விஷம் – 39
எட்டு மாதங்களின் பின்பு
எப்பொழுதும் போல வேலைக்குத் தயாராகி நின்ற அர்ச்சனாவின் வயிறோ மிகவும் பெரிதாக இருந்தது.
ஆம் ஒன்பது மாத கருவை அல்லவா அவள் சுமந்து கொண்டிருந்தாள்.
தாதி அணியும் ஆடையை அவளுக்கு ஏற்றாற் போல மிகவும் பெரிதாக தைத்து அதையே உடுத்திக் கொண்டவளுக்கு வசதியாகவே இருந்தது.
வெளியே வந்தவளை நோக்கி வேகமாக வந்த கீர்த்தனாவோ “ஹாய்கா குட் மார்னிங்…” என்றாள் பளிச்சென்ற புன்னகையுடன்.
“குட் மார்னிங்டி..” என்ற அர்ச்சனாவின் வயிற்றில் கரத்தை வைத்து வருடியவள்,
“ஐயோ அக்கா இந்த பாப்பா நான் கை வச்சா மட்டும் உதைக்க மாட்டேங்கிறாளே..” என அவள் சிரிக்க, அர்ச்சனாவிற்கும் சிரிப்பு வந்தது.
“பாப்பா வெளிய வந்ததும் நீயே அவகிட்ட கேட்டு சண்டை போட்டுக்கோ..” என்றவள் தன்னுடைய ஹேண்ட் பேக்கை எடுத்தாள்.
அதே நேரம் வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
“சரி கீத்தூ கார் வந்துருச்சு பை.. அம்மா நான் கிளம்புறேன்மா..” என அர்ச்சனா கூற,
அவளுடைய கரத்தில் லஞ்ச் பாக்ஸை திணித்தார் அன்னம்.
“போதும்டி நீ வேலைக்கு போனது நான் வேலைக்கு போறேன்னு சொன்னாலும் கேட்காத… என்னோட பேச்ச நீ மதிக்கிறதே இல்லை.. இன்னும் ஒரு மாசத்துல குழந்தை பிறந்திடும்.. லீவு போடலாம்ல..?” என குறைபட்டுக் கொண்டார் அவளுடைய அன்னை.
“இன்னும் ஒரு 15 நாள் போகட்டும்மா.. அதுக்கப்புறம் நானே லீவு எடுத்துக்கிறேன்.. சரிம்மா கார் வந்துருச்சு.. நான் கிளம்புறேன்..” என்றவள் தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு ஆடி அசைந்து வரும் தேர் போல மெல்ல மெல்ல நடந்து செல்ல,
ட்ரைவரோ அவளுக்காக கார்க் கதவைத் திறந்து விட்டார்.
அவளால் ஸ்கூட்டியில் வேலைக்குச் செல்ல முடியாது என்பதை உணர்ந்து ரூபாவதிதான் அவளுக்காக தினமும் காரை அனுப்பி வைப்பார்.
மீண்டும் யாழவனின் தந்தையுடைய மருத்துவமனையில் வேலை செய்யவே அவளுக்குப் பிடிக்கவில்லை.
வேறு மருத்துவமனையில் அவள் வேலை தேடுவதை அறிந்து யாழவனின் தந்தைதான் அவளை வற்புறுத்தி மீண்டும் தன்னுடைய மருத்துவமனையிலேயே அவளை வேலைக்குச் சேர வைத்திருந்தார்.
அன்று அவள் யாழவனைப் பற்றிப் பேசிய பேச்சுக்கு அதன் பின்னர் யாழவனின் குடும்பமே தன்னுடைய முகத்தில் கூட விழிக்க மாட்டார்கள் என்றுதான் அர்ச்சனா நினைத்திருந்தாள்.
ஆனால் நடந்ததோ வேறு.
அடுத்த ஒரு வாரத்திலேயே அவளுக்குத் தேவையான பழங்கள் சத்தான உணவுகள் என அனைத்தையும் ரூபாவதி வாங்கிக் கொண்டு அவளைப் பார்க்க வந்துவிட அவளுக்கோ பேரதிர்ச்சி.
“இதோ பாருமா உனக்கு என்னோட மகன்தானே வேணாம்.. இந்த அத்தைய நீ வெறுக்கலைதானே..?” எனக் கேட்டவாறு அவர் அவளை அணைத்துக் கொள்ள,
அவருடைய அன்பை அவளுக்கு மறுக்கவே தோன்றவில்லை.
அதே போல யாழவனின் தந்தையும் அவளிடம் நன்றாகவே பேச, யாழவனை ஒதுக்கி வைத்தவளுக்கு அவனுடைய குடும்பத்தை விலக்கி வைக்க முடியாமற் போனது.
தேடி வந்து அன்பு காட்டுபவர்களை எப்படி விலக்கி வைப்பது..?
ஆகவே அவர்களிடம் யாழவனைப் பற்றி எதுவுமே பேசாது மற்றைய விடயங்களைப் பற்றி பேசிக் கொள்வாள் அர்ச்சனா.
வெளியே அவளுக்காக காத்திருந்த காரில் ஏறி அமர்ந்தவளுக்கோ அழைக்காமல் யாழவனின் நினைவு வந்தது.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தன்னை வந்த பார்ப்பேன் எனக் கூறியவன் இதோ இன்றுவரை வரவே இல்லை.
எட்டு மாதங்கள் முழுதாக முடிந்து விட்டனவே.
அவனை எதற்காக எதிர்பார்க்கிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.
மனம் துவண்டு போனது.
அவளுடைய பலவீனமான பக்கம் ஒன்று உண்டெனில் அது யாழவன் மட்டும்தான் என எண்ணிக் கொண்டாள் அவள்.
இந்நேரம் அந்த கிளாராவுக்கு குழந்தை பிறந்திருக்கும்..
அந்தக் குழந்தையுடனும் கிளாராவுடனும் மகிழ்ச்சியாக வாழ்கின்றான் போலும் என எண்ணியவளுக்கு அவளை அறியாமலேயே விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அவனை விட்டு விலகி வந்தால் அவனை இலகுவாக மறந்துவிடலாம் என எண்ணியவளுக்கு பெருத்த அடியாக இருந்தது அவனுடைய காதல் முகம்.
அவள் வெறுக்கும் போது கூட ஒவ்வொரு நொடியும் அவளை காதல் செய்தானே.
அந்தக் காதல் முகம் மீண்டும் மீண்டும் அவளைத் தடுமாறச் செய்தது.
அதே நேரம் ஆறு மாதத்தில் பார்க்க வருவேன் எனக் கூறிவிட்டு அவன் வராமல் போனதில் அவளுக்கோ அத்தனை ஆத்திரம்.
போய் தொலைந்து விட்டாள் என நிம்மதியாக இருக்கின்றான் போலும் என எண்ணிக் கொண்டவள் இனி அவனைப் பற்றி நினைக்கவே கூடாது என்ற உறுதியுடன் நீர் கசிந்த தன் விழிகளைத் துடைத்துக் கொண்டாள்.
அவள் அப்படித்தான்..!
தனியாக இருக்கும் நேரங்களில் எல்லாம் யாழவனைப் பற்றி நினைப்பதும் பின் அவனைப் பற்றி நினைக்கவே கூடாது என உறுதியான முடிவை எடுத்து அதில் வெற்றிகரமாக தோற்பதுமே அவளுடைய நிலையாகிக் போனது.
தன்னுடைய மேடிட்ட வயிற்றில் கரத்தைப் பதித்தவாறு சிந்தனையில் மூழ்கி இருந்தவளை,
“மேடம் ஹாஸ்பிட்டல் வந்துருச்சு..” என்ற ட்ரைவரின் குரல் சுயத்திற்கு இழுத்தது.
மெல்ல காரிலிருந்து இறங்கிக் கொண்டவள் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.
அந்த மருத்துவமனையின் ஒவ்வொரு இடத்திலும் யாழவனின் முகம்தான் அவளுக்குத் தென்படும்.
அவனை அவள் முதல் முதலாக சந்தித்த இடம் இந்த மருத்துவமனைதானே..?
பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தவள் விழிகள் சிவந்து முகம் வீங்கிப் போயிருந்த அவளுடைய தோழி பானுமதியைக் கண்டு அதிர்ந்து போனாள்.
“ஹேய் என்னடி ஆச்சு..? எதுக்கு இப்படி அழுதுகிட்டே வர்ற..?” என்ற அர்ச்சனாவின் கேள்விக்கு பானுமதியின் கண்ணீர்தான் பதிலாகக் கிடைத்தது.
“ஹேய் எதுக்குடி அழுற..? முதல்ல கண்ணைத் துடை… இங்க நின்னு பேச வேணாம்.. ஸ்டாஃப் ரூமுக்கு போகலாம் வா..” என்றவள் பானுமதியின் கரத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஸ்டாஃப் ரூமுக்குள் நுழைய அங்கே யாருமற்ற வெற்று அறைதான் அவர்களை வரவேற்றது.
திருப்தியுடன் அங்கிருந்த இருக்கையில் பானுமதியை அமர வைத்தவள் “என்ன ஆச்சு..?” எனக் கேட்டாள்.
“வாழவே பிடிக்கல அர்ச்சனா.. அவருக்கு இன்னொரு பொண்ணு கூட தொடர்பு இருக்குமோன்னு சந்தேகமா இருக்குன்னு உன்கிட்ட சொன்னேன்ல..?”
“ஆமா… அவர்கிட்டயே கேட்டுருன்னு உன்கிட்ட சொன்னேனே..”
“ஆமா தப்பு பண்ற உத்தமனுங்க கேட்டதும் உண்மைய சொல்லிட்டுதான் மறு வேலை பார்ப்பாங்க பாரு..”. எனக் குமுறினாள் பானுமதி.
“நேத்து அவருக்குத் தெரியாம அவரோட ஃபோன எடுத்து செக் பண்ணிப் பார்த்தேன்டி.. யாரோ மல்லிகாங்கிற பொண்ணு கூட பேசிக்கிட்டு இருக்காரு.. அவங்க கன்வெர்சேஷன் எல்லாம் என்னால படிக்கவே முடியல.. எல்லாமே செ***** சாட்..” என்றவள் உடைந்து போய் அழுதாள்.
“அ.. அத பத்தி அவர்கிட்ட கேட்டா என் தலை மேல அடிச்சு பொய் சத்தியம் பண்றாரு.. எந்த பொண்ணு கூடவும் பேசவே இல்லைன்னு சாதிக்கிறாரு..”
பானுமதி கூறக் கூற விக்கித்துப் போனாள் அர்ச்சனா.
“சே.. இந்த ஆம்பளைங்க எல்லாம் ஏன் இப்படி இருக்காங்களோ தெரியல.. இதனாலதான் புருஷனே வேணாம்னு விட்டுட்டு வந்துட்டேன்..” என கோபத்துடன் கூறினாள் அர்ச்சனா.
“தயவு செஞ்சு யாழவன் சார இவர் கூட கம்பேர் பண்ணாத அர்ச்சனா.. லண்டன்ல வளர்ந்தவர் லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருந்தாரு.. அது நம்ம கல்ச்சர பொறுத்த வரைக்கும் அசிங்கம்தான் ஒத்துக்குறேன்.. ஆனா உன்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமா அவர் எந்த பொண்ணு கூடவும் தொடர்புல இருந்தாரா..?
இல்ல நீ கேட்டதுக்கு பொய் சொல்லி உன்ன ஏமாத்தினாரா..? முழுக்க முழுக்க உனக்கு உண்மையாதான இருந்தாரு..
ஏன் கிளாராவோட குழந்தைய பத்தி உன்கிட்ட மறைச்சு அவரால வேற இடத்துல அந்த குழந்தையை வச்சு வளர்த்திருக்க முடியாதா..? அவர்கிட்ட இருக்க பணத்துக்கு என்ன வேணும்னாலும் பண்ணி இருக்கலாம்.. ஆனா அவர் கடைசி வரைக்கும் உன்னை ஏமாத்த நினைக்கவே இல்லையே..
நம்ம நாட்டுல இருக்க சில பொறுக்கிங்க தங்களோட பிள்ளைங்கள பாத்துக்குறதே இல்லை.. குடிச்சுகிட்டு பொண்டாட்டிய அடிச்சுக்கிட்டு பிள்ளைகளை பத்தி யோசிக்காம திரியுறானுங்க…
ஆனா யாழவன் சார் அவருக்கே தெரியாம உருவான குழந்தைய எனக்கு என்னனு அப்படியே அம்போன்னு விடாம அது தன்னோட பொறுப்புன்னு ஏத்துக்கிட்டாரு…
நீ அவரோட வாழ்க்கைல வந்ததுக்கு அப்புறம் அவர் உன்கிட்ட பொய் சொல்லி இன்னொரு பொண்ணு கூட ரிலேஷன்ஷிப்ல இருந்திருந்தா அது துரோகம்.. அந்த துரோகத்தோட வலி உனக்குத் தெரியாது அர்ச்சனா..
உனக்கு யாழவன் சாரோட கல்ச்சரும் அவரோட பாஸ்ட் லைஃப் மட்டும்தான் ப்ராப்ளம்..
இங்கே இருக்கவங்க மட்டும் இந்திய கலாச்சாரத்தை மதிச்சு ஒழுக்கமா நடந்துக்கிறாங்கன்னு நினைக்கிறியா..? எத்தனையோ ஆம்பளைங்க இதுவரைக்கும் எத்தனையோ பொண்ணுங்கள ரேப் பண்றாங்க.. சின்ன குழந்தையை கூட விட்டு வச்சதில்லையே..
இதே ஹாஸ்பிடல்ல கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி உனக்கும் ரேப் அட்டெம்ட் நடந்துச்சு.. இவனுங்க எல்லாம் இந்தியால வளர்ந்தவங்கதானே..? இவனுங்க கல்ச்சர் பத்தி என்ன நினைக்கிற..? இவனுங்க கூட கம்பேர் பண்ணும் போது யாழவன் சார் எவ்வளவோ நல்லவர் தெரியுமா..?” வேதனையுடன் கூறினாள் பானுமதி.
“இப்போ என்ன அவருக்கு சப்போர்ட் பண்றியா..?” சீறினாள் அர்ச்சனா.
“ஏய் அவருக்கு சப்போர்ட் பண்ணனும்னு எனக்கு என்னடி அவசியம் இருக்கு..?
எவ்வளவோ கேவலமான ஆம்பளைங்கள பாத்துட்டேன்டி.. யாழவன் சார் உனக்கு உண்மையா இருந்தாரு.. நீ வேணாமுன்னு விட்டுட்டு வந்ததுக்கு அப்புறம் கூட தினமும் உன்னப் பத்தி என்கிட்ட விசாரிச்சுகிட்டு………..” எனக் கூறிக் கொண்டே வந்தவள் சட்டென தன் நாக்கைக் கடித்தவாறு பேச்சை நிறுத்த,
விழிகள் விரிய அவளை அதிர்ந்து பார்த்தாள் அர்ச்சனா.
இவள் என்ன சொல்கிறாள்..?
யாழன் தினமும் என்னைப் பற்றி இவளிடம் விசாரிக்கின்றாரா என எண்ணியவளுக்கு இதயத்திற்குள் சில்லென்ற உணர்வு தோன்றுவதை தடுக்க முடியவில்லை.
“சொல்ல வந்தத முழுசா சொல்லி முடி..” என அழுத்தமாகக் கூறினாள் அர்ச்சனா.
திரு திருவென விழித்த பானுமதியோ,
“அம்மா தாயே.. நானே ரொம்ப டிப்ரஷன்ல இருக்கேன்.. உன்னோட பிரச்சனைய அப்புறமா பேசிக்கலாம்.. இப்போ எனக்கு ஏதாவது ஐடியா சொல்லு.. நான் எங்க அம்மா வீட்டுக்கு போயிடவா..? இல்லன்னா டிவோர்ஸ் பண்ணிடவா..? இல்ல அவரை திருத்தி வாழ ட்ரை பண்ணவா..?” என குழப்பத்துடன் பானுமதி கேட்க தெரியவில்லை என்பதைப் போல தலையசைத்தாள் அர்ச்சனா.
“எனக்கு தெரியலடி.. இது உன்னோட வாழ்க்கை.. நீ தான் முடிவு எடுக்கணும்.. உங்க ஃபேமிலி கிட்ட இத பத்தி பேசு.. உனக்கு எது சரின்னு படுதோ அதை செய்..” என அவளுக்கு சில ஆறுதல் வார்த்தைகளைக் கூறிவிட்டு தளர்ந்த நடையுடன் வெளியே வந்தாள் அர்ச்சனா.
அவள் நினைத்தது போல யாழவன் ஒன்றும் அவளை மறக்கவில்லை.
என்னைப் பற்றி மற்றவர்களிடம் விசாரிப்பவன் எதற்கு என்னை நேரில் வந்து பார்க்காமல் இருக்கின்றான்..?
சிந்தித்தவாறே வார்டை நோக்கி அவள் நடந்து செல்ல ஒரு குழந்தையின் அழுகுரல் அவளுடைய கவனத்தை ஈர்த்தது.
அங்கே ஒரு ஆடவனின் கரத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருப்பதையும் அந்த ஆடவன் குழந்தையின் அழுகையை சமாளிக்க முடியாது தடுமாறிக் கொண்டிருப்பதையும் கண்டு சிரித்தவள் அவனை நெருங்கி,
“ஹாய் பிரதர்.. என்ன குழந்தையோட அழுகைய நிறுத்த முடியலையா..?” எனக் கேட்டாள்.
“ஆமா சிஸ்டர்.. இவன் அழுதுகிட்டே இருக்கான்.. என்னால சமாளிக்கவே முடியல..” என்றவாறு அவன் குழந்தையைத் தட்டிக் கொடுக்க,
“ஹலோ பட்டுக்குட்டி எதுக்குப்பா அழுறீங்க..?” என அந்தக் குழந்தையை நோக்கி தன்னுடைய கரத்தை நீட்டியவாறு அர்ச்சனா பேச அந்த இரண்டு மாதக் குழந்தையோ அழுகையை நிறுத்திவிட்டு சட்டென அவளைப் பார்த்து சிரித்தது.
அந்த மலர்ந்த சிரிப்பில் உறைந்து போய்விட்டாள் அவள்.
இந்தச் சிரிப்பை அவள் எங்கோ பார்த்திருக்கிறாளே..
“பிரதர் நான் குழந்தையை தூக்கட்டுமா..?”
“தாராளமா..” என்றவன் அவளிடம் குழந்தையைக் கொடுக்க பூவைப் போல அந்தக் குழந்தையை தன் கரத்தில் ஏந்தி அதன் நெற்றியில் இதழ்களைப் புதைத்தவளுக்கு இதயம் வேகமாகத் துடித்தது.
அந்த மருத்துவமனையை தன்னுடைய விழிகளால் வேகமாக அலசினாள் அர்ச்சனா.
ஏனோ அக்கணம் யாழவனின் காதல் பார்வை அவளை வருடியது போலவே தோன்றியது.
அருகே நின்ற ஆடவனோ அவளிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு சென்றுவிட அந்தக் குழந்தையின் கருவிழிகளும் அதன் மலர்ந்த சிரிப்பும் அர்ச்சனாவின் மனதில் அப்படியே பதிந்து போனது.
💜💜
அது க்ளாராவின் குழந்தை தானே.