நெஞ்சம் – 8
அருணா வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் ஓடிப்போனது. மிகவும் பிசியாக இருந்தாள் மலர். தியாகு, ஜனனி இருவரும் அருணாவையும், பாட்டியையும் கவனித்து கொள்ள உதவினாலும், அத்தனை பேருக்கு சமையல், ஓரளவிற்கு வீட்டு வேலைகளை நிர்வாகம் செய்வது என அவளுக்கு நேரம் போதவில்லை. ஜனனியின் கணவன் நேற்று இரவு மும்பைக்கு கிளம்பி விட்டான். ஜனனியும் குழந்தையும் நாலைந்து நாட்கள் கழித்து செல்வார்கள்.
அன்று மதியம் தான் அருணாவிற்கு செக் அப். அருணா உணவு உண்டு விட்டு சொல்ல வேண்டும் என்பதால் அன்று அதிகாலையிலே எழுந்து காலை டிபன், மதிய சமையல் என அனைத்தையும் செய்தாள் மலர். அர்விந்தும் அம்மா, அப்பா இருவருடன் மருத்துவரை காணச் சென்றான். அவர்கள் கிளம்பியதும் சற்று படுத்து விட்டாள் மலர். மலருக்கு மிகவும் சோர்வாக இருந்தது. இன்று மட்டுமின்றி கடந்த மூன்று நாட்களாகவே அப்படித்தான்! உடல் சோர்வை விட மனசோர்வு தான் அது! வந்த ஒரே வாரத்தில் அவர்களில் ஒருத்தி மாதிரி உணர்ந்தது! அதே வாரத்தில், அவனுக்கு திருமணம் என்றதும் சட்டென்று உண்மை உரைத்தது! நான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன்? வேலைக்கு வந்த இடத்தில் ஏன் எனக்கு இப்படி ஒரு பிணைப்பு? என் வருத்தம் நியாயமே இல்லையே! இந்த வேலை கூட நிரந்திரம் இல்லையே…. யதார்த்தம் புரிய, மீண்டும் மீண்டும் தனக்குள் பேசி தன்னை வெகுவாக தேற்றிக் கொண்டாள். அவனால் சலனம் கூட படக்கூடாது என்று சொல்லிகொண்டாள். மனதை அடக்குவது அவ்வளவு சுலபமா? நிறைய அலைபுறுதல் இருந்தாலும், ஒரு விதத்தில் நிம்மதியாக உணர்ந்தாள், மருத்துவமனையில் போல் இல்லாமல் இங்கே அர்விந்த் அவன் அறையில் தானே இருப்பான்! எப்போவாவது தான் அவனை பார்க்க, பேச நேரும்! அந்நேரம் மட்டும் அவனிடம் அவன் முகம் பார்த்து ஒழுங்காக பேசி விடுவாள் மலர்! இல்லையேல் அவனுக்கு பதில் சொல்ல முடியாதே!
ஆனால் அவள் அறியாதது, இப்போதெல்லாம் அவனின் முழு கவனமும் அவளிடம் என்பது! அவனுக்கே தெரியவில்லை ஏன் என்று, ஆனால் அவள் என்ன வேலை செய்கிறாள், கண்ணில் பட வில்லை என்றால், எங்கே என்று பார்ப்பது, அவளின் நடமாட்டத்தை கவனிப்பது என்று ஏன் இப்படி இருக்கிறோம் என்று புரியாமலே அதை செய்துக் கொண்டு இருந்தான் அர்விந்த்.
அன்று மாலை ஆகி விட்டது செக் அப் முடித்து அருணா, தியாகு மற்றும் அர்விந்த் திரும்ப வர! வந்த சற்று நேரத்திற்கு எல்லாம் அவள் முகத்தை பார்த்தவனுக்கு அவளின் களைப்பு புரிந்தது. இரவு நெருங்க,
“விழி, நைட் பாட்டிக்கும் அம்மாக்கும் ஜனனி எதாவது செய்யட்டும். நாம எல்லாம் ஆர்டர் பண்ணிக்கலாம். இப்போ நீ போய் ரெஸ்ட் எடு!” என்றான்.
அவனின் அக்கறையில் கண்ணை கரித்து கொண்டு வந்தது அவளுக்கு. சமாளித்து கொண்டவள், “இல்லை சார், மதியம் கொஞ்சம் நேரம் படுத்து தான் இருந்தேன்!” என்றாள்.
“உன்கிட்ட சொல்லி இருக்கேன்ல, நான் சொல்றதை மட்டும் செஞ்சா போதும்னு!” அவளை மிரட்டுவது போல் அவன் பேச, தியாகு, அருணா என அனைவரும் அவளை ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள். அவளும் படுக்க சென்றாள்.
“என்னடா நீ மலரை இவ்ளோ கவனிக்கிற? புதுசு புதுசா செய்றே டா!” ஜனனி கிண்டல் செய்ய,
அக்கறையை காட்டும் போது வராத யோசனை, தமக்கை கேட்டதும் வந்தது! ரொம்ப தான் அவளை கவனிக்கிறோமோ? யாரும் எதுவும் தப்பா நினைச்சுடக் கூடாது என்று யோசித்து சட்டென்று,
“ஹான், நீ இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு கிளம்பிடுவ, இங்க யார் வேலை எல்லாம் பார்க்கிறது? வேலைக்காரங்க கிடைக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? அதுவும் மலர் மாதிரி ஆளை எல்லாம் பத்திரமா பார்த்துக்கணும்” என்றான் வேகமாக.
படுக்க போகும் முன் இன்னைக்கு அரைத்த மாவு எந்த பாத்திரத்தில் இருக்கு என்பதை ஜனனியிடம் சொல்ல வந்தவளின் காதில் தெளிவாக விழுந்தது அரவிந்தின் பேச்சு!
வேலைக்காரி! கரெக்ட் தானே? அதானே நீ? போதுமா? இனிமேலாச்சும் அறிவோட நடந்துக்க! அவளை பார்த்து சிரித்தது அவள் புத்தி. அமைதியாக வந்த வழியே திரும்ப சென்று விட்டாள் மலர்.
மலர் மாதிரி ஆளை எல்லாம் என்று அவன் வேலைக்கு வந்தவள் அல்ல என்பதை தனித்து காட்ட தான் கூறினான், ஆனால் அவனின் வாக்கியத்தில் அது சரியாக அமையவில்லை!
அவன் அப்படி கூறியதும், தியாகு அருணா இருவருமே,
“சே! அந்த பொண்ணை வேலைக்கு வந்த மாதிரி நாங்க நினைக்கவே இல்லை! ஏதோ நம்ம சொந்தக்கார பொண்ணு மாதிரி தான் தோணுது!” என்றனர்.
“ஆமா, நல்ல பொண்ணு!” என்றாள் ஜனனி.
“எல்லாரும் இப்போ பேசுங்க! நான் சொன்னப்போ என்னை ஏன் அப்பறம் கேள்வி கேட்டே?” எரிந்து விழுந்தான் அர்விந்த்.
“நான் அப்படி தான் கேட்பேன்! நீ உனக்கு என்ன தோணுதோ அதை சொல்வே, நாங்க அதை தெரிஞ்சுக்கலாம்னு தான்!” என்றாள் கூலாக. எப்போதும் அவன் எதையும் மறைத்து பேச மாட்டனே, ஆனால் இம்முறை அவன் நினைப்பது அவனுக்கே புரியவில்லை, அதனால் வேறு மாதிரி சொல்லிவிட்டான்.
“போடி லூசு!” அக்காவை திட்டி விட்டு போனான் அர்விந்த்.
அன்று இரவு, உணவு உண்ணக் கூட வரவில்லை மலர். தூங்குவது போல் பாவ்லா செய்தாள். சின்ன பெண், பாவம் மூன்று நாட்களாக நிறைய வேலை அவளுக்கு, ரெஸ்ட் எடுக்கட்டும் என்று யாரும் அவளை எழுப்பவில்லை! அவர்கள் பேசியதை கேட்டவளுக்கு, எத்தனை முதலாளிகள் இப்படி இருப்பார்கள்? இவர்களுடன் பிணைப்பு ஏற்பட்டதில் தவறே இல்லை, ஆனால் அர்விந்த் விஷயம் மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் மலர் உறுதியாக.
மறுநாள் வழக்கம் போல் அதிகாலையிலேயே எழுந்து வேலையை தொடங்கினாள் மலர். பால் எடுத்துக் கொண்டு வருகையில், அன்று ஒரு நாள் போல் இருட்டுக்குள் அமர்ந்திருந்தவன்,
“என்ன நல்ல தூக்கமா மேடம்?” என்றான் ஒரு மாதிரியாக.
திடுக்கிட்டு, “ஸார்” என்றவள் சுற்றும் முற்றும் அவளை தேட, அவளின் அருகே வந்தான் அர்விந்த்.
அவளுக்கு முன்பே எழுந்து அவளுக்காக காத்திருந்தான் அர்விந்த். உடம்பு ரொம்ப அசதியோ, ஜுரமாக ஏதும் இருக்குமோ? சாப்பிடாமல் உறங்குகிறாளே….போய் கூட பார்க்க முடியாதே என்று இரவெல்லாம் இவன் ஒழுங்காக உறங்கவில்லை! அவளை பார்க்க வேண்டும், அவளின் நலம் தெரிய வேண்டும் என்றே தோன்ற, அவளின் வழக்கமான நேரத்திற்கு எழுந்து வந்து ஹாலில் படுத்துக் கொண்டான்.
“குட் மார்னிங் விழி!” அவளின் அருகில் நின்று சொல்ல,
நேற்று எடுத்துக் கொண்ட சங்கல்பம் எல்லாம் காணாமல் போய் விடும் போல் இருந்தது அவளுக்கு. மெதுவாக அவன் முகத்தை பார்த்து,
“குட் மார்னிங் சார்!” என்றாள்.
“நான் உன் விழிக்கு தான் குட் மார்னிங் சொன்னேன், அது என்னை பார்க்க மாட்டேங்குது…. ஏன்….ம்ம்ம்…?”
ஐயோ, மறுபடி என்னை ஒருவழி பண்ணிடுவரே என்று பயந்தவள், அவன் கண்ணை பார்த்து “குட் மார்னிங் சார்” என்றாள்.
“குட்! எப்போதும் என் கண்ணை பார்த்து தான் பேசணும் நீ! புரியுதா? இப்போ ஒரு நல்ல காபி போட்டு கொடு பாப்போம்” என்றவன் அவளை தொடர்ந்து சென்று டைனிங் அறையில் அமர்ந்து கொண்டு அவளை பாராமல் பார்த்துக் கொண்டு இருந்தான்!
அவனுக்கு கொண்டு வந்து அவள் காபி கொடுக்க, “நைட் சாப்பிடக் கூட இல்லை நீ, நீயும் காபியை குடி சீக்கிரம்! முடிஞ்சா டிபன் கூட செஞ்சு சாப்பிடு…”
மண்டையை ஆட்டிவிட்டு, வேலையை பார்க்க போன மலரின் மனம் இவன் ஏன் இப்படி அக்கறையை பொழியுறான்? என்று தவித்தது.
அன்று நாளெல்லாம் வீட்டை சுத்தி வந்த அரவிந்தின் வண்டு கண்கள் மலரையே மொய்த்தது. மலரும் அதை நன்றாக உணர்ந்தாள். மிகவும் அசௌகரியமாக இருந்தது அவளுக்கு. இயல்பாக இருக்க முடியாமல் தவித்தவள், ஓரிரு முறை நேரடியாகவே அவனிடம்,
“எதாவது வேணுமா சார்?” என்று கேட்டே விட்டாள்.
தான் பார்ப்பது அவளுக்கு புரிகிறது என்று உணர்ந்தவன், மிக கேஷுவலாக, “நீ பாட்டுக்கு பாதி வேலையில் மயங்கிட்டீன்னா? அதான் உன் மேல உன் கவனம் வைச்சு இருக்கேன்” என்று பயம் இல்லாமல் அனைவர் முன்னிலும் கூறினான். கள்ளம் இருந்தால் தானே பயம் வரும்?
“டேய், அவ நல்லா தான் இருக்கா. நீ சொல்றதில தான் பயந்து அவளுக்கு ஜுரம் வந்துரும், சும்மா இருடா” என்று கிண்டல் செய்தாள் ஜனனி.அதன் பின் அவனின் அந்த பின் தொடரும் பார்வைக்கும் ஒரு மாதிரி பழகி போனாள் மலர். வேறு வழியும் இல்லையே!
அடுத்த இரண்டு நாளில், மறுபடி ஒரு சோதனை வந்தது அவளுக்கு,
ஊருக்கு செல்வதற்கு முன் ஷாப்பிங் செல்ல வேண்டும் என்றாள் ஜனனி. அவள் தோழிகளுடன் செல்வதால், குழந்தையை மலரிடம் விட்டு விட்டு செல்வதாக பிளான். நம்ம ஹீரோவுக்கு என்ன தோணியதோ, ஜனனியிடம்,
“ஆர் யூ ஷுயர்? பெங்களுரு டிராபிக் பத்தி தெரியும்ல…. பாப்பா அழுதா உடனே எல்லாம் திரும்ப வர முடியாது…. எவ்ளோ சீக்கிரம் நீ டிரஸ் வாங்கினாலும் த்ரீ ஹவர்ஸ் ஆய்டும் நீ வர!”
அவளுக்குமே பயம் வர, சரி பாப்பாவையும் அழைச்சிட்டு போறேன்!” என்றாள்.
“ஓகே, ஆனா உன்னை ப்ரீயா ட்ரயல் பார்க்க விடுவாளா? புதுசா பார்க்கிற உன் பிரண்ட்ஸ் கிட்ட இருப்பாளா? அவங்களுக்கு பசங்க இருக்காங்களா? அப்போ மே பி சான்ஸ் இருக்கு!”
“அவங்க எல்லாம் அவங்க ஹஸ்பண்ட் கிட்டே விட்டுட்டு வர்றாங்க டா! எங்களுக்கே டூ ஹவர்ஸ் தான் டைம்!” ஒரு நிமிடம் யோசித்தவள், “நீ வரியா? பாப்பாவோட மால்ல நீ சுத்து, நான் சீக்கிரம் வந்துடுறேன்….ப்ளீஸ் டா!”
“நான் மட்டும் தனியா வா? நோ வே! அப்பா வந்தா நான் வரேன்!”
தியாகுவிடம் போய் நின்றார்கள் இருவரும்! விஷயத்தை சொல்ல, அவர் மிகவும் தயங்கினார். ஒன்று அர்விந்த் சொன்னது போல் டிராபிக்! இன்னொன்று அவருக்கு அந்த பள பள தரையில் நடந்தாலே கால் வலி வந்து விடும்! அந்நேரம் அவருக்கு டீ கொடுக்க மலர் வர,
“நீங்க மலரை அழைச்சிட்டு போங்களேன்!1 அவளும் கொஞ்சம் பெங்களூர் பார்த்த மாதிரி இருக்கும்! அவந்திகாவும் அழ மாட்டா!” என்றார் உற்சாகமாக.
“அட ஆமா பா, எனக்கு தோணவே இல்லை பாருங்களேன்! சூப்பர் பா!” ஜனனி சந்தோஷமானாள்!
காரியம் சாதித்த நம்ம ஹீரோ கமுக்கமாக நின்றார்!
ஜனனி கேட்டவுடனேயே அவனுக்கு மலரையும் வெளியில் அழைத்து போக வேண்டும் என்று தோன்றியது! ஆனால் சார் நேரிடையாக சொன்னால் என்ன ஆவது!
அனைவரும் அவளை கிளம்ப சொல்ல, மிரண்டாள் மலர். மருத்துவமனையையே பார்த்து மிரண்டவள், மால் என்றதும் மனம் மிக சுணங்கினாள். அவளுக்கு சற்றும் பிடிக்கவில்லை அவர்களுடன் போக! அவளின் முகத்தில் இருந்து அதை புரிந்து கொண்டவன், அவளிடம் வந்து
“ஒழுங்கா நான் சொல்றதை மட்டும் செய்! அதான் உனக்கு நல்லது! கிளம்பு! இன்னும் அரைமணி நேரம் தான் டைம் உனக்கு” என்றான்.
“என்கிட்ட வெளில போறதுக்கு எல்லாம் ட்ரெஸ் இல்லை, நான் எப்படி வருவேன்? எனக்கு ஒரு மாதிரியா இருக்கு! ப்ளீஸ் என்னை விட்ருங்க….” என்றாள் மலர் அவன் கண்ணை பார்த்து உண்மையாக. அப்படியாவது தன்னை அழைத்து செல்வதை தவிர்ப்பான் என்று நினைத்தாள்.
“அவ்ளோதானே உன் பிரச்சனை? அங்க போன உடனே நான் உனக்கு புது டிரஸ் வாங்கி தரேன்! இப்போ இருக்கிறதை போட்டுக்கிட்டு கிளம்பு!” என்றான் கறாராக.
“அப்படி என்னை அழைச்சுட்டு போகணும்னு ஏன் பிடிவாதம் பிடிக்கிறீங்க? எனக்கு வர வேண்டாம்! பாப்பாவை நான் வீட்டிலேயே அழாம பார்த்துக்கிறேன், அக்கா கிட்டே நான் சொல்றேன்” என்றவள் வேகமாக ஜனனியை பார்க்க செல்ல போனாள்.
விழி! பல்லை கடித்து அடிக்குரலில் அவளை அழைத்தவன், அவள் கைகளை பிடித்து நிறுத்தி இருந்தான். தான் சொல்வதை அவள் கேட்கவில்லை என்ற கோபத்தில்,
“வேலைக்கு வந்தா, சொன்னதை செய்யணும்! உன் இஷ்டம்னு இங்க எதுவும் இல்லை!” என்றான் சுள்ளென்று.
சட்டென்று அவளுக்கும் அது உரைக்க, கண்ணில் வலியுடன், அவனை பார்த்தவள்,
“ஸாரி சார்! நான் ரெடி ஆகுறேன் சார்!” என்றவள் வேறு பேசாமல் தயாராக சென்றாள்.
சுவற்றில் ஒரு குத்து குத்தினான் அர்விந்த்! அவள் கண்ணின் வலி நினைவுக்கு வர, “சே! தேவையில்லாம பேசிட்டேன்! ஆனா என்னை அவ தான் பேச வைக்கிறா! சொல்றதை கேட்கலாம்ல…. நான் என்ன தப்பாவா ஏதும் சொல்றேன்?” சலித்து கொண்டவன், மனதினில்,
ஸாரி விழி! இது உனக்கு மருந்து மாதிரி! உன் காம்ப்ளக்ஸ் போகணும்! நீ தன்னம்பிக்கையா இருக்கணும்! அதுக்கு தான் என்று சொல்லிக்கொண்டான்!
“நிஜமா அதுக்கு தானா கோபால்?” மன்மதன் கேட்டார்.