36. காதலோ துளி விஷம்

4.8
(106)

விஷம் – 36

“என்னால இதுக்கு மேல உங்க கூட வாழ முடியாது யாழவன்.‌. இங்க வந்து ஒரு மாசம்தான் முடிஞ்சுது.. அதுக்குள்ள ஒரு குழந்தைக்கு அப்பான்னு வந்து நிக்கிறீங்க.. இதுக்கு முன்னாடி இன்னும் ரெண்டு பொண்ணுங்க கூட வேற உங்களுக்கு பழக்கம் இருந்துச்சு.. அவங்க எப்ப புள்ளையோட இங்க வந்து நிக்க போறாங்களோ தெரியல..

ஒவ்வொரு நிமிஷமும் வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு என்னால உங்க கூட வாழவே முடியாது… ப்ளீஸ் என்ன விட்ருங்க..” அழுகையுடன் கூறினாள் அவள்.

“உன்னையும் குழந்தையையும் பிரிஞ்சு என்னால எப்படிடி வாழ முடியும்..?” வேதனை மிகுந்த பரிதவிப்புடன் கேட்டான் அவன்.

“உங்களுக்குத்தான் இப்ப இன்னொரு குழந்தை இருக்கே.. இனி நாங்க எதுக்கு..?”

“ஏய்.. இப்படிலாம் இல்லடி… நீ இல்லாம…”

“ப்ச்.. உங்க கூட இருந்தா உங்க குழந்தைய பார்க்கும் போதெல்லாம் எனக்கு உங்க கடந்த கால வாழ்க்கையோட நினைவு னதான் வந்துகிட்டே இருக்கும்… ஒவ்வொரு நாளும் நான் அதை நினைச்சு நினைச்சு வலில சாகணும்னு நினைக்கிறீங்களா..? நீங்க என்னை காதலிச்சது உண்மைதானே..?

உங்க லவ் உண்மையா இருந்தா நான் சந்தோஷமா இனியாவது இருக்கணும்னு நினைச்சா தயவு செஞ்சு என்னை இந்தியாவுக்கு அனுப்பி வச்சிடுங்க..

இதுக்கு மேல நான் இங்க இருந்தேன்னா ஒன்னு எனக்கு பைத்தியம் பிடிச்சுரும்… இல்லன்னா டிப்ரஷன்ல எனக்கு ஏதாவது ஆயிடும்..” என்றதும் அவனுக்கோ விழிகளில் இருந்து கண்ணீர் நில்லாமல் வழிந்தது.

“ப்ளீஸ் அர்ச்சனா.. என்னால உன்ன விட்டுட்டு இருக்க முடியும்னு தோணவே இல்லடி.. உன்னோட வயித்துல வளர்றது என்னோட புள்ளடி.. உன்னையும் குழந்தையையும் பிரிஞ்சு நான் எப்படி உயிரோடு இருப்பேன்..?

என்ன விட்டுட்டு மட்டும் போகாத அர்ச்சனா.. உன்ன கெஞ்சி கேட்கிறேன்.. ப்ளீஸ்..” அவளிடம் மன்றாடினான் அவன்.

“உங்கள மாதிரி ஒருத்தர் கிட்ட என்னோட குழந்தை வளர்றதுல எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்ல.. என் குழந்தையை ஒழுக்கமா வளர்க்கணும்னு நினைக்கிறேன்.. இந்த நாடே வேணாம்.. நீங்களும் வேணாம்.. எங்க வாழ்க்கைல நீங்க இல்லாம இருந்தா மட்டும்தான் எங்களுக்கு நிம்மதி… தயவு செஞ்சு எங்கள அனுப்பி வச்சிடுங்க..” என அவள் கூறியதும் அவனோ சில்லு சில்லாக சிதறி விட்டான்.

என்ன வார்த்தைகள் சொல்லிவிட்டாள்..?

இதயம் பிளந்தது போல வலித்தது.

அவனுடைய குழந்தை அவனுடன் வளர்வதைக் கூட அவள் விரும்பவில்லை என்றதும் அவனுக்கும் இனி ஏன் இந்த உலகில் வாழ வேண்டும் என்ற எண்ணமே தோன்றி விட்டது.

அவள் முழுவதுமாக தன்னை வெறுத்து விட்டாள் என்பதை உணர்ந்து கொண்டவனுக்கு உதடுகளில் கசப்பான புன்னகை.

“என்ன விட்டு பிரிஞ்சு இருக்கிறதுதான் உனக்கு நிம்மதின்னா அந்த நிம்மதி உனக்கு கண்டிப்பாக கிடைக்கும்டி..‌” என்றவன் தடுமாற்றத்துடன் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.

எங்கே அவள் முன்பு கதறி அழுது விடுவோமோ என்ற பயம் அவனுக்குள் துளிர் விட்டது.

“நாளைக்கே நான் இந்தியா போகணும்.. டிக்கெட் புக் பண்ணுங்க..” என்றாள் அவள்.

“சரிம்மா…”

“நீங்க இதுவரைக்கும் எனக்காக செலவழிச்ச பணம் என்னோட தங்கச்சிக்கு கொடுத்த பணம் எல்லாத்தையும் நான் ரிட்டன் பண்ணிடுறேன்..” என மேலும் அவனுடைய இதயத்தில் வார்த்தைகளால் கத்தியை இறக்கினாள் அவள்.

“அதெல்லாம் வேணாம்டி… ஒரு தடவை டாக்டர்கிட்ட கேட்டு இந்த டைம்ல ட்ராவல் பண்ணிக்கலாமான்னு கன்ஃபார்ம் பண்ணிடலாம்மா.. அவர் போகலாம்னு சொன்னா அடுத்த நிமிஷமே உனக்கு டிக்கெட் புக் பண்ணித் தரேன்..” என்றவன் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாது தன்னுடைய அறைக்குள் வந்து கதவை அடைத்துக் கொண்டான்.

என்னென்னவோ பொல்லாத எண்ணங்கள் எல்லாம் அவனுக்குள் எழுந்தது.

அவனுடைய உயிர் உலகம் அனைத்தும் அர்ச்சனாதானே..

அவளையும் குழந்தையையும் பிரிந்து அவனால் இருக்க முடியுமா..?

இனி வாழ்நாள் முழுவதும் அவன் வேதனையுடன்தான் கழிக்க வேண்டுமோ..?

விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவன் அவனுடைய ஃபோன் பாக்கெட்டில் இருந்து வைப்ரேட் ஆகுவதை உணர்ந்து அதனை எடுத்துப் பார்த்தான்.

தந்தையிடமிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது.

கடந்த ஐந்து நாட்களாக அவனுடைய அன்னையும் எத்தனையோ அழைப்புகளை அவனுக்கு எடுத்து விட்டார்.

இதுவரை அவன் எந்த அழைப்பையும் ஏற்கவே இல்லையே

அன்னை கூறித்தான் தந்தை அழைப்பெடுக்கிறார் போலும் என எண்ணிக்கொண்டவன் இதற்கு மேலும் அழைப்பை ஏற்காது இருந்தால் அவர்கள் பயந்து விடுவார்கள் என நினைத்து அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

“இடியட் என்னடா பண்ற..? உன்னால ஒரு கால் கூட அட்டென்ட் பண்ண முடியாதா..? உங்க அம்மா என்னவோ ஏதோன்னு பதறிகிகட்டு இருக்கா.. அங்கே இருந்த நீ என்னதான் பண்ணிக்கிட்டு இருக்க..?” என அவனுடைய தந்தை கோபத்துடன் திட்ட

அமைதியாக இருந்தான் அவன்.

இதுவே பழைய யாழவனாக இருந்திருந்தால் ஆங்கிலத்தில் மூச்சு விடாமல் பேசி அவனுடைய தந்தையை மூச்சடைக்க வைத்திருப்பான்.

ஆனால் இப்போது இருப்பவன்தான் தன்னையே தொலைத்தவன் ஆயிற்றே.

அவனுக்கு இந்த திட்டெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை.

“டேய் உன்னைத்தான்டா கேட்கிறேன்.. உன் காதுல விழுதா இல்லையா..? எத்தன பிஸ்னஸ் டீல்ஸ கேன்சல் பண்ணி வச்சிருக்க.. உன்னால எவ்வளவு லாஸ் தெரியுமா..? உன்ன நம்பி தானே உன்னை லண்டன்ல இருக்க வச்சிருக்கேன்.. இங்க எல்லாம் பிசினஸையும் நான் மட்டும் பார்த்தா போதாது.. இங்கிருந்து அனுப்புற மெடிசின்ஸ் எல்லாத்துக்கும் நீ தானே பொறுப்பு. நீதான் உன்னோட வேலையை ஒழுங்கா பாக்கணும்… இந்த அஞ்சு நாளும் என்னதான் பண்ணிக்கிட்டு இருந்த..? கிட்டத்தட்ட 40 கோடிக்கு மேல உன்னால லாஸ் ஆகி இருக்கு..” என்றார் அவர் கோபத்துடன்.

“என் வாழ்க்கையே இங்க சின்ன பின்னமாகிட்டு இருக்குப்பா, நான் என் வாழ்க்கைய பார்ப்பேனா இல்ல நாற்பது கோடியை பார்ப்பேனா..?” என்றான் அவன் உடைந்து போன குரலில்.

சட்டென அவரோ அமைதியானார்.

அவருக்கு அர்ச்சனாவுடன் ஏதோ பிரச்சனை என்பது நொடியில் புரிந்து போனது.

“என்னடா உன் பொண்டாட்டி கூட பிரச்சனையா..?”

“ம்ம்..”

“எனக்கு அப்போவே தெரியும்.. அவ உனக்கு செட் ஆக மாட்டான்னு.. இதுக்குத்தான் நான் ஆரம்பத்துலயே சொன்னேன்.. என்னோட பேச்ச அம்மாவும் பிள்ளையும் எங்க கேட்டீங்க..? எப்படியும் கல்யாணம் ஆகி மூணு மாசத்துலதான் பிரச்சனை வரும்னு நினைச்சேன்.. ஆனா ஒரு மாசத்துலயே நீ இப்படி சொல்லுவேன்னு எதிர்பார்க்கல..” என அவர் கூற

கசப்பாக சிரித்தான் யாழவன்.

“யாழவா இப்போ எதுக்குடா நீ வாழ்க்கையே முடிஞ்சு போன மாதிரி இவ்வளவு சோகமா பேசுற..? நான் உன்னை இப்படி பார்த்ததே இல்லையே.. உனக்கு என்ன பொண்ணுங்க புதுசா..? இதுக்கு முன்னாடியும் பல லவ்வுல விழுந்தவன் தானே நீ.. அது மாதிரி இதையும் தூக்கி போட்டுட்டு வெளிய வா.. நீ எதுக்காக உன்ன ஸ்ட்ரெஸ் பண்ணிக்கிற..?”

“இவ்வளவு நாளும் லவ்வுல இருக்கேன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. ஆனா உண்மையான லவ்னா என்னன்னு என் அர்ச்சனாவைப் பார்த்ததுக்கு அப்புறமாதான் தெரிஞ்சுகிட்டேன் பா… எவ்வளவு ஈசியா அவள விட்டுட்டு வான்னு சொல்றீங்களே… உங்களால அம்மாவை விட்டுட்டு இருக்க முடியுமா..?” என அவன் கேட்க அவருக்கோ பேச்சே வரவில்லை.

“என்னப்பா அமைதி ஆயிட்டீங்க..? உங்களால அம்மா விட்டுட்டு இருக்க முடியுமா..?”

“டேய் அவள விட்டுட்டு எப்படிடா இருக்க முடியும்..?” என அவர் கேட்க,

“அதே மாதிரிதான்பா எனக்கு அர்ச்சனாவும்.. அவ என் உசுருப்பா.. அவளை எப்படி விட்டுட்டு என்னால ஈஸியா வாழ முடியும்னு நினைக்கிறீங்க..? அவ இல்லன்னா செத்துடுவேன்பா..” என்றவன் உடைந்து அழுதே விட அவருக்கோ இதயம் படபடத்து விட்டது.

செத்து விடுவேன் என யாழவன் கூறிய வார்த்தைகள் அவரை பெரிதாய் தாக்கியது.

எந்த தந்தையால்தான் தன்னுடைய மகன் கதறி அழுவதை தாங்கிக் கொள்ள முடியும்..?

“டேய் கண்ணா.. எ.. என்னப்பா இது சின்ன புள்ள மாதிரி அழுற…? இப்ப என்ன அவ தான் முக்கியம்னா அவ கூடவே விட்டுக் கொடுத்து வாழு.. எல்லாமே சரி ஆயிடும்.. உங்க அம்மாவுக்கும் எனக்கும் வராத பிரச்சனையா..? இத்தனை வருஷமா நாங்க சேர்ந்து வாழலையா..? வாழ்க்கைன்னா அப்படித்தான்பா.. ஆயிரம் பிரச்சனை வரத்தான் செய்யும்.. நமக்கு பிடிச்சவங்களுக்காக நாம எதை வேணும்னாலும் விட்டுக்கொடுத்து வாழலாம்..” என்றார் மகனுடைய வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல்.

அவனோ நடந்து முடிந்த அனைத்தையும் சுருக்கமாக கூறி முடிக்க அவருக்கோ தூக்கி வாரிப் போட்டது.

“என்னப்பா சொல்ற..?”

“எனக்கு என்ன பண்றதுனே தெரியலப்பா…? என்னோட தப்பால உருவான குழந்தைதான் அது.. அதுக்காக அதை அப்படியே எப்படிப்பா விட முடியும்..? எந்த தப்பும் பண்ணாத பிஞ்சுக் குழந்தைய ஏதோ ஒரு இல்லத்துல சேர்த்து விட முடியுமாப்பா..? எல்லாத்தையும் விட தப்பே பண்ணாம என் கூட இருந்து ரொம்ப கஷ்டப்படுறாப்பா அர்ச்சனா.. அவள நினைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. என்ன வேணாம்னு சொல்லிட்டாப்பா..” என்றவன் சிறு பிள்ளை போல தேம்பி அழுதான்..

அவருக்கோ அவனை எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை.

“கண்ணா… நீ அங்கேயே வளர்ந்தவன் டா.. அந்த கல்ச்சர் தானே உனக்கு தெரியும்.. இதை பெருசா எடுத்துக்கிட்டா என்ன செய்றது..? நான் வேணும்னா அர்ச்சனா கிட்ட பேசவா..?”

“அப்பா..?”

“என்னப்பா..? சொல்லு.. நான் என்ன பண்ணணும்..?”

“என்ன நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்குப்பா.. அப்போ எதுவுமே புரியல.. சும்மா புடிச்ச பொண்ணுங்க கூட எல்லாம் காதல் என்கிற பேர்ல ஒண்ணா இருந்ததை நினைக்கும் போதெல்லாம் இப்போ எனக்கே அருவருப்பா இருக்கு..

கண்ணாடில என்னோட முகத்தை பார்க்கவே முடியலப்பா… அர்ச்சனா என்ன பார்த்து ச்சீன்னு சொல்றா.. என்னால தாங்கிக்கவே முடியல.. அவ வயித்துல இருக்க குழந்தை என்னோட நிழல்ல வளரவே கூடாதாம்… என்ன மாதிரி அந்த குழந்தையும் தப்பான வழில போயிடுமோன்னு சொல்றாப்பா.. எனக்கு அப்படியே செத்துடலாம் போல இருக்கு..” துடித்தான் அவன்.

விக்கித்துப் போய் விட்டார் அவர்.

“ஏன்பா நீங்க என்கிட்ட எப்படி வாழணும்னு சொல்லி வளர்க்கல..? ஏன்பா நான் பண்றது தப்புன்னு நீங்க எனக்கு சொல்லல..? நீ இப்படித்தான் வளரணும்னு நீங்க ஏன் எனக்கு சொல்லித்தரல..?? என்ன கண்டிச்சு வளர்த்திருக்கலாமேப்பா..

இந்த மாடல் கல்ச்சர் நமக்கு செட் ஆகாதுன்னு எனக்கு சொல்லி இருக்கலாமே.. என்னை ஏன் அப்படியே விட்டுட்டீங்க..? நான் தப்பான பையனா அப்பா..? பயமா இருக்குப்பா நாளைக்கு என்னோட புள்ள வளர்ந்து இதே கேள்வியை என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்லுவேன்..?” என்றவன் கதறி கதறி அழ,

யாழவனின் தந்தைக்கோ விழிகள் கலங்கி விட்டன.

அவருடைய மகன் தடுமாறும் போதெல்லாம் அவன் லண்டனில் வளர்கிறான்.. லண்டன் கலாச்சாரத்தில் மூழ்கி போய்விட்டான் என பெருமை கொண்டாரே..

இப்போது மகன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூற முடியாது அவருடைய தலை தானாக குனிந்தது.

அவன் தவறான வழிக்கு செல்வது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் விட்டது அவருடைய தவறுதானோ..?

“யா.. யாழவா…” வேதனையுடன் அழைத்தார் அவர்.

“எ.. என்னப்பா பண்ண போற..?”

“அர்ச்சனாவ டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய்ட்டு அவ டிராவல் பண்ண முடியுமான்னு கேக்கணும் பா.. அவ இந்தியா போறதுல எந்த பிரச்சனையும் இல்லனா அவளை இந்தியாக்கு அனுப்பி வைக்கப் போறேன்… பாவம்பா என்கூட இருந்தா அவ தினம் அழுதுகிட்டே இருக்கணும்… அவங்க அம்மா கூட அவ நிம்மதியா இருக்கட்டும்..”

“நான் மருமககிட்ட பேசவா..?”

“வேணாம்பா… நான் இப்ப இருக்க நிலமைல என்னால பிஸ்னஸ் எதையுமே பாத்துக்க முடியாதுப்பா.. சாரி என்னோட பிஏ கிட்ட பேசிக்கோங்க..” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவர் முதல் முறையாக தன்னுடைய மகனுக்காக இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டார்.

எந்தப் பிரச்சனையும் இன்றி தன்னுடைய மகனுடைய வாழ்வு அர்ச்சனாவுடன் மகிழ்வாக அமைய வேண்டும் என அவருடைய மனம் இறைவனிடம் கோரிக்கை வைத்தது.

💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 106

No votes so far! Be the first to rate this post.

1 thought on “36. காதலோ துளி விஷம்”

  1. நல்லா உட்கார்ந்து ஓன்னு ஒப்பாரி வைத்து அழு யாழவா. இது ரொம்ப குறைவு நீ செய்த வேலைக்கு.👌👌👌👌👌👏👏👏👏👏🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩😍😍😍❤️❤️❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!