43. காதலோ துளி விஷம்

5
(71)

விஷம் – 43

யாழவன் இறுதியாகக் கூறிவிட்டு சென்ற வார்த்தைகளைக் கேட்டதும் அர்ச்சனாவுக்கோ உள்ளம் நொறுங்கி விட்டது.

அன்று இந்தக் குழந்தையை வளர்க்கலாம் என அவன் கேட்டபோது “நான் எதற்கு இந்த குழந்தைக்கு ஆயா வேலை பார்க்க வேண்டும்..?” என்றல்லவ்வா கேட்டாள்.

அதை நினைவில் வைத்துத்தான் இப்படி ஒரு வார்த்தையை கூறிச் சென்று விட்டானோ..?

உள்ளம் குற்ற உணர்ச்சியில் குறுகுறுத்தது.

தவித்துத் துடித்தது.

“அ.. அத்தை என்னால யாழவன் இல்லாம வாழ முடியாது… எல்லோரும் அவர் செத்துட்டாருன்னு சொல்றாங்க… எ… என்னால அத ஏத்துக்க முடியல… அவர் இருக்காரு… என்னால உணர முடியுது… அவர் இருக்காரு அத்த… அப்படித்தான் இப்போ வரைக்கும் நம்பிகிட்டு இருக்கேன்…

அதனாலதான் அவரோட இறுதி காரியத்துக்கு அம்மா கூப்பிட்டப்போ கூட நான் வரல… உண்மைய சொல்லணும்னா நீங்க எல்லாரும் சொல்றத என்னால ஏத்துக்க முடியல..

இதோ இந்த பாப்பா இல்லைன்னா எப்பவோ நானும் என் யாழன் கூடவே போயிருப்பேன்.. ஆனா நான் போனா இவள யாரு பார்த்துப்பா..?

வாழவும் முடியாம சாகவும் முடியாம தினம் தினம் செத்து பிழைச்சுக்கிட்டு இருக்கேன் அத்த..

யாழன் லண்டன்ல நல்லா இருக்காருன்னு நினைச்சு என்னோட வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சிடலாம்னு நினைச்சேன்..

ஆனா இப்போ இந்தக் குழந்தையைப் பார்த்ததும் என்னோட யாழனைப் பார்த்த மாதிரியே இருக்கு அத்த..

இந்தக் குட்டிப் பையன் சிரிச்சா என்னோட யாழன் சிரிக்கிற மாதிரியே இருக்கு…

அன்னைக்கு நான் இவனத் தூக்கும்போது யாழன் சிரிக்கிற மாதிரியே சிரிச்சான் அத்த.. என் யாழனோட கண்ணு அப்படியே இவனுக்கும் இருக்கு.. தயவு செஞ்சு இவனை என்கிட்ட கொடுத்துடுங்க அத்தை.. இவனை நான் நல்லபடியா வளர்க்கிறேன்..”

என அழுதவாறு கைகூப்பி கெஞ்சிக் கேட்டாள் அவள்.

“இல்லம்மா. இதெல்லாம் பேசுறதுக்கு நல்லா இருக்கும் பிராக்டிகலா சரியா வராது.. இவ்வளவு நாளும் என்னோட பையன் லண்டனே போகல.. உன்னை இங்கே கொண்டு வந்து விட்டுட்டு உன் பின்னாடியே ரோடு ரோடா சுத்திட்டு இருந்தான்..” என ரூபாவதி கூறியதும் அதிர்ந்து போனாள் அர்ச்சனா.

“நீ லண்டன்ல இருந்து வந்த அன்னைக்கு கோபத்துல என் முகத்துலையே முழிக்காதேன்னு அவனைத் திட்டிட்டேன்.. அதுக்கு அப்புறமா அவன் என்ன பாக்க வரவே இல்லை.. என்கிட்ட பேசவும் இல்லை.. ஒரே ஒரு தடவைதான் பேசினான் அப்போவும் உன்னைப் பார்த்துக்க சொல்லிதான் என்கிட்ட சொன்னான்..

அவன் அவங்க அப்பாகிட்ட ஃபோர்ஸ் பண்ணிக் கேட்டதாலதான் அவர் உன்கிட்ட நம்ம ஹாஸ்பிட்டல்லையே உன்ன மறுபடியும் ஜாயின் பண்ண சொன்னாரு.. நீ வேலைக்குப் போறதுக்கு கார் அரேஞ்ச் பண்ணதும் அவன்தான்..

அவன் உன் பக்கத்துல இல்லைன்னாலும் உனக்கான எல்லாத்தையும் எங்கள வச்சு பண்ண வச்சான்… ஆறு மாசம் கழிச்சு கிளாராவோட டெலிவரி டைம் அரணை பொறுப்பெடுத்துக்கறதுக்காக மறுபடியும் லண்டன் கிளம்பினான்..

குழந்தைய பொறுப்பெடுத்ததுக்கு அப்புறம் ரொம்பவே கஷ்டப்பட்டான்..

ஒரு தடவை நான் கால் பண்ணி ‘குழந்தையை இங்க கொண்டு வந்துரு.. இல்லன்னா யாராவது பொறுப்பா பாத்துக்குறவங்கள வேலைக்கு வச்சுக்கோ..’ அப்படின்னு சொன்னேன்.. அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா..? ‘இல்லம்மா இவன நான்தான் வளர்க்கணும்… இவன் இன்னொரு யாழவனா வந்துடக்கூடாது.. சரி எது தப்பு எதுன்னு சொல்லி வளர்க்கணும்னு சொன்னான்..

ரெண்டு மாசமும் அவனே குழந்தைய பார்த்துக்கிட்டான்… ஆனா அந்த பைத்தியக்காரனால உன்னை விட்டுட்டு இருக்க முடியல… குழந்தை வேற பால் குடிக்க ஆரம்பிச்சதும் உன்ன பாக்கிறதுக்காக இந்த கைக்குழந்தைய தூக்கிட்டு மறுபடியும் இங்க ஓடி வந்தான்…

ஆனா அவனுக்கு கடவுள் இப்படி ஒரு தண்டனையைக் கொடுத்துட்டாரு…

எப்படியும் அவன் இங்க வந்து உன் முன்னாடி நின்னுருந்தா அப்பவும் அவன வேணாம்னுதான் சொல்லிருப்ப.. போதும் அவன் வேதனைப்பட்டதுன்னு நினைச்சு கடவுளே அவனை எடுத்துக்கிட்டார் போல..” என்றதும் அர்ச்சனாவின் உதடுகள் அழுகையில் துடித்தன.

அன்னத்திற்கோ பொறுக்க முடியவில்லை.

“போதும் சம்மந்திமா.. ஏதோ என் பொண்ணு மட்டும் தப்பு பண்ண மாதிரியே பேசாதீங்க… அவளுமே ரொம்ப வேதனைல தானே இருந்தா.. யாழவனைப் பிரிஞ்சு அவ ஒன்னும் சந்தோஷமா இருந்துடலையே..” என்றார் அன்னம்.

“நான் அர்ச்சனாவ தப்பு சொல்லவே இல்ல.. நடந்து முடிஞ்ச எல்லா பிரச்சனைக்கும் நான்தான் மூல காரணம்..

இந்தியாவுக்கே வரமாட்டேன்னு அடம் பிடிச்சவனை நான்தான் கட்டாயப்படுத்தி இங்க வர வச்சேன்… அவன் இங்க வந்ததாலதான் அர்ச்சனாவைப் பார்த்தான்.. காதலிச்சான்…

என்னாலதான் இவங்க ரெண்டு பேருக்கும் கஷ்டம்.. இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் என் பையன இந்தியாவுக்கு வர சொல்லி கூப்பிட்டிருக்கவே மாட்டேன்… என் பையன் அங்கேயே சந்தோஷமா இருந்திருப்பான்ல..? இப்படி அவனோட உசுரு பாதில போகணும்னு எந்த அவசியமும் வந்திருக்காது.

உன்னோட வாழ்க்கையும் நீ எதிர்பார்த்த ராமன் மாதிரி ஒருத்தன் கூட நல்ல சந்தோஷமா அமைஞ்சிருக்கும்..” என்றார் ரூபாவதி.

யாருக்கு வேண்டுமாம் அந்த ராமன்..?

எனக்கு என் யாழன்தான் வேண்டும் என அலறியது அவளுடைய காதல் மனம்.

அதே கணம் தனக்காக திருந்தி வந்த தன் கணவனை அப்போதே ஏற்றுக் கொண்டிருந்தால் இந்த வேதனை யாருக்கும் இருந்திருக்காதே என வேதனை உற்றது அவளுடைய மனம்.

யாழனை இழந்ததைப் போல அவனுடைய குழந்தையையும் அவள் இழக்கத் தயாராக இல்லை.

“ப்ளீஸ் அத்த.. அரணை என்கிட்ட கொடுத்திடுங்க..” மீண்டும் இறைஞ்சினாள் அவள்.

“‘இந்தக் குழந்தை உனக்கு சுமையா மாறிடக் கூடாது..’ என்னோட மகன் சாக முன்னாடி சொல்லிட்டுப் போன வார்த்தை இதுதான்மா.. என்ன நடந்தாலும் இந்தக் குழந்தையை நான் உன்கிட்ட கொடுக்கவே மாட்டேன்.. மன்னிச்சிடு..” என்றார் அவர் பிடிவாதமாக.

அர்ச்சனாவுக்கோ கோபம் வந்துவிட்டது.

அது எப்படி இவர் கொடுக்க முடியாது என்று கூறலாம்..?

யாழவனுக்கு குழந்தை என்றால் அவளுக்கும் குழந்தை தானே..?

சட்டென கிளாராவின் நினைவு வந்தது.

அவள்தான் குழந்தை வேண்டாம் என ஒதுக்கித் தள்ளி விட்டாளே என எண்ணியவள்,

“குழந்தையை தர முடியாதுன்னு நீங்க சொல்ல முடியாது அத்த.. அதை கிளாரா சொல்லட்டும்… நான் கிளாராகிட்ட பேசிக்கிறேன்…” என அர்ச்சனா கூற அவளைப் பார்த்து கசப்பாக சிரித்தார் ரூபாவதி.

“இந்தக் குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடியே அவ இறந்து போயிட்டா..” என்றவர் நடந்ததைக் கூற அவளுக்கோ நிதர்சனம் வெறுத்துப் போனது.

நெஞ்சம் வலித்தது.

பிறந்த நொடி முதல் தாயின் அரவணைப்பு இன்றி தனியாக வளர்ந்த குழந்தையைக் கண்டு விழிகளில் ஈரம் சுரந்தது.

“இந்தக் குழந்தையோட முழு உரிமையும் யாழவனுக்கு மட்டுதான் இருக்கு… அவன் இந்தக் குழந்தையை என்னோட பொறுப்புல விட்டுட்டு போய்ட்டான்.. இனி இது என்னோட மகன்…” என்றார் அவர் உறுதியாக.

பேச்சற்றுப் போனாள் அர்ச்சனா.

ஏனோ வாழ்க்கையே வெறுமையாகிப் போனதைப் போல இருந்தது.

மீண்டும் அவளுடைய பார்வை ரூபாவதியின் கரத்தில் இருந்த அரணின் மீது நிலைத்தது.

பிறப்பதற்கு முதலே தாயை இழந்து பிறந்த இரண்டு மாதத்தில் தந்தையை இழந்து தவிக்கும் அந்தப் பச்சைக் குழந்தையை விட்டு அவளால் விழிகளை விலக்கவே முடியவில்லை.

சற்று நேரத்தில் அரணோ பசியில் அழத் தொடங்கிவிட, வாயிலில் கைகளைக் கட்டி பொறுமையாக நின்ற ரூபாவதியின் கணவரோ “ரூபா கிளம்பலாம்… குழந்தைக்கு பசிக்க ஆரம்பிச்சுடுச்சு போல..” என்றவர் தன் மனைவியை அழைக்க,

வேகமாக ரூபாவதியின் அருகே வந்த அர்ச்சனாவோ அவருடைய கரத்தில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்து விட அதிர்ந்துவிட்டார் ரூபாவதி.

“என்னங்க இந்த பொண்ணு இப்படி பண்ணுறா..?” என ரூபாவதி ஆற்றாமையுடன் கூற,

“மன்னிச்சிடுங்க குழந்தைய நான் வாங்கி கொடுக்கிறேன்..” என சங்கடத்துடன் கூறிய அன்னமோ தன் மகளுடைய அறைக்குள் நுழைய ரூபாவதியும் அவரின் பின்னே அந்த அறைக்குள் சென்றார்.

அங்கே விழிகளில் நிறைந்த கண்ணீர் வழிந்து அவளுடைய கன்னத்தை தொட மடியில் அரணைப் படுக்க வைத்து தன்னுடைய தாய்ப்பாலை அவனுக்கு புகட்ட ஆரம்பித்திருந்தாள் அர்ச்சனா.

அவளுடைய செயலைக் கண்டவர்கள் அதிர்ந்து போய் அமைதியாக அந்த அறையை விட்டு வெளியே வந்திருந்தனர்.

அர்ச்சனாவின் விழிகளோ அரணின் மீதே பதிந்திருந்தன.

அவனுடைய முகத்தில் தன் கணவனை கண்டவளுக்கு காதல் பெருகியது.

*****

தஞ்சாவூர் மாவட்ட எல்லைக்குள்ளே, பொதுவில் அறியப்படாத ஓர் இடம்.

மூன்று தரப்பட்ட பாதுகாப்பு சுவரின் பின்னே, ஹெலிகாப்டர் வழியாக மட்டுமே அடையக்கூடிய அந்த தனியார் மருத்துவமனை பெயரே இல்லாதது.

அந்த அமைப்பின் முதலீட்டாளரே யாழவனின் தந்தை சாள்ஸ் அன்ரனிதான்.

அரசு ஆவணங்களில் அந்த இடம் ஒரு “மரபணு ஆய்வுக்கழகம்” என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் உண்மையில் அது மிக இரகசியமான ஒரு மருத்துவமனை.

இந்தியாவின் கோடிகளில் புரள்பவர்கள் மற்றும் அரசியலில் பெரும் பதவியில் இருப்பவர்கள் தங்களுடைய பாதுகாப்புக்காக இரகசியமாக நாடும் மருத்துவமனையே அது.

அந்த மருத்துவமனையின் தரிசன கூடத்தில் நெற்றியில் சில சுருக்கங்கள் விழுந்த நடுத்தர வயதைக் கடக்கும் நிலையில் இருந்த சுவிட்சர்லாந்து மருத்துவரான டெரிக்ஸ் என்பவர் மெல்ல தன் கையில் இருந்த கோப்புகளை புரட்டிக் கொண்டிருந்தார்.

அவர் அருகில் இருந்த இளம் பெண் வைத்தியர் ஒருவரோ,

“டாக்டர் பேஷன்ட் ஏ ஒன்செவன்டி ஃபோர் ஸ்டில் இன் இண்ட்யூஸ்டு கோமா… நோ டிடீரியரேஷன். ஸ்டேபிள் வைடல்ஸ்.” என்றார்.

“பேஷன்ட் A-174…?” என தன்னுடைய புருவங்களை இன்னும் சுருக்கி யோசித்தவர்,

“ஹாங்… தட் யங் பிரில்லியன்ட் பிஸ்னஸ்மேன் யாழவன் பிரான்சிஸ் ரைட்..?” எனக் கேட்டார்.

ஆம் என தலையசைத்தார் அந்தப் பெண் வைத்தியர்.

அந்த மருத்துவமனையின் உரிமையாளன் அல்லவா அவன்..?

விபத்தின் பின் கோமாவிற்குச் சென்றவனை மீட்டெடுக்கும் பொருட்டு சிகிச்சைகள் சிறப்பான முறையில் அங்கே செயல்படத் தொடங்கியிருந்தன.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 71

No votes so far! Be the first to rate this post.

1 thought on “43. காதலோ துளி விஷம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!