2. யாருக்கு இங்கு யாரோ?..

4.6
(8)
அத்தியாயம் 2

 

ப்ளீஸ் தேவ் ஒரே ஒரு நிமிஷம்
தேவ் தன் மேனேஜரிடம் திருமணத்திற்காக விடுமுறை கேட்டு கொண்டிருக்க அதை பார்த்தவள். அவன் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள்.

 

“ சார் கண்டிப்பா நீங்களும் என் கல்யாணத்துக்கு வந்துடனும் “ என்று தன் மேனேஜருக்கு பத்திரிக்கை கொடுத்தான் தேவ்.

 

“என்ன தேவ் சொல்லவே இல்ல, திடுதிப்புன்னு பத்திரிக்கை கொண்டு வந்து கொடுக்கற கல்யாணம் எங்க? எப்போ?” என்று அந்த மேனேஜரும் பத்திரிக்கையை பிரித்துப் பார்த்தபடியே கேட்க 

 

“ கல்யாணம் எங்க சொந்த ஊருல தான் சார்.. எனக்கே கொஞ்சம் ஷாக்கிங் அண்ட் சர்ப்ரைஸ் தான் சார்.. ரொம்ப நாளாவே கல்யாணத்தை பற்றி வீட்டுல பேசிட்டு தான் இருந்தாங்க, ஆனா என்னோட பியான்ஸி தான் தள்ளி போட்டுக்கிட்டே இருந்த, இப்போ எதோ ஜாதகத்துல பிரச்சனையாம் உடனே கல்யாணம் பண்ணி ஆகணும்னு சொல்லி உடனே திடிர்னு அரேஞ்சு பண்ணிட்டாங்க” என்று தேவ் கூற 

 

“ஓஹ் … அப்படியா? அப்போ ஓகே…” என்றவர் திருமண பத்திரிகையை படித்து பார்த்து விட்டு சற்று ஆச்சரியத்தோடு தேவ்வை பார்த்தவர்…

 

“என்ன தேவ் பொண்ணு டாக்டரா?” என்று அவர் கேட்க, லேசாக புன்னகைத்த தேவ்.
“ம்.. ஆமா சார், இங்க சென்னைல தான் ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க” என்று தேவ் கூற 

 

“ம்… பரவாயில்லப்பா… சாதாரண ஒரு ஐடி எம்பிளை மாப்பிள்ளைக்கு டாக்டர் பொண்ணு, ஆனா எப்படி அவங்க வீட்டுல ஒத்துக்கிட்டாங்க?” என்று அவர் சற்று நக்கலோடு கேட்க

 

“உங்களுக்கு தான் சார் நான் சாதாரண ஐடி மாப்பிள்ளை ஆனா, என் குடும்பத்துக்கு இல்ல, அவ என் அத்தை பொண்ணு, எங்க கல்யாணம் இன்னைக்கு நேத்து முடிவு பண்ணது இல்ல, பல வருசத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணது..” என்றவன் கூற, அந்த மேனேஜருக்கோ உள்ளுக்குள் பொறாமை தீ பற்றி எரிந்தது.
“அப்போ சரி சார், மறக்காமல் கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடுங்க,  நான் உங்களுக்காக தான் இங்க இருந்து பஸ் அரேஞ்ச்மென்ட்ல பண்ணி இருக்கேன். சாட்டர்டே நைட்டே கிளம்பிடனும் சண்டே மார்னிங் கல்யாணத்துக்கு கண்டிப்பா நீங்க எல்லாரும் அங்க இருக்கணும்” என்று கூறி தேவ் புன்னகைக்க  அவனை பார்த்து புன்னகைத்த மேனேஜரும் 

 

 “ கண்டிப்பா தேவ் உன்  கல்யாணத்துக்கு வராம இருக்க முடியுமா என்ன? கண்டிப்பா வந்துருவோம்” என்று கூறிய அந்த மேனேஜர் அவனுக்கான லீவை அப்ரூவ்ட் செய்து விட 
“அப்போ சரி சார் நான் கிளம்புறேன் நேராகுது இப்பவே ஊருக்கு போகணும் ஏன்னா அங்க நிறைய சாங்கியம் சடங்கு சம்பிரதாயம் இருக்கு” என்று கூற 

 

“ ம் …… ஆமா கிளம்பு கிளம்பு நேரம் ஆகுது கல்யாண மாப்பிள்ளை இந்த மாதிரி எல்லாம் அடிக்கடி வெளிய சுத்திட்டு இருக்காத போ” என்று அந்த மேனேஜர் கூற தேவ்வும் சரி என்று தலையசைத்து விட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அவன் வருவதைக் கண்ட அம்மு வேகமாக தேவ்வின் அருகே சென்றவள்.

 

“ தேவ்  ஒரு நிமிஷம்” என்று அம்மு அழைக்க, அவனும் என்ன என்பது போல் திரும்பி ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்க 

 

“ நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்று திக்கி திணறி அம்மு கூற தன் கைக்கடிகாரத்தில் மணியை பார்த்த தேவ். 

 

“ ம்.. பேசலாமே.. ஆனால் ரொம்ப நேரம் முடியாது ஜஸ்ட் 10 மினிட்ஸ் தான் ஓகேன்னா பேசலாம்” என்று தேவ் கூற அதற்க்கு அம்முவும் சரி என்று தலையசைத்தவள். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு,

 

“பேசலாம் ஆனா இங்க வேண்டாமே… பக்கத்துல இருக்க காபி போகலாமா?” என்றவள் கேட்க, அவனும் சரி என்பது போல் தலையசைத்தான். 

 

“ஒரு நிமிஷம் இருங்க, நான் போய் என்னோட பேக் எடுத்துட்டு வந்துடுறேன்.” என்று கூறியவள்  தனது பேக்கை எடுத்துக்கொண்டு தன் தோழி அகலிடம் கூறிவிட்டு அவனுடன் ஆபீசை விட்டு வெளியே வந்தவளின் மனத்திலோ இன்று எப்படியாவது அவனிடம் தன் மனதில் இருப்பதை கூறி ஆக வேண்டும் என்பது மட்டுமே ஓடிக் கொண்டு இருந்தது..
 
போகும் அம்முவையும் தேவ்வையும் பார்த்த அகல்யா..  எப்படியாவது தன் தோழி நினைத்தது நடக்க வேண்டும் என்று மனதார அந்த கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

 

நீ கடவுள் கிட்ட வேண்டிக்கிட்ட மட்டும் நடக்க போறது என்ன மாறவா போகுது?  என்பது போல் விதி அவளைப் பார்த்து சிரித்தது.

 

தேவ்வுடன் அருகில் இருந்த ஒரு காஃபி ஷாப்புக்கு வந்த அம்மு யாரும் இல்லாத இடமாக பார்த்து இருவரும் அமர்ந்தனர். 

எப்படி எங்கிருந்து ஆரம்பித்தது என்று தெரியாமல் யோசித்தவாறே கிட்டத்தட்ட பத்து நிமிடமாக எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள். அதில் கடுப்பான தேவ், தன் வாட்ஸில்
நேரத்தை பார்த்து விட்டு..

 

 “ அப்ப சரி நான் கிளம்புறேன்” என்று எழ போக அதில் பதறியவள்.  அவன் கையைப் பிடித்து தடுத்தவள்.

 

“ப்ளீஸ் தேவ் ஒரே ஒரு நிமிஷம்” என்று கெஞ்சலோடு கூற 

 

“இதே தான் முன்னாவும் சொன்ன ஆனா, இப்போ  இங்க வந்து பத்து நிமிஷமா அமைதியாவே  உக்காந்து இருக்க, எனக்கு என்ன வேலை எதுவும் இல்லைன்னு  நெனைக்கிறிய என்ன? ஆனா அதுக்கு நான் ஆள் இல்ல, இன்னைக்கு நைட் நான் ஊர்க்கு கிளம்புனும் ஆல்ரெடி டைம் ஆகிடுச்சு. இன்னும் என் பியான்ஸிக்கு ஒரு சில திங்ஸ் பர்ச்சேஸ் பண்ணனும் எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று கூறியவுடன் அம்முவின் கண்களில் கண்ணீர் தேங்க 

 

“ஒரு நிமிஷம் ப்ளீஸ்” என்று அம்மு கெஞ்சும் குரலில் கேட்க அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை பார்த்தவன். வேறு வழியில்லாமல் அப்படியே அமர்ந்தான்.

 

*…—…*

“டேய் எல்லாரும் ஓடுங்கடா… ஓடுங்க ஓடுங்க… இந்த கதிர் கோபமா வந்துட்டு இருக்கான். எல்லாரும் ஓடுங்க.. ஓடுங்க..” என்று அந்த ஊர் மக்கள் அனைவரும் அங்கும் இங்கும் தெறித்து ஓட, மற்றொரு புறமும் ஒரு இளம் பெண் மூச்சு வாங்க அந்த பெரிய வீட்டின் முன் ஓடி வந்து நின்றவள். ஒரு சில நொடி மூச்சு எடுத்து விட்டுவிட்டு..

 

“ இந்த புள்ள ஆதி…”  என்று கத்த அங்கே வந்த ஒரு மூதாட்டி

 

“அடியே… உன்கிட்ட எத்தனை தடவை சொல்ல என்ற பேத்தியா இப்படி பேர் சொல்லி கூப்பிடாதன்னு, லட்சுமின்னு கூப்பிடுடி” என்ற அந்த மூதாட்டி கூற 

 

“ஐயோ நீங்க வேற அத்த… நீ வேற நிலைமை புரியாம” என்றவள் 

 

“அடியே ஆதி எங்கடி இருக்க?” என்று அந்த பெண் மீண்டும் கத்த அப்பொழுது அந்த வீட்டில் முதல் தளத்தில் இருந்து சேலை கட்டி கொண்டு தேவதை போல் இறங்கி வந்தால் ஆதிலட்சுமி.. அந்த வீட்டின் மகாலட்சுமியே அவள் தான் பார்க்கும் போதே கையெடுத்து கும்பிடும் லட்சுமி கடாட்சத்தோடு அவ்வளவு அழகாக இருப்பாள். தன் நீண்ட கார்க்கூந்தலை அழகாக பின்னலிட்டு  அதில் நெருக்கமாக கட்டிய குண்டுமல்லி சரத்தை அரை ஜடைக்கு தொங்கவிட்டபடி ஒருவித கம்பீர நடையோடு இறங்கி வந்தவள். தன் முன்னாள் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தவளை குழப்பத்தோடு பார்த்து 

 

“என்னடி பூவு இப்படி மூச்சு வாங்க வந்து இருக்க? என்ன ஆச்சு?” என்று சாதாரணமாக அவள் கேட்க

 

“அடியே… ஆதி இந்த கதிர் பையன் ஊரையே அங்க கலவரம் பண்ணிட்டு கிடக்கிறான் டி… இங்க நீ என்னடா பகுமானம் வந்து நிற்கிறவே, உன்னை தவிர அவனை வேற யாராலயும் கட்டுப்படுத்த முடியாது.. கொஞ்சம் சீக்கிரம் வாடி” என்று கூறிய பூவு அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போக அந்த மூதாட்டியோ

 

“அடியே கருவாச்சி எங்கடி என் பேத்தியை இழுத்துட்டு போறவ? கல்யாணம் பொண்ணு அவ எங்கையும் தனியா வெளிய எல்லாம் போக கூடாது டி” என்று கத்த கத்த கேட்காமல் அங்கிருந்து இருவரும் பதட்டமாக சென்றனர்.

 

“எங்ஙனே டி அவன் இருக்கான்” என்று கேட்டவாறே தன் சேலையை தூக்கி சொருவியவள் அதோடு முந்தானையையும் சேர்த்து சொருவிக் கொண்டு ஆதிலட்சுமி முன்னே செல்ல
“பஞ்சாயத்து நடக்கும்ல அந்த அரசமரத்து கிட்ட தான் டி இருக்கான். சும்மாவே அவனை பார்த்தாலே எல்லாம் தலை தெறிக்க ஓடுவானுங்க, என்னன்னு தெரியல இன்னைக்கு வேற ரொம்ப கோபமா இருந்தான்.. அவனை பார்க்க எனக்கே பயமா தான் டி இருந்துதுடி…” என்று கூறியவாறு பூவு பெண்ணவளின் வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவள் பின்னோடு ஓடிசெல்ல, ஆதிலட்சுமியோ வேக வேகமாக பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தால்..
“அம்மாடி… லட்சுமி வாமா வந்து கொஞ்சம் சீக்கிரம் இந்த பையனை இங்க இருந்து கூட்டிட்டு போ, எல்லாரும் உசுரே கையில புடிச்சிட்டு இருக்கோம். அவன் இருக்க கோபத்துக்கு எப்போ என்ன பண்ணுவானே தெரியல, சீக்கிரம் கூட்டிட்டு போத்தா” என்று ஒரு பெரியவர் கூற அதை எதையும் காதில் வாங்காமல் அங்கு அத்தனை ஆம்பளைகள் அந்த கதிருக்கு பயந்து ஓரமாக அங்கும் இங்கும் ஒளிந்து கொண்டு மரத்தின் மேல் ஏறிக் கொண்டும் நின்றிருந்தாலும் இவள் ஒற்றை பெண்ணாக அந்த கதிரின் முன்பு போய் தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு கோபத்தோடு அவனை முறைத்து பார்த்தாள்..

 

அம்மு அப்படி தேவ்விடம் என்ன பேச போகிறாள்? தேவ் திருணம் செய்து கொள்ள போகும் அந்த பெண் யார்? யார் இந்த கதிர்? அவனை பார்த்து ஏன் அனைவரும் பயப்பட வேண்டும்? இந்த கேள்விகளுக்கான விடையங்களை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்க! ………

 

             யாருக்கு இங்கு யாரோ……

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!