24. காதலோ துளி விஷம்

4.7
(92)

விஷம் – 24

நினைத்ததை விட அதிகமான நாட்கள் இந்தியாவில் தங்கியதால் யாழவனுக்கோ வேலைகள் அதிகமாகவே குவிந்திருந்தன.

ஆனால் வேலையின் பக்கம் அவனுடைய கவனமோ திரும்ப மாட்டேன் என அடம்பிடித்துக் கொண்டிருந்தது.

பின்னே காதல் மனைவி கண் முன்பு நடமாடிக் கொண்டிருந்தால் வேலையின் மீது கவனம் எங்கனம் பதியும்..?

கடந்த இரண்டு நாட்களில் எத்தனையோ முறை அவளுடன் காதல் கூடல் புரிந்தும் திகட்டவில்லை அவனுக்கு.

விளைவு அவள் மீது மோகம் முத்திப் போனதுதான் மிச்சம்.

பெருமூச்சோடு தன் முன்னே இருந்த மடிக்கணனியை மூடி வைத்துவிட்டு தன்னவளின் மீது பார்வையைச் செலுத்தினான் அவன்.

அவளோ லண்டன் வந்து சேர்ந்து விட்டதாக அனைவருக்கும் வீடியோ கால் எடுத்துக் கூறி முடித்தவள் குளிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்க அவளுடன் இணைந்து குளிக்க வேண்டும் என்ற அவா அக்கணம் அவனுக்குள் எழுந்தது

“ஹேய் பேபி..?”

“என்ன யாழன்..”

“ஒன்னா குளிக்கலாமா‌..?”

“ஹையோ வேணாம்..”

“ஹேய் ப்ளீஸ்டி.. அது செம ஃபீலா இருக்கும்..”

“ஒரு ஃபீலிங்கும் வேணாம்.. ஆள விடுங்க.”

“பேபி பாத்ரூம் கான்வர்சேஷன் எப்பவுமே ஸ்பெஷல்தான் தெரியுமா..?” என்றவன் தன்னுடைய டி-ஷர்டை தலை வழியே கழற்றிவிட்டு அழுத்தமான காலடிகளுடன் அவளை நெருங்கி வர,

அவளோ வேகமாக துவாலையை எடுத்தவள் ஓடிச் சென்று பாத்ரூம் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டாள்.

“அடிப்பாவி ஓபன் த டோர்..” என்றான் அவன்.

“முடியாது முடியாது..” என சிரித்தவள் அந்தக் குளியலறையின் அழகையும் கண்டு வியந்துதான் போனாள்.

“கலா ரசிகன்தான்..” என அவளுடைய மனமோ தன் கணவனை மெச்சிக் கொண்டது.

மெல்ல தான் அணிந்திருந்த ஆடைகளை அகற்றி துவாலையை மார்பில் முடிந்தவாறு ஷவரைத் திறந்துவிட்டு அதற்குக் கீழே நின்றவளுக்கு குளிர்ந்த நீர் அவளுடைய உடலை சிலிர்க்கச் செய்தது.

ஷவரின் எதிர்ப்புறம் மிகப்பெரிய கண்ணாடி அந்தக் குளியல் அறைக்குள் பொருத்தப்பட்டிருக்க, அவள் நெற்றியில் வைத்திருந்த குங்குமம் கரைந்து முகத்தில் வழிவதை கண்ணாடியில் பார்த்தவளுக்கு உதடுகளில் சிரிப்பு.

கண்ணாடி விம்பத்தில் தெரிந்த தன்னுடைய உருவத்தைப் பார்த்தபடி இருந்தவளின் கவனத்தை அந்தக் கண்ணாடியின் மேல் மூலையில் உதட்டுச் சாயத்தால் எழுதியிருந்த வார்த்தைகள் ஈர்த்தன.

ஷவரை நிறுத்திவிட்டு அந்தக் கண்ணாடியின் அருகே சென்று அதில் எழுதி இருந்த வார்த்தைகளைப் படித்தவளுக்கோ உலகம் தலைகீழாக சுற்றுவதைப் போல இருந்தது.

“Every inch of this glass knows how he touched me..” என்ற வாசகமும் அந்த வாசகத்தின் கீழே ஒரு பெண்ணின் இதழ்களின் வரி வடிவமும் இருப்பதைக் கண்டு விக்கித்துப் போய் நின்று விட்டாள் அர்ச்சனா.

உடல் அவளுடைய கட்டுப்பாட்டை மீறி நடுங்கத் தொடங்கி விட்டது.

அவளுடைய சிறு மூளைக்கு எதுவுமே புரியவில்லை.

என் யாழனின் குளியல் அறையில் ஒரு பெண்ணின் உதட்டுச் சாயம் பூசிய இதழ்களின் வரிவடிவமும் இந்த அந்தரங்க வார்த்தைகளும் எப்படி வந்தன..?

எப்படி..?

நீரில் நனைந்திருந்த அவளுடைய கன்னங்களோ அவளுடைய சூடான கண்ணீரை உணர்ந்து கொண்டன.

பதறித் துடித்த தன்னுடைய இதயத்தை அழுத்திக் கொடுப்பது போல நெஞ்சை அழுத்தமாக வருடி விட்டவளுக்கு அந்த வார்த்தைகளை விட்டுத் தன் பார்வையை விலக்கவே முடியவில்லை.

நெஞ்சம் பதைபதைத்துக் கொண்டே இருந்தது.

Every inch of this glass knows how he touched me..

இது ஒன்றும் சாதாரண வார்த்தைகள் அல்லவே.

உடைந்து போனவள் அப்படியே அந்தக் குளியல் அறையின் சுவற்றில் உணர்வுகளின்றி சாய்ந்து விட்டாள்.

உள்ளம் சுக்கல் சுக்கலாக நொறுங்கிக் கொண்டிருந்தது.

யாழனோடு நெருக்கமாக இருந்த யாரோ ஒரு பெண்தான் இப்படி எழுதி வைத்திருக்க வேண்டும் என அவளுடைய புத்திக்கு தாமதமாக புரிய அவளால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை.

யாரோ பழுக்க காய்ச்சிய கம்பியை அவளுடைய மென்மையான இதயத்தில் வைத்து சூடு இழுத்தது போல வலித்தது.

அந்த வார்த்தைகளின் தாக்கம் இன்னும் அவளது உள்ளத்தை நொறுக்க,

கோபமும், திகைப்பும், விரக்தியும் கலந்த கண்களோடு,

அந்தக் குளியல் அறையை விட்டு அப்படியே வெளியே வந்தாள் அர்ச்சனா.

யாருடனோ சிரித்தவாறு அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த யாழவனின் விழிகள் வெறும் துவாலையை மட்டும் உடலில் சுற்றியவாறு வெளியே வந்த தன்னுடைய அழகிய மனைவியைக் கண்டதும் வியப்பில் விரிந்தன.

அடுத்த நொடியே அந்த அழைப்பைத் துண்டித்தவன் அவளை மோகமாய் பார்த்தான்.

தன்னுடைய தேவதையின் ஒட்டுமொத்த அழகையும் வெண்ணிற துவாலை மட்டுமே மறைத்திருக்கின்றது என்பதை உணர்ந்தவனின் தேகம் சூடேறியது.

“வாவ் பேபி… யு லுக்கிங் சோ செக்ஸி..” எனக் கூறியவாறு அவன் அவளை நெருங்க,

அவன் முன்பு சட்டென தன்னுடைய ஒற்றைக் கையை நீட்டி தன்னிடம் வராதே என்பது போல சைகை செய்ய அப்படியே அசைவற்று நின்று விட்டான் அவன்.

“ஹேய் என்னடி..?” என்றவன்,

அவளுடைய விழிகளை ஆழ்ந்து பார்த்தான்.

அவை கலங்கிச் சிவந்திருப்பதையும் அவளுடைய உதடுகள் கோபத்தில் துடித்துக் கொண்டிருப்பதையும் கண்டு நிலமை சரியில்லை என்பது புரிந்து போனது.

“ஹேய் பேபி.. என்ன ஆச்சு..? அழுதியா..? ஏன் கண்ணெல்லாம் இப்படி சிவந்திருக்கு..?” எனப் பதறிப் போனான் அவன்.

அவளுக்கோ அவனுடைய அக்கறையில் எரிச்சலே மேலிட்டது.

அவன் தன்னிடம் காட்டும் எந்த முகம் உண்மை..?

என்னிடம் காட்டும் காதல் முகம் உண்மையா?

இல்லை அவனுடைய குளியல் அறைக் காட்டும் கண்ணாடி கூறுவது உண்மையா..?

உள்ளம் தகித்து தவித்தது.

“பேபி லிசின்… என்னடி.. எதுக்கு இப்போ இப்படி அழுகுற..? என்ன ஆச்சுன்னு சொன்னாதானே எனக்குத் தெரியும்…” என அவளை நெருங்கி அவளுடைய கைகளைப் பற்றிக்கொள்ள முயன்றவனின் கரங்களை சட்டென தட்டி விட்டாள் அர்ச்சனா.

அவளுடைய கண்ணீர் நிறைந்த கண்கள் வறண்ட மனதுடன் நேராக அவனை நோக்கின.

அதிர்ந்து விட்டான் யாழவன்.

அவளுக்கோ கண்ணீர் கீழே விழாமல் பேசுவது மிகவும் கடினமாயிற்று.

மகிழ்ச்சியான முகத்தோடு குளிக்கச் சென்றவள் குளித்து முடிக்காமலேயே பாதியில் அழுகையோடு வந்து நின்றதும் அவனுக்கோ என்ன நடந்தது என்றே புரியவில்லை.

“என்ன பேபி..?” மீண்டும் கவலையுடன் கேட்டான் அவன்.

“யாழவன்..” அழுத்தமாக அழைத்தாள் அவள்.

அவளுடைய அழைப்பில் அவனுடைய புருவங்களோ சுருங்கின.

யாழன் என்ற அவளுடைய அன்பான அழைப்பு யாழவன் என மாறியதன் அர்த்தம் என்னவோ..?

அந்த ஒற்றை அழைப்பு மாற்றத்திலேயே அவனுக்கு தலைவலி வந்துவிட்டது.

“ப்ச்.. வாட் இஸ் திஸ் பேபி..? இப்போ எதுக்கு என்னை யாழவன்னு கூப்பிடுற.. நான் என்ன ஸ்ரேஞ்ஜரா..? யாழன்னு கூப்பிடு..” என அவன் கூற அவளுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.

“யார் அந்த பொண்ணு?”

அவளது குரல் உணர்வுகளை தொலைத்து அமைதியாக ஒலித்தது.

ஆனால் அந்த உணர்வுகளை தொலைத்த அமைதியில் உண்டான புயலை யாழவன் உணர்ந்து கொண்டான்.

எந்தப் பெண்ணைப் பற்றி கேட்கிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

அவனுடைய வாழ்க்கையில் தான் கிட்டத்தட்ட மூன்று பெண்கள் இருந்திருக்கிறார்களே.

தன் தலையை அழுத்தமாக கோதிக் கொண்டவன்,

“எந்தப் பொண்ணு..?” எனக் கேட்க அவளுக்கோ சரேலென விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“பேபி ப்ளீஸ் அழாத..” பதறினான் அவன்.

“அந்தப் பொண்ணு யாரு..?” இந்த முறை அமைதியாக எல்லாம் அவள் பேசவில்லை அவளுடைய குரல் சத்தமாக வெடித்தது.

“என்னடி சொல்ற..?”

“போதும் நடிக்காதீங்க.. நான் என்ன கேக்குறேன்னு உங்களுக்குப் புரியலையா..? உங்க பெட் ரூம்ல இருக்க பாத்ரூம் கண்ணாடில அவ்வளவு இன்டிமேட்டா லிப்ஸ்டிகால எழுதி வச்சது யாரு..?” என அழுகையும் கோபமும் ஏமாற்றமும் கலந்த குரலில் கத்தினாள் அர்ச்சனா.

அவனுக்கு பதிலே வரவில்லை.

அவன் உண்மையிலேயே அதை மறந்து விட்டிருந்தான்.

அந்த வார்த்தைகளும், அந்த வார்த்தைகளை எழுதிய உடலைக் கொண்ட அந்த முந்தைய உறவும் அவனுக்குப் பழைய காகிதமாய்த் தோன்றியது.

அவனைப் பொறுத்தவரை அது ஒரு முடிந்து போன அத்தியாயம்.

“ஹேய்… அச்சு தட்ஸ் ஓல்ட்.. அதெல்லாம் எப்பவோ நடந்து முடிஞ்ச விஷயம் டி..” என்றான் இலகுவாக.

இடிந்து போய்விட்டாள் அவள்.

தன்னவன் மீது தவறு இருக்காது. அந்தக் கண்ணாடிகளின் மீது இருந்த வார்த்தைகளுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கக்கூடும் என சிறு நம்பிக்கையை இறுக்கப்பற்றிக் கொண்டு அவன் முன்னே நின்றவளுக்கு பெருத்த அடியாக அமைந்துபோனது அவனுடைய வார்த்தைகள்.

அவள் கூறியதை அவன் மறுக்கவே இல்லையே.

ஆக அந்த வார்த்தைகளில் உண்மை இருக்கின்றது.

சாதாரணமாக கடந்த காலத்தில் நடந்து விட்டது என நியாயப்படுத்துகின்றானே.

துடித்துப் போனவளாய் நின்றிருந்தாள் அர்ச்சனா.

அவளுடல் அழுகையில் தூக்கிப் போட்டது.

அவளால் அதை ஏற்க முடியவில்லை.

ஏமாந்து விட்டோம் என்ற வலி அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக வதைத்து சிதைக்கத் தொடங்கியது.

அவள் தனக்குள் மருகிக் கதறுவதைக் காண முடியாது வேகமாக அவளை நெருங்கி அவளுடைய கரங்களைப் பற்ற முயன்றவனை ஆக்ரோஷமாக தள்ளிவிட்டாள் அர்ச்சனா.

“தொடாதீங்க..” என்ற அவளுடைய அலறலில் அவனுக்கோ பேரதிர்ச்சி.

“அர்ச்சனா ப்ளீஸ் காம் டவுன்.. இட்ஸ் நாட் லைக் தட்.. அந்தக் கண்ணாடி..” என விளக்கம் கூற வந்தவனின் டி-ஷர்ட் காலரை இறுகப் பிடித்துக் கொண்டவள்

“எவ்ரி இன்ச் ஆப் திஸ் கிளாஸ் நௌஸ் ஹவ் ஹீ டச்ட் மீ.. ரைட்..?” என அந்தக் கண்ணாடியில் எழுதி இருந்த வார்த்தைகளை அவள் அழுத்தமாக ஒவ்வொன்றாக உச்சரிக்க தன் விழிகளை ஒரு கணம் இறுக மூடித் திறந்தான் அவன்.

“சொல்லுங்க நீங்க அந்த பொண்ணு கூட எப்படி எல்லாம் இருந்தீங்கன்னு அந்தக் கண்ணாடிக்கு தெரியுமா..?”

“ஏய்…” அதட்டினான் யாழவன்.

“எனக்கு முன்னாடியே இன்னொரு பொண்ணு கூட தப்பான உறவுல இருந்திருக்கீங்க… அவளை உங்க பெட் ரூம் வரைக்கும் கூட்டி வந்து கூத்தடிச்சிருக்கீங்க.. ச்சீஈ.. உங்களுக்கு வெக்கமா இல்லையா..?”

“ஸ்டாப் இட் அர்ச்சனா.. நான்தான் சொல்றேன்ல அது என்னோட பாஸ்ட்.. நடந்து முடிஞ்ச விஷயத்தை பத்தி இப்போ எதுக்கு பேசுற..? இப்போ நீயும் நானும் மட்டும்தான் இருக்கோம்.‌. இப்போ நமக்கு நம்ம பிரசன்ட் வாழ்க்கைதானே முக்கியம்..” என்றவனை வெறித்துப் பார்த்தாள் அவள்.

“அடடா நீங்க லண்டன் கலாச்சாரத்துல வளர்ந்தவங்களாச்சே.. எல்லாத்தையும் பாஸ்ட் இஸ் பாஸ்டுன்னு கடந்து போயிட்டே இருப்பீங்கள்ல..? ஆனா நான் அப்படிக் கிடையாதே.. என்னோட வாழ்க்கை முழுசும் ஒருத்தருக்கு மட்டும்தான்னு கட்டுப்பாட்டோட வாழ்ற சாதாரண இந்திய பொண்ணுங்க நானு.. என்னால இத சகிச்சுக்க முடியல…” அழுதாள் அவள்.

பெருமூச்சோடு அவளை நெருங்கியவன்,

“பேபி எனக்கு உன்னப் பத்தி நல்லாவே தெரியும்.. ப்ளீஸ் டென்ஷன் ஆகாத.. நாம பேசி தீர்த்துக்கலாம்.. இங்க இருக்கும்போது கிளாரா கூட நான் லிவிங்ல இருந்தேன்.. அந்த டைம்ல அவ எழுதின வேர்ட்ஸ் தான் அது.. இப்போ நான் உன்ன தாண்டி லவ் பண்றேன்.. இது இங்க சாதாரண விஷயம் அர்ச்சனா..”

“ஓஹோ அப்போ நீங்க இப்படித்தான்னு என்கிட்ட சொல்லி இருக்கலாமே.. உங்க முன்னாள் வாழ்க்கைய பத்தி நீங்க எதுக்கு என்கிட்ட மறைச்சீங்க.. நல்லவர் மாதிரி நடிச்சு என்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து ஏமாத்திட்டீங்களே..”

“அர்ச்சனா திஸ் இஸ் டூ மச்.. நல்லவன் மாதிரி நடிக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல.. எந்த இடத்திலையும் நான் நடிக்கவும் இல்ல.. என்ன பொறுத்த வரைக்கும் அதை நான் பெரிய விஷயமா எடுத்துக்கவே இல்லடி.. கிளாரா கூட வாழ்ந்தேன்‌‌.. அது செட் ஆகல.. பிரேக் அப் பண்ணிட்டேன்… உன்ன பார்த்தேன் உன்னை ரொம்ப பிடிச்சுது கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுச்சு பண்ணிக்கிட்டேன்..” என அவன் கூற அவளுக்குத்தான் இதயம் பிளந்தது போல வலித்தது.

இதில் காதல் எங்கே இருக்கிறது..?

பிடித்த பெண்ணுடன் வாழ்ந்து பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்றதும் அவளைக் கழற்றி விட்டு அடுத்த பெண்ணை பார்ப்பதுதான் இவனுடைய ஃபேஷன் போலும்.

இவனைப் பற்றி முழுவதும் தெரியாமல் காதல் என நம்பி திருமணம் முடித்து நாடு விட்டு நாடு வந்த நான் முட்டாளா..?

விட்டில் பூச்சி விளக்கில் விழுந்த கதையாகிப் போனதோ என் கதையும்…?

விக்கித்துப் போய் அசைவற்று நின்று விட்டாள் அவள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 92

No votes so far! Be the first to rate this post.

1 thought on “24. காதலோ துளி விஷம்”

  1. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.👌👌👏👏👏👏👏👏😍😍😍🥰🥰🥰🤩🤩🤩❤️❤️❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!