நெஞ்சம் – 3
சற்று நேரம் கழித்து வந்து கிட்சனை எட்டி பார்த்தான் அர்விந்த். எங்கேயோ வெளியே போக போகிறான் போல, பைக் சாவியை கையில் சுழற்றி கொண்டு நின்றான். பார்த்தும், என்ன வேணும் என்று எதுவும் கேட்காமல் அமைதியாக அவள் வேலையை தொடர்ந்தாள் மலர். அவனே சொல்லட்டும் என்ன வேண்டும் என்பதை, நமக்கேன் வம்பு என்றிருந்தாள்.
“என்ன விழி நோ டீயர்ஸ்(கண்ணீர்)? டூ பேட்! நீ பைப்பை ஓபன் பண்ணி இருப்பேன்னு ஆசையா வந்தேன்! இப்படி ஏமாத்திட்டியே?”
“நான் ஏன் அழணும்?” வைராக்கியமாக பேசினாள்.
“யாராவது திட்டினா அழ மாட்டியா? இல்லை அதையும் மனசுக்குள்ளயே பண்ணிப்பியா?”
“நான் பண்ணினது எனக்கே தப்புனு தெரிஞ்சா, இப்படி பண்ணிட்டியேனு அழுகை வரும், இல்லைனா என்னால யாரும் கஷ்டப்பட்டுட்டா அழுவேன்…. இப்போ இது ரெண்டுமே நான் செய்யலையே” மெதுவாக ஆனால் அழுத்தமாக சொன்னாள் மலர்.
“ஒய், எனக்கு மெசேஜ் சொல்றியா? புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா?” குரலை உயர்த்தினான் அரவிந்த்.
“நான் பண்ணினது அவ்ளோ பெரிய தப்பா என்ன?” பதில் கேள்வி கேட்டவளுக்கு, எப்படி இப்படி எல்லாம் இவர்கிட்ட பேசுறோம்? இவ்ளோ சரளமா புதுசா பழகுற ஒருத்தர் கிட்ட பேச முடியுமா? ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.
வந்து மூன்று நாள் தான் ஆனாலும், அவனை தான் அவள் மனம் ஏதோ ஒரு விதத்தில் நினைத்துக் கொண்டே இருக்கிறது, அதனால் அவனிடம் அவளுக்கு தானாக ஒரு இலகுத்தன்மை வந்து விட்டது அதுவும் அவளையறியாமலேயே!
“நீதான் தப்பு இல்லைனு முடிவு சொல்லிட்டியே! அப்பறம் ஏன் என்னை கேட்கிறே?” அவனா அவளிடம் ஒத்துக்கொள்வான்? அப்படியே நழுவி விட்டான். எதற்கு வந்தான்? எங்கே போகிறான்? ஒன்றும் சொல்லவில்லை.
அவன் மலரிடம் வம்பு செய்து விட்டு சென்றது ஹாஸ்பிடலுக்கு தான். மலரிடம் கோபமாக பேசினாலும், அவள் பேசிய விஷயத்தை கண்டு கொள்ளாமல் விட வில்லை. அவள் சொல்கிறாள் என்றால், எதாவது காரணம் இருக்கும், அம்மா வருத்தப்பட்டதை கண்டிருக்கூடும் என்று நினைத்தான். இரண்டு நாளில் இப்படி ஒரு நம்பிக்கையை எப்படி அவள் மேல் வைத்தான்? அவன் அதை இப்போது உணரவில்லை, உணரும் போது பார்போம்! இப்போது தாமதிக்காமல் கிளம்பி விட்டான்.
அவன் அங்கே சென்ற போது, அவர்களுக்கு என்று கொடுக்கப்பட்ட அறையில் தனியே இருந்த அருணாவின் கண்ணில் கண்ணீர். தனியே சோகமே உருவாய் இருந்தவரை கண்டதும் மனம் சுட்டு விட,
“அம்மா!” என்று ஓடிச்சென்று அருணாவை அணைத்துக் கொண்டான் அர்விந்த்.
மகனை கண்டதும் அதுவரை கட்டுப்படுத்திகொண்டு மெதுவாக அழுதவர், வெடித்து அழுது விட்டார். மிகவும் வருத்தமாகி விட்டது அவனுக்கு.
“அம்மா… அம்மா… அழாதீங்க மா, நீங்க தைரியமா தானே இருந்தீங்க இத்தனை நாள்?” அவரை அணைத்தபடி ஆறுதலாக பேசினான்.
தன்னை சமாளித்து கொண்டவர், “ஆமா டா, ஆனா இங்க வந்ததில் இருந்து, அப்பா பணம் கட்ட, பார்ம் பில் அப் பண்ணனு போயிடுறார், நான் தனியா இருந்தேனா… ஒரு மாதிரி யாருமே இல்லாத மாதிரி தோண, ரொம்ப அழுகை வந்துடுச்சு, எங்க அப்பா அம்மா நியாபகம் எல்லாம் வந்துடுச்சு…”
“ஸாரி மா, நான் நீங்க ரெண்டு பேரும் உங்களுக்கு ஆறுதலா மனசு விட்டு பேசிப்பீங்க, நாங்க ஏன் வந்து உங்களை டிஸ்டர்ப் பண்ணனும் நினைச்சு தான் உங்க கூட வரலை! ஜனனி கிட்டயும் நான் தான் போக வேண்டாம்னு சொன்னேன்…. நீங்க செத்து போன தாத்தா பாட்டியை கூப்பிட்டதுக்கு, ஒரு போன் பண்ணி என்னை கூப்பிட்டு இருக்கலாம்!” ஆறுதலாக ஆரம்பித்து கிண்டலாக முடித்தான் அர்விந்த்.
“போடா வாலு” சிரித்தவர், “என் செல்ல பையன் இவ்ளோ எல்லாம் யோசிக்கிறானா? ஆனா இதுக்கு எல்லாம் யார் காரணம்னு எனக்கு தெரியுமே!” சிரித்தார் அருணா.
அவர் சொல்வதற்குள், இவன் நினைவு மலரிடம் ஓடியது. விழியோட விழியில் தான் எவ்ளோ ஆர்வம், நான் எங்க போறேன்னு தெரிஞ்சுக்க? என் கையில் இருந்த பைக் சாவியையே பார்த்தாளே! சிரித்துக் கொண்டான். நீ வேணும்னே, அவள் பார்க்கணும்னு தானே சாவியை போட்டு அந்த சுத்து சுத்தினே! அவளை சுத்த விட்டு பார்க்க உனக்கு அவ்ளோ ஆசையா இருக்கு! பேட் பாய் டா நீ! தனக்குள் பேசிக்கொண்ட அரவிந்தை உலுக்கினார் அருணா!
“அர்விந்த்!”
“ஹான்…. என்னமா….சொல்லுங்க….!”
“இதுக்கு எல்லாம் காரணம் நிவேதா தானே?” கண்கள் மின்ன கேட்டார் அருணா.
நிவேதா! அவரின் வருங்கால மருமகள் அல்லவா? இன்னும் மூன்று மாதத்தில் திருமணம். அருணாவிற்கு இந்த ஆபரேஷன் இல்லையென்றால் இப்பொழுதே வைத்து இருப்பார்கள். ஆசையும் ஆர்வமாக மருமகளை பற்றி பேசினார் அருணா.
“நிவேதா வா? அவ எங்க மா இங்க வந்தா? அவ பூனேல இருக்கா மா….” என்றான் சம்பந்தம் இல்லாமல். அவனின் சிந்தனை எல்லாம் வேறு இடத்தில் அல்லவா இருந்தது.
“என் மக்கு பிள்ளையே, அர்விந்த், அவ தானே உனக்கு இந்த மாதிரி சாப்ட் பீலிங்க்ஸ் எல்லாம் வர காரணம்?”
“ம்ப்ச்….எங்க அப்பா அம்மாவை பத்தி யோசிக்க எனக்கு இன்னொரு ஆள் வேணுமா மா?” சலிப்பாக கேட்டான் அர்விந்த்.
“நீங்க எல்லாம் இந்த காலத்து பசங்க, பெரிசா எங்க பீலிங்க்ஸ் நினைக்க மாட்டீங்கனு நினைச்சுட்டேன்… ஸாரி டா”
“ஆனா நான் நினைச்சுதும் தப்பா தானே போச்சு? நீங்க பீல் பண்ணிட்டீங்களே?” அதனால் இனிமே எதுனாலும் என்கிட்ட நேரா சொல்லிடுங்க! சரியா?” அம்மாவை அணைத்துக் கொண்டான் அர்விந்த்.
கணவர் வந்தவுடன் அவரிடம் அருணா, அர்விந்தன் சொன்னதை பகிர, அவர் முகத்தில் நிம்மதி கலந்த சிரிப்பு. பசங்க நம்மளை இப்படி விட்டுட்டாங்க என்று கவலைபட்டாரே அவர்.
“நீ எல்லா வேலையும் பார்த்துக்க, நான் அம்மா பக்கத்திலே இருந்து பேசிட்டு இருக்கேன்! எனக்கும் இப்போ அது தான் வேணும்” என்றார்.
ஏனோ, இத்தனை வருஷம் இல்லாமல், பெற்றவர்கள் இருவரும் மகன் தங்களிடம் மனதளவில் நெருங்கி தான் இருக்கிறான் என்று மகிழ்ந்தார்கள். அதை சொல்லவும் செய்தார்கள்,
“கொஞ்ச வருஷமாவே, எதை பேசினாலும், எங்களை பத்தி யோசிக்காம அதுக்கு கருத்து சொல்லி டார்ச்சர் பண்ணுவே டா, சரி இனிமே நம்ம கிட்ட எல்லாம் பேச மாட்டான், கல்யாணம் வேற ஆக போகுது! நம்ம சாப்டர் அவ்ளோதான் போல்னு நினைச்சோம்! இப்போ சந்தோஷமா இருக்குடா!”
“எல்லாத்துக்கு ஏன் ரெண்டு பேரும் என் கல்யாணத்தை இழுக்கிறீங்க? எனக்கு கொஞ்சம் அறிவு இருக்கு! நான் யோசிக்கவே மாட்டேனா?”
ஹ்ம்ம்கூம்…. நீ யோசிச்ச அழகை தான் நாங்க பார்த்தோமே! மனசாட்சி இடித்தது.
“சரிடா, சரிடா கோபப்படாதே! நீ அறிவாளி தான், ஆனா என் பையன்னு இப்போ பெருமையா சொல்லிக்கணுமா வேண்டாமானு தான் தெரியலை!” சிரித்தார் தியாகு. அங்கே ஒரு சிரிப்பலை எழுந்தது.
அர்விந்தற்குமே சந்தோஷமாக இருந்தது. குடும்பத்தோடு சிறு அன்பான பேச்சு, உள்ளத்தில் இருப்பதை சொன்னால் இவ்வளவு மகிழ்ச்சி கிடைக்குமா? நல்லதா போச்சு, யோசிக்காம கிளம்பி வந்தது என்று நினைத்து கொண்டான். இதை யோசிக்கும் போது, சொன்னவள் நியாபகத்தில் வராமல் இருப்பாளா? மீண்டும் அவள் நினைவு!
அமைதியா இருந்துகிட்டு எப்படி அழுத்தமா பேசுறா பாரு! சிரித்துக் கொண்டான் அவளை நினைத்து.
அன்று இரவு வரை அங்கேயே இருந்தான் அர்விந்த். ஜனனியையும் போன் செய்து வரச்சொல்ல, அவளும் வந்துவிட்டாள். குழந்தை அவந்திகாவிற்கு இரண்டு வயது தான் ஆகிறது, அதனால் அவளை அதிக நேரம் அங்கே வைத்திருக்க முடியாமல், ஆரவ் மட்டும் குழந்தையுடன் வீடு திரும்பி விட்டான்.
குடும்பமாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். வருங்கால மருமகள் பற்றி பேச்சு வராமல் இருக்குமா? நிவேதா, அரவிந்துடன் பெங்களூரில் ஒன்றாக வேலை பார்த்த பெண். நவநாகரிக யுவதி. இப்போது புனேவில் இருக்கிறாள். சொந்த ஊர் மைசூர். தமிழ் தெரியாது. வீட்டில் அருணாவை தவிர மற்ற அனைவரும் நன்றாக சரளமாக கன்னடம் பேசுவார்கள். அருணாவிற்கு புரியும். பாட்டிக்கு சுத்தமாக தெரியாது. அதனால் அவளின் பேச்சு வார்த்தை எல்லாம் அரவிந்துடன் மட்டுமே. ஜனனியிடம் எப்போவாவது பேசுவாள். அழைக்கவே மாட்டாள் ஆனால் அழைத்தாள் நன்றாக பேசுவாள். அவளை புரிந்து கொள்ளவே முடியாது ஜனனியால். இது காதல் திருமணம் என்பதால் யாரும் ஒன்றும் சொல்லவும் முடியாது.
“நிவேதா பேசினாளா டா?” ஜனனி கேட்க,
“நாளைக்கு தானே சர்ஜரி, நாளைக்கு சாயங்காலமா தான் அம்மா எப்படி இருக்காங்கனு கேட்டு பேசுவா, ஆப்டர் சர்ஜெரி டைம்!” சாதாரணமாக சொன்னான் அரவிந்த.
“ஏண்டா, அதென்ன பார்மாலிட்டிக்கு பேசுறதா?”
அக்காவை முறைத்தவன், “இதில நீ என்ன தப்பு கண்டுபிடிக்கிற? லாஜிக்கா பார்த்தா சரிதானே? அவளுக்கு அக்கறை இருக்கு, சர்ஜரி டைம் தெரியும், அப்பறம் தானே பேசணும்! வேற அம்மா கிட்ட பேச அவளுக்கு தமிழ் தெரியாது! அம்மாவுக்கு தமிழை தவிர வேற எதுவும் கம்பர்ட்டபிள் இல்லை! உடைஞ்ச இங்கிலீஷ்ல எவ்ளோ நேரம் அம்மா பேசுவாங்க?”
“அம்மா, இவன் வேணும்னே தமிழ் தெரியாத பொண்ணா பார்த்து லவ் பண்ணி இருக்கான் மா, அப்போ தான் நீ சொல்றது அந்த பொண்ணுக்கு புரியாது, அந்த பொண்ணு சொல்றது உனக்கு புரியாது! அவன் ஜாலி யா இருக்கலாம்ல….”
“ஏண்டி, என்னை பார்த்தா உனக்கு சண்டை போடுற மாமியார் மாதிரி இருக்கா?” அருணா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கேட்டார்.
“இதை நீ உன் பையன்கிட்ட தான் கேட்கணும் மா!”
“நீ என்னவோ அக்மார்க் தமிழ் பையனை கட்டிக்கிட்ட மாதிரி பேசுற?” அக்காவை கேட்டான் தம்பி.
“மருமகன் எல்லாம் முக்கியம் இல்லை டா, வீட்டில ஒரு க்ளோஸ்நெஸ் வரணும்னா மருமக தான் முக்கியம்!”
“நீ எப்படிப்பட்ட மருமகள் மா? உனக்கு ஹிந்தி நல்லா தெரியுமே!” தியாகு சிரிக்க,
“பஞ்சாபி மாலும் நஹி அப்பா!” பஞ்சாபி தெரியாது என்று சொல்லி சிரித்தாள் ஜனனி. ஆரவ் வீட்டில் இவர்களை பெரிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்களும் அதை கண்டுகொள்ள வில்லை.
“என்னவோ போ…” என்று மகளை நினைத்து கவலையாக அருணா சொல்ல,
“எனக்கு தான் மாமியார் ஒழுங்கா வாய்க்கலை, உனக்காவது மருமகள் நல்லா ஜாலியா வரணும்னு ஆசைப்பட்டேன்! உனக்கும் லக் அவளோ தான் மா….” என்றவள், ஏன் சம்பந்தமே இல்லாமல் அந்நேரம் அப்படி சொல்ல தோன்றியது என்று தெரியவில்லை, ஆனால் சொன்னாள் ஜனனி.
“அம்மா, நீ மலர்விழியோட ஜாலியா இரும்மா, நல்லா இருந்துச்சு நீங்க ரெண்டு பேரும் ஒரு புரிதலோட பேசிக்கிட்டே வேலை பார்த்தது!” என்றாள்.
“மருமகளை பத்தி சொல்லிட்டு, வேலைக்கார பொண்ணோட கம்பேர் பண்ற, லூசு!” எரிச்சலாக எழுந்து போனான் அர்விந்த். எதுக்கு அந்த எரிச்சல்?
அவன் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணை பற்றி பேசிவிட்டு மலரை பற்றி பேசியதினாலா? அல்லது மலரை போல் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் அம்மாவுடன் நெருக்கமாக இருப்பாள், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும் என்று மலரை பெருமையாக சொன்னதாலா?
அறைக்குள், மகளை கடிந்தனர் பெற்றோர். “அவன் சும்மாவே டக்ன்னு கோபப்படுவான், ஏண்டி நீ சம்பந்தமே இல்லாம பேசி வைக்கிற?”
“நான் இதையும் அதையும் சேர்க்கலை மா….கடவுளே….” டென்ஷன் ஆன ஜனனி, தம்பியை போனில் அழைத்தாள்,
“டேய், மரியாதையா உள்ள வா! நான் சொல்றதை வந்து கேளு….”
அவன் உள்ளே வந்தவுடன்,
“நிவேதா பத்தி பேசினது வேற, மலர்விழி பத்தி சொன்னது வேற…. அவ நல்லா பொண்ணா இருக்கா, பேச்சு துணைக்கு இப்போ அம்மாக்குங்கிற மீனிங்ல சொன்னேன்! நீயா தான் அவங்க ரெண்டு பேரையும் கம்பேர் பண்ணே! தப்பு என்மேல இல்லை, உன்மேல…. புரியுதா சார்?”
“அர்விந்த், கடவுளா பார்த்து தான் மலரை நம்ம வீட்டுக்கு அனுப்பி இருக்கார். இன்னைக்கு காலையில இருந்து ஒரு போன் பண்ணலை உங்க பாட்டி. அந்த அளவுக்கு எல்லாம் நல்லா செய்றா! அந்த அர்த்தத்தில தான் அக்கா சொன்னா.” என்று மகனிடம் விளக்கினார்கள் தியாகுவும் அருணாவும்.
“அவ வந்து மூணு நாள் தான் ஆகுது! ஓவர் ஹைப் கொடுக்கிறீங்க நீங்க எல்லாரும் அவளுக்கு. பாட்டி ஒன்னு சொல்வாங்களே, புது விளக்கமாறு நல்லா தான் கூட்டும்னு….”
“டேய், வேணா போன் பண்ணி கிட்ட கேளு…. எங்க எல்லாருக்கும் அவ குணம் தெரியுது…. நீ வேணும்னே பேசுற….” திட்டினாள் தம்பியை ஜனனி.
“சரி சரி… போதும் நீங்க எல்லாரும் அவளுக்காக பேசுறது! உங்க கூட்டணி சொல்றது கரெக்ட்டா இருந்தா அம்மாவுக்கு நல்லது தான்! அது தானே வேணும் நமக்கு!” சரண்டர் போல் கையை உயர்த்தினான் அர்விந்த்.
அன்று இரவு கவிழும் நேரம் வரை அம்மாவுடனே இருந்து விட்டு பிறகு தான் வீட்டிற்கு திரும்பினர் அக்காவும் தம்பியும். இவர்கள் வரும் போது பாட்டிக்கும் ஆரவ்விற்கும் உணவு வைத்து கொண்டு இருந்தாள் மலர். ஜனனி அறைக்குள் சென்று உறங்கும் மகளை பார்த்து விட்டு வந்து அங்கேயே அமர்ந்து அவர்களுடன் பேசினாள்.
அர்விந்த், இந்த பக்கமே பார்க்க விரும்பாதவன் போல் அறைக்குள் நழுவ பார்த்தான்.
“ஆரும்மா!” பாட்டி அழைக்க,
அவர் அருகில் வந்து, அவரை அணைத்து விடுவித்து,
“குட் நைட் பாட்டி, நாளைக்கு சீக்கிரம் ஹாஸ்பிடல் போகணும்!” என்றவன், அங்கே மலர் என்ற ஒரு உருவம் நிற்பதையே பொருட்படுத்தாமல் சென்று விட்டான். மதியம் கிளம்பும் முன் தன்னை தேடி வந்து பேசினது போல், இப்போதும் தன்னை பார்ப்பான், எதாவது பேசுவான் என்று நினைத்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு முகத்தில் அடித்தாற் போல் இருந்தது அவன் பாராமுகம்! சட்டென்று கண்கள் கலங்கி விட, இது தான் உன் இடம், வேலை செய்யும் பெண் தானே நீ என்று அவன் சொன்னது போல் உணர்ந்தாள் மலர்.