விஷம் – 32
யாழவனின் வார்த்தைகள் அவளைத் திகைப்பூண்டை மிதித்தாற் போல அசையாமல் நிற்கச் செய்தன.
“ஹேய் பேபி..? ஆர் யு ஓகே..?”
“ம்ம்…”
“என்னடி..?”
“இங்க எனக்கு நர்ஸ் வேலை இல்லன்னா வேற ஏதாவது வேலை வாங்கி கொடுக்க முடியுமா..?” எனக் கேட்டாள் அவள்.
“வாட்..? வேலையா.. எதுக்குடி..?” எனக் கேட்டான் அவன்.
“இங்கே இருக்கும் வரைக்கும் ஏதாவது வேலை பார்த்தா நல்லதுன்னு தோணுது…”
“எதுக்கு..? வீட்லயே இருக்க போர் அடிக்குதா..?” எனக் கேட்டான் அவன்.
“எனக்கு போர் எல்லாம் அடிக்கவே இல்லை.. உங்க கூட போராடவே டைம் சரியா இருக்கு.. இதுல எங்க போர் அடிக்க போகுது…?” சலித்தாள் அவள்.
“நீங்க கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கணும்ல.. அதுக்குத்தான் கேட்டேன்..” என்றாள் அவள்.
“ஓஹோ மேடம் நான் கொடுத்த பணத்தை கடனா நினைச்சு திருப்பி் தர போறீங்களா..?”
“ஏன் என்னால தர முடியாதுன்னு நினைக்கிறீங்களா? நான் எப்படியாவது சம்பாதிச்சு கொடுத்திடுவேன்.. இங்கே கொடுக்கலைன்னாலும் இந்தியா போனதுக்கு அப்புறம் கண்டிப்பா அனுப்பிடுவேன்..”
“பேபி…?”
“ம்ம்…?”
“நிஜமாக இந்தியா போகத்தான் போறியாடி..?”
“நீங்க சொன்ன ஒரு மாசம் மட்டும் இங்கே இருப்பேன்.. அதுக்கு மேல இருக்க மாட்டேன்..”
“ஓஹ்..”
“சரி எனக்கு வேலை ஏதாவது கிடைக்க ஏற்பாடு பண்ண முடியுமா..?”
“நீ வேலை பார்த்து ஒன்னும் என்னோட பணத்தை திருப்பித் தர வேணாம்.. எனக்கு ஏதாவது பண்ணனும்னு நினைச்சேன்னா உன் கையால காபி போட்டுக் கொடு.. நீ பர்ஸ்ட் டைம் போட்டுக் கொடுத்த காபியோட டேஸ்ட்டை நான் இன்னும் மறக்கல..” என அவன் கூற, அவளுக்கோ உள்ளம் உருகியே போனது.
“காபி என்ன சமையலே பண்ணித் தரேன்..” என்றாள் அவள்.
அவனுடைய முகமோ சட்டென புன்னகையில் விரிந்தது.
“உனக்கு சமையல் எல்லாம் பண்ணத் தெரியுமா அச்சு..?” என வியப்பாகக் கேட்டான் அவன்.
“நல்லாவே சமைப்பேனே.. ஓகே நானே இந்தியன் ஸ்டைல்ல சாப்பாடு ரெடி பண்றேன்..” என்றதும் அவனுக்கோ மறுக்கத் தோன்றவில்லை.
“வாவ் சூப்பர்டி.. எங்க கிச்சன்ல இருக்கவங்க உனக்கு தேவையான எல்லா ஹெல்ப்பும் பண்ணுவாங்க.. நீ குக் மட்டும் பண்ணிக் கொடுத்தா போதும்… எவ்ரி சண்டே நான் உனக்கு லண்டன் ஸ்டைல்ல குக் பண்ணித் தர்றேன்..” என்றான் அவன்.
“ சரி..” என ஒத்துக் கொண்டவளின் முகத்திலோ அன்றுதான் நிறைவான புன்னகை தவழ்ந்தது.
அவனுக்கும் மனம் சற்று இதமாக இருந்தது.
அவளுடன் இப்படி கோபமின்றி பேசியே பல நாட்கள் ஆனது போல இருக்க இப்படியே இந்த நொடிகள் நீண்டு விடாதா என்ற ஏக்கம் அவனுக்குள் எழுந்தது.
அவளோ படுக்கையை சரி செய்துவிட்டு குளித்து முடித்து வெளியே வந்தவள் நேரே கிச்சனுக்கு சென்று அவனுக்காக காபி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க விரிந்த புன்னகையுடன் அந்த காஃபியை வாங்கி ரசித்து ருசித்து பருகினான் அவன்.
அன்றைய நாள் முழுவதும் அப்படியே கழிந்தது.
அவள் பழையதைப் பற்றி அவனிடம் பேசவே இல்லை.
அவனும் தன்னுடைய கடந்த காலம் எதுவும் அவளை பாதிக்காதவாறு அவளுடன் பக்குவமாக நடந்து கொள்ள ஒரே வீட்டினுள் நண்பர்கள் போலத்தான் அவர்களுக்கு நாட்கள் கழியத் தொடங்கின.
கிட்டத்தட்ட அவன் கூறிய ஒரு மாத கால அவகாசம் முடிந்துவிட அன்று காலை எழுந்து அவனுக்காக காபி தயாரிக்கச் சென்றவளுக்குள்ளோ ஏதோ ஒரு மாற்றம்.
மனம் முழுவதும் யாழவன் மட்டும்தான் நிரம்பி வழிந்தான்.
கடந்த இந்த ஒரு மாதத்தில் அவனுடைய அன்பையும் அக்கறையும் காதலையும் திகட்டத் திகட்ட அனுபவித்தவளுக்கு அவன் மீது இருந்த கசப்புகள் கூட மறைந்துதான் போயிருந்தது.
அவன் கூறியதைப் போல அவளை நெருங்கவே இல்லை.
கைகளை மட்டுமே அவ்வப்போது பிடித்துக் கொண்டு அன்பாக ஓரிரு வார்த்தைகளை அவளிடம் உதிர்ப்பானே தவிர அதை விடுத்து முத்தம் கூட அவன் இதுவரை யாசிக்கவில்லை.
காதலை மட்டும் அவளுக்கு கொட்டிக் கொடுத்து காமம் கலக்காத காதலில் அவளை மூழ்கடிக்க, அவளோ அதில் திளைத்துத்தான் போனாள்.
மனதுக்குப் பிடித்தவர்கள் செய்த தவறுகள் கூட அவர்களுடைய அன்புக்கு முன்பு கொஞ்சம் கொஞ்சமாக மாயமாகிப் போவது தானே இயல்பு..?
மாற்றம் ஒன்றுதானே மாறாதது..!
அர்ச்சனாவும் அப்படித்தான் நன்றாகவே மாறிவிட்டிருந்தாள்.
இதோ அவன் கொடுத்த ஒரு மாத அவகாசம் முடிந்த பின்பும் கூட அவனை விட்டு இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு எழவே இல்லை.
அப்படி ஒருவேளை இந்தியா சென்றால் அவனைப் பிரிந்து இருக்க முடியுமா என்ற கேள்வியே அவளுக்கு பூதாகரமாக இருந்தது.
காதலிக்கும் போது இருந்த அன்பை விட அவன் கணவனாக வந்த பின்பு அவன் மீது இருந்த அன்பு இன்னும் அதிகரித்ததை உணர்ந்து கொண்டவள் கடந்த காலத்தை மறந்து அவனுடன் மீண்டும் ஒரு புதிய காதல் வாழ்க்கையை தொடங்கலாம் என்று எண்ணினாள்.
இன்றே தன்னவனிடம் பேச வேண்டும் என எண்ணியவாறு அவனுக்காக ஆசை ஆசையாக அவள் காஃபியை தயாரிக்க, அக்கணம் அவளுக்கு தலை சுற்றுவது போல இருந்தது.
தடுமாறியவள் சற்று நேரம் சமையல் கட்டை பிடித்தவாறு அப்படியே நின்றுவிட்டாள்.
சிறிது நேரத்தில் அவள் இயல்பாகி விட அவனுக்காக காபியை எடுத்துக்கொண்டு தன்னுடைய அறையை நோக்கிச் சென்றவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.
என்ன இது எனத் தடுமாறி காபியை அந்த அறைக்குள் இருந்து சிறிய மேசை மீது வைத்துவிட்டு யாழவனைப் பார்க்க அவனோ இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
அவனுடைய தூக்கத்தை குழப்ப மனம் வராது போக, தன்னுடைய தலையை தேய்த்துக் கொண்டவளுக்கு சட்டென விழிகள் விரிந்தன.
அவளுடைய மாதவிடாய் நாட்கள் தள்ளிப் போய் இருப்பது அப்போதுதான் அவளுக்கு நினைவு வர சில நொடிகள் உறைந்து போய்விட்டாள் அர்ச்சனா.
இது குழந்தையாக இருக்குமா..?
அவள் தாதி அல்லவா..?
சட்டென அவளுடைய மூளை நாட்களை சரியாக கணக்கிட்டுப் பார்த்து குழந்தையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை அவளுக்கு உரைத்து விட அவளுடைய முகம் பூவாய் மலர்ந்தது.
அவனுடன் அவள் ஒன்றாக இணைந்து வாழ்ந்தது இரண்டு நாட்கள் மட்டும்தானே..?
அந்த இரண்டு நாட்களில் யாழவனின் குழந்தை அவளுள் பதிந்துவிட்டதா..?
சிலவேளை குழந்தை இல்லாமலும் இருக்கலாம்.. குழந்தையாகவும் இருக்கலாம் என எண்ணிக் கொண்டவள் அங்கே வேலை செய்பவரிடம் பிரக்னன்சி டெஸ்ட் கிட்டை வாங்கி வரும்படி பணித்தாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் அவள் கேட்டது கிடைத்து விட சற்றே படபடப்போடு குளியலறைக்குள் சென்று தன்னுடைய சிறுநீரை எடுத்து பரிசோதித்தவளுக்கு ஒரு ஒற்றைக் கோடும் சற்றே மெல்லிய இன்னொரு கோடும் அருகே தெரிய அவளுடைய விழிகளோ மகிழ்ச்சியில் மின்னின.
ஏர்லி பிரக்னன்சி என்பதைப் புரிந்து கொண்டவளுக்கு உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது.
இன்னும் நான்கு நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதித்துப் பார்த்தால் இந்த மெல்லிய கோடு இன்னும் அடர்த்தியாக தெரியும் என்பதை உணர்ந்து பூரித்து சிரித்தவளுக்கு அந்த மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை.
அதிக அளவு மகிழ்ச்சியில் அவளுக்கு விழிகளில் இருந்து கண்ணீர் கூட வழிந்து விட்டது.
ஆம் அவளும் தாயாகப் போகின்றாள்.
இதோ இருவருடைய காதல் வாழ்க்கைக்கும் சாட்சியாக ஒரு அழகிய உயிரொன்று இன்னும் பத்து மாதங்களில் இந்த உலகிற்கு வரப்போகின்றது.
இத்தனை நாட்கள் கடவுள் தன்னை சோதிக்கிறார் என்றல்லவா நினைத்தாள் ஆனால் அவர் என் குழந்தைக்காகவும் என்னுடைய எதிர்கால வாழ்க்கையின் நல்லதிற்காகவும்தான் இங்கேயே என்னை காத்திருக்க செய்திருக்கிறார்.
அவள் வணங்கும் கடவுளை எண்ணி மனதார நன்றி கூறியவள் பரிசோதித்த கிட்டை தன் கையில் எடுத்துக்கொண்டு முதலில் யாழவனிடம் கூறலாம் என்ற முடிவை எடுத்தாள்.
அவனிடம் எப்படிக் கூறுவது..?
நீ அப்பவாகப் போகிறாய் என்பதா இல்லை ஐ அம் ப்ரெக்னன்ட் என சிம்பிளாக முடிப்பதா..?
எப்படி இந்த சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்து கொள்வது..?
வார்த்தைகள் தந்தியடிப்பது போல இருந்தன.
இப்படியே தனியே இருந்து பூரிப்பதை விட யாழனிடம் கூறினால் அவனும் சந்தோஷப்படுவான் என எண்ணியவள் வேகமாக குளியலறைக் கதவைத் திறந்து வெளியே வர அங்கே அவள் வைத்திருந்த காபியோ தரையில் விழுந்து தரை எங்கும் சிதறி இருந்தது.
என்ன ஆனது என இவள் பதறி யாழவனின் முகத்தைப் பார்க்க,
அவனுடைய முகம் முழுவதும் குழப்பத்திலும் கோபத்திலும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலையில் இருப்பதைக் கண்டவள் திகைத்துத்தான் போனாள்.
“என்னாச்சு யாழன்..?”
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின் யாழன் என அவனை அன்பாக அழைத்திருக்கிறாள்.. ஆனால் அந்த வார்த்தையை அக்கணம் உணர்ந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லாதது போனதுதான் பரிதாபமே.
அவள் கேட்டதைக் கூட கவனத்திற் கொள்ளாது இறுகிப்போய் அமர்ந்திருந்தவனின் அருகே நெருங்கியவள்,
“என்ன யாழன்..? ஏதாவது பிரச்சனையா..?” என மீண்டும் கேட்க,
சிவந்த விழிகளுடன் அவளை நிமிர்ந்து பார்த்தவன் “என்னோட எக்ஸ் பிரக்னண்டா இருக்கா..” என்றான்.
அவளுக்கோ செவிகளில் என்ன வார்த்தைகள் வந்து விழுந்தன என்ற சந்தேகமே வந்துவிட்டது.
காதுகள் தம்முடைய வேலையை சரியாகத்தான் செய்கின்றனவா..?
“பு… புரியல.. என்ன சொல்றீங்க..?” என அவள் அதிர்ந்து விழித்தவாறு கேட்க, அவனுக்கோ உள்ளம் நொறுங்கிக் கொண்டிருந்தது.
“எ.. என்னோட எக்ஸ் கிளாரா இப்போ என்னோட குழந்தையை சுமந்துகிட்டு இருக்காளாம்..” என அவன் மீண்டும் அந்த விடயத்தைக் கூற,
அவளுடைய கரத்தில் இருந்த பிரக்னன்சி கிட்டோ அவளுடைய கை நழுவி தரையில் விழுந்தது.
அது மட்டுமா விழுந்தது..?
பூமியே அவளுக்கு தலைகீழாக சுற்றுவது போலவும் ஏதோ ஒரு அதல பாதாளத்தில் தானும் விழுந்து மாட்டிக்கொண்டதைப் போலவும்தான் அவளுக்குத் தோன்றியது.
🌻🌻
ஏன் விஷக் குட்டி இப்படி?