மனம் முழுவதும் படபடப்புடன் தன்னுடைய வீட்டிற்கு முன்பு நின்றிருந்தாள் அர்ச்சனா.
தன்னைத் தனியாகப் பார்த்ததும் அன்னையின் முகம் எப்படி எல்லாம் மாறப் போகின்றதோ என்ற படபடப்பு அவளுக்குள் எப்போதோ எழுந்து விட்டது.
மூச்சை நன்றாக இழுத்து விட்டவள் அனைத்தையும் சமாளித்தாக வேண்டிய கட்டாயத்தில் மெல்ல வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினாள்.
அடுத்த நொடியே அந்தக் கதவு திறக்கப்பட்டது.
“வந்துட்டியாம்மா வா வா. உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்…” என அவளுடைய அம்மாவிற்கு பதிலாக யாழவனின் அன்னை அவளை வரவேற்க அவளுக்கோ எதுவுமே புரியவில்லை.
“நீ வர்றேன்னு எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே…” என வருத்தமும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் கேட்டவாறு அவளை வந்து அணைத்துக் கொண்டார் அவளுடைய அன்னை.
வெகு நாட்களின் பின்பு மகளைக் கண்ட மகிழ்ச்சியில் அவருக்கோ வேறு கேள்விகள் கேட்கவே தோன்றவில்லை..
இதற்கும் எனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என்பதைப் போல இறுகிய தோற்றத்துடன் அமர்ந்திருந்தார் யாழவனின் தந்தை.
ரூபாவதியும் அன்னமும் அவளை அணைத்து கன்னம் கொஞ்சி விலக,
ஏதோ தான் வெக்கேஷனிற்கு வந்ததைப் போல அல்லவா இவர்கள் நடந்து கொள்கிறார்கள் இவர்களுக்கு என்னவென்று சொல்லி புரிய வைப்பது என எண்ணியவாறு ரூபாவதியைப் பார்த்தாள் அர்ச்சனா.
“நான் இங்க வர்றதா யாழன்தான் உங்ககிட்ட சொன்னாரா…?” எனக் கேட்டாள் அவள்.
“ஆமாம்மா.. நீ இங்க வர்றதா அவன்தான் சொன்னான்.. அதுமட்டுமா நீ என்னோட பேரக் குழந்தைய சுமந்துகிட்டு வர்றியாமே.. நீ வந்ததும் உன்னை பத்திரமா பாத்துக்கச் சொல்லி சொன்னான்…
ஹாட் வாட்டர்ல நீ குளிக்கணுமாம்.. அதுக்கு அப்புறம் டாக்டர்கிட்ட அப்பாயின்மென்ட் வேற போட்டு இருக்கான்.. லாங் ட்ராவல் தானே அதனால உடனே போய் செக் பண்ணிட்டு வர்றது நல்லதுன்னு சொன்னான்…” என யாழவன் கூறியதை எல்லாம் அவனுடைய அன்னை கூறிக் கொண்டே போக அவளுடைய தலையோ மறுப்பாக அசைந்தது.
ரூபாவதியோ அவளுடைய மறுப்பான தலையசைப்பில் தன்னுடைய பேச்சை பாதியிலேயே நிறுத்தி விட அப்போதுதான் அன்னத்தின் பார்வையும் அர்ச்சனாவின் முகத்தில் நிலைத்தது.
அவளுடைய முகம் வெகுவாக சோர்ந்து விழிகள் சிவந்திருப்பதைக் கண்டவருக்கு நெஞ்சம் பதைபதைக்கவும் தொடங்கியது.
“அத்தை அவரும்தான் என் கூட வந்தாரு.. அதை உங்ககிட்ட அவர் சொல்லலையா..?” என அவள் கேட்க,
இப்போது ரூபாவதியின் முகமோ மாறிப்போனது.
“என்னமா சொல்ற..? அவன் இந்தியா வந்திருக்கானா..? அதானே பார்த்தேன் என்னடா என் மருமகளை தனியா அனுப்பி இருக்கான்னு நினைச்சேன்.. ஆனா ஏன் அவன் இங்க வரல..? எதுக்கு உன்ன மட்டும் தனியா அனுப்பி இருக்கான்..? என்கிட்ட அவன் வந்ததைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே..” என படபடத்தார் அவர்.
பாதிக்கிணறு தாண்டி ஆயிற்று.. இனி மீதியை மட்டும் மூடி மறைப்பதில் என்ன கிடைத்துவிடப் போகின்றது..? அனைத்தையும் கூறிவிடலாம் என்ற எண்ணத்தில் தன் வாயை திறந்தாள் அர்ச்சனா.
“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க அத்த.. இனி என்னால யாழன் கூட வாழ முடியாது… எல்லாத்தையும் முடிச்சிட்டுதான் இந்தியா வந்திருக்கேன்.. இனி நான் லண்டனுக்கு போறதா இல்லை..” என்றவளுக்கு கண்ணீர் பொல பொலவென வழியத் தொடங்கி விட்டது.
உறுதியாக திடமான பெண்ணாகத்தான் பேச வேண்டும் என்று எண்ணினாள்.
எவ்வளவுதான் அவளும் வேதனையைக் கட்டுப்படுத்துவது..?
நொடியில் உடைந்து விட்டாள் அவள்.
கீர்த்தனாவோ கல்லூரிக்குச் சென்றிருக்க அங்கே ரூபாவதியும் அவருடைய கணவரும் அன்னமமும் மாத்திரமே இருந்தனர்.
“என்னம்மா சொல்ற..?” எனப் பதறிப் போனவராய் கேட்டார் அன்னம்.
மங்களகரமாய் வாழ்க்கையை ஆரம்பித்து வாழச் சென்ற மகள் ஒரே மாதத்தில் வீட்டிற்கு வந்து இப்படிக் கூறினால் அந்தத் தாயின் உள்ளம் என்ன பாடு படும்..?
“எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க.. என் மேலதான் தப்பு… லண்டன்ல வளர்ந்தவர் எப்படி இருப்பாருன்னு தெரியாம அவரைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டது என்னோட தப்புதான்… என்ன காதலிக்க முன்னாடியே அவர் மூணு பொண்ணுங்கள காதலிச்சு அவங்க கூட வாழ்ந்து முடிச்சிட்டாரு.. நடந்து முடிஞ்சதை என்னால மறுபடியும் பேச முடியாதும்மா.. எனக்கு அந்த லண்டன் கலாச்சாரம் எல்லாம் ஒத்து வரல… நினைச்சாலே அருவருப்பா இருக்கு… ஏமாந்துட்டோம்னு நெஞ்செல்லாம் எரியுது… ரொம்ப நொந்து போய் இங்க வந்து சேர்ந்திருக்கேன்… கடைசி வரைக்கும் உங்களுக்கு பொண்ணா இங்கேயே இருந்திடுறேன்மா ப்ளீஸ்..” என அழுத மகளை கண்ணீரோடு வெறித்தார் அவர்.
அவருக்கோ மனம் ஆறவே இல்லை.
அவள் கூறிய வார்த்தைகள் எல்லாம் இதயத்தில் இடியை இறக்கியது போல இருந்தது.
ரூபாவதியோ கொதித்துப் போய்விட்டார்.
“என்னமா பேசுற நீ..? என் பையன பத்தி தப்பா பேசாத.. அவன் உன் மேல உயிரே வச்சிருக்கான் தெரியுமா..? இதுக்கு முன்னாடி எத்தனையோ பொண்ணு பாத்தோம்.. எல்லாரையும் வேணாம்னு உன்னை மட்டும்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு போராடி கல்யாணம் பண்ணிக்கிட்டான்… அவன் உன்னை ஏமாத்துவானா..?” என அவர் படபடக்க,
“அவர் என்ன ஏமாத்தல அத்தை.. நான்தான் ஏமாந்துட்டேன்.. அதெல்லாம் அவரோட பாஸ்ட் லைஃப்பாம்.. இனி எனக்கு துரோகம் பண்ண மாட்டேன்னு சொல்றாரு.. ஆனா அவர் பண்ணி முடிச்ச காதலர்களை எல்லாம் மறந்து என்னால எப்படி அவர் கூட வாழ முடியும்னு நினைக்கிறீங்க..? நடந்து முடிஞ்சதுலாம் அப்படியே முடிஞ்சு போனாக் கூட பரவாயில்ல.. குழந்தை மூலமா மறுபடியும் முன்ன வந்து நின்னா என்னால எப்படி அத ஏத்துக்க முடியும்..?” அழுதவாறே கேட்டாள் அவள்.
“கு.. குழந்தையா..?” அதிர்ந்து விழித்தார் ரூபாவதி.
இருக்கையில் இருந்து எழுந்த சாள்ஸ் அன்டனியோ ரூபாவதியின் கரத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார்.
“நம்ம பையன் மேலதான் தப்பு இருக்கு ரூபா… அவன் அங்க நிறைய பொண்ணுங்க கூட பழகினது எனக்குமே தெரியும்.. அந்த நாட்டோட கல்ச்சர் அதுதானேன்னு நானுமே கண்டுக்காம விட்டுட்டேன்.. இதுக்கு முன்னாடி லவ் பண்ண பொண்ணு அவனால கன்சீவா வேற இருக்கா.. அந்தப் பிரச்சினைலதான் அர்ச்சனா இனி அவன் கூட வாழ முடியாதுன்னு இங்க கிளம்பி வந்துட்டா.. இந்த பொண்ண குறை சொல்ல நமக்கு எந்த உரிமையும் இல்லை..” என்றார் அவர்.
ரூபாவதியோ சத்தமாக அழுத் தொடங்கி விட்டார்.
“ஐயோ… என்னங்க சொல்றீங்க..? என் பையனா இப்படி..? இவ்ளோ பிரச்சனை நடந்திருக்கு.. அவன் என்கிட்ட எதுவுமே சொல்லவே இல்லையே.. கால் பண்ணி பேசும் போது கூட இவள நல்லா பாத்துக்கோங்கன்னுதான சொன்னான்…” என வாய் விட்டு அழுதார் அவர்.
அர்ச்சனாவோ அமைதியாக நின்றாள்.
“அ.. அம்மாடி உனக்கு நல்லா தெரியுமா..? அவன் வேற பொண்ணுங்க கூட பழக்கம் வச்சிருந்தான்னு நிஜமாவே உனக்கு தெரியுமா..? அந்த குழந்தை என் பையனோட குழந்தை தானா..?” என மீண்டும் அவர் பதறியவாறு கேட்க,
அர்ச்சனாவிற்கோ விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.
ஆம் என்றாள் அவள்.
“டிஎன்ஏ டெஸ்ட் கூட எடுத்துப் பார்த்தாச்சு அத்த.. அது அவரோட குழந்தைதான்… இதுக்கு மேல என்னால எப்படி அவர் கூட வாழ முடியும்..? அந்த குழந்தையும் ஏத்துக்கிட்டு என்னை அவர் கூட வாழ சொல்றீங்களா..?” என அவள் அழுகையோடு கேட்க அவருக்கோ செருப்பால் அடித்தது போல இருந்தது.
“அப்பவே சொன்னேன்.. இந்த பணக்கார சம்பந்தம் எல்லாம் நமக்கு வேண்டாம்னு நீ கேட்டியா..? காதலிக்கிறேன்னு வந்து நின்னியேடி பாவி… எதுவுமே தெரியாமதான் காதலிச்சியா..?” என அரச்சனாவின் அன்னை அவளுடைய தோள்களைப் பற்றி உலுக்க,
“கர்ப்பமா இருந்து இப்ப என்ன பயன்..? வாழாவெட்டியா வந்து நிக்கிறாளே.. இதுக்குத்தான் என் பொண்ண கஷ்டப்பட்டு வளர்த்தேனா..? இவ வாழ்க்கை இப்படியே பட்ட மரமா போறதுக்கா நான் இவ்வளவு கஷ்டப்பட்டு அவள வளர்த்தேன்…? பாவி ரொம்ப நல்லவன் மாதிரி பேசி என் பொண்ண கல்யாணம் பண்ணி இப்படி ஏமாத்திட்டானே.. அவன் நல்லாவே இருக்கக் கூடாது..” என அன்னம் அழுகையோடு யாழவனைத் திட்ட,
அதைக் கேட்டுக் கொண்டிருந்த அவனுடைய பெற்றோருக்கோ சுருக்கென வலித்தது.
“அம்மாஆஆஆ… போதும்…” என தன் அன்னையை அடக்கினாள் அர்ச்சனா.
ரூபாவதியோ வேகமாக யாழனுக்கு அழைப்பை விடுத்தவர் அவன் அழைப்பை ஏற்றதும்,
“டேய் யாழவா..? உன் பொண்டாட்டி என்னென்னவோ சொல்றாளே..? இவ சொல்றதெல்லாம் உண்மையா டா..? அங்க பொண்ணுங்க கூட கூத்தடிச்சிட்டு இருக்கியா..? சொல்லுடா…?” என அவர் கத்த, மறு பக்கத்தில் அவன் என்ன கூறினானோ ரூபாவதியின் முகமோ முழுவதும் மாறிப்போனது.
“ச்சீ… உன்ன என்னோட பையன்னு சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்கு.. செத்தாலும் இனி என்னோட முகத்திலயே முழிச்சிடாத.. உனக்கும் எங்களுக்கும் இருந்த உறவு இன்னையோட அறுந்து போச்சு..” எனக் கூறிவிட்டு அவர் அழைப்பைத் துண்டித்து விட அங்கோ மயான அமைதி.
“ஏய் எதுக்குடி அவனத் திட்டுற..? அவன் தப்பு பண்ணான்தான் இல்லன்னு சொல்லல.. ஆனா முன்னாடி பண்ண தப்ப உணர்ந்து இப்போது திருந்தி வாழணும்னு ஆசைப்படுறான்.. அவன் தப்பான வழியில போறான்னு தெரிஞ்சும் அவனை கண்டிக்காம விட்டது என்னோட தப்பு தான்..
என் புள்ள நேத்து என்கிட்ட கேட்டான்.. ஏன்பா என்ன கண்டிச்சு வளர்க்காம விட்டீங்க..? இப்படித்தான் வாழனும்னு சொல்லி வளர்த்திருக்கலாமே அப்பான்னு அழுதான்டி.. அவன் ரொம்ப உடைஞ்சு போய் இருக்கான் ரூபா.. இப்போ நீயும் இப்படி பேசினா அவனால தாங்கிக்க முடியுமா..?” என ரூபாவதியை அடக்கினார் யாழவனின் தந்தை.
“அவனுக்காக நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்மா.. என் பையன மன்னிச்சிடு..” என அவளிடம் மன்னிப்புக் கேட்ட யாழவனின் தந்தையோ தன் மனைவியை அழைத்துக்கொண்டு வெளியே சென்று விட,
அவர்கள் செல்லும் வரை தன்னுடைய அழுகையை அடக்கிக் கொண்டிருந்தவள் அடுத்த கணமே தன்னுடைய அன்னையை அணைத்து வேதனையில் கதறித் துடித்தாள்.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்