நிவேதா முன்னே வந்து மூச்சு வாங்க நின்றதும் அவளையும் தனது கைக்கடிகாரத்தையும் ஒரு முறை அழுத்தமாக பார்த்து தலை அசைத்து விட்டு சலிப்புடன் மீண்டும் அந்த உணவகத்தின் உள்ளே சென்றான் கார்த்திகேயன்.
அவனது செய்கையைப் பார்த்து கடுப்பான நிவேதா எதுவும் கூறாமல் அவன் பின்னே சென்று அவன் இருந்த இருக்கைக்கு எதிரில் அமர்ந்தாள்.
இருவரும் எதுவும் பேசாமல் சில நிமிடங்கள் இருக்க முதலில் அந்த அமைதியை உடைத்து எறிந்தது நிவேதா தான்.
தனது பர்சிலிருந்து ஒரு செக்கை எடுத்து கார்த்திகேயனின் முன்பு மேசையின் மீது வைத்தாள்.
அவள் அவ்வாறு காசோலையை வைக்க எதுவும் புரியாமல் புருவம் உயர்த்தி என்ன என்பது போல கார்த்திகேயன் பார்த்து வைக்க,
‘வாய் திறந்து பேச மாட்டாரோ..! ஐயாவுக்கு திமிரு ஜாஸ்தி தான்..’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவள்,
“இந்த செக்கில ஒரு கோடி எழுதி இருக்கேன் இந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு இந்த ஊரை விட்டே போயிடுங்க எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட இஷ்டமில்லை நீங்க இங்க இருந்தீங்கன்னா உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி எங்க அம்மா ரொம்ப டார்ச்சர் பண்ணுவாங்க..” என்று நிவேதா கூற,
அந்த செக்கை நிதானமாக எடுத்து பார்த்தவன்,
“நான் ஊரை விட்டு போறதுக்கு ஒரு கோடி போதுமா..!” என்று உறுத்து விழித்தபடி கார்த்திகேயன் கேட்க,
நிவேதாவிற்கு மனதில் பெரும் சந்தோசம் இவன் பணத்திற்கு விலை போக மாட்டான் என்று எண்ணியிருந்தவள் இப்பொழுது தனக்கு சாதகமாக அவன் இதற்கு விலை பேசுவது அவளுக்கு வானத்தில் குதிப்பது போல இருந்தது.
கார்த்திகேயனை சமாளித்து ஊரை விட்டு அனுப்பினால் அவனை சாட்டு வைத்து இனி ஓரிரு வருடங்களுக்கு திருமணத்தை தள்ளிப் போடலாம் என்று நிவேதா எண்ணி இருக்க அதற்கு ஏற்றார் போல் கார்த்திகேயனும் பேரம் பேச வேற என்ன தான் வேண்டும் தான் நினைத்த காரியம் கைகூட போகின்றது என்று களிப்புடன் இருந்தாள்.
அவளுக்கு மனதில் இருந்த அனைத்து கவலைகளும் கட்டவிழ்ந்து போனது போல இருந்தது.
“அப்படியா ரியலி ஐ அம் வெரி ஹப்பி எவ்வளவு எதிர்பார்க்கிறீங்க எவ்வளவுன்னாலும் பரவாயில்லை இந்தக் கல்யாணம் நின்னா எனக்கு அது போதும்..” என்று புன்னகைத்தபடி நிவேதா கூற,
கார்த்திகேயனின் முகத்தில் மின்னல் வெட்டியது போல ஒரு புன்சிரிப்பு தோன்றி மறைந்தது.
மேசை மீது இருந்த செக்கை கையில் எடுத்தவன் அதை நன்றாக புரட்டிப் பார்த்தான்.
‘முன்ன பின்ன உன் செக்க பார்த்ததே இல்ல போல இப்படி பார்க்கிறான்..’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு இருக்கும்போதே,
அந்த செக்கை நான்கு துண்டுகளாகக் கிழித்து தனது உள்ளங்கையில் வைத்து நிவேதாவின் முகத்திற்கு நேராக ஊதிப் பறக்க விட்டான்.
அவன் பேச்சும் செய்யும் செயலும் வேறுபட்டிருக்க நிவேதாவிற்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால் கோபம் மட்டும் குறையவில்லை.
“ஏய் ஏன் அவசரப்பட்டு அத கிழிச்சீங்க இதை இப்போதைக்கு அட்வான்ஸா வச்சிருங்க நான் மீதியை எப்படியும் 2 டேஸ்ல செட்டில் பண்ணிடுவேன் எவ்வளவு வேணும்னு சொல்லுங்க..”
“ஓஹோ எவ்வளவு வேணுமா..? ஓகே அப்படி நான் போகலன்னா..?” என்று அலுங்காமல் குலுங்காமல் நிவேதாவின் தலையில் ஒரு இடியை இறக்கினான் கார்த்திகேயன்.
ஒரு நிமிடம் என்ன செய்வது என்று புரியாமல் கண்கள் அலைபாய சிந்தனை வயப்பட்டவள். மீண்டும் தனது பர்சில் கை வைத்து அவள் வெளியே எடுத்த பொருளைப் பார்த்து அந்த உணவகத்தில் இருந்த ஒரு சிலர் அதிர்ந்து போயினர்.
ஏன் சுற்றி இருப்பவர்கள் அதை பார்த்து அதிர்ந்து போக வேண்டும். அப்படி அவள் எடுத்தது என்னவாக இருக்கும்.
பர்சிலிருந்து எடுத்து வைத்தது வேறொன்றும் இல்லை. உயர் ரக கன் எமுலேட்டர் ஒன்றைத் தான். அதனை மேசை மீது நேராக கார்த்திகேயன் இருக்கும் திசையை நோக்கி வைத்தாள்.
அதனைப் பார்த்து கார்த்திகேயன் பயப்படுவான், கோபம் கொள்வான் அல்லது கல்யாணம் பிடிக்கவில்லை கல்யாணம் வேண்டாம் என்று சொல்வான் என்று எதிர்பார்த்திருக்க அவனது வதனத்திலோ, கண்களிலோ எந்தவித சலனமும் தெரியவில்லை.
‘கண் முன்னே இருப்பது கன்னா..? அல்லது கடலை உருண்டையா..? அப்படியே அசராமல் இருக்கிறானே..! இவனை எப்படி சமாளிக்கிறது..’ என்று சிந்தித்தவள்,
“என்ன கார்த்திகேயன் ரொம்ப பதட்டமா இருக்குற மாதிரி இருக்கு என்னோட காரியம் முடியனும்னா நான் எந்த அளவுக்கும் இறங்குவேன் அப்படி நீங்க இந்த ஊரை விட்டு போகலன்னா நான் இந்த உலகத்தை விட்டு உங்களை அனுப்பிடுவேன் எப்படி வசதி..” என்று அடிக்குயரலில் மிரட்ட,
நன்கு வசதியாக இருக்கையில் சாய்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு காலை ஆட்டியபடி “தென்..’ என்று கிண்டலாக புருவம் உயர்த்திக் கேட்டவன் அவளை ஆழ்ந்து லேஸர் துளைத்து எடுப்பதைப் போல பார்வை பார்க்க,
நிவேதாவிற்கோ ஒரு மாதிரி போய்விட்டது. ‘என்ன இவன் இப்படி பார்த்து வைக்கின்றான்..’ ஏனோ தெரியவில்லை அவனது பார்வை அவளுக்கு முள்ளின் மேல் நிற்பது போல தவிப்பாக இருந்தது.
மனதிற்குள் ஏதோ குறுகுறுப்பது போலவே இருந்தது. இருந்தும் தனது உணர்வுகளை கடிவாளம் இட்டு வெளியே காட்டிக் கொள்ளாமல் போராட,
கார்த்திகேயன் அவளிலிருந்து பார்வையை விளக்காமல் மேசையில் இருந்த கன்னை கையில் எடுத்து லோட் செய்தான்.
அவன் அதை திண்டுவான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவனது திடீர் செயலில் அவளது உடல் வியர்வையில் வியர்த்துக் கொட்டியது.
முதலில் தனது தலையில் வைத்து அழுத்தியவன், பின்பு நேராக நிவேதாவின் நெஞ்சை குறி பார்த்து கன்னை நீட்டினான்.
‘இதோ லோட் செய்த கன்னிலிருந்து தோட்டா துளைத்துக் கொண்டு வரப் போகின்றது என் உயிர் இவ்விடத்திலே இங்கேயே பறிபோகப் போகின்றதோ..!” என்று மனதினுள் எண்ணிய நிவேதா இவன் சாதாரணமானவன் என்று நினைத்து நான் இப்படி நடந்து கொண்டது என்னுடைய தப்புதான்..’ என்று அவளது மரமண்டைக்கு அப்போதுதான் உரைத்தது.
“இங்க பாருங்க எதுன்னாலும் பேசி தீர்த்துக்கலாம் முதல் கன்ன கீழ வைங்க நான் உங்க கூட கொஞ்சம் பேசணும் ப்ளீஸ் கன்னை கீழே வைங்க சுத்தி இருக்கிறவங்க எல்லாம் ஒரு மாதிரி பாக்குறாங்க..” என்றதும் நிவேதா பயத்தில் உளர, மென் சிரிப்புடன் தன்னை அழுத்தினான்.
அதிலிருந்து புயல் வேகத்தில் வெளியேறிய தோட்டா நிவேதாவின் நெஞ்சில் தாக்கி விழுந்தது.
என்னது நெஞ்சை தொலைத்துக் கொண்டு செல்லாமல் நெஞ்சில் தாக்கி விழுந்ததா..?
ஆம் நிவேதா நெஞ்சில் வழி ஏற்பட அப்படியே நெஞ்சை பிடித்துக் கொண்டு மேசையில் சரிந்து விழுந்தாள்.
சுற்றி இருந்த அனைவரும் ஒரு நிமிடம் தங்களது இருக்கையில் இருந்து அதிர்ச்சியுடன் எழுந்து கொண்டனர்.
நெஞ்சில் கை வைத்து ‘ரத்தம் வடிகிறதா அய்யய்யோ நான் சற்று நேரத்தில் இறந்து போக போறேனா..?
இன்னும் இந்த உலகத்தில் அனுபவிப்பதற்கு எவ்வளவு இருக்கு இந்த சின்ன வயசுல எனக்கு சாவா..?’ என்று பல சிந்தனைக்குள் சிக்கிக் கொண்டவள்,
அப்போதுதான் ஒரு விடயத்தை கவனித்துக் கொண்டாள். நெஞ்சை தடவிப் பார்க்க அதில் மெல்லிய வழி மட்டும் தான் இருந்தது அப்படி என்றால்..’ என்று சந்தேகத்துடன் எழுந்து பார்த்தவளது வாயிலிருந்து “பொம்மைத் துப்பாக்கி..” என்று அவளை மீறி வார்த்தைகள் வெளிப்பட்டன.
விழுந்து என்னவென்று பார்க்க அதிலிருந்த விழுந்த மஞ்சள் நிற தோட்டா பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது. அதை பார்த்து அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
கார்த்திகேயனுக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. அந்த கன்னின் முனையை வாயால் ஊதி விட்டு அவனும் மேலே பார்த்த வண்ணம் பெரிய சத்தத்துடன் சிரிக்கத் தொடங்கினான்.
உடனே நிவேதா எழுந்து எல்லோரையும் முறைத்துப் பார்க்க அனைவரும் சிரிப்பை நிறுத்திவிட்டு அவரவர் இருக்கையில் அமர்ந்து தங்களது வேலையை பார்க்கத் தொடங்கினர்.
நேரே கார்த்திகேயனை எரிக்கும் பார்வை பார்த்தவள்,
“இங்க பாருங்க கார்த்திகேயன் எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல அதைத்தான் நேர்ல சொல்றதுக்காக உங்கள வரவழைத்தேன் இன்அஃப் நான் கிளம்புறேன்..”
“சரி அப்போ அந்த பொண்ண ஏன் அனுப்பி வச்ச..?
“எ..எ..எந்த ப் பொண்ணு..” என்று அவள் சுற்றமும் மறந்து திகைப்பூண்டை மிதித்தது போல தடுமாறி நின்றாள்.