17. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

5
(16)

வரம் – 17

ஷர்வாவின் மனமோ வெகுவாக தடுமாறத் தொடங்கியிருந்தது.
தன்னை மீறி மனம் பேராசை கொள்வதை அவனால் தடுக்க இயலவில்லை.

இப்போதெல்லாம் வைரத்தை கண்டுபிடிப்பதை விட அவனுடைய கண்கள் ரசிக்கும் மோஹஸ்திராவே அவனுக்குத் தன் பரம்பரை வைரத்தை விட விலை மதிப்பாகத் தெரியத் தொடங்கி இருந்தாள்.

ஆனால் அடுத்த கணமே அவள் இன்னொருவனின் காதலி என்ற எண்ணம் அவனுடைய மனதுக்குள் எழுந்து விட மனதால் துடிதுடித்துப் போவான் அவன்.

அவன் நினைத்தால் ஒரே நாளில் அவளைத் தன்னவளாக மாற்றி விட முடியும்.

வலுக்கட்டாயமாக கவர்ந்து வந்தாகினும் அவளை தனக்குரியவளாக மாற்றும் வல்லமை அவனிடம் உண்டுதான்.

ஆனால் அவளிடம் வெறுப்பை சம்பாதித்து அவனுடைய மனதை உடைத்து வாழ்க்கையை ஆரம்பிப்பதில் அவனுக்குக் கிஞ்சித்தும் விருப்பமில்லை.

பிடித்ததை நிச்சயமாக அடைந்தே ஆக வேண்டுமா என்ன..?

எல்லோருக்கும் வானத்தில் உள்ள நிலவையும்தான் அதிகமாக பிடிக்கின்றது… அதற்காக நிலவைப் பிடித்து தங்களுடன் வைத்திருக்க முயற்சிக்கின்றனரா இல்லை அல்லவா..?

தூரத்தில் இருந்தாலும் ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வதைப் போல தன் மனதுக்குப் பிடித்த பெண்ணை ரசிப்பதோடு நிறுத்தி விடலாம் என்ற முடிவை எடுத்திருந்தான் அவன்.

உள்ளம் வலிக்கத்தான் செய்தது.

அதுவும் அரவிந்தன் அவளை நெருங்கி அணைக்கும்போதெல்லாம் உடல் தீயாய் எரிவதைப் போலத் தவிக்கும்.
பொறாமைத் தீ கொழுந்து விட்டு எரியும்.

அனைத்தையும் அடக்கிக் கொண்டு இயல்பாக இருப்பதற்கு படாத பாடு படுவான் அவன்.

இந்தக் காதல் ஏன் என்னுடைய சம்மதத்தைக் கேட்டு வரவில்லை..?

எப்படி என் மனம் அவள் மீது காதலில் விழுந்தது..?

எந்தச் சந்தர்ப்பத்தில் அவளை எனக்குப் பிடித்துக் கொண்டது..?
நிஜமாகவே அவனுக்குப் புரியவே இல்லை.

அவன் ஒன்றும் விடலைப் பையன் அல்லவே ஒரு பெண்ணைக் கண்டதும் ஆசைக்கொள்ள.

அவன் அறியாமலேயே அவனுக்குள் காதலெனும் கள்ளம் புகுந்து கொள்ள என்ன செய்வது எனத் தெரியாது திகைத்துத் தடுமாறினான் அவன்.

பெருமூச்சோடு தன்னுடைய சிந்தனைகளை கட்டுப்படுத்திக் கொண்டவன் இனி அவளைப் பற்றி நினைக்கக் கூடாது அவளின் அருகாமையை விரும்பக் கூடாது என எத்தனையோ கட்டுப்பாடுகளை விதித்தும் கூட மனம் கட்டுத்தறி இன்றி அவளை மட்டுமே எண்ணிக் கொண்டிருப்பதை நினைத்து வெறுத்துப் போனான் அவன்.

இப்படியே போனால் நிச்சயம் மனதால் மிக மிக பலவீனமாகிப் போவோம்…
ஒரே ஒரு காதல் கொண்டதன் காரணமாக பலவீனமாகிப் போய் மனதை உடைத்து விடக்கூடாது என்ற உறுதியான முடிவை எடுத்திருந்தான் அவன்.

நமக்கு கிடைக்க வேண்டும் என எழுதியிருந்தால் நிச்சயம் அது கிடைக்கும்.

இன்னொருத்தரின் பொருளுக்கு ஒருபோதும் ஆசைப்படக்கூடாது என்பதை வலுக்கட்டாயமாக தன்னுடைய மூளையில் பதிவேற்றிக் கொண்டவன் சோர்வாக படுக்கையில் அமர்ந்தான்.

அன்று அவளோடு நெருக்கமாக இருந்தது அவளை முத்தமிட்டதெல்லாம் நினைவில் எழுந்து மீண்டும் அவளுடைய ஸ்பரிசமும் அருகாமையும் வேண்டுமென மனம் அடித்துக்கொள்ள ஐயோ என்றானது அவனுக்கு.
ஐந்து நிமிடங்கள் கூட தன்னுடைய மனதில் இருந்து அவளை அகற்ற முடியவில்லையே..

வாழ்க்கை முழுக்க அவளுடைய நினைவுகள் தன்னை துரத்தப் போகின்றதோ என எண்ணி நொந்து போனான் அவன்.

காலம் அவனுக்கு எதிர்பாராத இன்ப அதிர்வை வழங்கக் காத்திருப்பதை அக்கணம் அவன் அறியவில்லை.

********
அரவிந்தனோ கொலை நடந்த இடத்திற்குச் சென்றவன் அங்கே கழற்றப்பட்டிருந்த பழைய ஆடைகளைக் கண்டு புருவம் சுருக்கினான்.

வந்த கொலையாளி இந்த ஆடைகளைக் களைந்து விட்டு பைரவ்வின் ஆடைகளை எடுத்து அணிந்ததன் பின்னரே பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்பது புரிந்துவிட அந்த ஆடைகளை தன்வசம் கைப்படுத்திக் கொண்டவன் அந்த ஆடைகளை வேகமாக பரிசோதிக்க அதன் உள்ளே கழற்றப்பட்டிருந்த சிறிய சிம் கார்டு ஒன்று அவனுக்குக் கிடைத்தது.

சட்டென அந்த சிம்கார்டை யாரும் பார்க்காமல் தன்னுடைய பாக்கெட்டில் போட்டுக் கொண்டவன் அடுத்த கணம் அந்த இடத்தை விட்டு நீங்கிச் சென்றிருந்தான்.

ஆபீஸியலாக இல்லாமல் தன்னுடைய நண்பன் ஒருவனிடம் அந்த சிம்கார்டை கொடுத்து அதைப் பற்றிய விடயங்களை தனக்கு உடனடியாக அறியத் தருமாறு கூறியவன் அந்தத் திருடனை பிடிக்கும் வேலையில் வெகு தீவிரமாக இறங்கி இருந்தான்.

அவனுக்கு அவன் வேண்டும்..
அவனை நேரில் சந்திக்க வேண்டும் என்ற வெறியே அரவிந்தனுக்குள் எழுந்திருந்தது.

*******
அடுத்த நாள் காலை அரவிந்தனை தன்னுடைய வீட்டிற்கு வர வைத்திருந்தாள் மோஹஸ்திரா.

“ஹேய் குட் மார்னிங் பேபி டால்… என்ன இன்னைக்கு காலையிலேயே வர சொல்லி இருக்க..? ஏதாவது ஸ்பெஷலா..?” எனக் கேட்டவன் அவளை நெருங்கி அவளுடைய இடையில் கரம் பதித்து தன்னை நோக்கி இழுத்து இறுகணைத்துக் கொள்ள அவன் இப்படி அணைத்ததும் மலர்ந்து சிரிப்பவள் இன்றோ ஒருவித வேதனையோடு அவனுடைய மார்புக் கூட்டில் தன் முகத்தைப் புதைக்க,

எதுவோ சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டான் அரவிந்தன்.

“ஹேய்.. என்னம்மா என்ன ஆச்சு..? ஏன் டல்லா இருக்க..? ஏதாவது ப்ராப்ளமா..?” என அவளுடைய கூந்தலை வருடியவாறே அவன் கேட்க,
அதே கணம் ஷர்வாவின் காரோ அங்கே வந்து நின்றது.

அவனுடைய காரைக் கண்டதும் தன் மீது சாய்ந்திருந்தவளை விலக்கியவன்,

“இவன் இப்போ எதுக்கு இங்கே வர்றான்..?” எனக் கேட்டவாறு அவளைப் பார்த்தான்.

“நான்தான் அவரை வரச் சொன்னேன் அர்வி..”

“வாட்… நீயா…? ஏன் பேபி டால்…?”

“ஒரு முக்கியமான விஷயம் உங்க ரெண்டு பேர் கிட்டயுமே சொல்லணும்…” என அவள் கூறிக் கொண்டிருந்த நேரம் அவளுடைய வீட்டிற்குள் நுழைந்த ஷர்வாவோ மிக நெருக்கமாக நின்ற இருவரையும் கண்டு தன்னுடைய பார்வையை விலக்கிக் கொண்டான்.

“வாங்க ஷர்வா…” என புன்னகைத்தான் அரவிந்தன்.

“ஹாய் அரவிந்தன்..” என்றவன் மோஹஸ்திராவைப் பார்த்து,
“சொல்லு மோஹி… எதுக்காக காலையிலேயே என்னை இங்க வரச் சொன்ன…? ஏதாவது ப்ராப்ளமா..?” எனக் கேட்டான்.

“எஸ்.. ப்ராப்ளம்தான்.. உங்க ரெண்டு பேர் கிட்டயும் சாரி கேட்டுக்குறேன்… என்னால இங்க இதுக்கு மேல கண்டினியூ பண்ண முடியாது… ப்ளீஸ்… நீங்களே இந்த டைமண்ட் மேட்டரை பார்த்துக்கோங்க…” என்றாள் அவள்.
“ஏன்…? என்ன ஆச்சு..? இப்போ கடைசி டைம்ல முடியாதுன்னா எப்படிடி இந்த பிரச்சனையை முடிக்கிறது..?” எனக் கேட்டான் அரவிந்தன்.

“ப்ளீஸ் அர்வி புரிச்சுக்கோ உனக்காகத்தான் இவ்வளவு நாளா இங்க வந்து தங்கி இருக்கேன்.. அங்க என்னோட அப்பாக்கு உடம்புக்கு ரொம்ப முடியலையாம்… நான் போயே ஆகணும்… இப்போ நான் அவங்க கூட இருக்கிறது ரொம்ப அவசியம்…” என்றாள் அவள்.

“ஓ மை காட்…” பதறினான் அர்வி.

“இட்ஸ் ஓகே… நீ கிளம்பு மோஹி.. நம்ம பிளான விட ஒரு உயிர்தான் முக்கியம்… இப்போ நீ உங்க அப்பா கூட இருக்கிறது ரொம்ப அவசியம்.. சோ நீ கிளம்புறதுதான் சரி…” என்றான் ஷர்வா.

“நான் உங்க யார்கிட்டயும் கிளம்பவான்னு பர்மிஷன் கேட்கலை.. இனி என்னால இங்க இப்படி அடமண்ட் கேரக்டரா போல்ட்டான பிஸ்னஸ் வுமன் மாதிரி எல்லாம் நடிக்க முடியாது… என்னால முடியல.. என்னுடைய இயல்பா தொலைச்ச மாதிரி இருக்கு.. நேத்து என் கண்ணு முன்னாடி செத்துக் கிடந்தவங்கள பாத்ததுக்கு பிறகு என்னோட தூக்கமே தொலைஞ்சு போச்சு…‌” என்றவளின் குரல் தவித்து தத்தளித்தது.

“சாரி சாரி பேபி… உன்ன இப்படி ஒரு நிலைமைல சிக்க வச்சதுக்கு நான்தான் காரணம்.. நீ கிளம்பு நான் பார்த்துக்கிறேன்…” என்றான் அரவிந்தன்.

“புரிஞ்சுக்கிட்டதுக்கு தேங்க்ஸ்…” என்றவள் அரவிந்தனைப் பார்க்க அவனோ அவளைப் பார்த்து கண் மூடித் திறந்து அமைதிப் படுத்தினான்.
“நீயும் என் கூட வா அர்வி..

அப்பாவோட பிஸ்னஸ்ல கொஞ்சம் பிரச்சனை ஆயிடுச்சுன்னு அவரோட பிஏ இப்போதான் என்கிட்ட சொன்னாரு… என்னால எல்லாத்தையும் மேனேஜ் பண்ண முடியும்னு தோணல… நீ என்கூட இருந்தா ரொம்ப சப்போர்ட்டா இருக்கும்னு நினைக்கிறேன்… உனக்கே தெரியும் எனக்கு இந்த பிஸ்னஸ்ல எல்லாம் அவ்வளவா இன்ட்ரெஸ்ட் இல்ல… நீ வந்து ஹெல்ப் பண்ணு… ப்ளீஸ் வாயேன்…” என சிறுபிள்ளை போல தடுமாறியபடி அவள் கேட்க அரவிந்தனுக்கோ சங்கடமாகிப் போனது.

அவளை நெருங்கி தோளோடு அணைத்துக் கொண்டவன்,

“சாரி பேபி டால் இப்போ என்னால நிச்சயமா இந்த நாட்டை விட்டு ஃபாரினுக்கு வரவே முடியாது… இந்த கேஸ் முடிக்காம என்னால எங்கேயுமே நகரக் கூட முடியாது… கிட்டத்தட்ட எல்லாத்தையும் கண்டுபிடிக்கிற நிலைமைக்கு வந்துட்டேன்… அதை பாதியிலேயே விட்டுட்டு வந்தா ரொம்ப ரிஸ்க்ல முடியும்… இவ்வளவு நாள் கஷ்டப்பட்ட எல்லாமே பாழாப் போயிரும்… சாரி பேபி என்னால உன் கூட வர முடியாது… வேணும்னா முன்னாடி நீ போ… இந்த கேஸ்லாம் முடிச்சதுக்கு அப்புறமா நான் அங்க வரேன்…” என்றவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் அவள்.

அவன் மறுத்தது அவளை முகம் வாடச் செய்தது.

அந்தப் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் சட்டென அவளை இழுத்து தன்னோடு இறுகணைத்துக் கொண்டான்.

“சாரி பேபி டால்.. உன்னோட நிலமை எனக்கு ரொம்ப நல்லாவே புரியுது பேபி… ஆனா என்னால நிச்சயமா இந்த வேலையை பாதியில விட்டுட்டு அங்கே வர முடியாது… என்னோட மேலதிகாரிக்கு நான் பதில் சொல்லியாகணும்… புரிஞ்சுக்கோ கண்ணம்மா… இப்படி எல்லாம் பார்த்து என்ன கஷ்டப்படுத்தாதடி…” என தன்னுடைய நிலைமையை மோஹஸ்திராவிற்கு அரவிந்தன் புரிய வைத்துக் கொண்டிருக்க,

“நான் வேணும்னா உன் கூட வரட்டுமா..? உங்க அப்பாவோட பிஸ்னஸை நான் சரி பண்ணிக் கொடுக்கிறேன்..” எனக் கேட்டான் ஷர்வா.

அவன் அப்படிக் கேட்டதும் புருவம் உயர்த்தி அவனைப் பார்த்தவள் வேண்டாம் என தலை அசைத்தாள்.
இங்கே அவனுக்கு கீழே 30 கம்பெனிகளுக்கு மேல் இருக்கின்றனவே..

அனைத்தையும் தன்னுடைய ஒரு நிறுவனத்தை பார்ப்பதற்காக அவன் விட்டு வருவதா..?

“இட்ஸ் ஓகே உங்களுக்கு எதுக்கு சிரமம்..? நானே மேனேஜ் பண்ணிக்கிறேன்..” என மறுத்தாள் அவள்.

“நீ என்னோட டைமண்ட்டை கண்டுபிடிக்கிறதுக்காக எவ்வளவோ ஹெல்ப் பண்ணி இருக்க.. என்னால முடிஞ்ச சின்ன ஹெல்ப்தான் இது… அதைப் பண்றதுல எனக்கு எந்த சிரமமும் கிடையாது… உனக்கு ஓகேன்னா நானும் உன் கூடவே வரேன்…”

“தேங்க்ஸ் ஷர்வா… நிச்சயமா அவளுக்கு உங்களோட உதவி தேவை..” என்ற அரவிந்தனை முறைத்துப் பார்த்தாள் மோஹஸ்திரா.

“ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிட்டியா..?” எனக் கேட்ட ஷர்வாவைப் பார்த்து இல்லை என கைகளை விரித்தாள் அவள்.

“நோ ப்ராப்ளம் ரெண்டு பேருக்கும் சேர்த்து நானே புக் பண்ணி விடுறேன்…” என்றவன் இருவரிடமும் தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட அவளுக்கோ தலை வலிப்பதைப் போல இருந்தது.

ஷர்வாவுடன் தனியாக தொடரப் போகும் இந்தப் பயணம் சரியாக வருமா என்ற கேள்வி அவளுக்குள் உறுத்தத் தொடங்க அவளுடைய கன்னத்தை வருடி அவளுடைய இதழ்களில் முத்தமிட நெருங்கினான் அரவிந்தன்.

சட்டென அவனுடைய மார்பின் மீது தன் கரத்தைப் பதித்து அவனை விலக்கியவள்,

“பிளீஸ் அர்வி.. நான் ரொம்ப அப்செட்டா இருக்கேன்.. அப்பாவோட ஞாபகமா இருக்கு.. இப்போ இதெல்லாம் வேணாம்..” என அவனைத் தடுத்து விட்டு சோபாவில் விலகி அமர்ந்து கொள்ள அவளுடைய உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தவன்,

“ஓகே நீ எல்லாத்தையும் பேக் பண்ணு… எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு… முடிச்சிட்டு அப்புறமா வரேன்…” என்றவன் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட அவளுக்கோ முதல் முறையாக தனிமையில் அல்லாடுவதைப் போல இருந்தது.
விழிகளில் கண்ணீர் உருவாகி கன்னத்தைத் தொட்டு கழுத்தை நோக்கி வழியத் தொடங்க அப்படியே சோபாவில் சுருண்டு கொண்டவள் தேற்றுவார் இன்றி தனிமையில் அழுது கரையத் தொடங்கினாள்.

ஷர்வாவுடனான இந்தப் பயணம் அவளுடைய காதலை சிதைக்கும் ஆயுதமாக மாறப்போவதை முன்பே அவள் அறிந்திருந்தால் அவனை தன்னுடன் வராமல் தடுத்திருக்க கூடுமோ என்னவோ..!

💜😍🔥💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

1 thought on “17. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!