இல்லம்மா… உங்ககிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்..”
“சொல்லு அச்சு..”
“எனக்கு ஒரு பையனை ரொம்ப பிடிச்சிருக்குமா.. அவருக்கும் என்ன புடிச்சிருக்கு..” என்றவளின் தலை தானாக குனிந்தது.
அவளுடைய அன்னைக்கோ சற்று அதிர்ச்சி தான்.
அர்ச்சனா இப்படிக் கூறுவாள் என அவர் சிறிதும் எதிர்பார்த்து இருக்கவில்லை.
சட்டென தன்னை சமாளித்துக் கொண்டவர்,
“பையன் குணம் எப்படி மா..? என்ன பண்றாரு..? உனக்கு எப்படி அவரைத் தெரியும்…?” என அவர் ஒவ்வொன்றாக விசாரிக்க கடகடவென அனைத்தையும் கூறி முடித்தாள் அவள்.
அவள் கூறி முடித்ததும் அவருடைய முகத்திலோ கலவரமே எஞ்சியது.
“அர்ச்சனா என்னடி சொல்ற..?” என பயந்தவராகக் கேட்டார் அவர்.
“அ… அம்மா பயப்படாதீங்க.. அவர் ரொம்ப நல்லவர் மா..” என யாழவனைப் பற்றி எடுத்துக் கூற,
“ஆனா அது உங்க ஓனரோட மகன் ஆச்சே.. அவங்க எல்லாம் கோடீஸ்வரங்கம்மா.. நம்ம கூட சம்பந்தம் வச்சுப்பாங்களா..?” எனக் கேட்டவரின் குரலோ கலங்கி ஒலித்தது.
அர்ச்சனாவின் விழிகளும் கலங்கத்தான் செய்தன.
“எ… எல்லாத்தையும் அவரே பார்த்துக்கிறேன்னு சொன்னாரும்மா..”
“ப்ச்.. என்னதான் அவரே பாத்துக்குறேன்னு சொன்னாலும் அவங்க அம்மா அப்பாவுக்கும் பதில் சொல்லணும்ல..? எனக்கு என்னவோ இது சரியா வரும்னு தோணலம்மா… இப்படி அவசரப்பட்டுட்டியே..” என்றதும் இவளுக்கோ விழிகளில் இருந்து கண்ணீர் சரேலென வழிந்து விட்டது.
அவள் உடைந்து விழிகள் கலங்குவதைக் கண்ட அவளுடைய அன்னையோ,
“சரி இத அப்புறமா பாத்துக்கலாம்.. முதல்ல சாப்பிடு..” எனக் கூறி விட்டு எழுந்து சென்றுவிட சாப்பிட்டதாக பேர் பண்ணிவிட்டு கையைக் கழுவி விட்டு தன்னுடைய அறைக்குள் வந்து படுத்தவளுக்கோ நெஞ்சம் பிசைந்தது.
அன்னை கூறுவதும் சரிதானே..?
விரலுக்கு தக்க வீக்கம் வேண்டும் என்று சும்மாவா சொன்னார்கள்.
அக்கணம் நிம்மதி இழந்து போனாள் அவள்.
அவசரப்பட்டு விட்டோமோ..?
‘யாழன் நீங்க ஏன் இவ்வளவு பணக்காரரா இருக்கீங்க..? சாதாரண ஒருத்தரா என்கிட்ட அறிமுகமாகி இருக்கக் கூடாதா..?’ என ஏங்கியது அவளுடைய மனம்.
அதே கணம் புது எண்ணில் இருந்து அழைப்பு வர அதனை ஏற்று காதில் வைத்தவள் “ஹலோ யாரு..?” எனக் கேட்டாள்.
“ஹேய் பேபி இட்ஸ் மீ.. உன்னோட யாழன்.. இன்னுமா நீ என்னோட நம்பரை சேவ் பண்ணல..?” என அவனுடைய குரல் உற்சாகமாக ஒலித்ததும் இவளுக்கோ விழிகளில் கண்ணீர் அதிகமாக சுரக்கத் தொடங்கியது.
“அச்சும்மா கேன் யு ஹியர் மீ…?” என அவன் அடுத்த கேள்வியைக் கேட்க,
“ம்ம்..” என்றாள் அவள்.
அவளுடைய ஒற்றை வார்த்தையிலேயே அவள் நன்றாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டவன் சட்டென அவளுக்கு வீடியோ அழைப்பை ஏற்படுத்த திணறிப் போய்விட்டாள் அவள்.
அழைப்பைத் துண்டித்து விட்டு விழிகளைத் துடைத்துக் கொண்டவளுக்கு நில்லாமல் கண்ணீர் வழியத் தொடங்கியது.
“பேபி இப்போ நீ என்னோட காலை அட்டென்ட் பண்ணலன்னா நேரா உங்க வீட்டுக்கு வந்து உன்ன பார்ப்பேன்..” என்ற அவனுடைய குறுஞ்செய்தியைப் படித்து அவளுக்கு சிறு மாரடைப்பே வந்து சென்றது.
மீண்டும் அவன் அழைப்பை ஏற்படுத்த இம்முறை எங்கே அழைப்பைத் துண்டித்தால் அவன் தன்னைத் தேடி வீட்டுக்கே வந்து விடுவானோ எனப் பயந்து போனவள் அவனுடைய வீடியோ அழைப்பை ஏற்று திரையில் தெரிந்த அவனுடைய முகத்தை விழிகள் கலங்கப் பார்த்தாள்.
“ஹேய், என்னோட அச்சு பேபி, இப்ப எதுக்காக க்ரை பண்ணிட்டு இருக்கீங்க?”
“யா… யாழன்…”
“என்னடா பேபி?”
“நம்ம அம்மாகிட்ட நம்ம லவ் விஷயத்தை சொல்லிட்டேன்,” என்றவளுக்கு உதடுகள் அழுகையில் துடித்தன.
“வாவ், குட்! என்னோட மாமியார் என்ன சொன்னாங்க?”
“உங்க குடும்பம் ரொம்ப வசதியான குடும்பமாம்.. இதெல்லாம் சரியா வராதுன்னு சொல்றாங்க யாழன், எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இதைப் பத்தி எல்லாம் நான் எதுவுமே யோசிக்கல. இப்போ இதெல்லாம் நினைச்சா பயமா இருக்கு,” என்றவள் உடைந்து அழத் தொடங்கிவிட, அவனுக்கு உள்ளம் பிசைந்தது.
அவளுடைய அழுகையை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
மனம் விரும்பியவளின் கண்ணீர்த் துளிகளை எந்தக் காதலனால்தான் தாங்கிக் கொள்ள முடியும்?
“இதோ பாரு பேபி, இனி நீ அழவே கூடாது,” என அழுத்தமாகக் கூறியவன் அழைப்பைத் துண்டித்தவிட, இவளுக்கோ மேலும் அழுகைதான் பெருகியது.
ஃபோனை அருகே இருந்த மேசை மீது வைத்து விட்டு போர்வையை இழுத்து தன்னுடைய முகம் வரை போர்த்திக் கொண்டவள் மீண்டும் அழ ஆரம்பித்தவிட,
அடுத்த அரை மணி நேரத்தில் அவளுடைய அறைக்குள் ஓடி வந்தாள் அர்ச்சனாவின் தங்கை கீர்த்தனா.
“அக்கா.. அக்கா… தூங்கிட்டியா நீ?”
“இல்லடி, எதுக்கு இப்படிக் கத்துற? என்ன விஷயம்னு சொல்லு…” என சட்டென தன் விழிகளைத் துடைத்துக் கொண்டு படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவாறு கேட்டாள் அர்ச்சனா.
“உன்னோட லவ்வர்னு சொல்லிகிட்டு ஒருத்தர் உன்ன பாக்க வந்திருக்காரு.. என்கிட்ட ஒரு வார்த்தை உன்னோட காதல பத்தி சொன்னியா நீ..? துரோகி..” என அவளுடைய தங்கை அவளிடம் குறைபட்டுக் கொள்ள, இவளுக்கோ உடல் விதிர்விதிர்த்துப் போனது.
“என்னடி சொல்ற வயாழன் வந்திருக்காரா?” எனப் பதறியவள் வேகமாக வெளியே செல்ல முயன்று, பின் தான் அணிந்திருந்த நைட்டியை குனிந்து பார்த்து, தன் தலையில் அடித்துக் கொண்டவள் ஒரு துப்பட்டாவை எடுத்து தன் மார்பின் மீது போட்டுவிட்டு பதற்றத்தோடு அறையை விட்டு வெளியே சென்றாள்.
அங்கே அவளுடைய அன்னையுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் அவன்.
காதலனும் அன்னையும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், இவளுக்கோ அத்தனை படபடப்பு.
வேகமாக வெளியே ஓடிவந்த அர்ச்சனாவை தலை முதல் கால் வரை அழுத்தமாக தன் பார்வையால் வருடியவன்,
‘நான் இருக்கேன், அழக்கூடாது,’ என்பது போல இமை மூடித் திறக்க, இவளுக்கோ பதற்றத்தில் உடல் நடுங்கவே ஆரம்பித்துவிட்டது.
“எனக்கு அர்ச்சனாவ ரொம்ப பிடிச்சிருக்கு ஆன்ட்டி. அவளுக்கும் என்ன பிடிச்சிருக்கு. உங்க சம்மதம் இல்லாம அவ என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கவே மாட்டா. நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்,” என அவன் அர்ச்சனாவின் அன்னையிடம் பேச, அவருடைய விழிகளிலோ வியப்பு.
“மரியாதையான பையன்தான்,” என எண்ணிக் கொண்டவர்:
“கல்யாணம் ஒன்னும் சின்ன விஷயம் இல்ல தம்பி… காலா காலத்துக்கு நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்து வாழணும். உங்களோட வசதி வேற, எங்க வசதி வேற. நமக்குள்ள ஒத்துப் போகும்னு தோணலையே…”
“வசதி ஒத்து போகணும்னு என்ன அவசியம் ஆன்ட்டி? ரெண்டு பேரோட மனசுதான இங்க ஒத்து போகணும். பணம் எல்லாம் இங்க மேட்டரே கிடையாது. என்னோட பேமிலியை நினைச்சு நீங்க பயப்படாதீங்க. நீங்க சரின்னு சொன்னா, நாளைக்கே நாங்க எல்லாரும் பொண்ணு பாக்க வர்றோம். எனக்கு அர்ச்சனா மட்டும் போதும்,” என அவன் கூற அதற்கு மேல் அவராலும் மறுக்க முடியவில்லை.
இவளோ பதற்றத்தோடு அவளுடைய அறை வாயிலில் கைகளைப் பிசைந்தபடி நிற்க, “அம்மாடி, அர்ச்சனா மாப்பிள்ளைக்கு காபி போட்டு கொடும்மா..” என அவர் கூற, சடாரென நிமிர்ந்து அவரை பார்த்தவளுக்கு முகம் முழுவதும் புன்னகை.
சட்டென்று ஓடிவந்து தன்னுடைய அன்னையை அணைத்துக் கொண்டவள்,
“தேங்க்ஸ் மா..” எனக் கூறி அவருடைய கன்னத்தில் முத்தம் ஒன்றைக் கொடுத்துவிட்டு சமையல் அறைக்குள் ஓடிவிட, அவளுடைய சிறுபிள்ளைத்தனத்தை பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு தனக்கும் முத்தம் கிடைக்காதா என்ற ஏக்கம் எழுந்து விட்டது.
“சந்தோஷம் தம்பி, நீங்க உங்க அம்மா அப்பாகிட்ட பேசிட்டு சொல்லுங்க. அப்பா இல்லாம வளந்த பொண்ணு நல்லா பாத்துப்பீங்கள்ல..?” என தயக்கத்தோடு அவர் கேட்டதும் அவனுக்கோ இதழ்களில் சிரிப்பு.
“தேவதை மாதிரி பார்த்துப்பேன்,” என்றான் நிறைவான புன்னகையுடன்.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். ஆவலாக வெயிட்டிங் அடுத்த பதிவிற்காக.👌👌👌👌👌👏👏👏👏😍😍😍😍🥰🥰🥰🥰🤩🤩🤩❤️❤️❤️❤️❤️